Wednesday, November 24, 2010

செம்மொழியான தமிழ் - தொகுப்பு



தமிழ் செம்மொழிகளில் ஒன்று.

இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

•இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
◦கிரேக்க மொழி
◦சமஸ்கிருதம்
◦இலத்தீன்
◦பாரசீக மொழி
•ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
◦அரபு மொழி
◦எபிரேயம்
•திராவிட மொழிகள்:
◦தமிழ்
•சினோ-திபெத்திய மொழிகள்:
◦சீன மொழி

2. 1. கிரேக்கம்
கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் இன்னும் அந்நாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குவதும் குறிப்பிடத் தக்கது.

2. 2. இலத்தீன்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழம் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 3. அரபு மொழி
அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. அரேபியப் பழமொழிகள் , கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. முகலாயர்களின் பண்டையக் கட்டிடக் கலையின் சிறப்புத் தன்மைகள் உலகமே வியக்கக் கூடியதாய் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

2. 4. சீனம்
சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

2. 5. ஹீப்ரூ
ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. ஜீடா-ஹா-நசி என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 6. பாரசீகம்
ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. 7. சமஸ்கிருதம்
இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் , காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தை செம்மொழியாகக் கருதச் செய்தது.

2. 8. தமிழ்
இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

தகுதிகள்
செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.
தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.
இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

தமிழ் அளவைகள்.

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்துநூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அந்நியம்
1000000000000000000 = அற்ட்டம்
10000000000000000000 = பறற்ட்டம்
100000000000000000000 = பூறியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இது போல் அளவைகளுக்கும் வாய்ப்பாடுகள், பெயர் வழக்குகள் இருந்திருக்கின்றன.உதாரணமாக,

நீட்டல் அளவை

காதம் = 10 மைல்
ஓசனை = 4 காதம்
கல் = 1 மைல்
முழம் = முழங்கை முதல் நடுவிரல் நுனிவரை
சாண் = கட்டைவிரல் நுனி முதல் சிறுவிரல் நுனி வரை
ஒட்டைச் சாண் = கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
சாட் கோல் = சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்= கட்டை விரல் நீளம்
அடி= 12 அங்குட்டம்
காசாங்கிரம்= மயிர் நுனி அளவு
ஆள்= ஒரு மனிதனின் உயரம்

நிறுத்தல் அளவை

ஆழாக்கு = 1/8 படி
செவிடு = 1/5 ஆழாக்கு
சேர் = 5 ஆழாக்கு
வீசை = 1400 கிறாம்
இடா = முகத்தல் அளவை( எதுவென்று தெரியவில்லை)
உழக்கு = 1/4 படி
சின்னப் படி = 1/2 படி
பக்கா = 2 படி
லட்டி = 1 படி
வல்லம் = 2 அல்லது 4 படி
எத்துணை = எள் அளவு
கஃகு = 1/4 பலம்
பலம் = தோராயமாக (அண்னளவாக) 35 கிறாம்(1 மஞ்சாடி?)
இறாத்தல் = 13 பலம்

கோட்டை = 21 மரக்கால்
தூணி = 8 மரக்கால்
கலரை = 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்)= 8 படி

பரப்பளவு

குண்டு = 1089 சதுர அடி
குழி = 144 சதுர அடி
மா = 100 குழி
வேலி = 20 மா(6.67 ஏக்கர்)


கற்பம் = பிரம்மாவின் ஒரு நாள் 4,32,00,00,000 வருடம்
பதும கற்பம் = பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி = அரை நாழி
கன்னல் = (நாழிகை)24 நிமிடங்கள்
கணம் = நொடிப் பொழுது / கண் இமைக்கும் பொழுது.
படலம் = செயல் நடக்கும் நேரம்

கால அளவு


யாமம் = 3 மணி நேரம் அல்லது 7 1/2 நாழிகை
மண்டலம் = 40 / 41 / 45 நாட்கள்
மாமாங்கம் = 12 வருடங்கள்.


இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்


அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை


பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்


பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி


பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

தமிழ் கால அளவு, நாள், திதி, மாதம், ஆண்டுகள் குறித்த ஒரு பார்வை:

கால அளவு:

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்



நாட்கள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

திதிகள்:

பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி,திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி, அமாவாசை.

மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.

பக்ஷங்கள்:

கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்.

பருவங்கள் (ருதுக்கள்):

இளவேனில் (வசந்த ருது), துவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது),முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது).

ஆயனம்:

6 மாதங்கள் அடங்கியது ஒரு ஆயனம். மொத்தம் 2 ஆயனங்கள்

உத்தராயனம் -சூரிய ஒளிக் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு வடக்கே நேரடியாக வீழும் காலம்.

தக்ஷினாயனம் - நில நடுக்கோட்டிற்கு தெற்கே வீழும் காலம்.

ஆண்டுகள்:

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.பிரமோதூத
5.பிரஜோத்பதி
6.ஆங்கீரச
7.ஸ்ரீக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈஸ்வர
12.வெகுதான்ய
13.பிரமாதி
14.விக்கிரம
15.விஷூ
16.சித்திரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்தீப
20.விய
21.சர்வசிஷ்து
22.சர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜெய
29.மன்மத
30.துன்கி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.பிளவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விஸ்வவசு
40.பராபவ
41.பிளவங்க
42.கீலக
43.செளமிய
44.சாதாரண
45.விரோதிக்ருது
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷ
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

குழந்தைகளின் பருவம்10;

ஆண் பிள்ளைப் பருவம்;

1. காப்பு (2ம் மாதம்)
2.செங்கீரை (5ம் மாதம்)
3.தால் (7ம் மாதம்)
4.சப்பாணி (9ம் மாதம்)
5முத்தம் (11ம் மாதம்)
6.வருகை (13ம் மாதம்)
7.அம்புலி (15ம் மாதம்)
8.சிற்றில் (18ம் மாதம்)
9.சிறுபறை (19ம் மாதம்)
10.சிறுதேர். (21ம் மாதம்)

அது போல பெண் பிள்ளைப் பருவம்

1.காப்பு
2. செங்கீரை
3.தால்
4.சப்பாணி
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
8.கழங்கு
9.நீராடல்
10.ஊசல்.

தமிழ் வரி வடிவம் இன்றுள்ள நிலையை அடைந்த வரலாறு;




தமிழில் கணக்குக்கு தனியான எழுத்து முறை இருந்திருக்கிறது.


தமிழ் இலக்கங்கள்:



( ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲ )



அதனை இப்போதும் மொறிசியஸ் நாடு தன் ரூபாய் நோட்டுக்களில் பயன் படுத்தி வருகின்றது.



கடித எந்திரம்:

காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள்பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.

இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள்.இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக்கருவி உதவியதாம்.

குத்து மதிப்பாகத் தமிழ் சொத்து விபரங்கள் இவை.


நன்றி; இணைய உலாவி.

Thursday, November 18, 2010

Wednesday, November 17, 2010

மழலை மொழி



சிறு வயதில் நாம் கற்பவை அப்படியே இன்றுவரை மனதில் பதிந்திருக்கும்.’இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதை மெய்ப்பிப்பது போல் அமைந்த நிகழ்வொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கு இடம் பெற்றது. அது வித்துவான் வேந்தனார் அவர்களுடைய மழலை மொழி என்ற புத்தக வெளியீட்டு விழா.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதற்கு சீரிய சிந்தனையும் நிதானமான ஞானமும் நல்ல உள்ளமும் வேண்டும்.குழந்தைகளின் உலகுக்கு இறங்கும் திறமை இருக்க வேண்டும்.அவை எல்லாம் விளங்கப் பெற்றவராகக் காலஞ் சென்ற வேந்தனார் விளங்கியிருந்தார் என்பதற்கு இன்று வரை நம் மனதில் பதிந்திருக்கும் அவருடைய பாடல்களும் அதன் உள்ளடக்கமும் அது கொண்டிருக்கும் எளிமையுமே சான்று.

மனதில் சிறுவயதுப் பாடல்களாக பதிந்திருந்த பாடல்களுக்கான காரண கர்த்தா வித்துவான் வேந்தனார் தான் என்பதையே அன்று தான் அறிந்தேன்.அத்தனை தூரம் தன்னை முதன்மைப் படுத்தாமல் பாடல்களை முதன்மைப் படுத்திய தகைமையாளர் அவர்.அதனை அவரது மகள் வெளியீட்டு விழாவிலும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பாட நூல் வெளியீட்டுத் திணைக்களம் அவரது பெயரை நூலில் குறிப்பிட மறந்தது ஏனென்று தெரியவில்லை என்று மிகுந்த விசனமுற்றிருந்தார் அவரது மகளார்.தவிரவும் அவருடய பாடல்களில் சில மாற்றங்களையும் அது செய்திருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பாடல்களை மிகச் சிறு வயதுகளில் அபிநயப் பாடல்களாகப் பாடி ஆடி களிக்கத் தந்த வித்துவானின் பாடல்கள் இப்போது மீண்டும் அச்சு வடிவில் பார்க்கக் கிடைத்தது பாக்கியமே.சிறுவயதுக்கு நம்மைக் கொண்டு சென்ற அப்பாடல்களை இன்று உங்களோடு பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

1.அம்மாவின் அன்பு

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீருமாட்டிப்
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக் கூடம்
அனுப்பி வைக்கும் அம்மா.
(’அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா’-என்பது மூலப் பிரதியில் உள்ள பகுதி)

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்டநேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளில் வைக்கும் அம்மா

பாப்பா மலர் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா



2.எங்கள் வீட்டுப் பூனை

சின்ன சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி பரனில் இருக்கும்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தால் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை



3.பறவைக் குஞ்சு

பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறக்கும் இறகு முளைத்திடாத
பறவைக் குஞ்சைப் பாரண்ணா

கூடு காற்றில் ஆடி இந்தக்
குஞ்சு விழுந்து விட்டதோ
தேடித் தாயும் தூக்க முன்னம்
செத்துப் போகும் துடிக்குதே

கட்டெறும்பும் ஊருதே
காகம் கொத்தப் பாக்குதே
வட்டம் போட்டுப் பருந்தும் இந்த
மரத்தை நோக்கி வருகுதே

மரத்தில் ஏறிக் கூட்டிலே
வைத்து விடுங்கள் குஞ்சையும்
இரக்கமாக இருக்குதையோ
இளைத்துக் கிடந்து துடிக்குதே.

Wednesday, November 10, 2010

விவேக சிந்தாமணி



எப்பொழுதேனும் மனதில் இலக்கிய வரட்சி ஏற்படும் போது அல்லது புத்தகங்கள் படிக்க முடியாது வேலைப் பழு என்னைச் சூழும் போது காரில் பயணிக்கும் அந்த ஒரு மணி நேரத்தை இன்னொரு விதமாக அதற்குப் பயன் படுத்திக் கொள்வேன்.அது ஒரு விதமான போதையைப் போல!மனதை ரம்மியமான ஓர் உலகுக்கு இட்டுச் செல்லும்.


சுமார் நான்கு வருடங்களின் முன்னால் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துத் தேன் மதுரத் தமிழ் ஓசையில் புதன் மாலைகளில் இடம் பெற்று வந்த ‘முத்து விதானம்’ என்ற இலக்கிய நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகள் என்னை சூழ்ந்திருக்கும் அத்தகைய வெறுமையில் இருந்து என்னை விடுவித்துப் புத்துணர்ச்சியத் தரும்.

ஒரு மணி நேரம் இடம் பெற்ற அந்த நிகழ்ச்சியினை திருமலை மூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனை கேட்ட்ட பின்னர் மனதில் ஒரு உணர்வு மட்டுமே மிஞ்சும். அது கண்னப்ப நாயனார் சிவபெருமானுக்கு இறைச்சியைப் படைக்கும் போது முதலில் தான் சுவத்துப் பார்த்து சுவையற்றவற்றை விலக்கி சுவையானவற்றைப் தேர்ந்தெடுத்துப் படைப்பாராம்.அது போல மிகச்சுவையான இலக்கியங்களைத் தரம் பார்த்துப் படைப்பதில் கைதேர்ந்தவராக அவர் விளங்கியிருந்தார் என்பது அதன் சுவையை மீறி மனதில் நிலைக்கும்.

அச் சுவையின் நிமித்தம் அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரோடு தொடர்பு கொண்டு மிக அருமையாக இருக்கிறதென்றும்; உங்கள் அனைத்து நிகழ்ச்சியையும் எனக்கு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா என்றும் கேட்டிருந்தேன்.முழுவதையும் கிரமமான முறையில் ஒலிப்பதிவு செய்து ஒழுங்கு முறைப்படி ஒரு கோப்பில் இட்டு இலவசமாக என் வீடு தேடி வந்து தந்து விட்டுப் போன அந்த பெருந் தன்மையை நன்றியோடு இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.

இவற்றை இப்போது எதற்குச் சொல்கிறேன் என்றால் அண்மையில் அந்த வரிசையில் வந்த முத்து விதானம் ஒன்றினை சுமார் 4 வருடங்களின் பின் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிது புதிதாய் அதில் சுவை சொட்டும்.அதில் விவேக சிந்தாமணி என்ற இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலை அதன் சுவை குன்றா வண்ணம் சுவைக்கத் தந்திருந்தார் அவர்.அவர் தந்த பாடல் இது தான்.

பாடல் 19;

“தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று தடங்கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்”

தேனினை உண்ட மயக்கத்தில் மயங்கிப் போய் கிடக்கிறதாம் வண்டு.அதனை சம்புவின் கனி - பழம் என்று எண்ணி தன் கரங்களால் எடுத்து பார்க்கிறாள் ஒருத்தி.(சம்பு என்பது தாமரை என்று நினைக்கிறேன்)அவளது முகத்தை மயக்கத்தில் இருந்து விழித்த வண்டு பார்க்கிறது.அதுவோ சந்ர வதனம்!ஐயையோ சந்திரன் வந்து விட்டது என்று மயக்கமுறுகிறது வண்டு.சந்திரன் வந்து விட்டால் என்ன செய்யும்? தாமரை கூம்பி விடும் இல்லையா?அதனால் அப்பெண்ணின் தாமரைக் கரத்தை தாமரை என நினைத்த வண்டு அது கூம்பி விடும் என்று அஞ்சி அவ் வண்டு பறந்து விட்டதாம்.இதென்ன புதுமை! பழம் பறக்கிற புதுமை என்று சந்ர வதனமும் தாமரைக் கரமும் கொண்ட அவள் கேட்கிறாள்.

இதனைச் சுவை பட சொல்லியிருந்தார் திருமலை மூர்த்தி அவர்கள். அதன் பின்னர் கிடைத்த ஓர் ஓய்வுப் பொழுதில் விவேக சிந்தாமணியத் தேடி வலையில் பயணம் போனேன்.அதிஷ்ட வசமாகக் கிட்டியது விவேக சிந்தாமணி.அழகழகான மணிகளைப் போல கோர்க்கப் பட்ட பாடல்களின் தொகுப்பு அது.முழுவதும் சேர்த்தால் 121 பாடல்கள் அதில் உள்ளன.பெண்ணையும் உலகியல் நடப்புகளையும் கலந்து கோர்க்கப் பட்டிருக்கிறது அச் சிந்தாமணி.ஆனால்,யார் பாடினார்? எப்போது பாடப்பட்டது என்பது போன்ற விபரங்களைப் பெற முடியவில்லை.

ஆனால் பாடல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொகுத்து இலகுவாகத் தரவிரக்கம் செய்து படிக்கத் தக்க வசதியோடும் தேவைப் பட்டால் அச்சு வடிவில் பெறும் வசதியோடும் மின் இதழாக தெளிவான அச்சில் வெளியிட்டிருக்கிறது.

மிக அழகானதும் பயனுள்ளதுமான அவர்கள் முயற்சி நின்று நிலை பெற வேண்டும்.அவர் தம் அமைதியான சமூகப் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவற்றில் இருந்து சில விவேக சிந்தாமணிகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு விடயங்கள் இதில் என்னை வியப்பில் ஆழ்த்தின.

1.பாடலும் அந்தக் கற்பனைத் திறனும் கருப் பொருளும்.
2.இத்தகைய பாடல்கள் ஏன் கவிஞர்கள்,இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப் படவில்லை?

அதில் இருக்கின்ற கற்பனை நயமும் ஊடு பொருளும் மிக அழகானவை.பெண்ணின் எழிலை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல் 10,

“வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணினாள் கிளி மொழி வாயில் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே”

பெண்னின் நடையழகை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல்37,

பொன்னின் மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என வாமென உரைத்தார்”

இன்னொரு பாடல், ’அன்னம் பழித்த நடை,அம்பு பழித்த விழி அமுதம் பழித்த மொழி...’என்று தொடரும்.அவை மட்டுமன்றி வேறு பல பாடல்களும் இந்த மணிகளில் வியந்து இன்புறத் தக்கன.

ஒன்பதாவது பாடல் இப்படிக் கூறுகிறது.

‘வானரம் மழைதனில் நனைய தூக்கணம்
தானொரு நெறி சொல தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க் குரைத்திடில் இடர் அது ஆகுமே’

என்கிறது. அது போலவே இன்னொரு பாடல் (130)

“நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கித் தள்ளி
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடதாமோ?”

என்று கேட்டபடி தொடர்கிறது.

இன்னொரு பாடல்,(61)

“தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்குப் பால் வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்”

என்று ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பதை அழகாகக் கூறுகிறது.அதே பொருளைக் கொண்டதாக இன்னொரு பாடலும் அங்கு இருக்கிறது.அது 88வது பாடல்.

“கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறார்.

பாடல் எட்டோ இன்னொரு விதமாய் அதனை நவில்கிறது.

”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;

மண்டூகம் - தவளை. தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை.ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும்.அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் அறிவுடைய கற்றவர்களோ எனில் (தூர இருந்த போதும்) சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.

பாடல் 56

”மங்குல் அம்பதினாயிரம் யோசினை மயில் கண்டு நடமாடும்
தங்கும் ஆதவ நூறாயிரம் யோசினை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசினையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டகலாரே!”

பொருள்;

மங்குல் - மழை முகில். மழை முகிலைக் கண்டு 50,000 யோசனை தூரத்தில் உள்ள மயில் மகிழ்ந்து நடனமாடும்;சூரியனோ 100,000 யோசனை தூரத்தில் உள்ளது. ஆனாலும் அதனைக் கண்டு தாமரை முகம் மலரும்.நிலாவோ 200,000 யோசனை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதனைக் கண்டு செவ் அல்லி சிறப்பாக முகம் மலருகிறது.அது போல அன்பாக இருப்பவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதயத்தில் இருந்து நீங்க மாட்டார்கள்.

எவ்வளவு அழகான உவமான உவமேயங்கள் இல்லையா? இது வரை இப்படி ஒரு கற்பனை ஏன் வேறொருவருக்கும் தோன்றவில்லை? அல்லது நான் தான் இவற்றை எல்லாம் காணாது தவற விட்டு விட்டேனா?

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஆஈன மழை பொழிய இல்லம் வீழ என்ற பாடலும் இவருடையது தான்.அடுத்தடுத்து வரும் இடர்கள் பற்றி அப்பாடல் பேசும்.’பட்ட காலே படும்; கெட்ட குடியே கெடும்’என்பதை மெய்ப்பிப்பது போல அமைந்திருக்கும் பாடல் அது. வறுமை வந்துற்ற போது ஏற்படும் நிலைமை பற்றிப் பேசும் இப் பாடலைப் பாருங்கள்.

‘தாங்கொணா வறுமை வந்தால் சபை தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லர்க்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே!’

புலவர்களில் அனேகமானோர்க்கு அன்பும் பணமும் எப்போதும் பற்றாக்குறையாகவே இருந்திருக்கிறது போலும்.இது பற்றிப் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன.அதிலும் நாயக்கர் காலப் பாடல்கள் சிறப்பாக அவற்றை வெளிப்படுத்தியிருக்கும். இரட்டையர்,காளமேகப் புலவர், ஒளவையார் வரை இது அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.இப்புலவரும் அதற்கு விதி விலக்கில்லை. இவர் இப்படிப் பாடுகிறார்.

‘ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே’


அழகான மணிகளை நாம் இன்புறத் தந்து பெயரைப் பதியாது போன அந்தப் புலவனுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.

இன்னும் இப்படி அழகழகான பாடல்கள் இலக்கியப் பரப்பெங்கும் சிந்துண்டு கிடக்கக் கூடும்.அவற்றைக் கோர்த்தெடுத்து மாலைகளாக்கித் தர தமிழ் இலக்கிய வாதிகள் முன் வர வேண்டும்.

Thursday, November 4, 2010

சீதா கல்யாண வைபோகமே...

கடந்த வாரம் திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் திழைக்க முடிந்தது. அதன் பக்தி ரசமும் தமிழ் சுவையும் படிக்கப் படிக்க இன்பம் பயப்பன.ஆழ்ந்து ஆழ்ந்து சுவைக்கத் தக்கனவாக உள்ளன அதன் தரம்.அதனை இன்னும் இன்னும் சுவைக்க வேண்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தேடிப் போகத் தொடங்கினேன். அது ஒரு கலா சாகரத்தில் கொண்டு சென்று என்னை விட்டது.

அதிலிருந்து ஒரு சுவையை இன்று உங்களோடு பகிர ஆசை.

நேரமிருந்தால் இந்த சீதா கல்யாண வைபோகத்தை பல்வேறு சுவையில் ரசித்துப் பாருங்கள்.

ஒரு கல்யாண விருந்துண்ட மகிழ்ச்சி மிஞ்சும்.

இது ஒருவித "குணானுபவம்"

இது மலையாளத் திரைப்படம் ஒன்றுக்காக கே.ஜே ஜேசுதாஸ்


இங்கு செக்சபோனில் கத்ரி கோபிநாத் இசைப்பதைக் கேட்கலாம்..


இது விஜய்.சிவா பாடியது


நாதஸ்வரத்தில் சீதா கல்யாணம்.


பரதத்தில் வில் முறித்து மணமுடிக்கும் காட்சி; சீதா கல்யாண வைபோகம்.


இது ஒரு விளம்பரம்




இவ்வாறு இதனை பதிவேற்ற சாத்தியப் பட்டது என் அன்புத் தோழி ஹாசினியால்.நன்றி ஹாசினி.