Wednesday, July 12, 2017

சைமன் காசிச் செட்டி (21.3.1807 - 5.11.1860)

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மதப் பரம்பலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களுள் சிங்கள பெளத்த சமயத்திற்கு அனகாரிக தர்மபாலாவும் இஸ்லாத்துக்கு முகம்மது காஸிம்  சித்திலெப்பை அவர்களும் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆறுமுகநாவலரும் விதந்து போற்றப்படுபவர்கள்.

அன்னிய ஆட்சிக்கும் மதமாற்றத்திற்கும் எதிராக விழிப்புணர்ச்சியும் மறுமலர்ச்சியும் சமூகத்தில் தோன்றியிருந்த இக்காலத்தில் / இக்காலத்தினை முத்துக்குமாரக் கவிராயர் ( 1780 - 1852 ) தன் கவிதையில் இப்படி வர்ணிக்கிறார்.

‘நல்வழி காட்டுவோம் உடுபுடவை சம்பளம்
நாளுநா ளுந்தருகுவோம்
நாஞ் சொல்வதைக்கேளும் என மருட்டிச் சேர்த்து
நானமுஞ் செய்து விட்டார்
மெல்ல மெல் லப்பின்னை வேலையிங் கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிறார்
வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி
விட்டபின் கணவன் வேலை
இல்லைநீ  போவென்றுதள்ளுவது போலுமே
இனி எம்மை எம்முறவினோர்
எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர் பூட்டி உழவுமறியோம்
அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு நரகினுக்கு
ஆளாகி மிக அழிந்தோம்
ஆபரா பரனே! கிறீஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே!

என்றும்,

வண்டியேன்? மஞ்சமேன்? கதிரையேன்? குதிரையேன்?
வாங்கு மெத்தைகள் சிவிகையேன்?
வட்டித்த கவிகையேன்? மல்லிகைச் செடிகளேன்?
வாழை கமுகுயர் தோட்டமேன்?
பெண்டிரேன்? பிள்ளையேன்? திரவியத் தோட்டமேன்?
பேணிவரு காணியினமேன்?
பேரின்ப ஞானவழி இதுகொலோ? யேசுவும்
பின்பற்று சீடருங்கைக்
கொண்டதோ இவையெலா மவர்நின்ற ஞானவழி
கூறிநற் புத்தி சொல்லிக்
குணமாக்க வல்லை இவர் பணமாக்க வந்தது
குறிப்பறிந் தும் வறுமையால்
அண்டினோம் உண்ணவும் உடுக்கவும் வாழவும்
அட்தற்குமங் கிடமில்லையே
ஆபரா பரனே! கிறீஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே.

என்றும்,


’மாசார் மலத்தை விடுத்துக் குதத்திடை
மண்ணிட்டு நீர் கொண்டு செளசஞ் செய்யாதவர்
தேசிக ராம்பரி சுத்தரு மாமினிச்
செப்புவதேதடி ஞானப் பெண்ணே’

என்று காலைக்கடன் முடித்ததும் கடதாசியால் துடைக்கும் வழக்கத்தைப் பரிகசித்து எழுந்த இவ்வாறான பாடல்கள் அக்கால கிறீஸ்தவ சமயத்துக்கெதிரான சுதேச சமயங்களின் மனநிலையைச்  சித்திரிக்கும்.

இவ்வாறான ஒரு சமூக சூழலில் இலங்கையின் மேற்குக் கரையோரப்பட்டினமாகவும் பேரூராகவும் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய புத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள கற்பிட்டியில் வர்த்தக வாணிப கொடுக்கல் வாங்கல்களில் முக்கியமாக ஈடுபட்டிருந்த செட்டிமார் பரம்பரையில் பிறந்தவர் சைமன் காசி.

இவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மதுரை மாவட்டங்களில் செட்டிமார்கள் என அழைக்கப்பட்ட வணிகப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் கடல்கடந்த வணிகதொடர்புகள் காரணமாக இப்பகுதிகளில் காலப்போக்கில் குடியேறி வாழ்ந்கிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இலங்கையின் மேற்குக் கரையோரப்பட்டணத்தில் தமிழ் மக்களது பரம்பல் பற்றி அதிக ஆராய்ச்சி நூல்கள் வெளிவராத போதும் அப்பகுதிகளில் நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதற்கு பல சான்றுகள் உள்ளன. சிலாபப் பகுதியில் அமைந்திருக்கும் முன்னீஸ்வர ஆலயம், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்படும் செப்பேடுகள், காணிபூமிகளின் உறுதிகள், ஊர்களின் பெயர்களான சிலாபம், உடப்பு, கருக்குப் பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச் சோலை, புளிச்சாங்குளம், மருதங்குளம்,கண்டல்குடா, பாலைக்குடா, பலைகத்துரை, முன்னக்கரை, நஞ்சுண்டான் கரை, குறிஞ்சாப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், பாலாவி, முந்தல்,நரைக்களி,மாம்புரி, பலகைத்துறை,தேத்தாப்பளை,தளுவை, எத்தாலை, பால்குடா, கண்டல்குடா, ஊரியாறு, தாத்தாவழி, போன்ற ஊர் பெயர்களும் காலத்துக்குக் காலம் இங்கிருந்து எழுந்த பிரபந்தங்கள், கும்மிப்பாடல்கள், கோலாட்டப்பாடல்கள், ஊஞ்சல் பாட்டுகள் மான்மீயப்பாடல்கள் மற்றும் நாடகம் சார்ந்த பாடல்களும் இங்கு தமிழ் புலவர்கள் வாழ்ந்ததையும் சொல்லும்.

இவர்கள் நடை உடை பாவனைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றில் வாழிடம் தொழில் சூழல் பழகும் சந்தர்ப்பங்கள் சார்ந்து ஏனைய தமிழரை விட வேறுபட்ட கலாசாரம் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள். வாணிபத் வர்த்தகத் தொடர்புகள் காரணமாக இவர்களுக்கு ஆங்கிலேயரோடு பழகுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக இருந்தமையால் சமயம் மொழி நடை உடை பாவனைகளிலும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களாக சிந்தனையில் சுதந்திரம் அடைந்தவர்களாகவும் இருந்தார்கள்.

இத்தகைய பின்னணியில் கத்தோலிக்கர்களான கப்பிரியேலுக்கும் மேரி. றொசைறோவுக்கும் மகனாகப் பிறந்தார் கப்பிரியேல்.சைமன். காசிச்செட்டி. தாய்மொழியான தமிழோடு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி, அரபு, போத்துக்கீசம், டச்சு,இலத்தீன்,கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்த காசிச்செட்டி தன் 17ம் வயதில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மொழிபெயர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.4 வருடத்தின் பின் மணியக்காரராகவும் அவரது 27ம் வயதில் மாவட்ட முதலியாராகவும் உயர்த்தப்பட்டார்.

ஒல்லாந்தருடய ஆட்சியின் கீழ் இருந்த இலங்கையின் கரையோரப்பகுதிகள் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தின் பின் இலங்கை நிர்வாக சேவையில் தேசாதிபதியால்  கற்பிட்டி நீதவானாகவும் கற்பிட்டி சிலாபம் மாவட்டங்களுக்கான மாவட்ட நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.

பெரும்பாண்மையினரான சிங்கள மக்களும் தமிழ், இஸ்லாமிய மக்களும் வாழும் இலங்கையில் நிர்வாக சேவையில் நியமிக்கப்பட்ட முதல் இலங்கையரும்; மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் எனர பெருமையும் சைமன் காசிச் செட்டி அவர்களையே சாரும்.

ஆங்கில மொழியையும் கத்தோலிக்க சமயத்தையும் தன் வாழ்வியல் நெறியாக வகுத்துக் கொண்ட காசிச் செட்டி மதங்களையும் மொழிகளையும் கடந்து சிந்தித்தவர்.ஏனைய மதங்களையும் சடங்கு சம்பிருதாயங்களையும் மதித்ததோடு அவற்றை ஆவணப்படுத்துவதிலும் அழியாத இடம் பெற்றிருக்கிறார்.

ஆங்கில மொழியில் அமைந்த அவரது ஆக்கங்கள் யாவும் தமிழ் மொழி பேசாத சகலரையும் சென்றடைந்தது.  தனது 27ம் வயதில் மாவட்ட முதலியாராக கடமையாற்றிய போது இலங்கை பற்றிய சகலவிதமான தகவல்கள், செய்திகள் யாவற்றையும் தொகுத்து இலங்கையின் பிரதம நீதியரசர் சேர்.சார்ல்ஸ். மார்ஷல் பிரபுவும் பிரதம படைத்தலைவர். சேர்.ஜோன். வில்சன் என்பாரும் மதிப்புரை வழங்க அவரால் வெளியிடப்பட்டநானாவித செய்தித்திரட்டாக அமைந்த  ‘Ceylon cassetter  சிலோன் கசற்றியர் பின் நாளில் வெளிவரும் ‘வர்த்தமானி’ பத்திரிகைக்கு முன்னோடியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்ரை எல்லாம் ஒன்று திரட்டி ‘இலங்கை சரித்திர சூசனம்’ என்ரொரு நூலை வெளியிட்டார். அது மாத்திரமன்றி தமிழ் மொழி சம்பந்தமாக ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகை ஒன்றையும் இலங்கையில் கத்த்போலிக்க மதம் அபிவிருத்தி அடைந்த வரலாரையும் பழைய ஏற்பாட்டின் ஆதி ஆகமம் என்ர நூலினையும் யோசெப்புவாஸ் என்ற கத்தோலிக்க பெரியாரின் வரலாரையும் தமிழில் தந்தார்.

உலக வரைபடத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ள மிகச் சரியான அமைவிடம் பற்ரியும் அகலநெடுங்கோட்டில் அதன் அமைவிடம் நீளம், அகலம், சுற்ரளவு பரப்பலவு என்பவற்றை நவீன அளவுகருவிகள் எதுவும் இன்றி துல்லியமாகக் கணக்கிட்டு கணித்துச் சொன்ன பெருமை காசிச்செட்டியைச் சாரும். அதுமட்டுமல்லாது போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களின் போது அவர்களது கரையோரப்பிரதேசத்து நிர்வாக எல்லை பரப்பலவு 10,520 சதுரமைல் என்றும் கண்டி அரசனின் ஆள்புலப்பரப்பு 14,144 சதுரமைல் என்றும் கணித்துச் சொன்னவர் அவர்.

இருந்த போதும் Tamil Plutarch தமிழ் புளுட்டாக் என்னும் பெயரில் 1859ல் அவரால் வெளியிடப்பட்ட ‘புலவர் வரலாற்று நூல்’ பெரிதும் மதிக்கப்படும் நூலாக விளங்குகின்ரது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 189 புலவர்கள் மற்ரும் இலங்கையைச் சேர்ந்த 13 புலவர்களின் வரலாறு பட்டியலிடப்பட்டிருக்கிரது. இதுவே புலவர்களின் வரலாற்ரைச் சொல்ல எழுந்த முதல் நூலுமாகும். புளுட்டாக் என்பவர் கிரேக்க நாட்டிலே தோன்றிய பேரறிஞரும் போதகருமாவார். இவர் ரோமாபுரிப் புலவப் பெருமக்களோடு கொண்டிருந்த தொடர்பின் காரணமாக தன் காலத்தில் பெரும்புலவர்களாகத் திகழ்ந்த 46 பேரின் வரலாற்ரைத் தொகுத்து புளுட்டாக் என்ர தன் பெயரில் வெளியிட்டிருந்தார். இந் நூலினால் பெரிதும் கவரப்பட்டிருந்த காசிச்செட்டி அதே பாணியில் தமிழ் புலவர்களின் வரலாற்ரைத் தொகுத்து புளூட்டாக் என்ற பெயரில் வெளியிட்டமை தமிழுக்குக் கிட்டிய ஒரு புதிய செல்வமாகும். இதில் தமிழ்மொழியில் ஆக்கப்பட்ட நூல்களின் பெயர் பட்டியல், ஆக்கியோரின் பெயர்கள், நூல் கூறும் பொருள், ஆக்கப்பட்ட காலம் பற்றிய குறிப்புகளோடு ஒரு அகராதி அமைப்பில் வெளிவந்த முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை புராதனகாலத்தில் இருந்து ஒல்லாந்தர்காலம் வரை எழுதிய வரலாற்று நூல் சிறப்பு வாய்ந்தது. தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வு நூல்களும் அவர்கள் வரலாறு பாரம்பரியம் தொன்மை என்பன பற்றியும் கத்தோலிக்க சமய வரலாறுகள், அனுஸ்டானங்கள் பற்றியும் புத்தளப் பிரதேசத்தில் வாழும் முக்குவ குலத்தாருடய தோற்றம் வரலாறு இலங்கை முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் பாரம்பரியங்கள் எனத் தொடரும் அவரது வரலாற்றுப்பணி காசிகாண்டம், திருவாதவூரார் புராணத்து ஆறாம் சருக்கம், திருக்கோணேஸ்வரர் ஆலய வரலாறு போன்றவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து கொடுத்தவாறும் தொடர்ந்தது.

அவருடய அகராதிப்பணிகள் மேலும் கவனத்தைப் பெறும் ஒன்று. தமிழ் வரலாற்றில் 1861 மார்ச்சில் வெளிவந்த முதலாவது வைத்திய அகராதி என்ற பெருமையை காசிச் செட்டியில் மலையகராதிக்குரியது. அதில் 3500 சொற்கள் 69 பக்கங்களில் உள்ளடக்கப் பட்டுள்லன.பல திசைச் சொற்களும் கலைச் சொல்லாக்க முயற்சிகளும் அவரால் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு பல ‘முதலாவதுகளை’ அகராதி, வர்த்தமானி, அளவையியல், வரலாறு, சமயம், சமூகவியல் போன்ற இன்னோரன்ன துறைகளில் கண்ணியத்தோடும் பொறையோடும் எந்த வித இன சமய மொழிக் காழ்ப்புணச்சிகளும் இல்லாது  தனக்கு வசப்பட்ட மொழியில் சகல சமூகத்தவரும் புரிந்து கொள்ளத் தக்க வழியில் ஈழத் தமிழுக்கான வரலாற்று விழுமியங்களை எல்லாம்  எழுதி பத்திரப்படுத்தி விட்டு தன்  53வது வயதில் மரணித்த சைமன் காசிச் செட்டி அச் சமகால சமூக சூழலால் இன்றளவும் அதிகளவு வெளிச்சத்துக்கு வர முடியாதவராய்  மரணித்துப் போனார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதியதும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்திருந்ததும் மேற்குக் கரையோரப் பட்டினம் அவர் வாழ்விடமாக இருந்ததும் சில காரணங்களாய் இருந்த போதும்....

அது கப்ரியேல். சைமன். காசிச்செட்டி.

இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 2 யூலை 2017இல் SBS வானொலியில் ஒலிபரப்பப் பட்டது. அதனை கேட்க விரும்பின் கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.



http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-gabriel-simon?language=ta