Wednesday, December 29, 2010

பிசிராந்தையார் போல வாழ்க




நல்லென கற்று
நலம் பெறுவீரென
நம்மரசளித்த
நன்கொடை இந்நூல்.
நன்கிதைப் பேணி
நலமே கற்று
நற்குணம் பெற்ற
நற்குடியாவீர்.

சிறு வயதில் இலவசமாகக் கிடைத்த அரச பாடசாலை நூல்களில் முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் வாசகங்கள் இவை.முதன் முதல் இலங்கையில் பிரேமதாசா ஆட்சிக்கு வந்த போது இலவச பாடநூல், இலவச சீருடைத் துணி, இலவச பிஸ்கற் என்பன பாடசாலையால் வழங்கப் பட்டதுடன் பல்கலைக் கழகக் கல்விக்கும் நல்ல புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு மஹாபொல என்ர்ற அரச மானியமும் வழங்கப் பட்டது மங்கலாக நினைவிருக்கிறது.

சுகம் வரும்; ஆள் தப்பாது என்ற கனக்காக அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அது எவ்வளவு முக்கியம் என்பதும் புரிந்து கொள்ளப் படாது போய் விட்டதால் நாட்டில் நடந்த அனர்த்தங்களை நாமறிவோம்.மழையும் புயலும் அடித்தோய்ந்த தேசம் அது இப்போது.சேதப் பட்டுக் கிடக்கிறது தேசம்.

அதே நேரம் அந்த நற்குணம் பெற்ற நற்குடி என்பது பாடசாலைக் கல்வியால் கிட்டுகின்றதா? அல்லது பாரம்பரியமாகக் கற்பிக்கப் படாமலே நடைமுறை வாழ்க்கையினூடு கடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் குடும்பச் சமூகப் பண்பாட்டினால் வந்து சேர்கின்றதா அல்லது நாமாக ‘நம்மை’ உருவாக்கிக் கொள்கின்ற போது கிட்டுகின்றதா என்பதும் சுவாரிசமான விவாதப் பொருளாக இருக்கும்.

கற்றறிவு பெற வசதியற்ற ஏழைகள் நல்ல நற்குடி மக்களாக இருப்பதையும் நல்ல கல்வியறிவும் பண அந்தஸ்தும் கொண்டுள்ள மக்கள் சிலர் நற்குண இயல்புகள் என்பது பற்றி மேம்போக்கான தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதையும் நடைமுறை வாழ்வில் நாம் காண்கிறோம்.

நேற்றய தினம் பார்த்த இலங்கையின் தினக்குரல் என்ற தமிழ் பத்திரிகை ஒன்றில் (26 டிசம்பர்2010) திருமலை நவம் என்பார் “பனையோலையும் பாடும் மீனும் கட்டி வளர்த்த கலாசாரங்கள் வாழுமா” என்ற தலைப்பில் சமூகப் பொறுப்புணர்வுள்ள கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.அதில் மேலைத் தேய மாயங்கள்,மரபுகளின் திரிபு,இளவயதுத் திருமணங்கள்,விவாகரத்து மலிவுகள்,இளைஞர்களின் நடத்தை சார் மாற்றம்,சிறுவர்கள் துஷ்பிரயோகம்,மாணவ வக்கிரங்கள்,ரியூஷன் ஆதிக்கம்,மூத்தோரை மதியாமை,சடங்குகளின் தேய்வுகள்,மனம் முடிக்காக் கன்னியரின் மன உளைச்சல்கள்,கணிகையர் வியாபரம் என பல விடயங்களை மன வருத்தத்தோடு பட்டியலிட்டிருந்தார்.

இவற்றுக்கு என்ன காரணம்? அல்லது யார் காரனம்? பிச்சைக் காரர்களே இல்லாதிருந்த ஊர் நம்முடய ஊர்.வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்த மக்கள் எம் மக்கள்.தமிழையும் கோயிலையும் கண்ணெனக் காத்து நின்றவர்கள்.கல்வியிலும் தாம் சார்ந்த பண்பாட்டிலும் தனித்துவமாய் திகழ்ந்தவர்கள் அவர்கள்.

இன்று எத்தனை அநாதைக் குழந்தைகள் நம் ஊரில்!நிராதரவாய்,நிக்கதிக்குள்ளாகியிருக்கும் ஏதுமறியாச் செல்வங்கள் எத்தனை பேர்!போர் உக்கிரம் பெற்றிருந்த பொழுதில் B.B.C யே கதியாய் கிடந்த போது ஓர் இளந்தாய் இப்படிக் கதறினாள்.’என் கணவனைத் தொலைத்து விட்டேன்; என் 13 வயது மகள் இறந்து போனாள்; என் சிறுமகன் தன் கால்களில் ஒன்றையும் கைகளில் ஒன்றையும் இழந்து போனான்.இறந்த என் மகனின் உடலையும் காயமுற்ற என் மகனையும் இந்தத் திறந்த வெளி மருந்துகளற்ற வைத்திய சாலையில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிவரக் காயமுற்றும் இறந்தும் கிடக்கும் உடல்கள்.ஒன்றரை வயது நிரம்பிய பெண்குழந்தை ஒன்று அழுதவாறு என்னை நோக்கி வந்தது. யார் பெற்ற பிள்ளையோ! பசியோ? பெற்றோர் இறந்தனரோ? அல்லது தொலைத்து விட்டதோ? யாதுமறியேன். நான் எப்படி அக்குழந்தையைக் காப்பேன்”என்று கதறி அழுத குரல் இன்னும் காதுகளில் கேட்ட வண்னமாக இருக்கிறது.

அரசும் சமூகமும் இதற்கு எவ்வளவு தூரம் பொறுப்பேற்க முடியும் என்பது பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் யோசித்துப் பார்த்த போது ஒரு வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தயார் படுத்தி வைத்திருந்த சங்க காலப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் என்னென்னெ தேவை என்பது பற்றி அந்தப் புற நாநூற்றுப் பாடல் அழகாகச் சொல்கிறது.(பாடல்191)

பிசிர் என்றொரு ஊர். அங்கே ஆந்தையார் என்றொரு புலவர்.அதனால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர்.இது என்ன விசித்திரமான பெயராக இருக்கின்றதே என்று நீங்கள் சற்றுச் சிந்திக்கலாம். இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வு முறையைக் கொண்டிருந்த வாழ்க்கை வாழும் மக்கள் அவர்கள்.காலம் கிறிஸ்து பிறப்பை அண்டிய நூற்றாண்டு. அதனால் கண்ணுக்குத் தென்படும் இயற்கை அம்சங்களை வைத்துப் பெயர் சூட்டும் மரபு புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.அவருக்கு ஆந்தையின் ஏதோ ஒரு அம்சம் பொருந்திப் போயிருக்க வேண்டும். அதனால் அவர் பெயர் பிசிராந்தையார் ஆகி விட்டது.

அவர் கம்பீரமாக நடந்து வருகிறார்.அவர் அக அழகு முகத்தில் பிரகாசிக்க கம்பீரமாக உற்சாகமாக நடந்து வருகிறார்.உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் ஒரு பிரகாசம். புன்னகையில் ஒரு பூரணம்.பரி பூரண திருப்தி ஒன்று அவர் முகத்தில் நர்த்தனமாடுகின்றது.அதனால் நடை குதியாட்டம் போடுகிறது.தலையில் கூட மூப்பின் சாயல் எதுவும் இல்லை.

பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு ஆச்சரியம்.அவரிடம் அவரது இளைமையின் இரகசியத்தைக் கேட்கிறார்கள்.அவர் பாடலில் பதில் சொல்கிறார் இப்படி.

“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்
மாண்ட என் மனைவியடு; மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான்; காக்கும் அதன் தலை;
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னாலும் என் தலையில் நரை எதுவும் தோன்றவில்லையே காரணம் யாது என்று கேட்பீர்கள் ஆயின் (யாண்டு பலவாக நரையிலவாகுதல்; யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்; யாண்டு - ஆண்டு; யாங்கு - எப்படி)அதற்குக் காரணம் மாண்புடைய எனது மனைவி!சொல் கேட்கும் என்னுடய பிள்ளை!விசுவாசமுளள என் வேலையாட்கள்!வேந்தனோ பிழையான எதனையும் செய்யாதவன்.காக்கும் அவனுடைய தலை(அவனுடைய தலைமை என்னைக் காக்கிறது).என்னைச் சுற்றிச் சூழ இருக்கின்ற குடிமக்களோ ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்.அதாவது நன்கு கற்று சரியான கொள்கையைக் கண்டறிந்து, அடங்கி;அதன் படி வாழும் சான்றோர்கள் என் சுற்றம் சூழ இருக்கிறார்கள்.இது நான் வாழும் ஊர்.

இதுவே அதற்குக் காரணம் என்கிறார் பிசிராந்தையார்.

புது வருடம் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.இலத்திரனியல் கண்டுபிடிப்புகளால் உலகோடும் உலகத் தமிழர்களோடும் மிக இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ள ஊரில் இருக்கிறேன்.என் தேசத்து மக்களை அவர் தம் இழப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களுக்கான மன நிறைவை; மகிழ்ச்சியை யார் தருதல் கூடும்?

தாயகத்து அநாதைக் குழந்தைகளே!இளம் விதவைகளே!நிக்கதியான குடும்பங்களே!குடிசை வாழ் உறவுகளே!பிசிராந்தையாருக்குக் கிட்டியது போன்றதொரு வாழ்வு உங்கள் எல்லோருக்கும் அமைவதாக!.

மற்றும் என் சக பாடிகளே உங்கள் எல்லோருக்கும் கூட என் புது வருட வாழ்த்துக்கள் உரியதாகுக.

இப்படியான ஒரு அழகிய வாழ்வு எல்லோருக்கும் கிட்டட்டும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(படம் எண்னை வர்ணம்;ஓவியர்;இளையராஜா; நன்றி; கூகுள் இமேஜ்)

Tuesday, December 7, 2010

ஒளிரும் ஓவியம்

வருட இறுதி!

விடுமுறை ஆரம்பம்!!

புது வருடத்தில் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்.

எல்லோருக்கும் என் சுபீட்சமான நத்தார், புது வருட வாழ்த்துக்கள்!

வருகின்ற புது வருடம் எல்லோருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உண்மையையும் நேர்மையையும் அதனால் விளைகின்ற நின்மதியையும் எடுத்து வரட்டும்!

அது வரை இந்த அழகிய எண்ணை வர்ண ஓவியம் இப்பக்கத்தை அலங்கரிகிறது.

இதனை ஓவியக் கலைஞர் இளைய ராஜா என்பவர் தை மாதம் ஒன்பதாம் திகதி 2010 ல் தீட்டியிருக்கிறார்!

எத்தனை அழகு! எத்தனை அழகு!!

பெண்ணின் அழகு,வெளிச்சம் படும் அழகு,பாவாடைக் கரை,வலையல்கள்,உட்கார்ந்திருக்கும் லாவகம், தூரிகைக்குள்ளால் கொண்டு வந்திருக்கும் பெண்ணின் வயது, அமானுஷமாக ஆச்சர்யமாக தூரிகை துலங்குகிறது! ஓவியமாய் மிளிர்கிறது! ஆஹா! என்ன அருமை!!

இது ரவி வர்மன் எழுதாத கலையோ?

“ஒளிரும் ஓவியம்”


Wednesday, December 1, 2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)



சில வாரங்களுக்கு முன் நான் Huckleberry Friend என்ற ஆங்கிலப் பதம் பற்றிப் பிரஸ்தாபித்து அதற்கு இணையான தமிழ் பதம் பற்றி நான் மதிக்கின்ற பதிவர்களில் ஒருவரான பழைமை பேசியிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்திருக்கின்ற அழகான தமிழ் விளக்கம் இவ்வாரம் என் வலைப்பூவை அலங்கரிக்கிறது.

மிக்க நன்றி சகோதரா!


ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!