Showing posts with label தனிநபர். Show all posts
Showing posts with label தனிநபர். Show all posts

Friday, March 28, 2025

ஐஸ் பழமும் நானும் - தீர்க்கமுடியாப் பெரும் கடனும்

 1976/ 77 காலப்பகுதி அது.

பாடசாலையில் நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலப்பகுதி.

மூன்றுமைல் தூரத்தில் பள்ளி. பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வர வேண்டும். ஆனாலும் பஸ்ஸோ நேரத்திற்கு வராது. வந்தாலும் பள்ளிக்குப் போக எனக்கும் மனம் வராது. பிந்தி வரும் பஸ்சில் ஏறிவிட்டு பின்னர் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு நானிருக்க அப்பா என்னை அழைத்துக் கொண்டு பள்ளியில் (வீதியோரம் தான் பள்ளி அமைந்திருந்தது) விட்டு விட்டு காத்துக் கொண்டு நிற்கும் பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போவார். வருவார். 

பள்ளி விட்ட பின்னர் நேரத்திற்கு பஸ் வராது. சிவாண்ணையின் பால் வான் எப்பிடியும் வரும் அதில் ஏறலாம் என்றொரு நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கும். நான் மட்டுமில்லை பல பிள்ளைகள் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.  உயர்வகுப்புப் படித்த அக்காவை தாமாகவே எங்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். 

பள்ளிப் பாடத்தில் வரும் வீட்டு வேலைகளைச் சில புத்திசாலிப் பிள்ளைகள் கூரை இல்லாமல் சுவர் மட்டும் இருந்த பஸ் நிலையத்து சுவர்களில் வைத்து எழுதிக்கொண்டு இருப்பார்கள். பெரிய வகுப்பு படித்துக் கொண்டிருந்த அக்காவை அருகில் இருந்த பிள்லையார் கோயில் திருத்த வேலைக்காகப் பறிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த கருங்கற் பாளங்களின் மேலும் வேர்கள் மேற்கிழம்பி நமக்கு இருக்க இலகுவாக்கி நிழலும் தந்து கொண்டிருந்த ஒரு பேர் தெரிய மரத்தின் வேர்களின் மேலும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

என்னைப்போல ஒரு சில பேர் யாழ்ப்பாண வீதி வழியாகப் போகும் வாகனங்கள் அடித்து விட்டுப் போகும் சிதறு தேங்காயைப் பொறுக்கி சாப்பிடுவதிலும் எட்டுக் கோடு, ஓடிப்பிடித்து விளையாடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

ஆனாலும் ஒரு பெரும் கொடுமை பாருங்கள். சைக்கிளில் வந்து ஐஸ்பழம் விற்கும் அந்த ஒற்றை வியாபாரி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருப்பார். அடிக்கடி தன் கறுப்பு நிற கோன் போன்ற ஒன்றால் பாம் பாம் என்று அடித்து தன் இருப்பை வேறு உறுதிப்படுத்திக் கொண்டும் இருப்பார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் எங்களின் பஸ் காசும் ஐஸ் பழம் ஒன்றின் காசும் ஒரே அளவு தான்.

எப்போதுமே!

ஒரு சிறு பிள்ளை எத்தனை மணி நேரம் தான் ஆசையை அடக்கிக் கொண்டு இருப்பது!  வேளைக்கு பஸ் வந்தால் பறவாயில்லை. வீடு போய் சேர்ந்து விடுவேன். பஸ் வேளைக்கு வராது. வந்தாலும் யாழ் நோக்கிப் போகும் பயணிகளை ஏற்றிப் போகும் களைப்பில் எங்களை ஏற்றி இறக்கி மினைக்கெட அவர்கள் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அவை திருகோண மலையில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் மன்னாரிலிருந்தும் யாழ் நோக்கிப் போபவை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

நம்ம பிழைப்பு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் போகும் பஸ்சினை எதிர் நோக்கியது. அது சிலவேளை இடர்பாடோடும் சன இடிபாடோடும் வந்தால் இந்தச் சின்னஞ் சிறுசுகள் சுமார் 15 - 20 வரை இருப்பவர்களை ஏற்ற அதற்கும் பாவம் இடமிருக்காது.

3.15 க்குப் பள்ளி விட்டு 5.30 , 6.00 மணி வரையும் பஸ் வரவில்லை அல்லது எங்களை ஏற்றவில்லை என்றால் பலரும் நடராசாவில் நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள். யசோதா விளையாடியே களைத்து விடுவதால் இனியும் 3 மைல் தூரம் ஏற்ற இறக்கங்களோடு நடக்க அதற்கு மனசு வராது. எப்படியும் எங்களை விட தூரம் போகும் அக்காவை பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள் என்று விட்டு நானுமவர்களோடு காத்திருப்பேன்.

ஆனாலும் ஒன்று செய்வேன்.

கொஞ்ச நேரம் பொறுமையோடு கைக் காசை பார்ப்பதும் பின் அதனைச் சீருடைப் பொக்கற்றுக்குள்  போடுவதுமாக இருப்பேன். இனி ஐஸ்பழக் கார வியாபாரியும் போய் விடப் போகிறார் எனத் தெரியும் பட்சத்தில் ஒரு தயக்கமும் இல்லாமல் பஸ் காசினை கொடுத்து ஐஸ்பழம் வாங்கி நல்ல சந்தோஷமாக - உலகத்தில் இன்று தான் நான் வாழப்போகும் கடைசி நாள் என்பது மாதிரி ரசித்து ரசித்து சாப்பிடுவேன்.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7.00 - 7.30 மணியளவில் மருதோடைக்குப் போகும் பஸ் வந்து நிற்கும். எனக்கு வீட்டுக்குப் போகக் காசு இருக்காது. அந்த உண்மை அப்போது தான் என் மண்டைக்குள் வெளிச்சமிடும். என்ன செய்வது என்றும் தெரியாது. அப்போது உயர்தர வகுப்புப் படித்த அக்காவை எங்களோடு பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.

அவர்களில் இரண்டு பேரை எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு அக்காவின் பெயர் யோகா அக்கா. மற்றய அக்காவுக்குப் பேர் சறோ அக்கா.

பஸ் வந்து நின்றதும் நடத்துனர் இறங்கி ரிக்கற் போட ஆரம்பிப்பார். நான் மெல்ல சறோ அக்காவிடம் அல்லது யோகா அக்காவிடம் என்னிடம் பஸ்சுக்குக் காசில்லை என்பதைத் தெரிவிப்பேன்.

அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்ததோ என்னவோ,’உம்மோட பெரிய கரைச்சல் யசோ’ என்று சொல்லி விட்டு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பார்கள். வீட்டுக்கு நான் வந்து இது பற்றி மூச்சுக் கூட விட மாட்டேன்.

இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களை நான் கடந்திருக்கிறேன்....ஒரு நாள் கூட அந்த அக்காவை எனக்கு பஸ்ஸுக்கு டிக்கற் எடுத்துத் தர மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை.  பின்னர் ஒருவாறு என் தந்தையாருக்கு  தெரிந்ததோ என்னவோ சீசன் ரிக்கற் வாங்கித் தரத் தொடங்கி விட்டார். சீசன் ரிக்கற் என்பது ஒரு மாதத்துக்கான பணத்தை முன் கூட்டியே டிப்போவில் கட்டினால் அவர்கள் ஓர் அட்டையை வழங்குவார்கள். அதனை நடத்துனரிடம் காட்டினால் அவர் அந்தத் திகதிக்குரிய பகுதியை மட்டும்  அடையாளப்படுத்தி விட்டுத் தருவார். 

பணப்புழக்கத்திற்கு அதன் பிறகு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. கூடவே ஐஸ்பழத்திற்கும்!

என் வீட்டுக்கும் சொல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் சொல்லாமல், என்னை மட்டும் உரிமையோடு கடிந்து கொண்டும்; கண்காணித்துக் கொண்டும், அவ்வப்போது நான் செய்யும் குழப்படிகளைச் சகித்துக் கொண்டும் எங்களை பாடசாலை விட்ட பிறகும் கண்காணித்து பொறுப்போடு எனக்கு அவ்வப்போது பஸ்ஸுக்கு டிக்கற்றும் எடுத்துத் தந்த அக்காவை .......

அவை இப்ப எங்கை என்ன செய்து கொண்டிருப்பினம்?

சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன்....எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத அன்பென்பது இது தானோ?

அழிக்க முடியாக் கடன் கணக்கில் சேர்ந்து விட்ட இந்தக் கடன்களை இனி நான் எப்பிறப்பில் தீர்க்கப் போகிறேன்?

சறோ அக்கா, யோகா அக்கா! 

நீங்கள் செய்தவைகளை நான் என் ஆத்மாவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஜென்மங்கள் கடந்தேனும் இந்தக் கடனைத் தீர்க்க இறையருளை பிரார்த்திக்கிறேன், மனமுருகி வேண்டுகிறேன்.

வேறென்ன நான் செய்ய முடியும்.... 

சொல்லுங்கள்.....

Friday, March 21, 2025

கமலேஸ்வரி. பத்மநாதன் - அம்மா நடந்து போன பாதை – சில காலடித்தடங்கள்

’நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு’

சாந்தம், உரத்துப் பேசாத குரல், சுத்தம், நேர்த்தி, அன்பு, அடக்கம், எளிமை, நன்றியுணர்வு, கொடுத்துப் பழகிய கை, புன்னகை, கட்டுக்கோப்பான நாளாந்த செயல்பாடுகள், 'பார்வையாளராகத்' தன்னை தகவமைத்துக் கொண்ட ஞானம், பண்புநலன் மாறா குணாம்சம், வந்ததை வந்தவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ந்த வாழ்வு, முறைப்பாடுகள் சொல்லாத சுபாவம் ...இவைகளைச் சேர்த்து பார்த்தால் தெரிவது எங்கள் அம்மா.

நாம் பெரும் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள் அல்ல. அப்பாவின் அரசாங்க உத்தியோகமும் அம்மா கொண்டுவந்த காணி, தோட்டங்களோடும் ஒரு மத்தியதர வாழ்வை ஆரம்பித்தவர்கள் அவர்கள்.

மாற்றுச்சம்பந்தமாக தன் மாமன் மகனை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவுக்கு எல்லா விதத்திலும் ஏற்ற ஒரு மனைவியாக அவர் இருந்தார். அப்பாவின் நிர்வாகமே ஓங்கியிருந்த எங்கள் வீட்டில் அம்மாவின் சிக்கனமும் விடாமுயற்சியோடு அவராகவே செய்த தோட்டங்களும் எங்களை ஆளாக்க பெரும் உதவிகளைச் செய்தன.  நம் உற்றார், உறவினர்கள் ஒரு ஆண்  ஒரு பெண் பிள்ளைகளோடு வசதியான ஒரு பெருவாழ்வை வாழ்ந்த போதும் தான் 3 பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்டேன் என்று ஒருபோதும் அவர் கலங்கியதில்லை;மனவருத்தம் அடைந்ததில்லை. குறைப்பட்டுக் கொண்டதுமில்லை. கிடைத்த வாழ்வை கிடைத்தவாறு ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியைக் கண்டடைந்தவர். 

தன் சிக்கனத்தாலும், பிரயாசையாலும், ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை வளர்த்தும்; நிலக்கடலை,மிளகாய், உழுந்து, பயறு போன்ற பயிர்களைப் பயிரிட்டும் வரும் பணத்தில் எங்களை வளர்த்து ஆளாக்கினார்.

எங்கள் கல்வியிலும் முன்னேற்றத்திலும் பெருத்த அக்கறை காட்டிய அவர் எங்கள் ஆசிரியர்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருந்தார். பாடசாலைகளில் நடப்பவற்றை உடனுக்குடன் அறிவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியே எங்கள் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதில் மிகத் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். 

இருந்த போதும், நமக்கு தன்னால் இயன்ற வகையில் சீதனம் சேர்க்கவும் தவறவில்லை. தபால் கொண்டு வரும் தபால் காரர் வழியாக எங்கள் மூவருக்கும் 5/10/20/50 ரூபாய்களைச் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வந்தார். சிக்கனமாகக் காசுகளைச் சேர்த்து தன் பிள்ளைகளான நம் மூவருக்கும் நகைகள் சேர்த்தார். எல்லாத் தாய்மாரும் இவற்றை எல்லாம் செய்வார்கள் தான் என்ற போதும், அம்மா இவைகளை எல்லாம் தன் வாழ்வு பற்றிய எந்தவிதமான முணுமுணுப்புகளும் முறைப்பாடுகளும் கொள்ளாமல் இன்முகத்தோடு அவற்றைச் செய்தார். வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் நான் அறிந்தவரை இருக்கவில்லை. 

அவரிடமிருந்த இன்னுமொரு முக்கியமான குணம் விருந்தோம்பல். நாம் எல்லைப்புற கிராமமான ஓமந்தையில் இருந்ததால் பயணிகள் பலரும் இரவு தங்கி காலையில் தம் பயணத்தைத் தொடரும் போது காலைகள் எல்லாம் அவர்களுக்கு நம் கிணற்றடியிலேயே விடியும். எல்லோருக்கும் மாட்டில் உடன் கறந்த பாலோடு சிறந்த தேனீர் கொடுத்தே அவர் அவர்களை வழியனுப்பி விடுவார். இரவு தங்கும் பயணிகளுக்கு ஆகாரங்களும் எந்தவித சலிப்புமின்றி சமைத்துக் கொடுத்த கைகள் அவை.

இவைகளை எல்லாம் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடும் வேலைப்பழு பற்றிய முறைப்பாடுகள் ஏதுமற்றும் மிக மகிழ்ச்சியாக அவர் அவற்றைச் செய்தார். அப்பாவும் அதற்கு மிகுந்த ஆதரவோடு இருந்தார்.

கிராமத்தில் ஏழை எளியவர்களோடு எங்கள் இளமைக்காலம் கழிந்தது. எங்கள் வீட்டுக்கருகில் நாம் அன்போடு பாலன்கமத்து அங்கிள்/அன்ரி  என்றழைக்கும் தம்பதிகள் அமைதியாக அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நம் கிராமத்தில் ஒரு கோயிலும் இல்லையே என்று கருதி ஒரு சித்திபுத்திவிநாயகரை யாழ்வீதியில் தம் வளவோரமாக ஸ்தாபித்து அதற்குத் தினசரி காலை மாலை அலங்காரமும் பூசனைகளும் செய்து வந்தனர். ஒருநாள் அந்தச் சிறு கோயிலுக்கு விநாயசதுர்த்தி பொங்கலைச் செய்வோம் என்ற வேண்டுகோளை  அம்மா விடுக்க, அவர்களும் அதற்குச் சம்மதித்தனர். அந்த நாளில் இருந்து இடப்பெயர்வு வரையும் கிரமமாக விநாயக சதுர்த்திப் பொங்கலை அவர் செய்து வந்தார். 

அந்தநாள் அந்தச் சிறு கிராமத்துக் குடி சனங்களுக்கு கொண்டாட்டமான நாள். தம் நாளாந்த தொழிலை முடித்துக்கொண்டு நம் வளவுக் கிணற்றில் குளித்துவிட்டு அவர்கள் பொங்கல் பிரசாதத்திற்கு வருவார்கள். சிறுவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். அவர்கள் தேக்குமர இலைகளை ஒடித்து வருவதிலும் சுள்ளிகள் பொறுக்கி வந்து தருவதிலும் தம் வயதொத்த நண்பர்களோடு வீதியோரம் ஓடி விளையாடுவதிலும் ஈடுபட்டிருப்பர். சிறுமிகள் தேங்காய் திருவுவதிலும், தண்ணீர் அள்ளி வருவதிலும் உதவி ஒத்தாசையாக இருப்பார்கள். 

ஒருவழியாகப் பொங்கல் முடிந்து பூசை ஆரம்பமாகும் மணி அடித்தால் போதும்! கிராமமே அங்கு திரண்டு விடும். யாழ் வீதியால் போகும் வாகனங்கள் தரித்து நின்று வழிபட ஆரம்பிக்கும். ஒருவர்  தேவாரம் பாட, ஒருவர் மணியடிக்க, ஒருவர் சங்கு ஊத, பூசைகள் நடந்தேறிய பின் எல்லோரும் தத்தம் இலைகளில் பொங்கலை வாங்கிச் செல்வர். அம்மாவிடம் நல்ல நிர்வாகத் திறன் இருந்ததையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லோருக்கும் சமனாகவும் நிறைவாகவும் பிரசாதம் கிடைத்ததை அவர் எப்போதும் உறுதி செய்து கொள்வதோடு பொங்கல்பானை கழுவுதல், இடத்தைச் சுத்தப்படுத்துதல், போன்ற காரியங்களையும் கவனிக்க பொருத்தமானவர்களை நியமித்து விடுவார்.

இதன் பிறகு அவருக்குத் திருவெம்பாவையும் நம் பிள்ளையாருக்குச் செய்யவேண்டும் என்று ஓர் ஆசை வந்தது. அதற்காக அவர் 10 நாட்களுக்கும் அயலில் வாழும் ஓரளவு வசதிவாய்ப்போடு இருந்த 10குடும்பத்தார்களை இணைத்துக் கொண்டார்.

அந்த நாட்கள் தான் எங்களுக்குத் திருவிழாக்கள். அதிகாலையில் எங்கள் எல்லோரையும் எழுப்பி விடுவார். நாம் நடுங்க நடுங்க முழுகி வர வேண்டும். மின்சார வசதியில்லாத அக்கிராமத்தில் லாந்தர்களோடு நாம் கிணற்றடியில் நிற்க அப்பா பெற்றோல் மக்ஸ் கொழுத்தி எடுத்துக்கொண்டு பற்றறியில் இயங்கும் ரேப்றைக்கோடரோடு கோயிலுக்குப் போவார். கோயில் மணி அடித்தவுடன் குடிசனங்கள் ஒவ்வொருவராக அங்கு உதவிக்கு வரத் தொடங்குவார்கள். கோயில் மணி ஓசையோடு பெற்றோல்மக்ஸ் வெளிச்சமும் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் கேட்கும் விநாயகர் அகவலும் ஊரை எழுப்ப, பிறகென்ன அமர்க்களம் தான். யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையில்லை. எல்லோரும் தத்தம் வேலைகளை கடகடவென்று செய்து முடித்துவிடுவார்கள். பூசனைகள் சிறப்பாக ஒப்பேறும்.

இப்படியாக கோயிலும் தோட்டமும் தன் பிள்ளைகளுமாகத் தான் அவரது வாழ்வின் பெரும் பாகம் கழிந்தது. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு உயர்விலும் எங்கள் அம்மாவின் பெரும் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. ஏழைக்குடியான மக்களுக்கு பணக் கைமாற்றுக்களும், முட்டை, தேங்காய், பால் நெய் போன்றவைகளும் தாராளமாய் சென்று சேர்ந்திருக்கின்றன. சட்டை தைக்கவும், சாரம் மூட்டவும் துணிகளோடு வருபவர்களுக்கு அவர் தான் ரெயிலர். நம் வீட்டுக் கிணறு போலவே வருவோர் எல்லோருக்கும் பயன் கருதாது தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அவர்களுக்கு வாரி வழங்கினார்.

73 Jaffna road, Omanthai என்ற முகவரி அம்மாவினால் பலருடய முன்பின் தெரியாத பயணிகளின் மனங்களிலும் அந்தக் கிராமத்து ஏழை எளிய மக்களது மனங்களிலும் மறையாது பதிந்துபோயிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றும் அவவைக் காணும் யாரேனும் அதனை நன்றியோடு நினைவு கூர்வதை நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். அம்மாவுக்குத் தான் அவர்கள் யார் என்பது நினைவிருப்பதில்லை.

ஒரு கர்ம வீரராக பயனேதும் கருதாத ஒரு வாழ்க்கைப் பயணியாக அவர் தன் வாழ்வை பயன்கருதாது பணிசெய்து வாழ்ந்து வந்தார். அதனை அவர் தன் வாழ்வின் இயல்பாகக் கொண்டிருந்தார். அவருக்கு அதில் எந்த விதமான மகிழ்வோ, துன்பமோ இருந்தில்லை. 10ம் வகுப்போடு அவர் படிப்பை  நிறுத்தி இருந்தாலும் இந்த இயல்பு இயற்கையாகவே அவருக்குக் கைகூடி இருந்தது. அத்தகைய ஞானத்தை இயற்கையாகவே அவர் கைவரப் பெற்றிருந்தார். நிலைத்து நிற்காத செல்வத்தை அதிகம் பெற்றிராத போதும் இருந்தவற்றைக் கொண்டு நிலையான அறச் செயல்களை அது அறச் செயல்கள் என்று தெரியாமலே செய்து வந்தார்.

அவரது வாழ்வின் இரண்டாம் பாகம் சிட்னியில் ஆரம்பித்தது. அவரது மூத்தமகள் சாந்தியும் அவரது கணவர் கதிர்காமநாதனும் இணைந்து அப்பா அம்மாவை 2007 ம் ஆண்டு பணம் செலுத்தி பெற்றார் விசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். விரைவிலேயே அவர்கள் நிரந்தர வதிவிட உரிமையையும் பெற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு என்னோடு வாழத் தொடங்கினார்கள். அன்பும் அரவணைப்பும் உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் வாழ்வு சிட்னியில் மலர்ந்தது. அரசாங்கம் அவர்களை கண்ணும் கருத்தோடும் எந்தக் குறையுமின்றிக் கவனித்துக் கொண்டது.  பொருளாதாரச் சுதந்திரமும் அச்சமற்ற பாதுகாப்பும் சகலருக்குமானதாயிற்று. அம்மா சமூகக் கூட்டங்களுக்கு போய் வந்தார். 

வெளியிலேயே போக விரும்பாத அப்பாவை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் இல்லாது கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். மிகவும் கட்டுக் கோப்பான வாழ்க்கையை அவர் தன் இறுதிக்காலம் வரை கடைப்பிடித்து வந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 5.30 மணிக்கு எழுந்து விடுவார். முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, திருநீறு பூசி, தகப்பனாரோடு சேர்ந்து தேநீர் குடிப்பதோடு தொடங்கும் அவரது நாள் ஒன்று பின்னர் இருவருக்குமான காலை நடைப்பயிற்சியோடும் மதிய சமையலோடும் மாலைநேர ஓய்வும் பொழுது போக்குகளோடும் கழியும். 

வகுப்புகள் இருக்கும் பிரத்தியேக நாட்களில் அப்பாவுக்குப்  பிடித்தவைகளை முன்கூட்டியே சமைத்து வைத்துவிட்டு  மகிழ்ச்சியாகக் கூட்டங்களுக்குப் போவார். பிறகு அப்பாவுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு முடியுமுன் விரைவிலேயே வீட்டுக்கு வந்து சாப்பாடு போட்டுக் கொடுப்பார். ஆங்கிலம் அதிகம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரோடும் சினேகிதத்தோடு பழகி வந்தார். பஸ்ஸும் ரெயினும் பிடித்துக் கடைகளுக்குப் போய் மச்ச மாமிசங்களையும் மரக்கறிகளையும் தானே வாங்கி வருவார். விசேட தினங்களின் போது செய்யும் பலகாரம், பட்சணங்களையும்; தங்கை சுவீஸில் இருந்து வரும் போது கொண்டுவரும் சொக்கிளேட்டுக்களையும் தான் வழக்கமாகப் போகும் கடைகளில் இருக்கும் நண்பர்களுக்கும் கொண்டுசென்று கொடுப்பார். தங்கையையும் அழைத்துச் சென்று அவர்களுக்குப் பெருமையோடு அறிமுகப்படுத்துவார்.

 நான் அதிகாலைகளில் வேலைக்குப் புறப்படுவதாக இருந்தால் தான் அதற்கு முன்னே எழும்பி எனக்கு உணவு தயார் செய்து பெட்டியில் போட்டுத் தந்து விடுவார். மாலையில் வரும் போது எனக்காக ஏதேனும் சிற்றுண்டி செய்து விட்டுக் காத்திருப்பார். பிறகு எல்லோருமாக இருந்து சிற்றுண்டியும் தேநீரும் அருந்திய படி அந் நாட்களில் அப்பா கடைக்குப் போய் வாங்கி வைத்து விட்டு எனக்காகக் காத்திருக்கும் திரைப்பட சீ டீ யைப் போட்டு படம் பார்ப்பது என்றைக்கும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். 

அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு அரசாங்கக் கொடுப்பனவுகளில் வசதியாக அவர் இருந்த போதும், மிகவும் அடக்கமாகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் இருந்தார். ஒரு போதும் அநாவசிய ஆடம்பரங்களிலோ பகட்டுகளிலோ தேவையற்ற பேச்சுகளிலோ அவர் ஈடுபட்டதில்லை. அவற்றில் ஆர்வம் காட்டியதுமில்லை. ஊரில் உள்ள தன் ஏழை உற்றார் உறவினர்களுக்கு உதவிகள் செய்தார். ஊரில் தன் ஏழை அயலார் ஒருவரின் பிள்ளைகள் இரண்டுபேரைப் படிப்பித்து பொறியியலாளராக ஆக்கி வைத்தார். பல தொண்டு நிறுவனங்களுக்கு மாதாந்தம் / வருடாந்தம் என்று பணம் கொடுத்தார். ஆனால் அது பற்றி அவர் வேறு யாரிடமும் மூச்சுக் கூட விட்டதில்லை. கொடுத்தது பற்றி யாரிடமும் அவர் பீற்றிக் கொண்டதுமில்லை. 

நண்பர் உறவினர்களோடு அளவளாவுவதிலும் இடங்கள் பார்ப்பதிலும், புதிய புதிய உணவுகளை ருசிபார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு social groups மிகுந்த ஆதரவினை வழங்கியது என்று நான் உறுதியாகச் சொல்வேன். CMRC யைச் சேர்ந்த Biljana, Shantha, Concila ஆகியோரை அவர் மிகுந்த மதிப்போடு சிலாகித்துப் பேசுவார். Multi cultural mothers group நடாத்தி வந்த Biljana வோடு தாங்கள் போன கன்பரா பயணம் பற்றியும் அவர் பயணத்தின் போது வாங்கிக் கொடுத்த Chicken burger பற்றியும் சொல்வார். அவர் மிகுந்த விருப்பத்தோடு அத்தகைய வகுப்புகளுக்குச் சென்று வந்தார். 

அவரிடம் இருந்த பல திறமைகள் குடத்துள் விளக்காகவே இருந்து விட்டது என்பதை இப்போது தான் நினைத்துப் பார்க்கிறேன். சிறந்த நிர்வாகியாக அவர் இருந்தார். வீட்டை சிக்கனத்தோடும் திறம்படவும் அதே நேரம் தம் அயலார் உற்றார் உறவினர்களுக்கு கொண்டும் கொடுத்தும் வாங்கி நல்ல உறவுகளைப் பேணுபவராக அவர் இருந்தார். ஆடு, மாடு, கோழி, நாய் பூனை எல்லாம் எங்களோடும் வாழ்ந்தன. எங்கள் பாடசாலை நாட்களில் எங்கள் பாடசாலைச் சீருடைகள் மற்றும் வெளியிலே போடும் ஆடைகளையும் அவரே எங்களுக்குத் தைத்துப் போட்டார். இறுதி வரை தன் சேலைகளுக்கான பிளவுஸ்களைத் தானே தைத்துப் போட்டார். 

Smoking, சட்டைகள், cross stitch தையல்கள் எல்லாம் அவருக்கு மிகவும் கைவந்த கலைகளாக இருந்தன. Knitting இல் கைதேர்ந்தவராக அவர் இருந்ததோடு எங்களுக்கும் தன் நண்பர்களுக்கும் பெருந்தொகையான மப்ளர்களைப் அவரவர் பிறந்த நாள்களுக்குப் பின்னிப் பரிசளித்திருக்கிறார். கூடவே சிறு குழந்தைகளுக்கான Knitting சட்டைகள் மற்றும் பூப்போட்ட சட்டைகள் தைத்து தன் பூட்டப் பிள்ளைகளுக்கு போடும் படி தன் பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள் தன்னைப் பார்க்க வந்த சந்தர்ப்பங்களில் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். படங்களுக்கு வண்ணம் தீட்டுவதில்; புத்தகங்கள் வாசிப்பதில் மிக்க ஆவல் கொண்டவர். கோவிட் காலத்துக்கு முன்னர் வரை இலங்கையில் இருந்து வரும் தினக்குரல் வாரப் பத்திரிகை, தென்னிந்தியாவில் இருந்து வரும் ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய பத்திரிகைகளை வாராந்தம் பதிவுசெய்து வாங்கிப் படித்து வந்தார். அதிலிருந்து தனக்கு பிடித்த பகுதிகளை ஒரு கொப்பியில் எழுதியும் வெட்டி ஒட்டியும் வைத்திருந்தார். அவை எல்லாம் பொக்கிஷங்கள்.

         அவர் செய்த பல craft வேலைகளுக்குள் அவர் செய்த scrapbook இனை அவர் காலமான பிறகு தான் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அது CMRC யினால் நடாத்தப்பட்டு வந்த Biljana வின் தலைமையில் நடந்த ‘Multi cultural mothers group இல் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக அவர் பேணி வைத்திருந்த அதன் சில பகுதிகளை இந்தப் பதிவைத் தொடர்ந்து நீங்கள் பார்க்கலாம். அதில் அவரது ’சொந்த உலகம்’ எப்படியாக இருந்தது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். 

விதைக்குள்ளே ஒரு விருட்சம் மறைந்திருக்கிறது; ஒரு ஒளிக்கீற்றுக்குள்ளே ஏழு வண்னங்கள் மறைந்திருக்கின்றன; ஒரு பூவுக்குள்ளே தான் தேனும் வாசமும் பொதிந்திருக்கிறது; பாலுக்குள்ளே மறைந்து போயுள்ளது ஒரு குழந்தைக்கான பரிபூரண உணவு.. எள்ளுக்குள்ளே நல்லெண்ணையும் மூங்கில் குளாயுக்குள்ளே பாடலும் ஒழிந்து போயிருக்கிறது. ஆனாலும் அவை எல்லாம் அவையாக வெளிப்பட ஒரு உந்துதல் தேவையாக இருக்கிறது. அதனை நான் அம்மாவுக்குக் கொடுக்கவில்லை என்ற குறை என்னை இப்போது துன்பமுற வைக்கிறது. பல திறமைகளை தன்னுள் வைத்துக் கொண்டும் அவர் அமைதியோடும், அன்போடும் அடக்கத்தோடும் மன நிறைவோடும் ஒரு பெருந்தகையாக வாழ்ந்து போயிருக்கிறார். 

அது போலவே இறுதிக் காலம் வரை STARTTS நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகளுக்கும் போய் வருவார். மக்களோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதில் பெரும் விருப்பம் கொண்டிருந்த அவருக்கு இத்தகைய சமூகம் சார்ந்த கூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வந்தன. குறிப்பாக STARTTS நிறுவனத்தில் பணி புரியும் சுபத்திரா அவர்களை எப்போதும் ‘நல்லபிள்ளை’ என்று வர்ணிப்பார். இத்தகைய தொண்டு நிறுவனங்களின் பணி குறிப்பாக வயதானவர்களின் வாழ்வில் எத்தகைய மகிழ்ச்சியையும் மனநிறைவினையும் வழங்குகிறது என்பதை நான் நேரிலே கண்டு அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இலவசமாகக் கிடைக்கப் பெறும் இத்தகைய சேவைகள் மேலும் மேலும் பெருக வேண்டும்; மனங்கள் உளமகிழ்வுற வேண்டும்.

அக்கா குடும்பத்தவர்கள் தாம் வந்த புதிதில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று காட்டிய டொல்பின்கள் பற்றியும் என் தங்கை யாமினியிடம் சுவிஸ் நாட்டுக்குப் போன போது தாம் புறாக்களுக்குத் தீனி போட தங்கையின் குழந்தைகளோடு போன இடங்கள் பற்றியும் மிக ஆசையோடு சொல்வார். 

’ஏன் அம்மா நான் உங்களை ஒரு இடமும் கூட்டிக் கொண்டு போகயில்லையே? தாய்லாந்து, மலேசியா எல்லாம் போனனாங்கள் தானே!’ என்று கேட்டால், என்தோழி செளந்தரியை அவர் எப்போதும் சுட்டிக் காட்டிச் சிலாகித்துப் பேசுவார். ' நீ எங்க என்னை வெளியில கூட்டிக் கொண்டு போனனீ. செளந்தரி எல்லோ அந்த இடங்களைக் காட்டினது' என்று எனக்குச் சொல்வார். அது உண்மையும் கூடத்தான். என் தோழிகள் அம்மாவோடு மிகுந்த அன்புறவோடும் நட்போடும் பழகி வந்தார்கள். கீதா, கெளரி, சுதா, செல்வி, சுபத்ரா,பானு,பானுவின் கணவர் ரவி எல்லோரையும் இந்த நேரம் நன்றியோடு நினைவு கூருகிறேன். நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு உற்ற துணையாகவும் ஆதரவோடும் இருந்தீர்கள்.

எனது தந்தையார் 22.2.22 காலமானதில் இருந்து அவரை ஒருவித மனப்பாரம் அழுத்தியபடியே இருந்தது. அவரது இழப்பு அவரை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது. அவர் அதனை வெளிப்படையாகக் சொல்லாது விட்டாலும் அவரது முகம் களையிழந்து போயிற்று. அதிலிருந்து அவர் உடல் உபாதைகளுக்கு ஆளாகத் தொடங்கினார். இருந்த போதும் அவர்கள் இருவரும் வந்த காலத்தில் இருந்து  அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த டொக்டர் வதனி அவவை சிறப்பாகவும் அக்கறையோடும் கவனித்து வந்தார். அம்மாவிற்கும் தன் வைத்தியர் மீது எப்போதும் ஒருவித Loyalty யும் நன்றியுணர்வும் கடைசிவரை இருந்தே வந்தது. வைத்தியசாலையிலும் அவர் உயர்தரமான சிகிச்சையே பெற்று வந்தார். 

இறுதியாக என் தந்தையாரைப் போலவே தனது 85 வது வயதில் யாருக்கும் பாரமில்லாமல் யாருக்கும் எந்தக் கஸ்ரமும் கொடுக்காமல் உறக்கத்தின் போது மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக 24.4.24 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொழிலாளர் தினமான 1.5.24 அன்று நமக்காகவே உழைத்த அந்த உயிர் இறைநிழலில் இளைபாறிக் கொண்டது. 6.5.24 அன்று என் தங்கையின் பிறந்ததினத்தில் அன்று அவர் தன் இறுதிப் பயணத்தை இப் பூவுலகில் நிறைவு செய்தார்.

அவர் ஒரு கர்மவீரராக தன்வாழ்வை முறைப்பாடுகள் எதுவும் சொல்லாத வகையில் இந்தப் பூமிக்குப் பாரமில்லாமல் வாழ்ந்து போனார். ஓர் உன்னதமான வாழ்க்கை முறை ஒன்றை எங்களுக்கு அவர் வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறார். சிக்கனம், கட்டுக் கோப்பு, ஒழுக்கம், அடக்கம், எளிமை, பண்புநலம், கொண்ட ஓர் ஆத்மா தன் இருப்பை வாழ்ந்ததன் வழி எங்களில் இருத்தி விட்டுத் தன் பயணத்தை இப் பூவுலகில் இனிதே நிறைவு செய்து கொண்டது.

அதி அழகிய குணநலன்களைத் தன் அழகாக வரிந்து கொண்ட ஓர் ஆத்மா; உன்னதமான இந்த வாழ்க்கைத் துணை; பிள்ளைகளின் மகிழ்வில் தன் மகிழ்வைக் கண்ட இந்த உத்தம தாய் இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவரின் அருட்கருணை வழிகாட்டட்டும்.

அம்மா! நீங்கள் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றுள்ள உங்கள் காலடிகள் எங்கள் பாதைக்கு வழிகாட்டட்டும்!

யசோதா.பத்மநாதன்.

மகள்.


அப்பா: ஆறுமுகம் . பத்மநாதன்

 

                 – ஒரு தண்ணீர் இரகசியம் - 

உலக வரைபடத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் இலங்கை தீவின் நுனிமுனையில் 17.11.1936 ம் ஆண்டு பிறந்து, மாபெரும் தீவான அவுஸ்திரேலியக் கண்டத்தில் 22.02.2022 ம் ஆண்டு இயற்கை எய்தி, உலகப் பிரபல்யம் பெற்ற ஒப்ராஹவுஸ் / ஹாபர்பிறிட்ஜ் முன்னிலையில் உள்ள கடலில் சங்கமமான ஒரு சமானிய மனிதன் சொன்னதும் நான் அறிந்ததுமான கதை இது.

வீமன்காமம், தெல்லிப்பழையப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதிகளுக்கு 17.11.1936 ல் முதல் மகனாகப் பத்மநாதன் பிறந்தார். இவருக்கு முன்னர் பிறந்த குழந்தைகள் எதுவும் நீடித்து நிலைத்திருக்க முடியாத ஆயுளைக் கொண்டமைந்தமையால் இவர் பிறந்ததும் இவரைக் ‘கொடுத்து வாங்கி’ கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள். இவருக்குப் பிறகு, அன்னலட்சுமி, பாலசிங்கம், குணரத்தினம், கனகரத்தினம், ரஞ்சிதமலர், யோகராசா என சகோதரர்கள் பிறந்தனர்.

சகோதரர்கள் பலர் இருந்த போதும் தாயாருக்கு மூத்தவரான இந்த மகன் மீது இருந்த அதீத பாசத்தினால் பள்ளிக்குப் போகும் பிரியம் இல்லாத போதும்; பாடல்கள், திரைப்படங்கள் மீதான நாட்டம் அதிகரித்த போதும்; நண்பர்கள் கூட்டு அதிகரித்து மது, புகைத்தல் என்பவற்றின் மீதான விருப்பம் கூடிய போதும்; மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த இவரின் தந்தையின் சொல் கேளாமல் திரிந்த போதும்; தாயாரின் ஆதரவினைப் பெற்றவராக அவர் இருந்தார். சுவர் ஏறிக் குதித்து நடுச் சாமங்களில் திரைப்படம் பார்க்கப் போகும் அவருக்கு நடிகை பானுமதியை மிகவும் பிடிக்கும். 

இவர்கள் சிறுவர்களாக இருந்த போது அவரின் தாயாரின் சகோதரர்களும் தந்தையாரின் சகோதரர்களும் அருகருகாக வாழ்ந்து வந்தனர். மிக நெருக்கமாக உறவினரோடும் சகோதர வாஞ்சையோடும் அவர்கள் வாழ்ந்து வந்ததால் அப்பாவின் தகப்பனாரின் சகோதரியான என் தாயாரின் தாயாரோடு குடும்ப உறவும் பந்தமும் நீடிக்கும் பொருட்டு பிள்ளைகள் பற்றிய ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றினை அவர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் படி என் தகப்பனாரின் தங்கையான அன்னபூரணியை ஆறுமுகம் அவர்களின் தங்கை (சின்னம்மா) மகனான நடராசாவும் அவர்களின் மகளான கமலேஸ்வரியை என் தகப்பனாரும் உரிய காலம் வரும் போது மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த உடன்படிக்கை.

10ம் வகுப்புவரை படித்துத் தேறி கூட்டுறவு முகாமையாளராகப் பதவியேற்றிருந்த அப்பா, பெற்றோரால் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையின் பேரில் 1963ம் ஆண்டு தன் தகப்பனாரின் தங்கை மகளான கமலேஸ்வரியையும் கமலேஸ்வரியின் மூத்த அண்ணனான நடராசா (முன்னாள் சுங்கத்திணைக்கள ஆணையாளர்) அப்பாவின் தங்கையான அன்னபூரணியையும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்தின் பின் வேலை நிமித்தம் பல இடங்களுக்கும் இடம்மாறி மூன்று பெண்பிள்ளைகளாக சாந்தி, யசோதா, யாமினி என நாமும் பிறந்து பாடசாலையில் சேரும் காலம் வந்த போது ஓமந்தையில் நிரந்தரமாகக் காணி வாங்கிக் குடியேறினார். 

ஓமந்தை வீடு அவர் உழைப்பில் உருவாகிய இல்லம். அது ஒரு பூஞ்சோலை; பழச் சோலை. ஆடு, மாடு, நாய் பூனை, கோழி என பல உயிரினங்கள் எங்களோடு சமனாய் வாழ்ந்த வாழ்வில்லம். கமுகு, தென்னை, பலா, வாழை, லாவுல், கோப்பி, கொய்யா, மா போன்ற பயந்தரு மரங்கள் மாத்திரமன்றி; யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து பலவிதமான குறோட்டன் செடிகளும் கொண்டுவந்து வைத்து வீட்டை அழகு படுத்தினார். மல்லிகைப் பந்தல் அமைத்து அதன் மொட்டவிழும் வாசப்பூக்கள் உதிர இரவுணவின் பின் சீமேந்து இருக்கையில் இருந்து படிகளில் நாமிருக்க நம்மோடு பகிர்ந்து கொண்ட தன் ஒழிவுமறைவில்லாத பால்ய காலக் கதைகளை நிலவும் நன்கறியும்.

அங்கு எங்களோடு வளர்ந்த வாய் பேசா ஜீவன்களின் மேல் அவர் கொண்டிருந்த நேசம் அசாதாரனமானது. நாய், பூனை, ஆடு, மாடு, கோழி என்பன மட்டுமன்றி பூங்கன்று, மரக்கன்று, பழக்கன்றுகள் கூட வாடப் பொறுக்காதவர்; அவைகளுக்குரிய ஊட்டச் சத்தினையும் தண்ணீரையும் அவர் ’குடித்தாலும்’ கொடுக்க மறந்ததில்லை. அவைகளும் தம் அன்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை. அதனால் தானோ என்னவோ அவர் உயிர் இந்த உலகைப் பிரிந்த போதும்; உடல் உலகை பிரிந்த போதும்; அஸ்தி நீரில் கலந்த போதும் வருண பகவான் பூவைப் போல மழையை மாரி எனச் சொரிந்து அவரை ஆசீர்வதித்தான். அது ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வாகவே இருந்தது. 

அது ஒரு தண்ணீர் இரகசியம். பிரபஞ்ச பாஷை. அப்பாவுக்கும் இயற்கைக்கும் இடையே இருந்த ஓர் இரகசிய பரிவர்த்தனை. 

தண்ணீரை அவர் தண்ணீராகவே செலவு செய்தார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பழக்கன்றுகளுக்குப் போகும் அதே அளவு தண்ணீர் பூங்கன்றுகளுக்கும் செல்லும். தன் பட்டி மாடுகளுக்கு இறைக்கப்படும் தண்ணீர் எப்போதும் ஊர் மாடுகளுக்குமானதாகவே இருக்கும். வாய்க்கால் வழியோடும் தண்ணீர் புல்லுக்கும் பொசியுமுன் நாம் குளிக்க தொட்டியை நிறைத்து விட்டே செல்லும். ஊர் கொக்குகளும் காகங்களும் புலுனிக் குஞ்சுகள், சிட்டுக் குருவிகளுமாகப் பறவைகள் வாய்க்கால் தண்ணீரில் கூட்டமாய் வந்து குளித்துச் செல்வது ஒரு கண்கொள்ளாக்காட்சி. எமக்கு இறைச்சி வாங்கும் போது வளர்ப்பு நாய்களுக்கும் தனியாக ஒரு இறைச்சிப் பொதி வாங்கப்பட்டிருக்கும். சாப்பிடும் போது அருகில் நிற்கும் பூனைக்கு முதலில் ஒருபங்கு வைக்கப்படும். 

அந்த ’ஓமந்தை வீடு’ ஓமந்தையில் இருந்து 3 மைல்கள் யாழ்ப்பாணப் பக்கமாக அமைந்திருந்தது. அது தான் நாங்கள் எல்லோரும் ’வாழ்ந்த வீடு’. முன்புறம் யாழ்ப்பானம் கண்டி வீதியையும் பின்புறம் கொழும்பு யாழ்ப்பான ரயில் பாதையையும் கொண்டமைந்த 5 ஏக்கர் மேட்டு நிலம். அத்தனை ஈழப் போராட்ட இயக்கத்தினருக்கும் ஓரு சரணாலயமாக அன்று அது விளங்கியது. 

தமிழர்களின் எல்லைக்கும் இராணுவ எல்லைக்கும் இடையே எங்கள் வீடு அமைந்து விட்டிருந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி தான். ஆனாலும் அது முன்பின் தெரியாத மக்களுக்கு கொடுத்த அடைக்கலம் பெரிது. எல்லையில் பெரிய கிணறு தோட்டம், நிழல் தரு மரங்கள் சகிதம் அந்த இடம் இருந்ததால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கு நல்லதொரு தங்குமிடமாக எங்கள் வீடு அமைந்திருந்தது. இன்றும் எங்களை அறிந்தவர்கள்; நாம் மறந்து விட்டவர்கள் உங்கள் வீட்டில் நாம் நின்றுவந்தோம் என்று சொல்லுகிற போது; எம் தந்தை தாயாரின் தாராள மனதை அவர்கள் பாராட்டும் போது; மனம் நெகிழும். இன்றும் பலரின் வாழ்வின் முக்கிய தருணங்களில் அடைக்கலம் கொடுத்த அந்த வீடும் வாழ்வும் பலரின் மனங்களில் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன். அது ஒரு மண்வாசனை நிறைந்த அழகிய நிலாக்காலம்!

எனினும் அவர் குடியை விட்டாரில்லை; புகைத்தலைக் குறைத்தாரில்லை; பணத்தினைச் சேகரிக்கும் பண்பு அவரிடம் சிறிதளவும் இருக்கவில்லை. என் தாயார் அதைப் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம்; 3 பெண்பிள்ளைகள் குறித்த எதிர்காலம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தும் போதெல்லாம் மேல் கூரையைக் காட்டி ‘அவன் தருவான்’ என்பார். ’கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தின்’ நம்பிக்கை அதில் தெரியும். அப்போது ஒரு மந்திர; மந்தகாச புன்னகை அவர் முகத்தில் தவழும். கடவுள் தன்னைக் கைவிட மாட்டார் என ஆழமாக நம்பியவர் அவர். கடவுளோடான அவரது உறவு பூரண சரனாகதி என்பதாகத் தான் இருந்தது. பொறுப்பு முழுவதையும் தான் நம்பிய மேலிருக்கும் ஒருவன் மீது போட்டு விட்டு ’பாரமற்று’ மகிழ்ச்சியாக இருந்தார். 

அவரை நன்கு அறிந்து கொண்ட, மிகச் சிறந்த, உண்மையான நண்பர்கள் அவருக்கு வாய்த்தது உண்மையில் அவரின் அதிஷ்டம் அல்லது ஒருவித குடுப்பனை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் இந்த ’ஊதாரிக் குடிகாரனுக்காக’ எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். இவரும் அவர்கள் மீது உண்மையான அன்பை வைத்திருந்தார். அவர் நம்பியவர் யாரும் அவரைக் கைவிட்டதில்லை. அவர் தன் சகோதரர்களுக்கும் என் தாயாரின் சகோதரர்களுக்கும் கூட தன் நண்பர்களையே திருமணம் முடித்து வைத்தார். அப்பாவை எல்லோரும் ’பெரியண்ணை’ என மரியாதையோடு அழைப்பதற்கும் அன்பு கூருவதற்கும் அவரிடமிருந்த இந்த தன்னலமில்லாத ஏதொன்றையும் எதிர்பாராமல் உதவும் அவரின் நற்குணமே காரணமாகும். 

சிட்னிக்கு வந்த பின்னரும் மிகச் சிலரையே தன் நண்பர்களாக அவர் ஏற்றுக் கொண்டார். எப்படியோ அவர்களும் அப்பாவின் ஆத்மார்த்தமான நண்பர்களாக விளங்கினார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் அவர்கள் எல்லோரும் அவருக்கருகில் இருந்தார்கள். அவர் உரிமையோடு வேண்டுவனவற்றை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனடியாக அவருக்காக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். அதில் யாழ்ப்பாணத்தில் இருந்த செல்வரட்னம் மாமா,( 20.3.22 அன்று அவர் காலமானார்)  சிட்னி லோயர். செந்தில் அவர்கள், மயில் அங்கிள், குடும்பநண்பர் விமலன் குடும்பத்தினர், ATBC வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாஸ்கரன், ஜெயச்சந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள்.

அவரது பால்ய நண்பர்களில் ஒருவரான மாதவன் என்பார் 70 களில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த பிறகு என் தந்தையாருக்கு ஒரு ரேப் றைக்கோடரைப் பரிசளித்திருந்தார். அப்பாவின் திருமணத்தின் போது ஒரு சொனி ரான்சிஸ்டரை என் தாயாரின் அண்ணன் அப்பாவுக்கு பரிசளித்திருந்தார். இவை இரண்டையும் அவர் கண்ணும் கருத்துமாகப் பேணி வந்தார். அதில் பக்திப் பாடல்களை இசைக்க விட்டு விட்டு அவர் கேட்கும் தோரணை அவர் இசையிலும் பாடல்வரியிலும் எத்துணை உன்னதமான ஈடுபாட்டினைக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும். அந்தப் பாடல்களை எல்லாம் யாழ்ப்பானம் போய் ’விக்ரர் அண்ட் சன்ஸ்’ கடையில் எழுதிக் கொடுத்து ஒலிப்பதிவு செய்து கசட்டாக வரிசைக் கிரமமாக அடுக்கி வைத்திருப்பார். அதில் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பல்வேறு விதமான குணபாவங்கள் அவர் முகத்தில் தோன்றி மறையும். இசையில் அவர் முழுவதுமாக மூழ்கி மெய்மறந்து போவார். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் அன்று எங்களின் கொண்டாட்ட நாள். அவர் தன் வானொலி, ரேப்றைக்கோடர், சைக்கிள் என்பவற்றை சிங்கர் ஓயில் போட்டு சிறப்பாகத் துடைப்பார். சிறுவர்களாக இருக்கும் எங்கள் மூன்று பேருக்கும் அரப்பு எலிமிச்சங்காய் போட்டு அவித்த பொருட்களை தலைக்குப் பூசி எங்கள் எல்லோரையும் கிணற்றடியில் நன்றாக முழுக வார்ப்பார். அதன் பிறகு வரிசையாக நடுங்கிக் கொண்டு நிற்கும் எங்களுக்குத் தலை துவட்டி சட்டை போட்டு பவுடர் போட்டு தலையை நன்றாக மேவி இழுத்து விடுவார். பிறகு தானும் போய் முழுகி வருவார். அன்று மதியம் ஒரு பெரு மாமிச விருந்து நமக்குக் காத்திருக்கும். 

வீட்டில் வேலி கட்டுவது; பாசல் கட்டுவது; வாய்க்கால் இழுப்பது என்பவற்றில் எல்லாம் அவரிடம் ஒரு தனி அழகும் நேர்த்தியும் உறுதியும் இருக்கும். சரியாகச் செய்யாதவிடத்து நாங்களும் நன்றாகப் பேச்சை வாங்கிக் கட்டிக்கொள்வோம். இறுதிக்காலம் வரை அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் கதிரைக்கு முன்னால் இருக்கும் மேசையில் ஒரு டையறி, பேனா, கண்ணாடி, Business directory, தொலைபேசி எல்லாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். டையரியில் தன் மனம் கவர்ந்தவர்களின் பிறந்த தினங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன குறிக்கப்பட்டிருக்கும். இழுப்பறைகளில் சீராக அடுக்கி வைக்கப்பட்ட புது பற்றறிகள், கடித உறைகள், கயிறு, குறடு, திருத்து கருவிகள், எழுது தாள்கள், பல்வேறு ரக பேனாக்கள் போன்றன இருக்கும். ஓர் ஒழுங்கும் நேர்த்தியும் அவரிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அது அவரின் நடையுடை பாவனைகளிலும் தெரியும். ஆனாலும் இத்தகைய நற்குணங்களைக் கூட அவர் எங்களிடம் திணிக்கவில்லை. நம்மை நாமாக வளரவிட்டார். அவர் ஒரு பொழுதிலும் உண்மை, நேர்மை, அன்பு, பாசம், பற்று, கருணை என்பவற்றில் துளியளவும் குறை விட்டதில்லை. குடியின் மீது எத்துணை நாட்டம் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு அவர் குடும்பத்தின் மீதும் அத்துணை பிரியமானவராக இருந்தார்.

அவருடய மன உறுதியை காணும் சந்தர்ப்பம் எமக்குக் கிட்டியது என் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு முன்னரான சில நாட்களில் தான். ஒரு நாள் அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்த படி மிகச் சாதாரணமாக ’நான் இன்றிலிருந்து இந்த குடியையும் புகையையும் விடப் போகிறேன்’ என்று சாதாரணமாக அறிவித்தார். நாங்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை தரம் எத்தனை பேர் சொல்லியும் கேட்காதவர்; மற்றும் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்று நாம் நினைத்திருந்த இந்தக் கருதுகோள்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு அப்போதைக்குப் பிறகு எப்போதைக்குமே அவர் ஒருபோதும் இவை இரண்டையும் தொடவில்லை!! தொடவே இல்லை!!! நாங்கள் எல்லோரும் ஆச்சரியப்படும் படி அவரின் நண்பர்கள் அழைக்கின்ற போதும் அதனை மறுத்து வேண்டாம் என்று சொல்கிற மனஉறுதியை அவர் கொண்டிருந்தார். என் தந்தை என்று நான் பெருமை கொள்ளும் படியாக அவர் இந்த மன உறுதியை எங்கள் முன் நிரூபித்துக் காட்டினார். அவர் உயிர் பிரியும் வரை அவர் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பது எத்துணை பெரிய ஆத்மபலம் இல்லையா? 

அவரது இறைநம்பிக்கை எத்துணை ஆழமானதாக இருந்ததென்பதற்கு பிள்ளைகள் ‘சீதனம் இல்லாமலே’ மணமுடித்துக் கொண்டதும் ஒரு நிரூபணமாகும். மூத்த மகளான சாந்தியை டொக்டர். ஜெகன்நாதன் அவர்களின் ஏக புதல்வன் கதிர்காமநாதனும் கடைசி மகளான யாமினியை முள்ளியவளையைச் சேர்ந்த செல்வராசா அவர்களின் கனிஷ்ட புதல்வன் ஜீவராசாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். நடுவில் பிறந்த யசோதா கல்வியில் தேறி தனக்கென, ’நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும்’ கொண்ட ஒரு வாழ்வை தனக்குப் பிடித்தபடி அமைத்துக் கொண்டார். நாங்கள் சிட்னிக்கு வந்ததன் பிறகு, என் இளைய சகோதரி மணமுடித்து சுவிஸ் போன பிறகு, அவர்கள் சில வருடங்கள் கொழும்பில் இருந்தார்கள். அப்போது அவர் கான்சர் நோய்க்கு ஆளாகிக் குணமானார். இங்கு 2007ம் ஆண்டு சிட்னி வந்து ஒரு சத்திரசிகிச்சைக்குப் பிறகு பூரண குணமானார். 

வயது, இடமாற்றம், சுவாத்தியங்கள், வாழ்க்கை மாற்றம் எல்லாம் எல்லோரையும் பாதிக்கும் புலம்பெயர்வில் நாம் எல்லோரும் சந்திக்கும் ஒன்று தானே! அந்த வகையில் முதுமையை அவர் ஏற்றுக் கொண்ட விதம் எடுத்துக் காட்டாய் அமையத்தக்கது. சிறந்த அவதானியாக இருப்பதன் வழியாக முதுமையை அவர் எதிர்கொண்டார். ’ Age gracefully’ என்பதன் அர்த்தத்தை நான் அவரிடம் கண்டேன். முதுமையை அவர் கனிவோடு ஏற்றுக் கொண்டார். தேவையான போது தேவையறிந்து மெளனமாக எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பேருதவிகளை நல்கினார். தன்னைச் சரியாகக் கவனித்துக் கொண்டார். காரணமற்று யார் மீதும் தன் பாரத்தைச் சுமத்தாது பார்த்துக் கொண்டார். தேவையான அளவு மெளனத்தைத் தனதாக்கி அவதானத்தை மேம்படுத்தி வசீகரமான வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார். அநாவசியமாகக் கதைப்பதை அவர் என்றைக்கும் விரும்பியதில்லை. நான் அறிந்து அவர் ஒரு போதும் எது பற்றியும் முறைப்பாடுகள் சொன்னதில்லை. சலித்துக் கொண்டதில்லை. தன் அவதானத் திறமையினால் சகல விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் யாரைப் பற்றியும் வேறொருவரோடு பேசுவதில்லை. அதே நேரம் ஒருவரிடம் ஒரு சிறப்புக் குணத்தைக் கண்டு விட்டால் அதனை உடனடியாகவே அவரிடம் சொல்லிச் சிலாகிக்கவும் அவர் தயங்கியதில்லை. தனக்கென தனியான நடை, உடை, பாவனைகளைக் கொண்டிருந்த, மந்திரப் புன்னகை புரியும், பெண்டில்ஹில்லின் லோக்கல் எம்ஜீஆர் அவர். இது தான் நான் கண்ட அப்பா.

ஆனால், ஒரு விடயத்தில் மட்டும் அவர் தன்னை ஒரு போதும் மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு எப்போதும் அம்மாவின் கையால் சமைக்கப்பட்ட உணவு வேண்டி இருந்தது. தாயாரும் தன்னால் இயலாத போதும் விருப்போடு அதனைச் செய்து கொடுத்து வந்தார். சிட்னி அவர்கள் உறவை எது விதத்திலும் மாற்றி அமைக்கவில்லை. அவர்களுடய கணவன் மனைவி உறவு ஊரில் எப்படி இருந்ததோ அதிலிருந்து அது எள்ளளவும் மாறுபாடடையவில்லை. இருவருமே அதில் உறுதியான தெளிவான குண இயல்பை வெளிப்படுத்தினார்கள். அது மிக இயற்கையான இயல்பான மாறவோ மாற்றவோ பிரயத்தனம் எதுவும் எடுக்காத இயல்புத் தன்மையைக் கொண்டிருந்தது. அழகான உறுதியான அன்பு, புரிந்துணர்வு, Discipline life style என்ற அடித்தளத்தில் இருந்து எழுப்பப்பட்ட அந்த உறவு இறுதி வரை மிக உறுதியாக இருந்தது. 

இடைக்கிடை வரும் அம்மாவுடனான சிறு சிறு மனத்தாங்கல்களை அவர் ஒரு சிறு இதழ்பிரியும் நகைச்சுவையோடு கடந்தார். ‘எப்ப என்னைக் கடவுள் கூப்பிடப் போறாரோ தெரியேல்லை’ என்று அம்மா ஒரு நாள் அலுத்துக் கொண்ட போது, ‘அவசரப்படாதையணை; எல்லாரும் சேர்ந்து போவம்’ என்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அவரது நாளாந்த உணவு உறங்கும் தேநீர் நேரங்கள் எப்போதும் ஒரே சீராக சரியாக நடந்து வரும். குளிர் காலத்திலும் இதுவே நியதியாக இருந்தது. அப்பா காலை 6.00 க்கு விழித்தெழும் போது அம்மா 5.30க்கு விழித்தெழுந்து தயாராக இருப்பார். காலைத் தேநீர், உணவு மற்றும் நடைப்பயிற்சி முடித்து வந்ததும் 10.00 மணிக்கு தேநீர். பின்னர் மதியம் 12.30 க்கு உணவருந்தி விட்டுப் படுத்தார் என்றால் 2.45 க்கு எழும்புவார். முகம் கழுவி திருநீறு பூசி தன் இருக்கையில் வந்தமர்ந்தார் என்றால் அம்மா தேநீரோடு நிற்பார். மாலை 7.00 மணிக்கு இரவுணவு முடிந்து விடும். இந்த நேரக்கணக்கில் நான் அறிந்து இருவரிலும் ஊரிலும் சரி இங்கும் சரி மாற்றங்கள் ஒரு நாள் கூட நிகழ்ந்ததில்லை. அவர்கள் சீரான ஒரு வாழ்வு முறையில் இருந்தார்கள். 

நம்மைப் பிரிந்து கொண்டிருக்கும் முதல் தலைமுறையின் உன்னதமான அடித்தளம் கொண்ட வாழ்வுமுறையின் உதாரண பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். அதற்கு, அவருக்கேற்ற அவரைப் புரிந்து கொண்ட மனைவி கிடைத்தது அவரின் பேரதிஷ்டம். அவருக்கும் அது நன்றே தெரிந்திருந்தது.

இறுதிக் காலங்களில் ’என்னவோ நடக்கிறது நடக்கட்டும்; எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லும் அவர், வாழ்க்கையின் போக்கைப் புரிந்து கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவ மனநிலையில் இருந்தார். இறுதியாக சுமார் ஒரு மாதகாலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து 22.202.2022 அன்று தனது 85வது வயதில் அமைதியான முறையில் இவ்வுலகை அவர் நீத்தார். 

அவர் தன் வாழ்க்கையை; அன்பும் நேர்மையும் மிளிர, வாய்பேசா உயிர்களோடும் தன்னைப் பகிர்ந்து கொண்டு, இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி, நல்லதொரு குடும்பவாழ்வை சுமூகமாக வாழ்ந்து மறைந்தார். இசையால் தன் ஆத்மாவைக் குளிர்வித்தார்; நட்பினால் வாழ்க்கையைச் சிறப்பித்தார். மன உறுதியால் வாழ்ந்து காண்பித்தார்! 

அவர் ஒரு ‘பாசக்கார பய’!

வாழ்க்கை எதையோ கற்றுத்தர முயற்சிக்கிறது. அது எது என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அப்பாவின் வாழ்க்கையில் அது ஒரு நம்பிக்கை தரும் ரகசியம். அவரின் வாழ்வும் முடிவும் ’தண்ணீர் வழி’ உணர்த்தும் பாடம் இது தான்.

மாபெரும் சமுத்திரத்தில் இருந்து தண்ணீர் மேகமென மேலே போய், மழை என இறங்கி, நதியாக மாறி, மீண்டும் கடலை அடைகிறது….இதே சம்பவம் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அது ஒரு வட்ட வடிவாக நிகழ்கிறது….

அதன் கரையோரம் முட்டை போட்டு விட்டுப் போய் விட்ட பின்பும் ஆமைக் குஞ்சுகள் தாமாகக் தாம் வாழவேண்டிய கடலைக் கண்டடைவது எங்ஙனம்?. பாலூட்டி மிருகங்களின் குழந்தைகள் எப்படிப் பாலிருக்கும் இடத்தைத் தானாகவே கண்டுபிடிக்கின்றன? போரில் சிதறியும் அங்கிருந்த அதே உற்றாரும் அயலாலும் இயல்பாக இங்கும் நமக்கருகிருத்தல் எப்படி சாத்தியமாயிற்று?   

அப்பா,

அது போல நாமும் எங்களைக் கண்டடைவோம். நாம் மீண்டும் ஒரு முறை சந்திப்போம். தோற்றம் மாறக்கூடும்; இடங்கள் மாறக்கூடும்; பந்தம் மாறக்கூடும். ஆனாலும் பாசப்பிணைப்பினால் நாம் மீண்டும் எங்களை நாம் கண்டடைவோம்.

பிரபஞ்சம் சொல்லும் வாழ்க்கைத் இரகசியம் இது. அது ஒரு ’தண்ணீர் இரகசியம்’. அப்பாவின் வாழ்க்கை சொல்லும் பிரபஞ்சத் தத்துவம்.

அப்பா, அது வரை இறைநிழலில் இனிதே சுகித்திருக்க பிரபஞ்சத்தின் பேராற்றலை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

                                 ஓம் ஷாந்தி.

மகள்: யசோதா.பத்மநாதன். 22.03.2022.

               “உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

                     விழிப்பது போலும் பிறப்பு”


மார்க்கண்டேயர் மாமா - பன்றிக்கெய்த குளத்துப் பண்ணையார்

 நேற்றய தினம் 20.3.2025 மார்க்கண்டேயர் மாமாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டு விட்டு வந்திருந்தேன். ஒருவிதமான பாரம்! ஓர் அழகிய வாழ்வியலைக் கற்றுத் தந்த பரம்பரை ஒன்று நம்மை விட்டு பிரிந்து போகிறது....

அந்த நினைவுகளின் பாரங்களை எல்லாம் இறக்கி வைக்கும் ஓரிடமாக எனக்கு என் அக்ஷ்யபாத்திரமே விளங்குகிறது. அண்மைக்காலமாக எல்லாமே மனிதர்களின் பிரிவு பற்றிய பதிவுகளாகவே என் பாத்திரம் நிரம்புகிறது என்ற போதும் அது எனக்கு ஒரு வித பேரமைதியையும் தந்து போகிறது. 

மனிதர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் மிக எளிதாக! 

நினைவுகள் பசுமையாக இருக்கும் போதே அவற்றை எங்கேனும் சேகரித்து வைத்து விடவேண்டும் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது. நமக்கு நாளை மறதி நோய் வரலாம்; எல்லாம் மறக்கப்பட்டும் விடலாம். அதற்கு முதல் எழுதப்படும் இந்த விடயங்கள் எதிர்காலத்தில் யாரேனும் ஒருவர் 19ம் நூற்றாண்டின் இறுதியில் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று அறிய முனைந்தால் இந்த வாக்கு மூலங்கள்; நினைவுப் பதிவுகள் அவர்களுக்கு ஒரு சிறு சுடரையாவது ஏற்றி வைத்து விடாதா? 

ஏற்றி வைக்க வேண்டும் என்றே எனக்கு ஆசை. ஏனென்றால் அவர்களுடய வாழ்வு அர்த்தம் நிறைந்ததாகவும் போலிகள் அற்ற உண்மை செறிந்ததாகவும் அதி உன்னதமானதாகவும் விளங்கியிருந்தது. தொழில்நுட்பங்கள் புகுவதற்கு முன்னரான அவர்களின் வாழ்வின் அழகியல்கள் இனி மீட்கப்படாது மீட்டிப் பார்க்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. நாமும் அதனைச் சொல்லாது போனால் அந்த வாழ்வின் எச்சங்களை அறிவதற்கு  ஒன்று கூட மிஞ்சாது போய் விடும்.

அது நிற்க,

மார்க்கண்டேயர் மாமா - 

உயரமும் உடல்பருமனும் மாநிறமும் கொண்ட ஆஜானுபவமான தோற்றத்திற்குச் சொந்தக்காரன்.

பன்றிக்கெய்த குளத்தில் யாழ்ப்பாணம் - கண்டி வீதி நீட்டிலுமாக சுமார் 10 ஏக்கர் வயல்வெளிக்கும் வீடு வளவு கொண்ட பல ஏக்கர்கள் கொண்ட மேட்டு நிலத்திற்கும் தென்னை மற்றும் கனிதரு மரங்கள் கொண்ட காணிகள், கடை மற்றும் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரன். அவரின் கல்வீட்டின் முன்னால் அகலமான விசாலமான வட்ட வடிவில் அமைந்த திறந்த வெளிக் கூடாரம் ஒன்று அந்த வீட்டுக்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருக்கும். 

அந்தக் கூடாரத்தின் உள்ளே சீமேந்தினால் முழங்கால் அளவு உயரத்தில் சுமார் ஒரு அடி அகலத்தில் வட்டமாக எழுப்பப்பட்ட வட்டச் சுவர் மட்டுமே அமைந்திருந்தது. வருபவர்கள் அந்தக் குந்தில் வசதியாக உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ உட்கார்ந்திருந்து கதைக்கலாம். உள்ளே கதிரை போட்டும் இருக்கலாம்; பாய் விரித்தும் படுக்கலாம். அது சீமேந்து போட்ட வெறும் தரையாக இருந்தது. அதற்கு வாசல்களோ கதவுகளோ சுவர்களோ இல்லை. கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அதற்கு மேலே சுற்றிவர தென்னை, பலா, மா மரங்கள் நிழல் தந்து கொண்டிருக்கும். இயற்கையான காற்று இயற்கையான வெளிச்சம், பொருட்கள் எதுவும் இல்லாத எளிமை இவற்றோடு கூடிய அந்தக் கூடாரம் மிகப்பெரியதும்  கூட. ஒரு நேரத்தில் சுமார் 25 - 30 பேர் அந்த வட்டத் திண்ணையில் இருக்கக் கூடிய அளவுக்கு ஓரளவு பெரிய கூடாரம் அது! 

மின்சார வசதிகள் வந்திராத 70களின் நடுப்பகுதி அது. அக்காலத்திலேயே VW வான், றைக்டர், அவற்றுக்கு றைவர், வீட்டுக்கு வேலையாட்கள் என்று பெருவாழ்வு வாழ்ந்தவர் அவர். அங்கு வேலையாட்களும், வீடுவளவினைத் துப்பரவு செய்வோரும்,  தொழிலாளர்களும், வந்து போவோரும், உதவியாளர்களுமென வீடு எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். சமையல் வேலைகளுக்கு மங்கை அக்காவும் வாகனங்கள் ஓட்ட ராமு அண்ணாவும் அங்கு நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். 

இருந்த போதும் அந்தக் குடும்பம் மிக மிக எளிமையான, ஆடம்பரங்களோ டாம்பீகங்களோ, வறட்டுக் கெளரவங்களோ, பீடிகைகளோ இல்லாத பண்பினைக் கொண்டமைந்திருந்தது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மற்றவர்களை எல்லாம் எப்போதும் மரியாதையோடு நடத்தக் கற்பித்திருந்தார்கள். சாந்தா அக்கா, ராமு அண்ணா என்று தான் பிள்ளைகள் உதவியாளர்களை அன்போடும் மரியாதையோடும் அழைத்தார்கள். நான் நினைக்கிறேன் மங்கை அக்காவுக்கு இவர்களே தான் திருமணமும் முடித்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். மங்கை அக்கா திருமணமாகிப் போகும் போது நாலாவது பெண்குழந்தை ஆனந்தி சிறு குழந்தை. பிள்ளை மங்கை அக்காவின் பிரிவைத் தாங்க மாட்டாள் என்று  பால் கொடுத்துப் பிள்ளையைத் தூங்க வைத்து விட்டுத் தான் பிரியமனமில்லாமல் மங்கை அக்கா பிரிந்து போனா என்பது இன்னுமென் நினைவில் இருக்கிறது. 

மாமா மட்டுமல்லாமல் அந்தக் குடும்பமே சக மனிதர்களை அப்படித்தான் மதிப்போடும் மரியாதையோடும் பொறுப்போடும் அக்கறையோடும் அன்போடும் நடத்தியது. மாமா பெரிய மனிதராக; பண்ணையாளராக எங்கள் மனங்களில் உயர்ந்து நிற்பதற்கு இந்த உயரிய குணங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது. 

இவரது வீட்டுக்கு அருகாகத் தனி வீடொன்றில் மார்க்கண்டேயர் மாமாவின் வைத்தியராக இருந்து ஓய்வு பெற்ற தந்தையும் தாயாரும் வசித்து வந்தார்கள். தாத்தா, பாட்டி என்று தான் நாமும் அவர்களை அழைத்தோம். கால்களில் காயங்கள் பட்டால் அவர் தான் எங்களுக்கு மருந்து போட்டு விடுவார். அந்தத் தாத்தா ஆங்கிலேயர்களைப் போல நல்ல உயரமும் அழகும் மெல்லிய தோற்றமும் கொண்டவராக இருந்தார். மாமாவின் மூத்த மகள் தமயந்தியும் அவரது சாயலைக் கொண்டவராகக் காட்டுக்குள் வசிக்கும் ஒரு தேவதையைப் போல பேரழகும் பேரொளியும் கொண்டவராக விளங்கினார். அவரிடம் இருந்தது ஓர் அசாத்தியமான பேரழகு. அதனால் தான் அவருக்கு தமயந்தி என்று பெயர் வைத்தார்களோ தெரியாது.

அப்போது நாங்கள் அதே யாழ் வீதியில் அவர்களுடய வயல் காணி முடிகிற இடத்திற்குச் சமீபமாக சுமார் ஒரு மைல் தொலைவில் குடியிருந்தோம். அது ஒரு சிறு கிராமம் என்பதால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட சம வயதுடையவர்களாக நாங்கள் இருந்தததனால் தமயந்தியக்கா, தனஞ்செயன், சூட்டி, ஆனந்தி மற்றும் அவ்வப்போது அவர்களிடம் வந்து போகும் சுபாங்கி ( இவர் மிக இலகுவாகவும் அழகாகவும் French கொண்டை போடுவார். அது அவருக்கு அத்தனை எடுப்பாக இருக்கும். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக நானும் போட்டுப் பார்ப்பேன். அது எனக்கு எட்டாக் கொம்பாகவே இருந்தது. :) என்றொரு உறவுக்காறப் பேரழகுப் பெண்ணுமாக இதனைபேரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தோம். ( சுபாங்கி எவ்வளவு அழகான பேர்! கர்னனின் மனைவியின் பெயர் சுபாங்கி)  இருந்தபோதும் என் மூத்த சகோதரி சாந்தி தான் அவர்களின் விருப்பத்துக்குரிய அந்தரங்க சினேகிதியாக இருந்தார். ( அதிலொன்றும் எனக்கு வருத்தமில்லை. :) என்றாலும் அதனை நான் கவனித்திருந்தேன்.) 

நாங்கள் அப்போது 6ம் வகுப்பு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். மாமா தமயந்தி அக்காவை ஒவ்வொருநாளும் 10 மைல் தொலைவில் இருக்கும் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் தன் வானில் அழைத்துச் சென்று விட்டு விட்டு மீண்டும் மாலையில் போய் வானில் அழைத்து வருவார்.  நாங்கள் அப்போது அதே பாதையில் மூன்று மைல் தொலைவில் இருந்த ஓமந்தை மகாவித்தியாலயத்தில் படித்து வந்தோம். பஸ் வராமல் நாம் காத்து நிற்கும் போதெல்லாம் சிவாண்ணையின் பால்வானும் அவ்வப்போது வீதியால் போகும் லொறிகளும், மாமாவின் நீல நிற VW வானும் தான் எங்களை வீட்டுக்கு அழைத்து வரும். காத்திருக்கும் எல்லோரையும் ஏற்றி அவரவர் வீட்டில் இறக்கிவிடும் பணியை அவர்கள் வீட்டுக்கும் அப்பால் வரை சென்று இறக்கி விட்டு வரும் அந்த வான். அப்போதெல்லாம் தமயந்தியக்கா முன் சீட்டில் இருப்பார். என் அக்காவுக்கு மட்டும் முன் சீட்டில் அவவுக்கருகில் இடம் கிடைக்கும். நாங்கள் எல்லோரும் பின்னால் ஏறவேட்டியவர்களாக இருந்தோம் என்பதை இப்போது புன்னகையோடு நினைவு கூருகிறேன்.

இவ்வாறாக என் பால்ய காலத்து பழைய மறக்க முடியாத நினைவுகளில் மாமாவும் அந்த ஊரும், வீடும் அங்கு நாம் வாழ்ந்த வாழ்வும் நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டில் சோறு கறியாக்கி விளையாடியதும்; அவர்கள் வீட்டின் பின்னால் அவர்களது வயல் வெளிக்கு சமாந்தரமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மாரிகாலத்தில் நிரம்பி நிற்கும் குளத்தில் நீச்சலடித்ததும்;சேர்ந்திருந்து வானொலியில் தணியாததாகம் நாடகம் கேட்டதும்; அந்த வட்டக் குடிலுக்குள் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளும் இன்றுவரை நெஞ்சில் நிறைந்திருக்கிறது. 

தன் மனைவியை அவர் இளவயதில் இழந்து விட்டிருந்தாலும் தன் நான்கு பிள்ளைகளையும் தனி ஒருவராக இருந்து சிறப்பாக வளர்த்து ஆளாக்கினார். தன் பிள்ளைகள் எல்லோருக்கும் சிறந்த வாழ்க்கையை அவர் உருவாக்கிக் கொடுத்தார். இவற்றை எல்லாம் விரித்துக் கொண்டு போனால் அது முடிவின்றித் தொடர்ந்து கொண்டே போகும். அதனால் ஒரு விடயத்தை மட்டும் சொல்லி இந்த நினைவு மீட்டலை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

இது என் தகப்பனார் பேச்சுவாக்கில் ஒருநாள் சொன்னது தான். நாங்கள் அப்போது புது வீடு ஒன்று கட்டிக்கொண்டிருந்தோம். சுவர்கள் எழுப்பப்பட்டு கூரை வேலைகள் முடிந்த பின்பும் ஓடு மட்டும் போடப்படாமல் இருந்தது. சில நாட்களில் மாமா அவ்வப்போது நகர்வலம் வரும் அரசரைப் போல வீதி வழியாக ஒரு பவனி போவார். வளவுகளுக்குள் உரிமையாளர்களின் நடமாட்டத்தைக் கண்டால் இறங்கி வந்து நலம் விசாரிப்பார். எந்த ஒரு வரவேற்போ உபசாரமோ அவருக்கு தேவைப்படுவதுமில்லை; அவற்றை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அது ஒரு தன்னிச்சையான செயலாக நடக்கும் ஒன்று.

 அன்றும் அவர் அப்பாவை கண்டுவிட்டு இறங்கி வந்து ஏன் இன்னும் ஓடு போடவில்லை என்று கேட்டாராம். அப்பா அதற்கு, வங்கிக் கடன் இன்னும் வந்துசேரவில்லை; அதற்காகக் காத்திருக்கிறேன் என்றாராம். ‘நான் தாறன் காசு, முதலில ஓட்டைப் போட்டு முடி; பிறகு காசு வந்தாப்பிறகு தா’ என்று சொல்லி அன்றே உடனடியாக 5000 ரூபாய்களை அவர் கொடுத்தார் என்று அப்பா சொன்னார்.

அது தான் அவர் குணம்; அது தான் அவர் இயல்பு. பரஸ்பர மனிதர்கள் மேல் நம்பிக்கையும் பற்றுதலும் அன்பும் அக்கறையும் கொண்டவராக அவர் விளங்கினார். இலங்கையரான எங்களிடம் பண்ணையார் முறை இல்லாதிருந்த போதும் அவர் எனக்குப் பண்ணையாராகவே தோற்றமளிக்கிறார். அவர் ஒரு பண்ணையார் தான். பன்றிக்கெயதகுளத்துப் பண்ணையார். தான் வாழ்ந்ததோடு அந்த ஊர்வாழ் குடிமக்களையும் வாழவைத்த பண்ணையார். திடீர் திடீரென அவர் மேற்கொள்ளும் திக் விஜயங்களில் செழித்தது அச் சிறு கிராமம். 

அவர் வாழ்ந்த அமோகமான வாழ்வை சிறு வயதில் கண்டவ:ள் நான். அந்தச் செழிப்பின் சாரல் என்மீதும் ஏதோ ஒருவகையில் பட்டுச் சுவறி இருக்கிறது. பிறகு நாங்கள் எல்லோருமே வாழ்க்கைச் சுழலில்:- போர்ச் சூழலில் சிக்கி எங்கெங்கோ தூக்கி வீசப்பட்டோம். யார் யார் எங்கு போனோம் என்பதே தெரியாதிருந்தது. என்றாலும் எந்த ஒரு விதியோ அல்லது பூர்வ ஜென்மத்துப் பந்தமோ அல்லது பிரபஞ்சத்தின் பேரருட் சக்தியோ நாம் மீண்டும் சிட்னியில் ஒரே இடத்தில் வசிக்கவும் காணவும் பழகவும் தெய்வனுக்கிரகம் பாலித்திருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களினால் உலக நாடுகள் எங்கனும் மனிதர்கள் தூக்கி எறியப்பட்ட போதும் நாம் மட்டும் மீண்டும் ஒரே நாட்டில் ஒரே இடத்தில் ஒரே சிற்றூரில் அருகருகாக வாழ்க் கிடைத்த தெய்வானுக்கிரகத்தை என்னவென்று சொல்வது!

நமக்குத் தெரியாத ஏதோ ஒரு வல்ல சக்தி நம்மை வழிநடத்துகிறது. ஏதோ ஒரு மின்சார வசதியில்லாத குக்கிராமத்தில் அருகருகாக வசித்த நாம் இடையில் முற்றிலுமாகக் காணாமல் போய், மீண்டும் வேறொரு தேசத்தில் அருகருகாகவே வாழப் பாத்தியதைப் பட்டிருக்கிறோமென்றால் இதனை என்னவென்று அர்த்தப் படுத்துவது! நம்முடய புலன்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று நம்மை வழிநடத்துகிறது என்று தானே இதற்கு அர்த்தமாகும்? 

போய் வாருங்கள் மாமா! இது நாள் வரை நம்மை வழிநடத்திய அந்த மாபெரும் சக்தி உங்களைக் கைவிட்டு விடாது.

மீண்டும் நாங்கள் சந்திப்போம். இறுதிவரை உங்கள் சுயத்தை இழக்காது, தனிமரமாக நின்று, ஓர் எடுத்துக்காட்டான வாழ்வை; கர்ம வீரனாக; கம்பீர பிராகிருதனாக இந்த வாழ்வை நீங்கள் கம்பீரமாக வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறீர்கள்.

Hat's off to you maama! 

You are an inspiration for me and many.!


பிற் குறிப்பு: 22.04.2025.

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்றுதான் இங்கு வர முடிந்தது....

மாமா இருந்த இடத்தை ‘விளக்குவைத்த குளம்’ என்று அழைப்பார்கள். அந்தக் கிராமம் யாழ்வீதியில் இருந்து ஆரம்பித்து உள் நோக்கி செல்லும். யாழ் வீதியில் அது முடிகிற இடத்தில் நாமிருந்த இடமான பன்றிக்கெய்த குளம் ஆரம்பிக்கும். அது மாமாவின் காணி முடிகின்ற இடமாகவும் இருந்ததாலும்; அதே யாழ்வீதியில் எங்கள் வீடு அருகிலேயே தொடங்குகிற இடத்தில் இருந்ததாலும் மாமாவை நமக்கென்று சொந்தம் கொண்டாடவே எனக்கு மிகவும் பிரியமாக இருக்கிறது. அத்தோடு மாமாவின் புழக்கங்களும் அதிகம் யாழ்வீதிக் கரையோரமாகவே அதிகம் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மாமா விளக்கு வைத்த குளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் எங்களுக்கு - குறிப்பாக எனக்கு, பன்றிகெய்த குளத்துப் பண்ணையாராகவே தோற்றமளிக்கிறார்.

இந்தத் திருத்தத்தை அன்போடும் உரிமையோடும் எனக்குச் சுட்டிக் காட்டிய உறவுகளுக்கு மிகுந்த  நன்றி. அது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. காரணம் அந்த வாழ்வின் எச்சங்கள் என் நினைவுகளில் மாத்திரமல்ல; அவர்களின் நினைவுகளிலும் பசுமையாக  இன்னமும் மிச்சமிருக்கிறது அல்லவா! 

சுட்டிக்காட்டிய அன்புள்ளங்கள் எல்லோருக்கும் மிகுந்த நன்றி.

Sunday, December 8, 2024

ஈஸ்வரி அன்ரி

                 எங்களுக்கு வரம் தந்த சாமி

ஈஸ்வரி அன்ரி -

எங்கள் பால்ய காலங்களைத் தன் தன்னலமற்ற தேவதை அன்பினால் குளிப்பாட்டிய புனிதவதி.

அவர் ஒரு தேவதை அம்சம். வசீகரமிக்க பேரழகினால் மாத்திரமல்ல: யாராலும் பொழிய முடியா பேரன்பை; தாயன்பை: எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரோ ஓர் அயலாராக இருந்த எங்கள் மீது பொழிந்த இறையம்சத்துக்குச் சொந்தக்காறியாக இருந்ததாலும் தான் அவர் ஒரு தேவதை எங்களுக்கு!

70களின் தொடக்க் காலம் அது. கல்முனையில் பக்கத்து வீட்டுக்காறராக அவர்கள் அமைந்தது ஒரு தற்செயல் தான். நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள்; நண்டும் சிண்டுமாய்; ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாய்...அன்ரி தான் எங்களுக்கு விளையாட்டுத் தோழி.

அவர்கள் வீடு எப்போதும் ஒருவித அப்பிள் பழத்தின் வாசனையை ஒத்த வாசனையோடிருக்கும். அது எப்படி என்று எனக்கு இன்றுவரைக்கும் புரியவில்லை. அங்கிள் நில அளவையாளராக இருந்ததாலோ என்னவோ அவர்களுடய வரவேற்பறையில் ஒரு நிஜமான காய்ந்த மரக்கிளையும் அதில் நிஜமான தூக்கணாங் குருவிக் கூடுகளும் தொங்கியபடி இருக்கும். சாப்பாட்டு மேசைக்கருகில் குளிர்சாதனப் பெட்டியும், அதன் மேலே ஒரு கண்ணாடிக் குவளைக்குள் பல வண்ண ஸ்ரோக்கள் அடுக்கியபடி இருக்கும். சாப்பாட்டு மேசைக்கு மேலே தாழ்வாக வண்ணக் கூடோடு இருக்கும் மின்சார விளக்கு ஒரு மங்கல் நிறமான வெளிச்சத்தை மேசைக்கு மட்டும் உமிழ்ந்தபடி இருக்கும்.  வீட்டு வாசலில் ஒரு தேமா மரம்.

இவை எல்லாம் எங்களுக்கு ஓர் ஆச்சரியமென்றால் அன்ரி எங்களுக்கு இன்னுமொரு பெரிய ஆச்சரியம். எங்களோடு விளையாடுவதில் அவவுக்கு அப்படி ஒரு பிரியம்.

அவர் தினமும் சாப்பாடு செய்வது எங்களுக்கும் சேர்த்துத் தான். அதில் மலைநாட்டு மரக்கறிகள் அதிகம் இருக்கும். கரட், பீன்ஸ், கீரை, மீன் அல்லது முட்டை கட்டாயமாக இருக்கும். இவைகள் எல்லாம் எங்களுக்கு அப்போது புது ருசிகள். அவற்றை எல்லாம் மசித்து, குழந்தைகளுக்கு ஏற்ற விதமாகப் பிசைந்து, எங்களுக்கு ஊட்டி விடுவார். அந்தச் சாப்பாட்டைக் கூட ஒழித்துப் பிடித்து விளையாடி விளையாட்டின் வழியாகத் தான் ஊட்டி விடுவார். கதவின் பின்னாலோ கட்டிலுக்குக் கீழோ அல்லது கதிரை மேசைகளுக்கு அடியிலோ நாங்கள் ஒழிந்து கொள்வோம். அன்ரி கண்டு பிடிப்பா. ஒருமுறை கண்டு பிடித்தால் நாங்கள் ஒருவாய் சாப்பிட வேண்டும். அப்படி எங்களை வளர்த்தவர் அவர்.

அங்கிளிடம் ஒரு பென்னாம் பெரிய குடை ஒன்று இருந்தது. ஒரு மழைநாளில் நாங்கள் மூன்று பேரோடு அன்ரி, அங்கிளுமாக அந்தக் குடைக்குள் நாங்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடிக்கு மழைக்குள் வெறுங் காலோடு மழை வெள்ளத்துக்குள் கால்களை அலசிய படிக்கு சும்மா வீட்டு வளவினை சுற்றி வலம் வந்ததும் அது தந்த சந்தோஷமும் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் அங்கிளிடம் இருந்த ஒரு கறுப்புக் காரில் அவர்களோடு நாங்களும் தொத்தி விடுவோம். அப்போதெல்லாம் எங்களுக்குக் காப்புகளும், மாலைகளும், வண்ணமயமான விளையாட்டுப் பொருட்களும் தின்பண்டங்களும் உடு புடவைகளும் வாங்கித் தந்து எங்கள் வாழ்க்கையை வளம் மிக்க; மகிழ்வான நினைவுகளாக ஆக்கி வைத்தவர் எங்கள் ஈஸ்வரி அன்ரி.

எங்கு அன்ரி போனாலும் அவவுக்குப் பக்கத்தில் யார் இருப்பது என்ற போட்டியில் அக்கா எப்போதும் ஜெயித்து விடுவதில் தான் எனக்குக் கொஞ்சம் மனவாட்டம் ஏற்படும். என்றாலும் ஒரு மாதிரியாக அவவுக்கருகில் இருக்கும் அதிஷ்டத்தை ஒருவாறு இறுதியில் நான் பெற்று விடுவேன். நீதி வழங்குவதில் அவ நீதி தேவதை.

அப்படி அவர் ஓர் ஆதர்ஷம் எங்களுக்கு!

எது; என்ன சம்பவம்; எந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்வில்; நினைவில் பெரிய இடத்தைப் பிடிக்கும் என்பதை யாராலும் அப்போதைக்குக் கணித்துக் கூறவியலாது. சில விடயங்கள் சிறியதாக இருந்தாலும் உள்ளத்தில் மிகப்பெரிய இடத்தை அது பிடித்துவிடும். சில பெரிய சம்பவங்கள் மனதில் இருந்து மறைந்தே போயிருக்கும். நினைத்துப் பாருங்கள்.... உங்களுக்கு என்ன விடயங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது.....?

என் ஞாபகக் கிடங்கில்; என் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பில் அன்ரி ஓர் ஆதர்ஷ தேவதையாக: பேரழகியாக: மங்காத நிதியமாக: எங்களோடு விளையாடி எங்கள் மீது எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத; நிபந்தனைகள் எதுவுமற்ற பேரன்பைப் பொழிந்து; பரிசுப் பொருட்களால் எங்களைக் குளிப்பாட்டி; எங்கள் குழந்தைப் பருவ வாழ்க்கையை ஆச்சரியங்களாலும் மகிழ்வினாலும் பேரன்பினாலும் நிறைத்த பேரழகியாக என்றென்றைக்கும் அவர் நிலைத்திருப்பார்.

மொக்குப் பெண்ணாக; அதே நேரம் வெகுளிப் பெண்ணாக; சுமாரான தோற்றம் கொண்ட; படிக்க விருப்பம் இல்லாத; விளையாட்டுக் குணங்கள் கொண்ட ஒரு குழந்தையை அவர் கையாண்ட விதம் இறையன்புக்கு நிகரானது!  அவர் என் மனதில் நிறைந்து போயிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் தான். நாங்கள் மூன்று பெண்பிள்ளைகளும் மூன்று விதமாக இருந்த போதும் எங்கள் மூன்று பேரையும் அவர் சம அன்போடு நடாத்தினார். பேரன்பினால் எங்கள் பால்யத்தை பொற்காலமாக்கினார்.

இன்றைக்கு நான் வெளிநாட்டு இளஞ் சிறார்களோடு பாடசாலையில் பணிபுரியும் போது, குழந்தைகளோடு உறவாடும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அன்ரியையே நான் என் ஆதர்ஷ ஆசானாக நினைத்துக் கொள்வேன். அன்பையும் அக்கறையையும் கவனிப்பையும் வழிநடத்துதலையும் வழங்குவதில் கல்வியறிவு கற்றுத் தந்த பாடங்களிலும் மேலாக அன்ரி எங்களை வழிநடத்தியதையே நான் எனக்கான முன் உதாரணமாகக் கொள்வேன். அது அவர் எனக்குத் தந்த வார்த்தைகளால் அளவிட முடியாத வெகுமதி; பெருநிதி.

அங்கிளோடு அவர் வாழ்ந்த இல்லற வாழ்வு ஆச்சரியமும் அழகும் மிக்கது. அங்கிளைப் போல ஒருவர் அவருக்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்தது தான் அன்ரியால் தன் இயல்பான வாழ்வை; குணங்களால் மேம்பட்ட வாழ்வை இவ்வாறு வாழ வழிவகுத்திருக்க வேண்டும் என்று இப்போது உறுதியாகத் தோன்றுகிறது. அவர்கள் பாலும் தேனும் போல; பூவும் வாசமும் போல வாழ்ந்தார்கள். அது ஓர் ஐக்கியமான பெருவாழ்வு. வரம்பெற்று கிட்டிய வாழ்வு போல்வது. அவர்கள் ஆதர்ஷ தம்பதிகளாகவே எப்போதும் இருந்தார்கள். 

அன்ரி தன் தாயை இறுதி மூச்சு உள்ளவரை எப்படி எல்லாம் சீராட்டி பாராட்டி போற்றிப் பார்த்துக் கொண்டார் என்பதை ஊரும் அயலும் சொந்த பந்தங்களும் உற்றார் உறவினரும் நன்கறிவர். 

அவர் ஒரு ஆச்சரியமே தான். இந்த உலகத்துக்கு அபூர்வமாக வந்து பிறந்த ஓர் ஆச்சரியம். அன்ரி உரத்துப் பேசியோ குரல் உயர்த்தி வாதம் செய்ததையோ நான் கண்டதேயில்லை.  இறைபக்தியில் அவரை மிஞ்ச ஆளில்லை. முருகக் கடவுளோடு பல வருடங்கள் தொடர் போராட்டங்கள் மேற்கொண்டு தன்னை வருத்திப் போராடி, கடும் விரதங்களும் தவமும் மேற்கொண்டு பிள்ளை பெற்று வெற்றி கண்டவர் அவர். கடவுளே இரங்கி வரம் கொடுத்த பக்தி அவருடயது.

மிக இளகிய; எதிர்த்து ஒன்றைச் செய்யத் தெரியாத குழந்தையாகவே அவர் இறுதிவரை இருந்தார். இறுதிக் காலங்களில் சகிப்புத்தன்மையோடு தன் உபாதைகளை அவர் பொறுத்துக் கொண்டார். தன்னை ஒறுத்துக் கொண்டு உலாவந்தார்.அங்கிள் அவரை அருகில் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 

அங்கிள், நீங்கள் அன்ரிக்குக் கிடைத்த ரத்தினம்! "விஜய ரத்தினம்"! அரியதான ரத்தினம்!!

அன்ரி,

நீங்கள் எங்கள் குழந்தைப் பருவத்தை உங்கள் தன்னிகரற்ற பேரன்பால் நிறைத்தீர்கள். அங்கிளோடு நீங்கள் வாழ்ந்த வாழ்வு நமக்கெல்லாம் ஓர் ஆதர்ஷ வாழ்வாக - வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் படியாக இருந்தது. நீங்கள் உங்கள் தாயாரைப் பாத்துக் கொண்ட பாங்கு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை எங்களுக்குக் கற்றுத் தருவதாக இருந்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு என் 60 வது வயதில் இருந்துகொண்டு நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் எங்களுக்குத் தந்த பெரு நிதியங்கள் எந்த அளவுகோல்களாலும் அளவிடற்கரியதாய்; எழுத்துக்களால் விபரிக்கவொண்ணாததாய்; வாழ்வு முழுக்கவுமாய் நிறைந்துபோய்க் கிடக்கிறது. 

அன்ரி, நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களின் தேவதை. நிஜமாக வாழ்ந்து அன்பையும் ஆதரவையும் வாரி வழங்கிய தேவதை. எங்கள் மனங்களில் நீங்கள் என்றென்றைக்கும் ஒரு தேவதையாகவே கொலு வீற்றிருப்பீர்கள்.

உங்கள் பூலோகத்துக்கான வருகை என்பது எங்களுக்குக் கடவுள் தந்த ஓர் அழகிய வரம்; வாழ்வு!

தேவதையை வணங்கி, தாழ் பணிந்து, விடைதருகிறேன். சொந்த தேசம் சென்று சேர்ந்தாய் தாயே வாழி! இறை நிழலில் இனிதே இளைப்பாறு தாயே, நீ நீடூழி!!

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி.

8.12.24.

இறுதிக் காலங்களில் கூட அழகு மாறா அவரின் தோற்றம்


Monday, November 18, 2024

கெளரியின் மீன் குழம்பு

 'Sometimes the smallest things take the most room in your heart' என்று அண்மையில் ஒரு வாசகம் ஒன்றைப் படித்துக் கடந்திருந்தேன்.

சில வேளைகளில் ஒரு சிறு வாசம் அல்லது ஒரு சிறு ருசி இல்லையெனில் ஒரு பாடல் அல்லது ஒரு மழைக்கால மாலை, அல்லது மழைபெய்து ஓய்ந்த ஒரு பொழுது, அடித்துப் பெய்த மழையில் ஒதுங்கிப் போயிருக்கும் சிறு மழைநீர் ஓடிய  தடயம், ஒதுங்கிப் போயிருக்கும் ஒரு குப்பை, ஒருவரது சாயல், அல்லது குரல், ஒரு புத்தகம், ஒரு செம்பருத்திப் பூ, ஊதுபத்தி வாசம்,  .... இப்படி ஏதேனும் ஒன்று போதும்! எங்களை ஏதேனும் ஒரு ஞாபகப் பள்ளத்தாக்கில் அல்லது ஒரு நினைவூஞ்சலில் எங்களை இறக்கி விட அல்லது திளைக்க வைக்க....

எனது 13 வயது ஞாபகம் ஒன்று எனக்கு அப்படியாக அண்மையில் நினைவுக்கு வந்தது. அது எப்படி அவ்வளவு காலமும் என் ஞாபக அடுக்கில் அப்படியே பதிந்து போயிருந்தது என்று இது வரைக்கும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியம்!

அது போகட்டும்,

 எங்கள் பாடசாலை விடுமுறை வந்தால் எப்படியோ நான் யாழ்ப்பாணம் போய் விடுவேன். என் தகப்பனாரின் பூர்வீக வீடும் என் தாயாரின் பூர்வீக வீடும் அருகருகில் இருந்தாலும் எனக்கு அம்மாவின் பக்கம் தான் ஈர்ப்பு அதிகம்.

அங்கு அப்போது அம்மம்மாவும் அப்புவும் அம்மாவின் கடைசித் தங்கையும் இருந்தார்கள். ஜிம்மி என்றொரு நாயும் ஏதேதோ பெயர் ஞாபகத்தில் இல்லாத பசு மாடுகளும் அவர்களிடம் அப்போது இருந்தன.  5 அறைகள் கொண்ட கல்வீடும் மாட்டுக் கொட்டிலும் உள்ளடங்கலாக இருந்த கச்சிதமான வளவு அது! ஆனால் வளவு முழுக்க கல்; சுண்ணாம்புக் கல். அது ஆங்காங்கே தூக்கலாகத் தெரியும். எங்கள் கால் விரல்களையும் அவ்வப்போது பதம் பார்க்கும்.

முன்னாலே பெரிய விறாந்தையும் போர்டிக்கோவும் போர்டிக்கோவில் ஒரு சாய்வு நாற்காலியும் கேற்றின் கரையோரமாக ஒரு வெள்ளை எக்ஷ்சோறா மரமும் போர்ட்டிக்கோவின் கரையோரமாக வளர்ந்து முன்பக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் குடிகாரன் பூக்களும்  அந்த வீட்டுக்கு ஒரு தனி பவிசைக் கொடுத்தபடி இருக்கும்.

குடிகாரன் பூ - Rangoon ceeeper -

சிட்னிக்கு ஒப்ரா ஹவுஸ் / ஹாபர் பிறிட்ஜ் மாதிரி எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோவன்!

கிணறு கேற்றுக்கும் வீட்டுக்கும் அருகாக வலது கைப்பக்க முன் மூலையில் அமைந்திருந்தது. கிணற்றைச் சுற்றி சில கமுகு, தென்னை, வாழை மரங்களும் நின்றன. 

வீட்டின் ஐந்தாவது அறை விறாந்தைக்கு பக்கமாக; தனியாக; வெளிப்புறமாகவும் ஒரு வாசலைக் கொண்டமைந்திருந்தது. அதன் அருகில் நன்றாக உயர்ந்து வளர்ந்த ஒரு வேப்ப மரம் குசினிக்கு மேலாகவும் இந்த அறைக்கு மேலாலுமாக நிழல் தந்து கொண்டிருந்தது. எனோ தெரியவில்லை பச்சைநிறக் கண்ணாடிகளால் குசினி ஜன்னல் அமைக்கப் பட்டிருந்தது.

இந்த அறை தான் எனக்குப் பிடித்த அறை. அதற்குப் பிரத்தியேக காரணங்கள் ஏதேனும் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சின்ன அறையாக அது இருந்ததும்; ஒரு சிறுகட்டிலும் மூலையில் ஒரு புத்தகத் தட்டும் அதில் ஆத்மஜோதி என்ற வழக்கமாக அப்பு வாசிக்கும் மாதாந்த சஞ்சிகைகளும் அம்மாவின் கடசித்தங்கை - அப்போது திருமணமாகாமல் இருந்ததால் - படித்து சிறுகதைகள் தனியாக தொடர்கதைகள் தனியாக என கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் புத்தகத்தின் இருந்து பிரித்து அச்சுக்கூடத்தில் கொடுத்துக் கட்டி வைத்திருந்த சிறந்த தொகுப்புகள் அங்கு இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அந்த வீட்டுக்கு என்று ஒரு வாசம் இருந்தது. அம்மாவின் தங்கை இந்து அன்ரி அந்த வாசத்தின் சூத்திரதாரி. சுருக்கு வைத்த அரைபாவாடை சட்டை போட்டிருக்கும் அவரிடம் ஓர் அபார சுறுசுறுப்பும் ஒழுக்கமும் எப்போதும் படிந்து போயிருக்கும். அவரது சுத்தமும் அடக்கமும் நேர்த்தியும் சுறுசுறுப்பும் வீட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் பதிந்து போயிருக்கும். 

அது மட்டுமன்றி, கண்டவுடனே அகமும் முகமும் மலர ஓடிவந்து, கட்டியணைத்து, உச்சிமுகர்ந்து, நிபந்தனைகள் அற்ற அன்பினால் என்னைச் சீராட்டிய கன்னித் தாயாக அவர் இருந்தார்.

முன் ஹோலில் பின்னல் கதிரைகள் நான்கும் மயில்கள் நடனமாடும் உறைகளைப் போட்டிருக்கும். அருகிலே இரண்டு சின்ன ஸ்ரூல்களும் நடுவிலே சிறு மேசையும் இருக்கும். றோஸ் நிற சுவரில் புறாப் பறவைச் சிலைகள் சில பறந்தபடி இருக்கும். ஒரு பெரிய றேடியோ ஷோகேஸின் மேலே ஒரு மூலையில் இருக்கும். சன்னமாக அது ஒலித்துக் கொண்டிருக்கும்.  ஷோகேசிற்குள்ளே சிப்பியில் செய்த கலைப் பொருட்கள், சில கொக்குகள், மேல் தட்டிலும் கீழ் தட்டில் பீங்கான் தட்டுகளும் இருக்கும். சிவப்புச் சீமேந்துத் தரை காலையும் மாலையும் கூட்டப்பட்டு பளிச்சென்று இருக்கும். வீட்டின் அழகையும் நேர்த்தியையும் இந்துவன்ரி எப்படி அவ்வளவு  இயல்பாக பேணி வந்தார் என்று தெரியவில்லை. 

அந்த வீட்டின் வாசமாக இந்துவன்ரி இருந்தார். 

எனக்கு வேலை என்று எதுவும் அதிகம் இருக்காது. அப்புவைத் தேடி  தாடி வைத்த காவிகட்டிய சாமியார்கள் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்துவன்ரி  மூக்குப் பேணிக்குள் தரும் கோப்பியைக் கை சுடச் சுட விளிம்பில் பிடித்துக் கொண்டு நான் கொண்டுபோய் அப்புவுக்கும் சாமியாருக்கும் கொடுக்க வேண்டும். சாமியார்  அதனை வாங்கி அருகில் வைத்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்து ஓம் நமசிவாய என்று சொல்லித்  தன் சுருக்குப் பையத் திறந்து வீபூதி தருவார். அதனை வாங்கி விட்டு போய் விடுவேன்.

அவ்வப்போது அப்பு கூப்பிட்டு கொக்கைத் தடியால் செவ்விளனி பறித்து வெட்டித் தருவார். பிறகு அதனைப் பிளந்து வழுக்கலையும் சாப்பிடத் தருவார். அவ்வப்போது மாலைகளில் வைக்கோல் போரில் இருந்து வைக்கலைப் பிரித்து மாடுகளுக்குப் போடும்படி அம்மம்மா உத்தரவிட்டால் அதனைச் செய்வேன். மற்றம்படி என் பொழுது சைட் அறைக்குள் சிறுகதைத் தொகுப்புகள், தொடர்கதைகள், ஆனந்தவிகடன் பகிடிகள், ஆத்மஜோதி இவைகளோடு கழியும்.

நான் நானாக வடிவமைக்கப் பட்டதில் / உருவானதில்  இந்த வீட்டுக்கும் இந்துவன்ரிக்கும் இந்த என் புத்திளம் பருவத்திற்கும் அங்கு எனக்குக் கிடைத்த சுதந்திரமும் சுதந்திரமாக நானே விரும்பிப் படித்த புத்தகங்களுக்கும் பெரும் - மிகப் பெரும் பங்கு உண்டு. 

ஆத்மஜோதி சஞ்சிகைகள், அப்புவோடு பகல் பொழுதில் வந்து பேசிப்போகும் சாமியார்கள், அப்புவின் தீட்சை பெற்ற தோற்றம், சிரட்டைக் குடுவைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் திருநீறு, அந்த வீடு, இந்துவன்ரியின் அன்பு - இவைகள் என்னை உருவாக்கியதில் செல்வாக்கு செலுத்திய மேலும் சில காரணிகள்.

சரி அது போகட்டும்.

வெள்ளிக் கிழமை காலை மிக விசேசமானது. இந்துவன்ரி முழு வீட்டையும் ஈர்க்கிலினால் கட்டிய விளக்குமாற்றினால் கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளிவந்து கழுவுவார். முற்றம் கூட்டி சாணத்தண்ணீர் தெளிப்பார். வீட்டுக்குள் இருந்து சாம்பிராணி வாசம் வரும். 

அப்புவும் தீட்சை பெற்றிருந்ததால் கிணற்றடியில் இருந்து பலவிதமான அபிநயங்கள் எல்லாம் செய்து முழுகி வருவார். தன் வெள்ளித் தலைமயிரை முடிந்து ஒரு கொண்டை போடுவார். மூன்று குறிகளால் ஆன திருநீற்றினை வெற்றுடம்பிலும் புஜங்களிலும் நெற்றியிலும் பூசுவார். வேட்டியும் சால்வையுமாக அகன்ற நெற்றியில் தெளிவான மூன்று குறிகளால் ஆன திருநீற்றோடு அந்த ஆஜானுபவனான மனிதர் வந்து முன் போர்டிக்கோவில் இருக்கிற சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார் என்றால் நேரம் காலை 10.00 மணியாகி விட்டது என்று அர்த்தம்.

இந்துவன்ரி என்னை அழைத்து அப்புவுக்கு மூக்குப் பேணியில் கோப்பி தருவார். அவரிடம் அதனை நான் கையளித்து விட்டு எனக்குப் பிடித்த றோஸ் நிற கிளாசில் எனக்கான தேநீரைக் குடிப்பேன்.

உங்களில் பலருக்கு அப்ப அம்மம்மாவின் வேலை என்ன என்று யோசிக்கத் தோன்றும். அவவின் வேலை பிலவு (புலவு?) என்று அவர்கள் சொல்லும் தோட்டத் தறை ஒன்று ஒரு சிறு நடைதூரத்தில் இருந்தது. காலையில் அவர் கடகத்தோடு அங்கு போனார் என்றால் மாடுகளுக்கு உழவாரத்தல் செருக்கிய புல்லும், கீரையும் மரவெள்ளிக் கிழங்கும் கொண்டு வருவார். சில வேளைகளில் வெங்காயத் தாள்களும் வரும். பத்துமணியளவில் அவர் வந்து பின் தாழ்வாரத்துக் குந்தில் குந்தினார் என்றால் அவருக்கான தேநீரையும் நானே கொண்டு சென்று சேர்பிக்க வேண்டி இருக்கும்.

சனிக்கிழமைகள் இன்னும் ஒரு படி விஷேசம். அம்மம்மா தோட்டத்தால் மரக்கறிகளைத் தந்து தேநீர் அருந்திய பிறகு பின் பனைவடலிகளுக்குள்ளால் செல்லும் ஒரு சிறு நடைபாதை வழியாக ஒரு ஓலைப் பையைக் கொண்டு தெல்லிப்பளைச் சந்தைக்குப் போவார். மீன்கள் வாங்கி வருவார். 

அம்மம்மா ஒரு விசித்திரப் பேர்வழி. அவர் அதிகம் யாரோடும் பேசமாட்டார். அன்பினை வெளிப்படையாக அப்பு மாதிரி பொழிய மாட்டார். ஆனால் வேலையில்; தன் கடமையில்; கண்ணும் கருத்துமாக இருப்பார். 

 இந்துவன்ரியோடு அவர் பேசும் - எனக்கு ஞாபகத்தில் இன்றும் இருக்கும் பேச்சு இந்தமாதிரியாகத் தான் இருக்கும். ‘ இந்த நாலு குஞ்சு மீனுக்கு அறாவிலை சொல்லுறான்; நான் பேசிப்பறைஞ்சு வாங்கிக் கொண்டு வாறன்’ என்று சொல்லியபடி குசினிக்கு வெளிப்புறம் இருக்கும் பைப்பில் மீனை வெட்டிக் கழுவி சுத்தப் படுத்தி இந்துவன்ரியிடம் கொடுப்பதோடு அவரது கடமை அப்போதைக்கு நிறைவு பெறும். 

மீன்சட்டி குசினிக்குள் வரும் போது நெருப்படுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும். மரவெள்ளிக் கிழங்கும் கீரையும் அடுப்பில் ஏறத் தயாராக மண் சட்டிக்குள் இருக்கும். முதல் பால் இரண்டாம் பால், கப்பிப் பால் என தேங்காய்ப் பால் தனித்தனிக் கிண்ணங்களுக்குள் இருக்கும்.

கஞ்சி வடித்த பிறகு அதனை ஒரு சிறு கிண்ணத்தில் ஊற்றி வடித்த சோறும் உப்பும் தேங்காய் பாலும் விட்டு இந்துவன்ரி என்னைக் குடிக்கச் சொல்வார். சுவையோ சுவை! அப்படி இரு சுவை!! குடித்த  பிறகு மிச்சக் கஞ்சியும் வெட்டிய மரக்கறித் தோல்களும் தவிடோ புண்ணாக்கோ ஏதோ ஒன்று இவற்றை எல்லாம் வாளியில் கலந்து மாட்டுக்கு வைத்து விட்டு வருவார்.

இனி மீன்குழம்பும் மீன் பொரியலும் அடுப்பில் வாசம் பரப்ப ஆரம்பித்திருக்கும். சொதியும் கூட்டுச் சேர்ந்திருக்கும். 12.15 - 12.30 க்கிடையில் மதிய சமையல் சுடச் சுடத் தயாராகி விடும். 

முதலில் அப்புவுக்குத் தான் சாப்பாடு. அவர் வந்து பலகையில் அமர்வார். அவருக்கு முன்னால் ஒரு பெட்டியை தலைகீழாகக் கவிட்டு வைத்து விட்டு அதன்மேலை வாழை இலை போட்டு இந்துவன்ரி பரிமாறுவார். நான் விருந்தாளி என்பதால் எனக்கும் அப்போதே சாப்பாடு கிடைக்கும்.

நான் சாப்பிட்ட கோப்பை எனக்கு இன்னும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அது ஒரு எனாமல் கோப்பை. அதன் விளிம்பு சிறியதாக உருண்டு நீல நிறத்தில் காணப்படும். சுட்டு விரல் அகல பரப்பு தட்டையாக இருக்கும். அதன் நடுப்பகுதி பள்ளமாக இருக்கும். அதன் நடுவில் சிவப்பு நீல நிறத்தில் பூவோ, கிளியோ ஏதோ ஒன்று தீட்டப் பட்டிருக்கும். பாரமில்லாதது. ஏந்த இலகுவானது. அந்தக் கோப்பை தான் என்னுடய கோப்பை. எனக்குப் பிரியமான கோப்பை.

சப்பாணிவெட்டி நிலத்தில் அமர்ந்து, அந்தக் கோப்பையை நிலத்தில் வைத்து, மீன்குழம்பும் கீரையும் மரவெள்ளிக் கிழங்கும் மீன்பொரியலும் சேர்த்து சாப்பிடும் சுவை இருக்குப் பாருங்கள்! அதன் பெயர் தான் அமுத சுவை!! பிறகு சொதியும் மீன்குழம்பும் பொரியலுமாக உண்பது ஓர் உபரி சுவை! 

பேரின்பப் பெருஞ்சுவை!!

சுமார் 45 வருடங்களுக்குப் பிறகு கெளரி கொண்டுவந்து தந்தாள் பாருங்கள் ஒரு மீன் குழம்பு!

அதே மீன்குழம்பு!!

இந்துவன்ரி செய்து தந்த, அதே மீன் குழம்பு! 

ஞாபக இடுக்கில் ஒழிந்துபோயிருந்த அத்தனை  நினைவுகளையும்கூட அது ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வந்து நேர்த்திருக்கிறது அந்த மீன்குழம்பு!

கெளரியின் மீன் குழம்பு!

இந்துவன்ரி செய்து தந்த அதே மீன் குழம்பு!

ஒரு பெருமழை என் ஞாபக இடுக்கெங்கும் நுழைந்து எனக்கே தெரியாமல் ஒழிந்து போயிருந்த அத்தனை நினைவுகளையும் வெளியே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது!

சில மனிதர்களுக்கு; சில பொருள்களுக்கு; சில விடயங்களுக்கு; மேலும் ஒரு சிறு பொறிக்கு அப்படி ஒரு தார்ப்பரியம் இருக்கிறது!

அவற்றினை ஏந்தி வந்து மீட்டுத் தருகின்றன எதிர்பாரா அன்பின் நிமித்தங்கள்!

‘கடவுள் தந்த அழகிய வாழ்வு நினைவுகளால் நிறைகிறது....

கெளரி,

உன் மீன்குழம்புக்கு நன்றி!

சில அன்பின் கடன்களை இந்த ஜென்மத்தில் தீர்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை!

Thursday, December 26, 2019

ஸ்ரீ காந்த லக்ஷ்மி - 25.12.2019


ஸ்ரீ காந்த லக்ஷ்மி

இவரை நான் சந்திக்க முடிந்தது இரு வருடங்களுக்கு முன்னர் தான். அதுவும் மிகவும் தற்செயலான ஒரு நிகழ்ச்சி. 

என் தம்பி முறையான ஒருவன் - கோபி - என்னைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போயிருந்தான். 1995 இற்குப் பின்னர் நான் கண்ட பல்கலைக் கழகம் அது! 

அப்போதெல்லாம் வெளிச்சமும் வெளியுமாக இருந்த இடமெல்லாம் இப்போது இருளையும் நிழலையும் கொண்டிருந்தது.

அந்தக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்தமாய் போயிருந்ததும் அதிக நேரத்தைச் செலவளித்ததுமான நூலகத்தை பார்க்காமல் வர முடியுமா? அங்கே போன போது தான் ஸ்ரீ அக்கா அங்கு நூலகராக இருப்பதை அறிய முடிந்தது. 

படித்த காலத்தில் அவரை நான் கண்டதுண்டு. - அப்போது அவர் உதவி நூலகராகக் கடமையாற்றி இருந்தார். அவரோடு நேரடியாக எனக்குப் பழக்கமோ தொடர்போ இல்லாது போயினும்; போகும் போதும் வரும் போதும் முன்னால் அமைந்திருந்த சிறு சிறு பெட்டிக்குள் அப்படி என்ன தான் தேடுகிறார் என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும்.

கூடவே, அவர் கம்பீரமாக அணிந்து வரும் பருத்திச் சேலைகளிலும் கொஞ்சம் கவனம் சென்று திரும்பும்! அத்தனை நேர்த்தியோடும் தனித்துவத்தோடும் அதை அவர் அணிந்திருப்பார். நகைகள் அதிகம் இல்லாத; கடும் நிறங்கள் எதையும் கொண்டிராத; அந்தப் பருத்திச் சேலைகள், அவருக்கு மிகுந்த கம்பீரத்தைக் கொடுப்பதாகவும்; தனித்துவம் மிளிர்வதாகவும் அப்போதெல்லாம் தோன்றும். அதுவே அவரை தனியாக நினைவில் வைத்திருக்கவும் இப்போது உதவியது.

பல்கலைக்கழக நூலகம் நிறைய மாற்றங்களைக் கொண்டிருந்தது. நாம் அங்கிருந்த போது ஒரு தளத்தில் மட்டுமாக இருந்த நூலகம் இப்போது பெருத்திருந்தது. உள்ளக அமைப்புகளிலும் நிறைய மாற்றங்கள். பாதுகாப்புகள்...தெரிந்த முகங்கள் என்று எதுவும் இல்லை. 

சரி வந்தது தான் வந்தேன். நூலகரையும் பார்த்துப் போகலாமே என அவரது அறைக்குச் சென்றேன். கம்பீர லக்ஷ்மியாக அவர் அதே தோற்றத்தோடு அமர்ந்திருந்தார். அவரது தோற்றத்தை விட அந்த அறை இன்னும் வசீகரமாக இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த நீண்ட மேசைக்கு முன்னால் ஒரு சுவர் நிறைந்த கண்ணாடி அலுமாரி. அதற்குள்ளே பாரம்பரியமானதும் இப்போது வழக்கொழிந்து போய் விட்டதுமான பொருட்கள் நெருக்கடி இல்லாமல் வசதியாக உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தன. அவருக்கருகே வலது புறமாக ஒரு கருங்காலி மேசை. நிறைந்த கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அது, சேர். பொன் இராமநாதன் பாவித்ததாம். என் கண் போன போக்கை பார்த்து விட்டு, அவர் உடனே அதைச் சொன்னார். 

பெற்றோலில் நெருப்பு பத்தி விடுவதைப் போல நாங்கள் பத்திக் கொண்டோம்.

வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அவரிடம் இருந்த வழக்கொழிந்து போன பாரம்பரிய பொருட்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை என்னைச் சிலிர்க்கச் செய்தது. தன்னுடய திட்டங்கள் ; தன்னுடய ஆசைகள்; தன்னுடய எதிர்கால இலட்சியங்கள்; - அவற்றுக்கு போதாமையோடு இருக்கும் ஆர்வமற்றோர் அல்லது அது குறித்த விழிப்புணர்வோ தேடலோ இல்லாதோர் - தன்னிடம் இருக்கிற சேகரிப்புகள் - அவற்றுக்கு செய்யப்பட வேண்டி இருக்கும் பெரும் பணி - இவைகளைப் பற்றி எல்லாம் பேசப்பேச என் ஆதர்ச கனவு அவர் வாய் மூலம் வெளிவருவதாகவே எனக்குத் தோன்றியது.

இத்தனையும் பேசிய பிறகு பின் புறம் திரும்பி தான் வெளியிட்ட ஒரு புத்தகத்தையும் தந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

அன்று இரவு விருந்தினர் போக்கு வரவுகள் எல்லாம் இருந்த போதும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆசை எப்போது தனிமை கிட்டும் என்று எண்ண வைத்தது. ஒருபடியாக எல்லோரும் போன பிறகு, நடு இரவில் இருந்து பார்க்க ஆரம்பித்து  ஓரளவு மேலால் வாசித்துப் முடித்து, காலை 7.30 மணிக்கு என் மற்றய தம்பி மகிரன் வேலைக்குப் புறப்படும் போது ( அவர் பல்கலைக் கழக நூலகத்தில் தான் வேலை செய்கிறார்.) என்னை ஒரு தடவை பல்கலைக்கழக நூலகத்தில் இறக்கி விடக் கேட்டேன். 

இந்தப் பெண்மணியை நேரே மீண்டும் கண்டு, இந்த இலட்சியக் கனவுகள் குறித்து பேச கொண்டிருந்த ஆசை அது! ஒரு காதலன் காதலியைக் காணக் கொண்டிருக்கும் ஆவலுக்கு சற்றும் குறைந்ததல்ல அந்த ஆசை!

’ஓமக்கா வாங்கோ’ என்றவன், காங்கேசந்துறை வீதியைத் தாண்டி இணுவில் பக்கமாக விரைந்தான். ’எங்கேயடா போகிறாய்’ என்றேன். ‘உங்களுக்கு இன்னொரு இடம் காட்டுகிறேன்; பிறகு உங்களை நூலகம் அழைத்துச் செல்கிறேன்’ என்றான்.

அவன் என்னை இறக்கிய இடம் ஸ்ரீ அக்காவின் மாடி வீடு. இறங்கிய நேரம் அவர் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது இதை எழுதினால் உங்களுக்கு நம்பமுடியுமோ என்னவோ! வீடு முழுக்க கால்வைக்க இடமில்லாமல் அவர் சமூகத்துக்குத் சேர்த்து வைத்த சொத்துக்கள்!! ஓரமாக ஒரு அறையும் குசினியும் மட்டும் தமக்கென!

நான் அப்படி ஒரு ஆச்சரியத்தை அதற்கு முன் - ஓரளவு வாழ்க்கையைப் புரிந்துகொண்டதன் பின்பான - என் வாழ்நாளில் அடைந்ததில்லை; பூரிப்பும் பூரண மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட அந்த தருணம் கொண்ட அந்நாள் 
( 16.10.2017) என் வாழ்நாளில் மறக்கவொண்ணாதது!


அவர் வீட்டில் பார்த்த பொருட்கள் மீதான அதீத ஆசையினாலும்; அவர் சொன்ன இவ்வாறான பொருட்களை இப்போதெல்லாம் உருக்கு பட்டறைகளில் உருக்குவதற்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; தென்பகுதி வியாபாரிகள் அறா விலைக்கு இவைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றும்; எங்கு இவைகளைத் தேடி வாங்கலாம் என்று விபரங்களும் சொல்ல, நானும் அடுத்து வந்த ஓரு நாளில் ஆர்வக் கோளாறினால் அந்த உருக்கு பட்டறைகளுக்குச் சென்று, பழய பொருட்கள் எல்லாம் கிண்டிக் கிளறி, சில பொருட்களை - என் அதீத அவா தெரிந்தே அறாவிலை சொல்லியும் கேளாமல் - அவைகளை கொள்வனவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை பொலிஷ் செய்யும் இடத்தில் கொடுத்து அதனை புதிது போலாக்கி ( இங்கு குடிவரவதிகாரிகள் விடவேண்டுமே) அந்த மகிழ்ச்சியை அவரோடு மிக்க குதூகலத்தோடும் ஒரு வித பெருமை கலந்த மகிழ்ச்சியோடும்  சொல்ல, அவர் சொன்ன ஒரு வசனம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. 

‘யசோ, பழைய பொருட்கள் பழசா இருக்கேக்க தான் அதுக்கு மதிப்பு; புதுசாக்கிறதில இல்ல:’

எத்தனை பெரிய உண்மை அது! அவர் அதனால் அதன் பழசு ஆகிய மெருகு கெடாமல் அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அவைகளைப் பாதுகாத்தார்! அதில் தெரிந்தது அவரின் மரபு குறித்ததான உண்மையான கரிசனம்!

அந்தப் பொருட்கள் மாத்திரமல்ல அந்த பெண்மணியும் சமூகத்தின் சொத்து தான்! அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்துக்கான எதிர்காலச் சொத்தினைச் சேர்ப்பதில் தன் முழு வாழ்நாளையும் தன் முழுப்பணத்தையும் செலவு செய்திருந்தார்.

சமூகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

என் தம்பிக்கு என் பைத்தியமும் அவவின் பைத்தியமும் பற்றி நன்கு தெரிந்திருந்த படியால் அவன், ’இனி அவவும் வேலைக்கு வர மாட்டா; நீங்களும் இனி நூலகத்துக்கு வர மாட்டீங்கள்; இரண்டு பேருமா இருந்து கதையுங்கோ; வரேக்க வந்து கூட்டிப் போகிறேன் எனக்கு நேரமாயிட்டுது வேலைக்கு’ என்று சொல்லி விட்டு, அவன் போய் விட்டான்.

இருந்து கதைத்தோம்; எங்கள் கனவுகள்; எதிர்பார்ப்புகள்; போதாமைகள்; சிக்கல்கள்; செய்யவேண்டியன; செய்யக் கூடியன ...எல்லாம் பேசினோம்; நிறைய திட்டங்கள் தீட்டினோம்.

இருவருக்குமே நிறையக் கனவுகளும் அவற்றை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் இருந்தன.

இன்று அவர் மாரடைப்பால் காலமானார்!

விடைபெற்றுச் சென்ற போது அவருக்கு வயது 58. போகிற வயதா இது?

தன் சமூகத்தை; அதன் எதிர்காலத்தை  கனவு கண்ட அந்த முகத்தைக் 
கடசி முறையாகவேனும் காணவேணும்!

அது என்னுடய கனவுக்குமான இறுதி ஊர்வலம் ஸ்ரீ அக்கா!

Friday, January 19, 2018

பூ அன்ரி......



24.12.17. மதியம் கடந்த வேளை நமக்கு.....
குடியிருப்புகள் செறிந்த வீதி ஒன்றால் வந்து கொண்டிருந்த வேளை....
யாழ்ப்பாணத்தில் இருந்து செந்தி whatsapp இல்.....
ஓரமாய் வண்டியை நிறுத்தி விசாரிக்கிறேன்...
‘பூ அன்ரி மோசம் போட்டாவாம்’
’பூ அன்ரி மோட்சம் போட்டாவாம்’ என்று கேட்கிறது எனக்கு.......

பூ அன்ரி.......
தொழில் நுட்பம் எதுவும் தொட்டிராத வாழ்வொன்று இருந்தது அப்போது எங்களிடம். அது நாங்களும் அன்ரியின் குடும்பமும் அனுபவித்து வாழ்ந்த வாழ்வு. இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்வு. பாசாங்கில்லாத பாசங்கள் கொட்டிக் கிடந்த வாழ்வு....


வன்னிப் பெருநிலப்பரப்பில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி வரும் பிரதான வீதியில் 10 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம் எங்களது.

சேவல் கூவுமுன் மயில் அகவி விடியும் காலைகள்...

 நெல்மணிகள் விளையும் 5 ஏக்கர் நிலம். முன் பக்கம் யாழ் வீதியும் பின் பக்கம் ரயில் பாதையும் எல்லையாகக் கொண்ட பசுந்தரை. பெரிய கிணறு. மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கொய்யா, லாவுல் என பழமரங்கள். அவற்றைப் பறித்துண்ன வரும் குரங்குகள். அவற்றைக் கலைப்பதற்காக கல்விட்டெறிவதாகப் பாசாங்கு காட்டினால் தாமும் அவ்வாறு செய்து காட்டி இடம் விட்டு நகராதிருக்கும் புத்திசாலிக் குரங்குகள். அவற்றின் நடுவே கம்பீரமாய் பூமரங்கள் சூழ பிரதான வீடு. வீட்டுக்கு முன்னாலே சாணத்தால் மெழுகப்பட்ட நிலம். தென்னோலையால் வேயப்பட்ட கூரை, அதற்குள்ளே கூடு கட்டிக் குடியிருக்கும் சிட்டுக் குருவிகள். நெல்மூட்டைகளுக்குப் பின்னேயும்  வெளியில் உள்ள வைக்கோல் போருக்குள்ளேயும் ஒளித்துப் பிடித்து விளையாடும் நாங்கள். ஆடு,மாடு, கோழி,நாய், பூனை என இவை வேறு.

மழையால் நிறையும் குளத்தால் செழிக்கும் பூமி. பிள்ளையார் கோயில் மணி கேட்கும் மாலைகள். இரவுகளில் பின்புறக்காடுகளில் இருந்து வரும் பன்றி, மான், மரைகளோடு யானைகளும்...ஆனால் பகல் பொழுதுக் காடுகளை நமக்கவை விட்டுத் தரும். அங்கு பாலப்பழம் வீரப்பழம் என கொப்பு வெட்டி பறித்துண்ணும் நாங்கள்....

அவை மண்ணெண்ணை விளக்கில் நாம் படித்த வாழ்க்கைக் கோலங்கள்...
பஸ்ஸிற்குக் காத்திருந்து நடந்தே வீடு திரும்பிய சீருடைக் காலங்கள்....
விளாங்காயும் மாங்காயும்   அடித்தும் பறித்தும் தின்ற பருவங்கள்.....

எளிமையான இந்தச் சிறுவயது வாழ்வில், வாத்சல்யத்தால், பூரித்த புன்னகையால், வாரி வழங்கும் பரிசுகளால், அழகுறச் செய்து கொண்டுவரும் என் பிறந்த நாளுக்கான கேக்குகளால், கட்டி அணைத்துத் தரும் முத்தங்களால் என் சிறுவயது ஞாபகங்களை இனிய நினைவுகளாக நிறைத்தவர் பூ அன்ரி...

அன்ரி இருக்கும் இடமே எங்களுக்குப் பட்டிணம். போவதொன்றே குதூகலம்.
வவுனியாவில் இருக்கும் அவர் வீட்டில் தங்குவதே கொண்டாட்டம்.  அவர்களின் ’ஷங்கர்’ லொறி எங்கள் விளையாட்டுத் திடல்.

மாதம் ஒருதடவை வார இறுதியில் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் போடும் கறுப்பு வெள்ளைத் தமிழ் படம் பார்ப்பதற்குப் போவதற்கான விண்ணப்பம் மாத ஆரம்பத்திலேயே வீட்டில் ஆரம்பித்து விடும். அங்கு செல்வதற்காகவே போடப்படும் நிபந்தனைகளை எல்லாம் விறு விறு என்று செய்வதில் நமக்குள்ளே போட்டிகள் தொடங்கி விடும்.

படிப்புகள் மும்மரமாய் நடக்கும்; வீட்டு வேலைகள் சிணுங்கல்கள் இன்றி முடியும். ஒரு முறைக்கு ஒருவருக்கு மட்டுமே போக அனுமதி இருக்கும் என்பதால் நாம் எல்லோரும் போட்டி போட்டு நல்ல பிள்ளைகளாவோம்.

அங்கு செல்ல விரும்புவது படம் பார்க்க மாத்திரமல்ல; அவரன்பில் மூழ்குவதற்கும் தான். ஒரு பிள்ளை மீதான வாத்சல்யத்தை, சந்தோஷத்தை, விருந்தோம்பலை, பேரன்பாய் பொழிந்து மகிழும் அந்த அன்பு மிகப் பிரத்தியேகமானதும் தனித்துவமானதும் கூட...

பூ அன்ரி....

நீங்கள் ஓர் அபூர்வ பிறவி....ஆசீர்வாதங்களோடு பிறந்த ஆச்சரியம் நீங்கள்...கடவுளின் செல்லப்பிள்ளையாய் மலர்ந்தீர்கள். குணம் என்றொரு நறுமணம் பரப்பினீர்கள்.

என் சிறு வயது ஞாபகங்களை உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத பேரன்பால் நிறைத்தீர்கள்.....

இன்று நீங்கள் இல்லை; நம்மோடு....

இது எனக்கு ஒரு wake up call ம் கூட...

மத்திய வயதை எட்டி விட்ட இந் நாட்களில் நீண்ட வருடங்களின் பின் நடந்த முதல் இழப்பு இது. பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடும்  கற்றுக் கொண்ட பாடங்களினூடும் பொதுவான எங்கள் மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்......

 மத்திய வயதைத் தொட்டு அதாவது  மலையின் உச்சியைத் தொட்டு விட்டு கீழிறங்கிக் கொண்டு வருகிற பருவம். ஒவ்வொரு அடியையும் அர்த்தபுஷ்டியோடும் அனுபவித்த படியும் அவதானத்தோடும் வைத்து புல்லுக்கும் பழுது எதுவும் நேர்ந்து விடாத வண்ணம் கவனமாக அடி எடுத்து வைத்து வர வேண்டும் என்று தெரிகிறது.

ஆனால், எதை நோக்கி நகர வேண்டும்; எந்தப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே தெரியவில்லை.....

’கடவுளின் சவுக்கடியில் சத்தங்கள் கேட்பதில்லை’ என்கிறார்கள்.

இறப்புகளும் இழப்புகளும் எதையோ நமக்குச் சொல்ல வருகிறது. அது எது என்று மொழிபெயர்க்க இயலவில்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ‘எதையோ’ கற்றுக் கொள்ள வருகிறோம். ஒவ்வொருவருடய ‘விடைபெறுதலும்’ வாழ்க்கை நிரந்தரமில்லை என்ற ஓர் உண்மையை அறைந்து நமக்குச் சொல்லி விட்டுச் செல்கிறது.

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை
நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்

இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருகும் தீங்கினையெண்ணாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மததென்று தாமிருக்க தான்

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்
காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தேதான்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

 பூ அன்ரி........
7.1.18

Friday, December 29, 2017

ஸ்ரீ காந்த லக்ஷ்மி

 ஸ்ரீ காந்த லக்ஷ்மி......

யாழ்பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகர்!
நூலகம் குறித்த; நூலக இயல் குறித்த ஈழத்துத் தமிழ் புத்தகங்கள் பலவற்றின் தாய்!
noolaham.org இன் வழிகாட்டுனர் சபையின் ஆரம்பகாலத்தில் இருந்து இற்றை வரையான உறுப்பினர்!

www.jaffnaheritage.blogspot.com
வாழும் மரபு

www.jaffnaheritage.wordpress.com (விம்பநூலகம்)
ஈழத்தமிழர் வாழ்வியல்

நூலக விழிப்புணர்வு நிறுவனம் மற்றும் முப்பரிமாண நூலகங்களின் சொந்தக்காறி!

எல்லாவற்றுக்கும் மேலாகத்  தன் வாழ்நாளில் சம்பாதித்த தன் அனைத்து உழைப்பினையும் முதலாகப் போட்டு தன் இல்லத்திலேயே நான்கு மாடியில் கொள்ளத்தக்க தமிழர் தம் பாரம்பரிய மரபு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் அரிய தமிழ் சமூக பண்பாட்டுக் காவலாளி!

இணுவிலில் இருக்கும் அந்த இல்லத்துக்கு ‘அறிதூண்டல் மையம்’ என்று பெயர்.

மறைந்து போன பாரம்பரியப் பொருள் பண்பாட்டின் காவலாளி........

அறிவு மாணவர்களைத் தேடிச் சென்றடைய வேண்டும்;
அது கண்டு, தொட்டு உணர்ந்து அறிகையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்;
அறிவுக் கருவூலமான நூலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலம் இது என்பதை உலகின் பல நாடுகளுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் சென்று கற்று; உணர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த பல்வேறு தடைகள் இயலாமைகள் வளப்பற்றாக்குறைகளுக்குள்ளும் தொடர்ந்து போராடி வரும் பண்பாட்டுப் போராளி!

“வாழும் மரபு” என்ற சொல் குறித்த அர்த்தத்தின் சொந்தக்காறி.


ஸ்ரீ காந்த லக்ஷ்மி.......

இவரை நான் சந்தித்ததே ஒரு தற்செயல் தான். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது  16.10.2017 அன்று யாழ்பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். அதன் ஓரங்கமாக நூலகத்துக்குச் செல்ல விரும்பி அங்கு சென்ற போது இப் பிரதம நூலகரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அவரது அறை நவீன வசதிகள் கொண்ட பகுதியாக இருக்கும் என்ற என் எண்ணத்துக்கு மாறாக அது ஒரு தமிழ் பண்பாட்டுப் பேணுகையின் ’வாழும் மரபாக’ இருந்தது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!

அவரை மறந்து அவர் சேகரித்து வைத்திருக்கிற அரும் பொருட்களை பூரிப்போடும் ஒரு வித வியப்போடும் நான் காண விளைந்ததைக் கண்ட அவர் ‘கருத்தூண்’ என்றொரு புத்தகத்தை பின் புறமாகத் திரும்பி தன் புத்தக அடுக்கில் இருந்து எடுத்து மனமுவந்து பரிசளித்தார்.

அந்த நாளின் இரவு அவரது புத்தகத்தை ஆசையோடு பார்த்து படித்து அறிந்து ஒரு விதமான கிறக்கத்தில் உறங்கி மறு நாள் காலை 7.30 மணிக்கு இந்தப் பெண்மணியைக் காண சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டில் போயிறங்கி நான் நின்ற போது ஒரு புன்னகையோடு, வேலை நேரத்தைத் தயங்காமல் பின் போட்டு, ஒரு வித தாய்மையின் பூரிப்போடு தன் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பதற்காக எனக்குத் திறந்து விட்டு, அது பற்றி உரையாடி, விளக்கம் கூறி, ஆதங்கம் பகிர்ந்து, நாம் ஆத்மார்த்தமானோம்.....

நான் பார்ப்பதற்காகச் சுதந்திரத்தை முழு நம்பிக்கையோடு எனக்குப் பரிசளித்து விட்டு, சமைத்து தந்த விருந்தோம்பலில், அவரின் ‘வாழும் மரபினை’ அறிந்து கொண்டேன்.





மேலே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படங்கள் அவரது காரியாலய அறையில் காட்சிப்பொருட்களாக உள்ளவற்றுள் சில...

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017.
இடம்: யாழ் பல்கலைக்கழக நூலகம்; நூலகர் அறை.









































அக்கோய்... 
நீங்களும் எங்கள் பண்பாட்டுப் பொக்கிஷம் தான்!

மேலே காணப்படும் ஒளிப்படங்களை எடுக்க அனுமதி தந்த நூலகர். திருமதி.ஸ்ரீகாந்த லக்ஷ்மி. அருளானந்தன் அவர்களுக்கு என் நன்றி.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 17.10.1017.
இடம்: இணுவில்.