Wednesday, December 29, 2010

பிசிராந்தையார் போல வாழ்க




நல்லென கற்று
நலம் பெறுவீரென
நம்மரசளித்த
நன்கொடை இந்நூல்.
நன்கிதைப் பேணி
நலமே கற்று
நற்குணம் பெற்ற
நற்குடியாவீர்.

சிறு வயதில் இலவசமாகக் கிடைத்த அரச பாடசாலை நூல்களில் முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் வாசகங்கள் இவை.முதன் முதல் இலங்கையில் பிரேமதாசா ஆட்சிக்கு வந்த போது இலவச பாடநூல், இலவச சீருடைத் துணி, இலவச பிஸ்கற் என்பன பாடசாலையால் வழங்கப் பட்டதுடன் பல்கலைக் கழகக் கல்விக்கும் நல்ல புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு மஹாபொல என்ர்ற அரச மானியமும் வழங்கப் பட்டது மங்கலாக நினைவிருக்கிறது.

சுகம் வரும்; ஆள் தப்பாது என்ற கனக்காக அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அது எவ்வளவு முக்கியம் என்பதும் புரிந்து கொள்ளப் படாது போய் விட்டதால் நாட்டில் நடந்த அனர்த்தங்களை நாமறிவோம்.மழையும் புயலும் அடித்தோய்ந்த தேசம் அது இப்போது.சேதப் பட்டுக் கிடக்கிறது தேசம்.

அதே நேரம் அந்த நற்குணம் பெற்ற நற்குடி என்பது பாடசாலைக் கல்வியால் கிட்டுகின்றதா? அல்லது பாரம்பரியமாகக் கற்பிக்கப் படாமலே நடைமுறை வாழ்க்கையினூடு கடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் குடும்பச் சமூகப் பண்பாட்டினால் வந்து சேர்கின்றதா அல்லது நாமாக ‘நம்மை’ உருவாக்கிக் கொள்கின்ற போது கிட்டுகின்றதா என்பதும் சுவாரிசமான விவாதப் பொருளாக இருக்கும்.

கற்றறிவு பெற வசதியற்ற ஏழைகள் நல்ல நற்குடி மக்களாக இருப்பதையும் நல்ல கல்வியறிவும் பண அந்தஸ்தும் கொண்டுள்ள மக்கள் சிலர் நற்குண இயல்புகள் என்பது பற்றி மேம்போக்கான தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதையும் நடைமுறை வாழ்வில் நாம் காண்கிறோம்.

நேற்றய தினம் பார்த்த இலங்கையின் தினக்குரல் என்ற தமிழ் பத்திரிகை ஒன்றில் (26 டிசம்பர்2010) திருமலை நவம் என்பார் “பனையோலையும் பாடும் மீனும் கட்டி வளர்த்த கலாசாரங்கள் வாழுமா” என்ற தலைப்பில் சமூகப் பொறுப்புணர்வுள்ள கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.அதில் மேலைத் தேய மாயங்கள்,மரபுகளின் திரிபு,இளவயதுத் திருமணங்கள்,விவாகரத்து மலிவுகள்,இளைஞர்களின் நடத்தை சார் மாற்றம்,சிறுவர்கள் துஷ்பிரயோகம்,மாணவ வக்கிரங்கள்,ரியூஷன் ஆதிக்கம்,மூத்தோரை மதியாமை,சடங்குகளின் தேய்வுகள்,மனம் முடிக்காக் கன்னியரின் மன உளைச்சல்கள்,கணிகையர் வியாபரம் என பல விடயங்களை மன வருத்தத்தோடு பட்டியலிட்டிருந்தார்.

இவற்றுக்கு என்ன காரணம்? அல்லது யார் காரனம்? பிச்சைக் காரர்களே இல்லாதிருந்த ஊர் நம்முடய ஊர்.வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்த மக்கள் எம் மக்கள்.தமிழையும் கோயிலையும் கண்ணெனக் காத்து நின்றவர்கள்.கல்வியிலும் தாம் சார்ந்த பண்பாட்டிலும் தனித்துவமாய் திகழ்ந்தவர்கள் அவர்கள்.

இன்று எத்தனை அநாதைக் குழந்தைகள் நம் ஊரில்!நிராதரவாய்,நிக்கதிக்குள்ளாகியிருக்கும் ஏதுமறியாச் செல்வங்கள் எத்தனை பேர்!போர் உக்கிரம் பெற்றிருந்த பொழுதில் B.B.C யே கதியாய் கிடந்த போது ஓர் இளந்தாய் இப்படிக் கதறினாள்.’என் கணவனைத் தொலைத்து விட்டேன்; என் 13 வயது மகள் இறந்து போனாள்; என் சிறுமகன் தன் கால்களில் ஒன்றையும் கைகளில் ஒன்றையும் இழந்து போனான்.இறந்த என் மகனின் உடலையும் காயமுற்ற என் மகனையும் இந்தத் திறந்த வெளி மருந்துகளற்ற வைத்திய சாலையில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிவரக் காயமுற்றும் இறந்தும் கிடக்கும் உடல்கள்.ஒன்றரை வயது நிரம்பிய பெண்குழந்தை ஒன்று அழுதவாறு என்னை நோக்கி வந்தது. யார் பெற்ற பிள்ளையோ! பசியோ? பெற்றோர் இறந்தனரோ? அல்லது தொலைத்து விட்டதோ? யாதுமறியேன். நான் எப்படி அக்குழந்தையைக் காப்பேன்”என்று கதறி அழுத குரல் இன்னும் காதுகளில் கேட்ட வண்னமாக இருக்கிறது.

அரசும் சமூகமும் இதற்கு எவ்வளவு தூரம் பொறுப்பேற்க முடியும் என்பது பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் யோசித்துப் பார்த்த போது ஒரு வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தயார் படுத்தி வைத்திருந்த சங்க காலப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் என்னென்னெ தேவை என்பது பற்றி அந்தப் புற நாநூற்றுப் பாடல் அழகாகச் சொல்கிறது.(பாடல்191)

பிசிர் என்றொரு ஊர். அங்கே ஆந்தையார் என்றொரு புலவர்.அதனால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர்.இது என்ன விசித்திரமான பெயராக இருக்கின்றதே என்று நீங்கள் சற்றுச் சிந்திக்கலாம். இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வு முறையைக் கொண்டிருந்த வாழ்க்கை வாழும் மக்கள் அவர்கள்.காலம் கிறிஸ்து பிறப்பை அண்டிய நூற்றாண்டு. அதனால் கண்ணுக்குத் தென்படும் இயற்கை அம்சங்களை வைத்துப் பெயர் சூட்டும் மரபு புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.அவருக்கு ஆந்தையின் ஏதோ ஒரு அம்சம் பொருந்திப் போயிருக்க வேண்டும். அதனால் அவர் பெயர் பிசிராந்தையார் ஆகி விட்டது.

அவர் கம்பீரமாக நடந்து வருகிறார்.அவர் அக அழகு முகத்தில் பிரகாசிக்க கம்பீரமாக உற்சாகமாக நடந்து வருகிறார்.உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் ஒரு பிரகாசம். புன்னகையில் ஒரு பூரணம்.பரி பூரண திருப்தி ஒன்று அவர் முகத்தில் நர்த்தனமாடுகின்றது.அதனால் நடை குதியாட்டம் போடுகிறது.தலையில் கூட மூப்பின் சாயல் எதுவும் இல்லை.

பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு ஆச்சரியம்.அவரிடம் அவரது இளைமையின் இரகசியத்தைக் கேட்கிறார்கள்.அவர் பாடலில் பதில் சொல்கிறார் இப்படி.

“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்
மாண்ட என் மனைவியடு; மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான்; காக்கும் அதன் தலை;
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னாலும் என் தலையில் நரை எதுவும் தோன்றவில்லையே காரணம் யாது என்று கேட்பீர்கள் ஆயின் (யாண்டு பலவாக நரையிலவாகுதல்; யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்; யாண்டு - ஆண்டு; யாங்கு - எப்படி)அதற்குக் காரணம் மாண்புடைய எனது மனைவி!சொல் கேட்கும் என்னுடய பிள்ளை!விசுவாசமுளள என் வேலையாட்கள்!வேந்தனோ பிழையான எதனையும் செய்யாதவன்.காக்கும் அவனுடைய தலை(அவனுடைய தலைமை என்னைக் காக்கிறது).என்னைச் சுற்றிச் சூழ இருக்கின்ற குடிமக்களோ ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்.அதாவது நன்கு கற்று சரியான கொள்கையைக் கண்டறிந்து, அடங்கி;அதன் படி வாழும் சான்றோர்கள் என் சுற்றம் சூழ இருக்கிறார்கள்.இது நான் வாழும் ஊர்.

இதுவே அதற்குக் காரணம் என்கிறார் பிசிராந்தையார்.

புது வருடம் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.இலத்திரனியல் கண்டுபிடிப்புகளால் உலகோடும் உலகத் தமிழர்களோடும் மிக இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ள ஊரில் இருக்கிறேன்.என் தேசத்து மக்களை அவர் தம் இழப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களுக்கான மன நிறைவை; மகிழ்ச்சியை யார் தருதல் கூடும்?

தாயகத்து அநாதைக் குழந்தைகளே!இளம் விதவைகளே!நிக்கதியான குடும்பங்களே!குடிசை வாழ் உறவுகளே!பிசிராந்தையாருக்குக் கிட்டியது போன்றதொரு வாழ்வு உங்கள் எல்லோருக்கும் அமைவதாக!.

மற்றும் என் சக பாடிகளே உங்கள் எல்லோருக்கும் கூட என் புது வருட வாழ்த்துக்கள் உரியதாகுக.

இப்படியான ஒரு அழகிய வாழ்வு எல்லோருக்கும் கிட்டட்டும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(படம் எண்னை வர்ணம்;ஓவியர்;இளையராஜா; நன்றி; கூகுள் இமேஜ்)

Tuesday, December 7, 2010

ஒளிரும் ஓவியம்

வருட இறுதி!

விடுமுறை ஆரம்பம்!!

புது வருடத்தில் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்.

எல்லோருக்கும் என் சுபீட்சமான நத்தார், புது வருட வாழ்த்துக்கள்!

வருகின்ற புது வருடம் எல்லோருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உண்மையையும் நேர்மையையும் அதனால் விளைகின்ற நின்மதியையும் எடுத்து வரட்டும்!

அது வரை இந்த அழகிய எண்ணை வர்ண ஓவியம் இப்பக்கத்தை அலங்கரிகிறது.

இதனை ஓவியக் கலைஞர் இளைய ராஜா என்பவர் தை மாதம் ஒன்பதாம் திகதி 2010 ல் தீட்டியிருக்கிறார்!

எத்தனை அழகு! எத்தனை அழகு!!

பெண்ணின் அழகு,வெளிச்சம் படும் அழகு,பாவாடைக் கரை,வலையல்கள்,உட்கார்ந்திருக்கும் லாவகம், தூரிகைக்குள்ளால் கொண்டு வந்திருக்கும் பெண்ணின் வயது, அமானுஷமாக ஆச்சர்யமாக தூரிகை துலங்குகிறது! ஓவியமாய் மிளிர்கிறது! ஆஹா! என்ன அருமை!!

இது ரவி வர்மன் எழுதாத கலையோ?

“ஒளிரும் ஓவியம்”


Wednesday, December 1, 2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)



சில வாரங்களுக்கு முன் நான் Huckleberry Friend என்ற ஆங்கிலப் பதம் பற்றிப் பிரஸ்தாபித்து அதற்கு இணையான தமிழ் பதம் பற்றி நான் மதிக்கின்ற பதிவர்களில் ஒருவரான பழைமை பேசியிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்திருக்கின்ற அழகான தமிழ் விளக்கம் இவ்வாரம் என் வலைப்பூவை அலங்கரிக்கிறது.

மிக்க நன்றி சகோதரா!


ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!

Wednesday, November 24, 2010

செம்மொழியான தமிழ் - தொகுப்பு



தமிழ் செம்மொழிகளில் ஒன்று.

இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

•இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
◦கிரேக்க மொழி
◦சமஸ்கிருதம்
◦இலத்தீன்
◦பாரசீக மொழி
•ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
◦அரபு மொழி
◦எபிரேயம்
•திராவிட மொழிகள்:
◦தமிழ்
•சினோ-திபெத்திய மொழிகள்:
◦சீன மொழி

2. 1. கிரேக்கம்
கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் இன்னும் அந்நாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குவதும் குறிப்பிடத் தக்கது.

2. 2. இலத்தீன்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழம் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 3. அரபு மொழி
அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. அரேபியப் பழமொழிகள் , கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. முகலாயர்களின் பண்டையக் கட்டிடக் கலையின் சிறப்புத் தன்மைகள் உலகமே வியக்கக் கூடியதாய் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

2. 4. சீனம்
சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

2. 5. ஹீப்ரூ
ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. ஜீடா-ஹா-நசி என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 6. பாரசீகம்
ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. 7. சமஸ்கிருதம்
இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் , காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தை செம்மொழியாகக் கருதச் செய்தது.

2. 8. தமிழ்
இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

தகுதிகள்
செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.
தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.
இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

தமிழ் அளவைகள்.

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்துநூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அந்நியம்
1000000000000000000 = அற்ட்டம்
10000000000000000000 = பறற்ட்டம்
100000000000000000000 = பூறியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இது போல் அளவைகளுக்கும் வாய்ப்பாடுகள், பெயர் வழக்குகள் இருந்திருக்கின்றன.உதாரணமாக,

நீட்டல் அளவை

காதம் = 10 மைல்
ஓசனை = 4 காதம்
கல் = 1 மைல்
முழம் = முழங்கை முதல் நடுவிரல் நுனிவரை
சாண் = கட்டைவிரல் நுனி முதல் சிறுவிரல் நுனி வரை
ஒட்டைச் சாண் = கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
சாட் கோல் = சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்= கட்டை விரல் நீளம்
அடி= 12 அங்குட்டம்
காசாங்கிரம்= மயிர் நுனி அளவு
ஆள்= ஒரு மனிதனின் உயரம்

நிறுத்தல் அளவை

ஆழாக்கு = 1/8 படி
செவிடு = 1/5 ஆழாக்கு
சேர் = 5 ஆழாக்கு
வீசை = 1400 கிறாம்
இடா = முகத்தல் அளவை( எதுவென்று தெரியவில்லை)
உழக்கு = 1/4 படி
சின்னப் படி = 1/2 படி
பக்கா = 2 படி
லட்டி = 1 படி
வல்லம் = 2 அல்லது 4 படி
எத்துணை = எள் அளவு
கஃகு = 1/4 பலம்
பலம் = தோராயமாக (அண்னளவாக) 35 கிறாம்(1 மஞ்சாடி?)
இறாத்தல் = 13 பலம்

கோட்டை = 21 மரக்கால்
தூணி = 8 மரக்கால்
கலரை = 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்)= 8 படி

பரப்பளவு

குண்டு = 1089 சதுர அடி
குழி = 144 சதுர அடி
மா = 100 குழி
வேலி = 20 மா(6.67 ஏக்கர்)


கற்பம் = பிரம்மாவின் ஒரு நாள் 4,32,00,00,000 வருடம்
பதும கற்பம் = பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி = அரை நாழி
கன்னல் = (நாழிகை)24 நிமிடங்கள்
கணம் = நொடிப் பொழுது / கண் இமைக்கும் பொழுது.
படலம் = செயல் நடக்கும் நேரம்

கால அளவு


யாமம் = 3 மணி நேரம் அல்லது 7 1/2 நாழிகை
மண்டலம் = 40 / 41 / 45 நாட்கள்
மாமாங்கம் = 12 வருடங்கள்.


இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்


அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை


பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்


பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி


பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

தமிழ் கால அளவு, நாள், திதி, மாதம், ஆண்டுகள் குறித்த ஒரு பார்வை:

கால அளவு:

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்



நாட்கள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

திதிகள்:

பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி,திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி, அமாவாசை.

மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.

பக்ஷங்கள்:

கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்.

பருவங்கள் (ருதுக்கள்):

இளவேனில் (வசந்த ருது), துவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது),முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது).

ஆயனம்:

6 மாதங்கள் அடங்கியது ஒரு ஆயனம். மொத்தம் 2 ஆயனங்கள்

உத்தராயனம் -சூரிய ஒளிக் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு வடக்கே நேரடியாக வீழும் காலம்.

தக்ஷினாயனம் - நில நடுக்கோட்டிற்கு தெற்கே வீழும் காலம்.

ஆண்டுகள்:

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.பிரமோதூத
5.பிரஜோத்பதி
6.ஆங்கீரச
7.ஸ்ரீக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈஸ்வர
12.வெகுதான்ய
13.பிரமாதி
14.விக்கிரம
15.விஷூ
16.சித்திரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்தீப
20.விய
21.சர்வசிஷ்து
22.சர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜெய
29.மன்மத
30.துன்கி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.பிளவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விஸ்வவசு
40.பராபவ
41.பிளவங்க
42.கீலக
43.செளமிய
44.சாதாரண
45.விரோதிக்ருது
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷ
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

குழந்தைகளின் பருவம்10;

ஆண் பிள்ளைப் பருவம்;

1. காப்பு (2ம் மாதம்)
2.செங்கீரை (5ம் மாதம்)
3.தால் (7ம் மாதம்)
4.சப்பாணி (9ம் மாதம்)
5முத்தம் (11ம் மாதம்)
6.வருகை (13ம் மாதம்)
7.அம்புலி (15ம் மாதம்)
8.சிற்றில் (18ம் மாதம்)
9.சிறுபறை (19ம் மாதம்)
10.சிறுதேர். (21ம் மாதம்)

அது போல பெண் பிள்ளைப் பருவம்

1.காப்பு
2. செங்கீரை
3.தால்
4.சப்பாணி
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
8.கழங்கு
9.நீராடல்
10.ஊசல்.

தமிழ் வரி வடிவம் இன்றுள்ள நிலையை அடைந்த வரலாறு;




தமிழில் கணக்குக்கு தனியான எழுத்து முறை இருந்திருக்கிறது.


தமிழ் இலக்கங்கள்:



( ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲ )



அதனை இப்போதும் மொறிசியஸ் நாடு தன் ரூபாய் நோட்டுக்களில் பயன் படுத்தி வருகின்றது.



கடித எந்திரம்:

காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள்பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.

இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள்.இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக்கருவி உதவியதாம்.

குத்து மதிப்பாகத் தமிழ் சொத்து விபரங்கள் இவை.


நன்றி; இணைய உலாவி.

Thursday, November 18, 2010

Wednesday, November 17, 2010

மழலை மொழி



சிறு வயதில் நாம் கற்பவை அப்படியே இன்றுவரை மனதில் பதிந்திருக்கும்.’இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதை மெய்ப்பிப்பது போல் அமைந்த நிகழ்வொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கு இடம் பெற்றது. அது வித்துவான் வேந்தனார் அவர்களுடைய மழலை மொழி என்ற புத்தக வெளியீட்டு விழா.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதற்கு சீரிய சிந்தனையும் நிதானமான ஞானமும் நல்ல உள்ளமும் வேண்டும்.குழந்தைகளின் உலகுக்கு இறங்கும் திறமை இருக்க வேண்டும்.அவை எல்லாம் விளங்கப் பெற்றவராகக் காலஞ் சென்ற வேந்தனார் விளங்கியிருந்தார் என்பதற்கு இன்று வரை நம் மனதில் பதிந்திருக்கும் அவருடைய பாடல்களும் அதன் உள்ளடக்கமும் அது கொண்டிருக்கும் எளிமையுமே சான்று.

மனதில் சிறுவயதுப் பாடல்களாக பதிந்திருந்த பாடல்களுக்கான காரண கர்த்தா வித்துவான் வேந்தனார் தான் என்பதையே அன்று தான் அறிந்தேன்.அத்தனை தூரம் தன்னை முதன்மைப் படுத்தாமல் பாடல்களை முதன்மைப் படுத்திய தகைமையாளர் அவர்.அதனை அவரது மகள் வெளியீட்டு விழாவிலும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பாட நூல் வெளியீட்டுத் திணைக்களம் அவரது பெயரை நூலில் குறிப்பிட மறந்தது ஏனென்று தெரியவில்லை என்று மிகுந்த விசனமுற்றிருந்தார் அவரது மகளார்.தவிரவும் அவருடய பாடல்களில் சில மாற்றங்களையும் அது செய்திருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பாடல்களை மிகச் சிறு வயதுகளில் அபிநயப் பாடல்களாகப் பாடி ஆடி களிக்கத் தந்த வித்துவானின் பாடல்கள் இப்போது மீண்டும் அச்சு வடிவில் பார்க்கக் கிடைத்தது பாக்கியமே.சிறுவயதுக்கு நம்மைக் கொண்டு சென்ற அப்பாடல்களை இன்று உங்களோடு பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

1.அம்மாவின் அன்பு

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீருமாட்டிப்
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக் கூடம்
அனுப்பி வைக்கும் அம்மா.
(’அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா’-என்பது மூலப் பிரதியில் உள்ள பகுதி)

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்டநேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளில் வைக்கும் அம்மா

பாப்பா மலர் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா



2.எங்கள் வீட்டுப் பூனை

சின்ன சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி பரனில் இருக்கும்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தால் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை



3.பறவைக் குஞ்சு

பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறக்கும் இறகு முளைத்திடாத
பறவைக் குஞ்சைப் பாரண்ணா

கூடு காற்றில் ஆடி இந்தக்
குஞ்சு விழுந்து விட்டதோ
தேடித் தாயும் தூக்க முன்னம்
செத்துப் போகும் துடிக்குதே

கட்டெறும்பும் ஊருதே
காகம் கொத்தப் பாக்குதே
வட்டம் போட்டுப் பருந்தும் இந்த
மரத்தை நோக்கி வருகுதே

மரத்தில் ஏறிக் கூட்டிலே
வைத்து விடுங்கள் குஞ்சையும்
இரக்கமாக இருக்குதையோ
இளைத்துக் கிடந்து துடிக்குதே.

Wednesday, November 10, 2010

விவேக சிந்தாமணி



எப்பொழுதேனும் மனதில் இலக்கிய வரட்சி ஏற்படும் போது அல்லது புத்தகங்கள் படிக்க முடியாது வேலைப் பழு என்னைச் சூழும் போது காரில் பயணிக்கும் அந்த ஒரு மணி நேரத்தை இன்னொரு விதமாக அதற்குப் பயன் படுத்திக் கொள்வேன்.அது ஒரு விதமான போதையைப் போல!மனதை ரம்மியமான ஓர் உலகுக்கு இட்டுச் செல்லும்.


சுமார் நான்கு வருடங்களின் முன்னால் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துத் தேன் மதுரத் தமிழ் ஓசையில் புதன் மாலைகளில் இடம் பெற்று வந்த ‘முத்து விதானம்’ என்ற இலக்கிய நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகள் என்னை சூழ்ந்திருக்கும் அத்தகைய வெறுமையில் இருந்து என்னை விடுவித்துப் புத்துணர்ச்சியத் தரும்.

ஒரு மணி நேரம் இடம் பெற்ற அந்த நிகழ்ச்சியினை திருமலை மூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனை கேட்ட்ட பின்னர் மனதில் ஒரு உணர்வு மட்டுமே மிஞ்சும். அது கண்னப்ப நாயனார் சிவபெருமானுக்கு இறைச்சியைப் படைக்கும் போது முதலில் தான் சுவத்துப் பார்த்து சுவையற்றவற்றை விலக்கி சுவையானவற்றைப் தேர்ந்தெடுத்துப் படைப்பாராம்.அது போல மிகச்சுவையான இலக்கியங்களைத் தரம் பார்த்துப் படைப்பதில் கைதேர்ந்தவராக அவர் விளங்கியிருந்தார் என்பது அதன் சுவையை மீறி மனதில் நிலைக்கும்.

அச் சுவையின் நிமித்தம் அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரோடு தொடர்பு கொண்டு மிக அருமையாக இருக்கிறதென்றும்; உங்கள் அனைத்து நிகழ்ச்சியையும் எனக்கு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா என்றும் கேட்டிருந்தேன்.முழுவதையும் கிரமமான முறையில் ஒலிப்பதிவு செய்து ஒழுங்கு முறைப்படி ஒரு கோப்பில் இட்டு இலவசமாக என் வீடு தேடி வந்து தந்து விட்டுப் போன அந்த பெருந் தன்மையை நன்றியோடு இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.

இவற்றை இப்போது எதற்குச் சொல்கிறேன் என்றால் அண்மையில் அந்த வரிசையில் வந்த முத்து விதானம் ஒன்றினை சுமார் 4 வருடங்களின் பின் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிது புதிதாய் அதில் சுவை சொட்டும்.அதில் விவேக சிந்தாமணி என்ற இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலை அதன் சுவை குன்றா வண்ணம் சுவைக்கத் தந்திருந்தார் அவர்.அவர் தந்த பாடல் இது தான்.

பாடல் 19;

“தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று தடங்கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்”

தேனினை உண்ட மயக்கத்தில் மயங்கிப் போய் கிடக்கிறதாம் வண்டு.அதனை சம்புவின் கனி - பழம் என்று எண்ணி தன் கரங்களால் எடுத்து பார்க்கிறாள் ஒருத்தி.(சம்பு என்பது தாமரை என்று நினைக்கிறேன்)அவளது முகத்தை மயக்கத்தில் இருந்து விழித்த வண்டு பார்க்கிறது.அதுவோ சந்ர வதனம்!ஐயையோ சந்திரன் வந்து விட்டது என்று மயக்கமுறுகிறது வண்டு.சந்திரன் வந்து விட்டால் என்ன செய்யும்? தாமரை கூம்பி விடும் இல்லையா?அதனால் அப்பெண்ணின் தாமரைக் கரத்தை தாமரை என நினைத்த வண்டு அது கூம்பி விடும் என்று அஞ்சி அவ் வண்டு பறந்து விட்டதாம்.இதென்ன புதுமை! பழம் பறக்கிற புதுமை என்று சந்ர வதனமும் தாமரைக் கரமும் கொண்ட அவள் கேட்கிறாள்.

இதனைச் சுவை பட சொல்லியிருந்தார் திருமலை மூர்த்தி அவர்கள். அதன் பின்னர் கிடைத்த ஓர் ஓய்வுப் பொழுதில் விவேக சிந்தாமணியத் தேடி வலையில் பயணம் போனேன்.அதிஷ்ட வசமாகக் கிட்டியது விவேக சிந்தாமணி.அழகழகான மணிகளைப் போல கோர்க்கப் பட்ட பாடல்களின் தொகுப்பு அது.முழுவதும் சேர்த்தால் 121 பாடல்கள் அதில் உள்ளன.பெண்ணையும் உலகியல் நடப்புகளையும் கலந்து கோர்க்கப் பட்டிருக்கிறது அச் சிந்தாமணி.ஆனால்,யார் பாடினார்? எப்போது பாடப்பட்டது என்பது போன்ற விபரங்களைப் பெற முடியவில்லை.

ஆனால் பாடல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொகுத்து இலகுவாகத் தரவிரக்கம் செய்து படிக்கத் தக்க வசதியோடும் தேவைப் பட்டால் அச்சு வடிவில் பெறும் வசதியோடும் மின் இதழாக தெளிவான அச்சில் வெளியிட்டிருக்கிறது.

மிக அழகானதும் பயனுள்ளதுமான அவர்கள் முயற்சி நின்று நிலை பெற வேண்டும்.அவர் தம் அமைதியான சமூகப் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவற்றில் இருந்து சில விவேக சிந்தாமணிகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு விடயங்கள் இதில் என்னை வியப்பில் ஆழ்த்தின.

1.பாடலும் அந்தக் கற்பனைத் திறனும் கருப் பொருளும்.
2.இத்தகைய பாடல்கள் ஏன் கவிஞர்கள்,இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப் படவில்லை?

அதில் இருக்கின்ற கற்பனை நயமும் ஊடு பொருளும் மிக அழகானவை.பெண்ணின் எழிலை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல் 10,

“வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணினாள் கிளி மொழி வாயில் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே”

பெண்னின் நடையழகை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல்37,

பொன்னின் மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என வாமென உரைத்தார்”

இன்னொரு பாடல், ’அன்னம் பழித்த நடை,அம்பு பழித்த விழி அமுதம் பழித்த மொழி...’என்று தொடரும்.அவை மட்டுமன்றி வேறு பல பாடல்களும் இந்த மணிகளில் வியந்து இன்புறத் தக்கன.

ஒன்பதாவது பாடல் இப்படிக் கூறுகிறது.

‘வானரம் மழைதனில் நனைய தூக்கணம்
தானொரு நெறி சொல தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க் குரைத்திடில் இடர் அது ஆகுமே’

என்கிறது. அது போலவே இன்னொரு பாடல் (130)

“நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கித் தள்ளி
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடதாமோ?”

என்று கேட்டபடி தொடர்கிறது.

இன்னொரு பாடல்,(61)

“தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்குப் பால் வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்”

என்று ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பதை அழகாகக் கூறுகிறது.அதே பொருளைக் கொண்டதாக இன்னொரு பாடலும் அங்கு இருக்கிறது.அது 88வது பாடல்.

“கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறார்.

பாடல் எட்டோ இன்னொரு விதமாய் அதனை நவில்கிறது.

”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;

மண்டூகம் - தவளை. தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை.ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும்.அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் அறிவுடைய கற்றவர்களோ எனில் (தூர இருந்த போதும்) சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.

பாடல் 56

”மங்குல் அம்பதினாயிரம் யோசினை மயில் கண்டு நடமாடும்
தங்கும் ஆதவ நூறாயிரம் யோசினை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசினையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டகலாரே!”

பொருள்;

மங்குல் - மழை முகில். மழை முகிலைக் கண்டு 50,000 யோசனை தூரத்தில் உள்ள மயில் மகிழ்ந்து நடனமாடும்;சூரியனோ 100,000 யோசனை தூரத்தில் உள்ளது. ஆனாலும் அதனைக் கண்டு தாமரை முகம் மலரும்.நிலாவோ 200,000 யோசனை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதனைக் கண்டு செவ் அல்லி சிறப்பாக முகம் மலருகிறது.அது போல அன்பாக இருப்பவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதயத்தில் இருந்து நீங்க மாட்டார்கள்.

எவ்வளவு அழகான உவமான உவமேயங்கள் இல்லையா? இது வரை இப்படி ஒரு கற்பனை ஏன் வேறொருவருக்கும் தோன்றவில்லை? அல்லது நான் தான் இவற்றை எல்லாம் காணாது தவற விட்டு விட்டேனா?

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஆஈன மழை பொழிய இல்லம் வீழ என்ற பாடலும் இவருடையது தான்.அடுத்தடுத்து வரும் இடர்கள் பற்றி அப்பாடல் பேசும்.’பட்ட காலே படும்; கெட்ட குடியே கெடும்’என்பதை மெய்ப்பிப்பது போல அமைந்திருக்கும் பாடல் அது. வறுமை வந்துற்ற போது ஏற்படும் நிலைமை பற்றிப் பேசும் இப் பாடலைப் பாருங்கள்.

‘தாங்கொணா வறுமை வந்தால் சபை தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லர்க்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே!’

புலவர்களில் அனேகமானோர்க்கு அன்பும் பணமும் எப்போதும் பற்றாக்குறையாகவே இருந்திருக்கிறது போலும்.இது பற்றிப் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன.அதிலும் நாயக்கர் காலப் பாடல்கள் சிறப்பாக அவற்றை வெளிப்படுத்தியிருக்கும். இரட்டையர்,காளமேகப் புலவர், ஒளவையார் வரை இது அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.இப்புலவரும் அதற்கு விதி விலக்கில்லை. இவர் இப்படிப் பாடுகிறார்.

‘ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே’


அழகான மணிகளை நாம் இன்புறத் தந்து பெயரைப் பதியாது போன அந்தப் புலவனுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.

இன்னும் இப்படி அழகழகான பாடல்கள் இலக்கியப் பரப்பெங்கும் சிந்துண்டு கிடக்கக் கூடும்.அவற்றைக் கோர்த்தெடுத்து மாலைகளாக்கித் தர தமிழ் இலக்கிய வாதிகள் முன் வர வேண்டும்.

Thursday, November 4, 2010

சீதா கல்யாண வைபோகமே...

கடந்த வாரம் திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் திழைக்க முடிந்தது. அதன் பக்தி ரசமும் தமிழ் சுவையும் படிக்கப் படிக்க இன்பம் பயப்பன.ஆழ்ந்து ஆழ்ந்து சுவைக்கத் தக்கனவாக உள்ளன அதன் தரம்.அதனை இன்னும் இன்னும் சுவைக்க வேண்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தேடிப் போகத் தொடங்கினேன். அது ஒரு கலா சாகரத்தில் கொண்டு சென்று என்னை விட்டது.

அதிலிருந்து ஒரு சுவையை இன்று உங்களோடு பகிர ஆசை.

நேரமிருந்தால் இந்த சீதா கல்யாண வைபோகத்தை பல்வேறு சுவையில் ரசித்துப் பாருங்கள்.

ஒரு கல்யாண விருந்துண்ட மகிழ்ச்சி மிஞ்சும்.

இது ஒருவித "குணானுபவம்"

இது மலையாளத் திரைப்படம் ஒன்றுக்காக கே.ஜே ஜேசுதாஸ்


இங்கு செக்சபோனில் கத்ரி கோபிநாத் இசைப்பதைக் கேட்கலாம்..


இது விஜய்.சிவா பாடியது


நாதஸ்வரத்தில் சீதா கல்யாணம்.


பரதத்தில் வில் முறித்து மணமுடிக்கும் காட்சி; சீதா கல்யாண வைபோகம்.


இது ஒரு விளம்பரம்




இவ்வாறு இதனை பதிவேற்ற சாத்தியப் பட்டது என் அன்புத் தோழி ஹாசினியால்.நன்றி ஹாசினி.

Thursday, October 28, 2010

யாதும் ஊரே.....


தமிழ் இலக்கியத்தில் மிகப் பிரபலமான பாடல் ஒன்றிருக்கிறது.உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான் அது. முக்காலத்திலும் பிரபலமாயிருக்கத் தகுதி வாய்ந்தது.தமிழனின் பண்பையும் பரந்த மனப்பாண்மையையும் சொல்லி நிற்கும் அற்புதமான வரிகள் செறிந்தது. இலக்கியப் பழைமையையும் பண்பாட்டுத் திறத்தையும் ஒருங்கே சொல்லி நிற்கும் அழகு வாய்ந்தது. தமிழினம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்க; சொல்லி நிற்க;பெருமை கொள்ள ஏற்ற பாடல்.

அது கணியன் பூங்குன்றனாரின்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
சாதலும் தணிதலும்,அவரன்றோ ரன்ன,
சாதலும் புதுவ(து) அன்றே வாழ்தல்
இனிதன மகிழ்ந்தன்றும் இலமே,முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே மின்னோடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொரு(து) இரங்கும்,மல்லல்ப் பேர்யாற்று,
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில்த் தெளிந்தனம்,ஆகலின் மாட்சியில்,
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.

என்ற பாடல் தான். எல்லாம் நம்முடய ஊர் தான். எல்லோரும் நம் உறவினரே.(கேளிர் - உறவினர்)நன்றும் தீதும் பிறர் தருவதால் நமக்குக் கிட்டுவதில்லை.மலை மேலே மழை பொழிகிறது.ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.வெள்ளம் மரக்கட்டை ஒன்றையும் அடித்துக் கொண்டு வருகிறது.மரக்கட்டை எப்படி எல்லாம் வருகிறது?

அது ஆற்றின் வெள்ளத்தின் ஓட்டத்துக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் சுழல்களில் அகப்பட்ட இடத்து அதற்குள் சுளன்றும், மரங்கள் தட்டுப் படும் இடங்களில் அங்கே சற்று தரித்தும், மரநிழல் இருக்கும் இடத்தில் அதற்குக் கீழாகவும், வெய்யில் வருகின்ற போது அதற்குக் கீழாகவும், - இவ்வாறு ஆற்று வெள்ளத்தின் போக்குக்கேற்ப ஓடி இறுதியில் ஏரியை வந்து அடைகிறது.

ஆனால் இந்த மரக்கட்டை நான் அப்படி வந்தேன் இப்படி வந்தேன் என்று பெருமைப் படப் பேசலாமோ? அப்படி அது பேசினால் நாம் அதனை நகையாடத் தானே செய்வோம்? அது அவ்வாறு வந்தது அதனுடய செயல் அல்லவே! எவ்வாறு தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மரக்கட்டை வெள்ளத்தினுடய செயலை தன் செயல் என்று கருதுகிறதோ அவ்வாறே நாமும் நம்முடய கருமங்களை நம் செயலாக நினைத்து ஏமாறுகிறோம். எல்லாம் ஆற்று வெள்ளத்தினுடய செயலைப் போல கடவுளின் செயல் என நம்பி இருப்போருக்கு நல்செயல் தீச் செயல் என்ற பேதம் ஏது? பிறப்பும் மரணமும் இயற்கையானது என்ற தெளிந்த ஞானம் கைவந்து, எல்லாம் அவன் செயல் என்று ஆனந்தப் பெருக்கோடு அல்லவா வாழ்வர்?

அவர்களுக்கு அதன் பின் நல்வினை தீவினை என்ற பேதமோ நன்மை தீமை என்ற பலனோ இல்லை அல்லவா? அத்தகைய பக்குவம் கைவரப் பெற்றதால் அவர்கள் பெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை; சிறியோரைப் பார்த்து இகழ்வது அதனிலும் இல்லை!

ஆஹா ! என்ன ஒரு நிதானம்!பெருமிதப் பெருவாழ்வு! உலக பார்வை!சிந்தனைப் பெருக்கு!ஞான வாசனை!!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் தமிழ் புலவனுக்கு வந்த அந்த ஞானச் செருக்கைப் பார்த்தீர்களா? அது தமிழனின் வாழ்வின் ஆதாரமாக பற்றிப் பிடிக்க வல்லதல்லவா? தமிழின் இனிமைக்கும் பழைமைக்கும் இணக்கப்பாடான வாழ்வுக்கும் உரமான பாடல் அது.

புலம் பெயர்ந்து வந்து பலவருடங்களை இங்கு கழித்த பின் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். எங்கேனும் எப்போதேனும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆசிய நாட்டவள் என்றோ பெண் என்பதாலோ வயது நிமித்தமோ எங்கேனும் நான் மரியாதைக் குறைவாக வேலைத் தலத்திலோ அல்லது பொது இடத்திலோ அவுஸ்திரேலியர்களால் நடத்தப் பட்டிருக்கிறேனா என்று.

இல்லை என்பதே ஆணித்தரமான உண்மையான பதில்.

பல்கலாசார நாடான இங்கு மக்கள் மிக அன்னியோன்யமாகவும் நட்புறவோடும் அன்போடும் ஆதரவோடும் மகிழ்வோடும் வாழ்வதையே நான் கண்டிருக்கிறேன்.புன்னகைத்து வாழ்த்திப் போகும் போகும் வழிப்போக்கர்கள், மற்றவர் வாழ்வின் மூக்கை நுழைக்காத நாகரிகம், அடுத்தவர் பழக்க வழக்கங்கள் பண்பாடுகளை தம்முடையது போல கொண்டாடும் - தாமும் கலந்து கொண்டு மகிழும் பாங்கு,உதவி செய்யும் மனப்பாங்கு, எளிமையாக குடும்ப வாழ்வை நோக்கியதான அவர்கள் வாழ்வு முறை,மனிதம் நிறந்த மனங்கள்,விடுமுறை எடுத்துக் கொண்டு இயற்கையோடும் புதியனவற்றை அறிந்து மகிழும் உச்சபட்சமான அவர்கள் சந்தோஷம், குடும்பங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வான நேர்மை, பெண்னை சமனாக நடத்தும் அவர் தம் உயர்ந்த பண்பாடு.....இப்படி நிறைய உண்டு.

பெண் செய்கின்ற வேலை இது ஆண் செய்கின்ற வேலை இது என்ற பாகுபாடு அவர்களிடம் கிடையாது.குழந்தையின் தள்ளு வண்டிலை உருட்டிக் கொண்டு போகும் அப்பாக்கள், காதலிக்குமாகத் தேனீர் போட்டுக் கொண்டு வரும் காதலன்,ஆண் வீட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க பெண் உழைத்துக் கொண்டு வரும் அன்னியோன்னியமான குடும்பம்,உச்ச பட்சமாக அவர்களுக்குள் இருக்கும் உண்மை நேர்மை.... இப்படி நிறைய நாளாந்த வாழ்வோடு நாம் காணக்கிடைப்பவை.

அவர்களோடு வாழக் கிடைப்பது பெருமையாகவே இருக்கிறது.2000 ஆம் ஆண்டு சிட்னி மாநகரில் இடம் பெற்ற புதுவருட விழாக் கொண்டாட்டத்தின் போது வெனசா.அமொறொசி பாடிய பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.அன்று பாடியது போலவே மனதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் குரல்.

அதன் பின்னால் Back street boys பாடிய ஒரு பாடலையும் இணைக்கிறேன். இது தான் அவர்கள் வாழ்வு! எளிமையான அவர்கள் பண்பாடு!!



YouTube - Absolutely Everybody In Style Of Vanessa Amorosi Karaoke

YouTube - Backstreet Boys-As long as you love me*with lyrics*

Friday, October 22, 2010

HUCKLEBERRY FRIEND


கடந்த வாரம் தமிழ் இலக்கியம் தொடர்பாக எதையோ தேடிக்கொண்டு போன போது கண்ணுக்குக் கிட்டிய ஓரகராதி சூடாமணி நிகண்டு என்ற ஆரம்ப காலத் தமிழ் அகராதி. இவ்வகராதி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டதென்றும்;அது 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விருத்தப்பா வகையில் ஆக்கப்பட்டதென்றும்;இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கின்றது என்றும் விக்கிபீடியா குறிப்பிடுகின்றது.

அது விளக்கங்களோடு ஆறுமுக நாவலரினால் 1938ம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது.இன்று வழக்கொழிந்து போன பல தமிழ் சொற்கள் அதில் காணப்படுகின்றன.ஆணின் தலைமயிர், பெண்ணின் தலைமயிர், மேலுதடு,கீழுதடு என்பவற்றுக்கெல்லாம் தனியான தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன; அவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது தமிழின் தனித்துவத்துக்கும் அதன் நுட்பம், செறிவுத்தன்மை(richness)என்பவற்றுக்கு நல்லதொரு சான்றாகும்.அவ் அரிய பொக்கிஷத்தை முழுவதுமாக நூலகம்.நெற் ரில்(www.noolaham.net) மிகத் தெளிவாகவும் எளிதாகவும் தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.அவர்களுடய தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

அதனோடு சமாந்தரமான வகையில் தமிழுக்குக் காணப்படுகின்ற இன்னொரு இயல்பு 247 எழுத்துக்கள்.குறிலென்றும் நெடில் என்றும் ஒலிப்பவை சில.மெல்லினமாகவும் வல்லினமாகவும் இடையினமாகவும் ஒலித் தரமுள்ளவை மேலும் சில.ங,ழ, என்ற எழுத்துக்களோடு ஃ என்ற எழுத்தும் தனக்கென தனித்த இயல்புடையன. எழுத்தின் ஓசையும் எழுத்தின் அழகும் சேர்ந்து அது நினைத்தவாறெல்லாம் வளைந்தும் நெகிழ்ந்தும் கொடுக்கக் கூடியவாறு அமைந்திருப்பதால் சொற்களும் அதன் நெகிழ்வுத் தன்மையும் இன்னும் நுட்பமும் அழகும் வாய்ந்ததாக விளங்குகின்றது.

ஆனால் வெளி நாடுகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கின்ற மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.சிறப்பாக பேச வாசிக்கத் தெரிகின்ற மாணவர்கள்; தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொள்கின்ற மாணவர்கள் கூட எழுத்துப் பிழைகள் விட்டு எழுதுவதனால் பரீட்சைக்குத் தோற்றுவதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.

ழ,ள, ன,ண,ர,ற என்பனவற்றின் வேறுபாடுகளை விளங்கவைப்பதும் புரியவைப்பதும் அவற்றை தெளிவு படுத்துவதும் மிகுந்த சிரமமாக இருக்கின்றது.நம்மில் எத்தனை பேர் ழ,ள வேறுபாட்டை உணர்ந்து பேசுகிறோம்? நாம் கூட இரண்டையும் ஒன்று போலவே பேசிக் கொண்டு மாணவர்களை வேறுபாட்டோடு பேசவும் உணர்த்தவும் செய்தல் என்பது நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்யம்?

கடந்தவாரம் முழுக்க முழுக்க எனது சிந்தனை உலகு இதற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.எவ்வாறு மாணவர்களை இந்த சிக்கலுக்குள் இருந்து மீட்டெடுத்துக் கொண்டுவருவதென்பது குறித்த கேள்விகளுக்கு இங்கு வருகின்ற யாரேனும் விடை தெரிந்தால் கூறுங்கள். அது மிகுந்த உபயோகமாக இருக்கும்.

அதற்கு நான் கண்டு கொண்ட ஒரு சிறு விடயம் என்னவென்றால் அந்த எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதப் பயிற்சி கொடுப்பது தான். சொற்களையும் பொருளையும் விளங்கப் படுத்தி உச்சரிப்பின் இயல்பையும் தெளிவு படுத்த முனைந்து அதற்கான ஆங்கில அர்த்தத்தையும் கொடுத்து விட்டு அடுத்தவாரம் அதில் சொல்வதெழுதுதல் கொடுப்பது ஓரளவுக்கு பயனுடயதாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதன் ஒரு கட்டமாக சில சொற்களை வேலை இடைவேளையின் போது எழுதிக் கொண்டிருக்கும் போது என் நண்பன் றே(Ray) என்ன செய்கிறாய் என்ற படியே வந்தான்.விடயத்தைச் சொன்னேன். அவன், "Huckleberry Friend" என்றொரு அமெரிக்க ஆங்கில வார்த்தை இருக்கிறது தெரியுமா என்று கேட்டான். தெரியாதே அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.

உங்களுக்கு எப்போதேனும் ஒரு சடப்பொருள் அல்லது ஒரு அஃறிணை உயிர் நட்போடு இருந்திருக்கிறதா? நம்பிக்கையான ஒரு நட்பாக சிறு பிள்ளைகள் வைத்திருக்குமே கறடிப் பொம்மை அது மாதிரி, சில பாடல்களில் வருமே "வெண்முகிலே சொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு" என்பதில் வரும் வெண்முகில் மாதிரி,வீட்டுப் பிராணிகளோடு சிலர் தம் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வார்களே அது மாதிரி,அவர்களிடம் சொல்லி பிரச்சினை தீராது என்ற போதும் அதனிடம் சொல்வதில் ஓராறுதலைக் காண்பார்களே அது மாதிரியான ஒரு சினேகிதத்தை "Huckleberry Friend" என்று சொல்வார்களாம்.அதற்கு "Moon River" என்றொரு பாடலும் இருக்கிறது என்று கூறினான் றே.அந்தப் பாடலையும் இத்தோடு இணைத்திருக்கிறேன். அதில் அழுத்தி அப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

YouTube - Sarah Brightman - Moon River (Lyrics)

என்னுடய கேள்வி என்னவென்றால் அதற்கு இணையான தமிழ் சொல் இருக்கிறதா?

யாரேனும் இதற்கொரு தமிழ் வார்த்தை சொல்லி விட்டுப் போங்களேன்!

Wednesday, October 13, 2010

ஒரு ரசிகையின் பார்வையில் MELODIC RHYTHMS

கடந்த 9ம் திகதி மாலை ஆறு மணிக்கு நூலக மண்டபம் ஒன்றில் நடன விருந்தொன்றுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது.பிரபல நாட்டிய ஆசிரியையும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'பண்பாட்டுக் கோலங்கள்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து அளிப்பவருமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி அது.

கடந்த வருடமும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வந்து சென்ற அனுபவம் எனக்குத் தந்த பாடத்தின் பயனாக முதலில் கமறாவை தயார் நிலையில் வைத்துக் கொண்டேன்.கடந்த வருடத்தில் நடந்த செம்பு நடனம், தாம்பாளத்தில் நின்று செய்த நடனம்,மற்றும் இதுவரை நான் பார்த்திராத இந்திய மண்ணின் நடனங்களும் அவற்றில் இருந்த நேர்த்தியும் கமறாவுக்குள் அவற்றை அடக்கி விட முடியவில்லையே என்ற வருத்தமுமே அதற்குக் காரணம்.

வழக்கம் போல எளிமையான ஆடம்பரங்கள் அற்ற மேடை!அளவான மண்டபம்,மென்மையான ஒளியமைப்பு.எல்லோரும் பார்க்கத் தக்கதான இட அமைவு,மென்மையாக இசைத்துக் கொண்டிருந்த வாத்ய ஒலி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடித் திரிந்த பண்பாட்டு உடையணிந்த சிறிசுகள்,துப்பட்டாக்கள் சிறு பொருட்களால் ஏற்கனவே புக் செய்யப் பட்டிருக்கின்ற இருக்கைகள்,இந்திய சீன வெள்ளை முகங்கள் என மண்டபம் நிறைய ஒரு வித்தியாசக் கலவை!

அட, அப்பாவின் நண்பர் வந்திருக்கிறார். எங்களைப் போல 15 நிமிடங்கள் முன்னதாக.கடந்த வருடம் தனியாக வந்திருந்தவர் இம்முறை தன் மகள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.சற்றே நேரம் செல்லச் செல்ல இருக்கைகள் நிறைந்தன.அட, என் அக்காவும் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறாரே! நிச்சயம் முதல் வருட நிகழ்ச்சி பலரையும் பிடித்துக் கொண்டிருக்கிறதென்பது புரிந்தது.

நேரம் 6 மணியைக் கடந்து கொண்டிருந்தது.ஏன் பிந்துகின்றது என்ற வினா மனதுக்குள் எழுந்த போது ஒளியமைப்பைச் சரி பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் பட்டார். அட, இவ்வளவு நேரமும் நின்றவர் இப்ப தானா இதைச் சரி பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

6.15. மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.எல்லா நிகழ்ச்சிகளையும் படம் பிடிக்க நான் இருந்த இடம் தோதாக அமைய வில்லை.ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்த நடன நிகழ்ச்சிகளில் பரதம்,குச்சுப்புடி,பாம்பு நடனம்,பொலிவூட் நடனங்கள் என ஆசிரியரின் கைவண்ணம் சிறப்பாக அதில் மின்னியது.போன முறை இடம்பெற்ற ஆசிரியரின் கைவண்ணங்கள் இம்முறை இல்லாது புதிய வடிவில் நடனங்கள் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன.அது எனக்கு சற்று ஏமாற்றமாகவே போய் விட்டது.அந்த நடனங்களை - அந்த நடனப் பெண்மணிகளை எல்லாம் சேர்த்து கார்த்திகா இன்னொரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.இந்த இடத்தில் ஆசிரியருடய ஆழுமை பற்றிச் சற்றே சொல்லுதலும் பொருத்தம்.

சிலருக்கு கலையின் புனிதத் தன்மை மிகவும் முக்கியம். கலை கலையாக மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே படைக்கப் படுவது பிடிக்கும்.அதன் புனிதத்துவத்தில் ஓர் அழகு இருப்பதென்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், சிலருக்கு நடைமுறையோடு ஒட்டியவாறு மாற்றங்களோடு செல்வது பிடிக்கும்.ஒருவரிடம் இருக்கும் பார்வை, திறமை, சமூகத்தைப் பார்க்கும் கண்ணோட்டம்,சொல்ல விரும்புகின்ற செய்தி - இவை எல்லாவற்றையும் இந்த இரண்டாவது இயல்பு சிறப்பாகக் கொண்டு வரும்.இத்தகைய விரிவான பார்வை தான் புதிய சிந்தனைகளுக்கான ஆரம்ப ஊற்று.அந்த வகையில் கார்த்திகா இரண்டாம் ரகம்.புதிய கண்ணோட்டம், பார்வை,தெளிந்த சிந்தனை, அதனை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல்,கற்பனை வளம் ஆகியன கைவரப் பெற்றவர் கார்த்திகா.

அத்துடன் தனி இனம், மதம், கோட்பாடுகள் என்பவற்றுக்கப்பால் தனக்கென தனியான பார்வை, துணிவு, தன்னம்பிக்கை என்பனவும் கைவரப் பெற்றவர்.கற்பனையாற்றல்,அதனை வெளிப்படுத்தும் திறன், நேர்மையான சமூக நோக்கு என்பன கலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியதில் தனித்துவமான கம்பீரமான கலைஞியாக கார்த்திகா மிளிர்கிறார்.அவற்றை அவரது நிகழ்ச்சியில் நன்குணர முடிந்தமை இந் நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு.

நடன நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட்ட விதம், உடை நிறத் தெரிவு, அலங்காரம்,இடையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் இதனைப் புன்னகையோடு நடத்திய பெண்மணி, பிரதம விருந்தினர் உரை என மிக விறு விறுப்பாகவும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஊட்டும் படியாகவும் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது மிகச் சிறப்பு.

ஒரு மாணவி அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தில் வந்து ஆடிய நிகழ்ச்சியும் அது சொல்லி நின்ற தத்துவமும் வெளிப்படுத்திய செய்தியும் கலை என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதை இயல்பாகச் சொல்லி நின்றது.






























பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர். காந்தராஜாவும் பாரியாரும்.



நடன ஆசிரியர் கார்த்திகா. கணேசர் நன்றியுரை ஆற்றுகிறார்.



சில படங்களை எடுக்க முடியாமல் எனக்கு முன்னால் இருந்த 5,6 வயது மதிக்கத் தக்க சிறுவன் கையை உயர்த்தி மேடை நடனத்தை தானும் ஆடிய படி இருந்தான்.அது நிகழ்ச்சியின் வசீகரத்துக்கு எடுத்துக் காட்டு.

நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவு பெற்று வெளியேறும் போது என் அக்காள் சொன்னாள் 'நீ இந்த சீடீக்கள் விற்பனைக்கு வெளி வந்தால் மறக்காமல் எனக்கும் ஒன்று வாங்கித தா. வச்சு வச்சுப் பாக்கலாமடி' இது என் அக்காள்.அவர்களைத் தாண்டி வெளியே வந்த போது என் தந்தையின் நண்பரையும் மகள் குடும்பத்தினரையும் சந்தித்தேன்.அவரது மகளுக்கு 2,3, வயதுகளில் பிள்ளைகள்.இன்று என் அப்பாவின் வற்புறுத்தலுக்காகவே வந்தேன். இந்த ரீச்சர் எங்க இருக்கிறா? அங்க தானோ வகுப்புகள் எடுக்கிறா? இன்னும் 2 வருஷம் போக அவவிட்ட என்ர மகளையும் விட வேணும்.'


நல்ல நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தேவை இல்லை.அது தானாகவே எல்லோரையும் வசீகரிக்கும்.விளம்பரங்கள் எதுவுமற்று நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்த சனக்கூட்டம் அதற்கு ஒரு நல்ல சான்று.

மூன்று மணி நேரங்கள் - மிக சிறப்பாக அளிக்கப்பட்ட விருந்து - நேரத்துக்குக் கிட்டிய மிக உயர் சன்மானம் - அது கார்த்திகாவும் மாணவிகளும் எங்களுக்குத் தந்த மறக்க முடியாத பரிசு!

அடுத்த வருடமும் போக வேண்டும்.

Wednesday, October 6, 2010

போவோமா ஊர்கோலம்!

கடந்த வார இறுதி (2,3,4 ஒக்ரோபர்)எங்களுக்கு நீண்ட வார இறுதி. திங்கள் கிழமையும் சேர்த்து விடுமுறை.சில வேளைகளில் ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்ய வேண்டி வருகின்ற எனக்கு அபூர்வமாக அந்த நாளும் வேலை செய்ய வேண்டி வரவில்லை.

அவுஸ்திரேலியாவில் வசந்தகாலம். வருடத்திலேயே மிக அருமையான கால நிலையைக் கொண்ட நேரம் இது.என்ன செய்யலாம் என்று யோசித்த படி வானிலை அறிக்கையைப் பார்த்தால் முழு வாரமும் மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என அது சொல்லியது.அதனால், வீட்டில் இருந்த படி கொமன்வெல்த் விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்று ஒரு சாராரும் வீட்டினை; வீட்டுத் தோட்டத்தினை மீள் ஒழுங்கு படுத்தலாம் என்று இன்னொரு சாராரும் சொன்ன போதும் பலமான ஆதரவு கன்பராவில் இருக்கும் மலர் கண்காட்சியைப் பார்ப்பதற்கு இருந்ததால் இறுதியில் அங்கு போவதெனத் தீர்மானம் ஆயிற்று.

அக்கா குடும்பத்தினரும் நாமுமாக இரண்டு கார்களில் புறப்பட ஆயத்தமான போது முதன் முதல் நான் எடுத்து வைத்தது என் கமறாவைத் தான். வேறென்ன உங்களையும் அங்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் அந்த ஏற்பாடு.(அதற்காக நான் ஒன்றும் சிறந்த படப்பிடிப்பாயினி என்று நினைத்து விடாதீர்கள். இப்படித்தான் நான் விடயங்களைக் கற்றுக் கொள்வது வழக்கம்.:)

கன்பரா சிட்னியில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள்.110 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தால் சுமார் 3 மணி நேரத்தில் கன்பராவைச் சென்றடைந்து விடலாம்.(இளைப்பாறிச் செல்லும் நேரங்கள் உட்பட)ஒரே நாளில் திரும்புகின்ற என்ணம் இருந்ததாலும் அன்று நமக்கு நேரம் மாறியதாலும் பழைய நேரம் 7.30க்கும் புதிய நேரம் 8.30க்கும் பயணம் ஆரம்பமாயிற்று.

புறப்பட்ட நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. சுதந்திரமாகப் பயணிக்க அது நல்ல வாய்ப்பாயிற்று.சிட்னியில் இருந்து பயணிக்கின்ற பாதையின் இரு மருங்கிலும் பார்ப்பதற்கென்று அதிகம் எதுவுமில்லை. சிட்னி நகர் புறத்தைத் தாண்டிப் போனால் வரும் அகன்ற பெரிய வெளிகளில் குதிரைகளும் செம்மறி ஆடுகளும் மேய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். மற்றும் படி பார்ப்பதற்கு அதிகம் எதுவுமில்லை.







மேலே உள்ள படங்களும் அவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கும். முதலாவது புகைப்படம் நாம் ஓய்வுக்காக நின்ற ஓரிடத்திலிருந்து எடுத்தது.



மேலே உள்ள புகைப்படம் நாம் மலர்க் கண்காட்சிப் பிரதேசத்துக்குள் பிரவேசித்த உடன் பக்கவாட்டாகக் காணப்பட்ட பழங்காலத்து பியானோ என்று அறிந்தோம். இரண்டு டொலர்களைப் போட்டால் அது அருமையாக இசைக்கிறது.



மேலே உள்ள படம் பிள்ளைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த விளையாட்டுத் திடல்.( பாடசாலை விடுமுறை இப்போது)குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் அங்கு குழந்தைகளாக மாறியிருந்ததைக் காண முடிந்தது.

முகப்பின் இரு மருங்கிலும் பியானோவும் விளையாட்டுத் திடலும் அமைந்திருக்க கண்ணுக்கு எட்டிய பரப்பு வரை பூக்களின் காடு!அவற்ரைப் பார்த்த படி வாருங்கள்.























இடையிலே ஒரு புறத்தில் சேர்க்கேஸ் நடந்து கொண்டிருந்தது.பூக்களைப் பார்ப்பதில் அடங்கா ஆவல் இருந்ததால் இங்கு அதிகம் மினைக்கெட வில்லை.ஆனால் இந்த மனிதன் பாத்துக் கொண்டிருக்கும் சிறார்களையும் பங்கு பெற வைத்து அவர்களுக்கு மிட்டாய்கள் சிறு பரிசுப் பொருட்களும் கொடுத்துக் கொண்டிருந்தது பிள்ளைகளை ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது.













கீழே இருக்கும் படம் இடையில் இருந்த மலர்க் கண்காட்சியில் எடுத்தது. உள்வீட்டு அலங்காரத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப் பட்ட மலர்களால் பலவித சாடிகளில் அலங்காரமாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. சீனர்கள் இதில் மிக வல்லவர்கள். நேர்த்தியும் கலை உணர்வுமாக அவர்களால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த பல சாடிப் பூக்களை எப்போதும் பலர் மொய்த்துக் கொண்டிருந்ததால் தனியாக அதனை எடுக்க முடியாது போய் விட்டது.





கீழே இருக்கும் படம் அங்கு இருந்த 'திருவிழாக் கடையில்'எடுத்தது.பல கலைப் பொருட்கள் தொப்பிகள்,அலங்காரப் பொருட்கள்,மாலைகள்,குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், தேநீர் சாலைகள்,என்று கடைகளுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் விலை தான் சற்றே அதிகம்.புன்னகையோடு நிற்கின்ற விற்பனைப் பெண்கள் தம் அழகுப் புன்னகைக்கும் சேர்த்தே விலை வைப்பார்கள் போலும். ஆனால் சும்மா சொல்லக் கூடாது எல்லாம் அழகான பொருட்கள் தான்!



இனித் திரும்புகின்ற நேரம் ஆகி விட்டது.சிட்னி நோக்கி புறப்பட ஆரம்பித்தோம்.

இந்த இடத்தில் ஒரு விடயம் அவசியம் சொல்ல வேண்டும். பல நூறு மைல் தூரங்களை இணைக்கும் வீதிகள் மிகுந்த நேர்த்தியாக இருப்பதும் இடையிடையே காணப்படும் இளைப்பாறும் இடங்கள், சிரம பரிகாரம் செய்யும் இடங்கள், அவை எல்லாம் அவற்றுக்குரிய சுத்தத்தோடும் தண்ணீர், பேப்பர், கைகளை உலர்த்தும் கருவிகள், கண்ணாடிகள் இத்யாதிகள் சகிதம் சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. அவசர தொலைபேசித் தொடர்புகளுக்கான வசதிகளும் ஆங்காங்கே செய்யப் பட்டிருக்கின்றன.இதற்காக அரசாங்கத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

கீழே இருக்கின்ற படம் திரும்பி வரும் வழியில் நின்ற ஓரிடம்.பிரமாண்டமும் தத்ரூபமுமாக அமைக்கப் பட்டிருக்கும் செம்மறி ஆடு இது.இதன் நான்கு கால்களுக்கும் கீழே கடை இருக்கின்றது.இளைப்பாறிச் செல்ல உகந்த இடம் இது. நமக்கான தேநீர்சாலையும் வாகனத்துக்கான தேநீர்சாலையும்(பெற்றோல் நிரப்பும் நிலையம்)இங்கு இருக்கின்றது.





சிட்னிக்குப் போகும் பாதை.(எங்கே முடியும் இப்பாதை? தெரியவில்லை)



கீழே உள்ள இரு படங்களும் ச்சும்மா:)

காரோட்டும் வளை கரம்!

110ல் போகவேண்டிய இடத்தில் கொஞ்சம் கோடினேஷன் பிழைச்சுப் போச்சு!ஒருகால் ஆக்சிலேட்டரில் ஒரு கை ஸ்ரியறிங் இல் மறுகையில் கமறா இருந்ததால் 110 கிலோ மீற்றர் வேகம் 100 ஆகிவிட்டது.



இந்தப் படத்தில் சரியாகிவிட்டது!:)



ஊர்வலம் பிடிச்சிருக்கா?

(குறிப்பு: கடந்த புதன் கிழமை எழுத ஆரம்பித்த பதிவை இன்று வெள்ளிக் கிழமை தான் பிரசுரிக்க முடிந்தது.புதன் கிழமையே வந்து பார்த்துப் போனவர்கள் மன்னிக்க!)