Thursday, July 16, 2015

தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி




தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
 பரிசு 3000.00 உருவா

கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்.
பொறிஞர்இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500

க.தமிழ்மல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்.

இங்கு வரும் என் நண்பர்கள் பலர் தனித்தமிழில் வாஞ்சையும்  வல்லமையும் கொண்டிருப்பதோடு சிறுகதையை கலை நயத்தோடு நெய்யவும் வல்லவர்கள்.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் போல விபுலானந்த பெருந்தகையின் எளிமை கூட்டி மலர இருக்கும் கதைகளுக்கு முன் கூட்டியே என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.



Monday, July 6, 2015

எனக்கு முன்பாகச் செல்லும் சமூகம்......



அரிஸ்டோட்டில் மரணத் தறுவாயில் இருந்த போது அவரைச் சுற்றிலும் சீடர்கள் இருந்தார்கள். அப்போது அரிஸ்டோட்டில் ‘நான் இப்போது தான் உண்மையை அறிந்து கொண்டேன்’ என்று கூறினார். ‘எந்த உண்மை?’ என்று சீடர்கள் ஆவலோடு கேட்டார்கள். ‘எனக்கு ஒன்று தெரியாது என்ற உண்மையை அறிந்து கொண்டேன்” என்றார் அவர். (தமிழ் ஓசை, ஜூன் 2015)

’எனக்கு முன்பாகச் செல்லும் சமூகம், இண்டிக்கேட்டரையும்  போட்டுக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு வணிக சஞ்சிகையில் வந்திருந்த வலை வாசகம் ஒன்று  அதனை நவீன வடிவில் மொழிபெயர்த்து மேற்கூறியவாறு கூறி இருந்தது ஆ.வி. 22.2.15 இல்.

’ஜிப்ஸி’ என்றொரு தொடர் பதிவினை விகடனில் எழுதிக்கொண்டு வந்த ராஜு முருகன் என்பார் அதன் நிறைவுப் பகுதியில் இப்படி எழுதுகிறார்.
” தொழில்நுட்பங்களும் பொழுது போக்குகளும் மலிந்து விடுவது மட்டுமா ஒரு தேசத்தில் வளர்ச்சி? உண்மையில் இன்றய இந்தியாவின் வளர்ச்சி என்பது முதலாளிகளின்; அரசியல் தரகர்களின் அரசியல் தலைவர்களின் வளர்ச்சி தான். அன்பும் அறமும் தான் இந்தத் தேசத்தின் ஆத்மா. அதில் மட்டுமே தான் இந்தியா துண்டாடப்படாமல் எழுந்து நிற்கிறது. உழைப்பும் ஒற்றுமையும் தான் இதன் ஆண்ம சக்திகள். இன்றய ‘வளர்ச்சி இந்தியாவில்’ இதெல்லாம் எப்படி இருக்கிறது?  சாதியமும் மதவாதமும் முன்னிலும் கோர முகம் எடுத்திருக்கிறது. சொல்ல முடியாத ஒரு வன்முறையின் நிழல் நம் மனங்களில் படிந்து கொண்டிருக்கிறது.இயற்கையில் இருந்து விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். அறமற்ற, குற்றங்களைக் கண்டு கொள்ளாத, தவறுகளை வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளுகிற அபத்தங்களைக் கொண்டாடுகிற, வாழ்வைப் பழகிக் கொள்ளுகிறோம். நல்லோரை மிக எளிதாக ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஏராளமான சுய நலன்களைச் சுமக்கிறோம்....” ( ஆ.வி. 1.4.15 பக். 58)

எப்படி இருந்த ஒரு சமூகம்? ஒழுக்கம், கோட்பாடு, வரையறை, திட்டமிட்ட வாழ்வு, கலைகள், பண்பாடு, சுற்றம், சூழல், அழகியல், இயற்கை, ஒப்புரவு என விரிந்து சென்ற அதன் போக்கு இன்று வேறொரு திசையில் போகக் காரணம் என்ன?

நற்றிணையில் ஒரு பாடல்.
.......
யாங்காகு வென் கொல் யானே! ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிதாகு ஆயின்
மறக்குவென் கொல்! என் காதல் எனவே (397)

சாவதற்கு நான் அஞ்சவில்லை. ஆனால் இறப்புக்குப் பிறகு வரும் பிறப்பு வேறொன்றாக அமைந்து விட்டால் என் காதலனை அந்தப் பிறப்பில் மறந்து விடுவேனோ என்று தான் அஞ்சுகிறேன். என்கிறாள் தலைவி.

“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா,
கண்நிரை நீர் கொண்டனள்” - 1315

என்றொரு குறள். இந்தப் பிறவியில் நான் உனைப் பிரியேன் என்கிறான் தலைவன். அப்படியானால் அடுத்த பிறவியில் பிரிய நினைத்தீரோ? என ஊடும் தலைவியைக் கொண்ட அன்பும் அறமும் உடைத்தான காதல் வாழ்வு கொண்ட சமூகம்,

“ வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று” 1317

இயல்பாகத் தும்மினேன். அவளும் பெண்மைக்குரிய அன்பினோடு நூறாண்டு வாழ்க என வாழ்த்தினாள். ஆனால் உடனே மனம் மாறி யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்  அது யார்? யார்? என்று கேட்டு பொருமும்  காதலும் அன்பும் கூர்மையும் கொண்டு ஒழுகிய பெண்டிரைக் கொண்டிருந்த ஒரு சமூகம்,

அண்மையில் இப்படி ஒரு ஜோக் சொல்லி சிரித்து இருந்தது.

“ சாதாரண நோய்னு ஆஸ்பத்திரிக்கு வந்தவருக்கு எப்படி திடீர்னு ஹாட் அட்டாக் வந்துச்சு?
“ நம்ம ஆஸ்பத்திரியில பொம்பிள நார்ஸ் கிடையாதுங்குற உண்மையை டாக்டர் அவர் காதுபட உளறிட்டாராம்” (வி. சகிதா.முருகன் தூத்துக்குடி, குங்குமம்)

எப்பிடி இருந்த உலகம் எப்பிடி ஆயிட்டுது பாத்தீங்களா?

இந்த வாரம் விடுமுறையில் நிற்பதால் சேர்ந்தும் தேங்கியும்  போய் விட்டிருந்த சஞ்சிகைகள் எல்லாவற்றையும் பார்த்து முடிப்பது என்ற தீர்மானிப்பின் விளைவாக வாசிக்க நேர்ந்த சில விடயங்களை உங்களோடு பகிர்வது இப்பதிவின் நோக்கம்.

ஒரு சிதறு தேங்காய் போல...

9.3.15 குங்குமத்தில் பெண்னுரிமை பற்றி சில பிரபலங்கள் பகிர்ந்து கொண்டிருந்த விடயங்களை தருகிறேன்.

1.”எங்கெல்லாம் பெண்கள் இழிவு படுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் தன்னுடய எதிர்ப்பைப் பதிவு செய்வது தான் பெண்ணுரிமை. ஒரு நடிகை பல்டாக்டரிடம் ‘பல் கூசுகிறது’ என்றாள்.அதற்கு டாக்டர், ‘உனக்கு அங்கேயாவது கூச்சம் இருக்கட்டும்’ எனச் சொல்ல அதற்குக் கதட்டி ரசித்த பலரும் பெண்கள் தான்.நம்மை இழிவு செய்பவர்களைக் கண்டு கோபம் கொள்வதும் எதிர்ப்பைப் பதிவு செய்வதும் தான் பெண்ணுரிமை. - சுமதிஸ்ரீ.

2. பெண்களுக்குப் பாதுகாப்பானது என நம்பிய வீடுகளில், குடும்பங்களில் கூட வன்முறை நடப்பது அம்பலமாகி உள்ளது.பெண்கள் பெற்று வரும் ஆளுமையை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சொல்லிலும் செயலிலும் வன்முறை நிறைந்தவர்களாக ஆகி விட்டனர். பெரியார் பெண்ணுரிமைக்காகக் களமிறங்கிய மண்ணில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் முறை கேடுகளையும் வார்த்தைகளையும் எளிதாகப் பேசி விட்டு தப்பிக்க முடிகிறது. - குட்டி ரேவதி.

3.தன்னுடல் பிறரின் துய்ப்பிற்கும் உயிர்பெருக்கத்திற்கும் மட்டுமானதல்ல என்பதை நிறுவவே பெண்கள் பலநூற்றாண்டுகள் போராட வேண்டி இருந்தது.பெண்ணடிமைத் தனத்தின் அடிப்படைகள் பெருளாதாரமும் ஆண் மையப் பண்பாடும் என்பது இன்னும் பரவலாக அறியப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானது” - எம்.டி. முத்துக்குமாரசாமி.

4.சுயமரியாதையா காதலா என்றால் பெண்ணுக்குச் சுயமரியாதையைத் தேர்வு செய்யும் திடம் வேண்டும். அன்பு,நேசம், பாசம், குடும்பம், திருமணம், பிள்லைகள் எதற்காகவும் பெண் தன் சுயத்தை விலையாகத் தருவதை நிறுத்தினால் தான் அடிமை முறையை வேரில் இருந்து தகர்க்க முடியும். சுதந்திரம் என்பது பிறப்புரிமை. யாரும் தருவதோ யாரிடம் இருந்தும் பெறுவதோ அல்ல என்பதில் பெண்னுக்கு மட்டும் விதி விலக்கு இருக்க முடியுமா என்னா? - லீனா. மணிமேகலை.

5.பெண்கல்வி கடந்த 50 வருடங்களாகத் தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது.15 வருடங்களாகத் தான் பெண்கள் பலத்த குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இதற்கே ஆண் சமூகம் பயந்து நடுங்குகிறது. பிளஸ்டூ தேர்வில் பெண்களே அதிகம் தேர்வு பெறுவது அதிகம் பேர் டைவோர்ஸ் கேட்க ஆரம்பித்திருப்பது.... இப்படி பெண்கள் தங்களை மீறிப் போய் விடுவார்களோ என நினைக்கிறது ஆண் சமூகம். அதனால் தான் பெண்கள் மீதான வன்முரை அதிகரித்திருக்கிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பெண்களின் கையே ஓங்கி இருக்கும். - வசந்த பாலன்.

6.பெண் எனும் பிறப்பிற்கென வகுக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட சமூக விதிகளை, நடத்தை விதிகளை ஒழிப்பது, விதிகள் உருவாகக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பை சமத்துவ சமூகமாக மாற்றி அமைப்பது,  பெண்ணுடலை அனைத்து விதமான ஆதிக்கக் கருத்தியலில் இருந்தும் மீட்பது, அதன் மூலம் ஆண்மயமாக்கப்பட்ட ஆபத்து நிறைந்ததாக மாறிப்போன பொது வெளியை பெண்களுக்கு உரியதாக ஆக்குவது. - நிர்மலா. கொற்றவை.

7.பெண்ணுரிமை என்பது வாழ்வின் குறிக்கோளை அடைய தடையற்று இருப்பதிலும் அதை உணர்வதிலும் இருக்கிறது. பெண் விடுதலை என்பது யாரும் யாரிடமும் கெஞ்சிக்கேட்கும் பிச்சையல்ல. அது பிறப்புரிமை. நம் மனதில் விடுதலையை நேசிக்கும் உணரும் அதே நேரத்தில் மற்றவரின் விடுதலை உணர்வைப் போற்றுவதிலும் மதிப்பதிலும் அதன் உன்னதம் கூடுகிறது. - இளம்பிறை.

8.சமூகத்தின் நியாயத் தராசுகள் ஆண்கள் என்று வரும் போது இயல்பாகவும் பெண்கள் என்று வரும் போது கலாசாரத்தின் மீதேறி நின்றும் எடை போடுவது ஏன்? ஒரு பெண் தானும் ஒரு மனுஷியாக ( மனிதராக) அங்கீகரிக்கப்பட வேண்டும் எனதற்கான போராட்டம் தான் பெண்ணியம். அதற்கான தீர்வு தான் பெண்ணுரிமை. பெண்னுரிமை என்பது மனித உரிமை. - கவிதா. முரளீதரன்.

9. கற்றைச் சிறகுடன் வானில் பறப்பது
ஒற்ரை இறகாக காற்றில் மிதப்பது
குடை இருக்கும் போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும் போதும் கிளையில் அமர்வது
வேண்டும் என்பதை தேர்ந்து எடுப்பது
வேண்டாம் என்பதை திடமாய் மறுப்பது
பெண்ணென பிறரால் உணர்த்தப் படாதது
பெண்ணென தானே தன்னை உணர்வது. - வண்ணதாசன்.

10.சாதி, மதம், கலை, கலாசாரம், வியாபாரம், குடும்பம், விளம்பரம் அனைத்துமே இங்கு ஒரு பெண்ணின் உடலை முன்வைத்தே பேசப்படுகின்றன. பாலியல் வன்முறை என்பதோடு முடியாமல் உயிரும் பறிக்கப்பட்டு வீதி ஓரங்களில் குப்பையாக வீசப்படுகிறாள் பெண். தன் உடல் மீதே பெண்ணுக்கு சுதந்திரமில்லாத சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. முதலில் அவள் உடல் மீது அவளுக்கு இருக்கும் பதற்றத்தைப் போக்குவதற்கு என்ன செய்யப் போகிறோம்? - கவிஞர். பழனி பாரதி.
இவை குங்குமத்தின் 9.3.15 செய்திகள்.

இன்றயதினம் 28.6.15 இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி. அதனோடு கூடவே பிரதமராக இருந்த மைத்திரிபாலா. செனநாயக்கா யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் அதிகரித்து விட்டதென்றும் பாடசாலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி வீதம் வீழ்ச்சி அடைந்து விட்டதென்றும் கவலை தெரிவித்து, ஊடகங்களினதும் கலை வடிவங்களும் தார்மீகப் பொறுப்புகளை நினைவு படுத்தி அவர்கள் தம் பொறுப்புகளை சுதந்திரமாகவும் பொறுப்புணர்வோடும் ஆற்ற வேண்டிய காலகட்டம் இதுவென்றும்; அதனை செவ்வனே ஆற்ற அவர்கள் முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.

குமுதத்தில் ( 29.12.14) ஒருதடவை வைரமுத்து சிறுகதைகள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ இயற்கை மறைப்பதை மனிதன் கண்டடைகிறான். மனிதன் மறைப்பதைக் கலை கண்டறிகிறது. மனிதனைக் கண்டறிந்து அதன் விழுமியங்களைச் செழுமை செய்யும் சிறுகலை சிறுகதை”

ஊடகமும் கலைகளும்; ஊடகவியலாளர்களும் கலைநெய்வோரும் சமூகத்தை செழுமை செய்ய என்ன செய்கிறார்கள்?

எப்படி அதைச் செய்கிறார்கள்?

அவர்கள் முதலில் தமக்குள் ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்தாக வேண்டுமே!

”குடை இருக்கும் போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும் போதும் கிளையில் அமர்வது” - இதன் மறைபொருளும் அங்கதமும் என்னைக் கொஞ்சமாய்  பயமுறுத்துகிறது.

சமூக விடுதலை பேசுவோர் மிருக இயல்பு வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்களோ என்றொரு அச்சம்.

எனக்கு முன்னால் செல்லும் சமூகம் கொஞ்சம் இண்டிக்கேட்டரையும் போட்டுக் கொண்டு சென்றால்.....