Showing posts with label பரிபாடல். Show all posts
Showing posts with label பரிபாடல். Show all posts

Sunday, December 15, 2019

பரிபாடலில் வைகை வெள்ளம்...

இந்த வைகை ஆறு குறித்து எழுதுவது மிகவும் தற்செயலானது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைபோலானதும்...

அண்மைக்காலமாக இந்த தமிழருடய அறம் குறித்த சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவை குறித்த தேடலின் போது பரிபாடல் அகப்பட்டது. அதனைப் படித்துக் கொண்டு போகையில் அதில் விபரிக்கப்பட்டிருந்த இருந்த பெண்கள் மனதைக் கவர்ந்தபடியாக இருந்தார்கள். அவர்கள் குறித்துத் தனியாக முடிந்த போது பார்க்கவும் எழுதவும் வேண்டும்.

அது அவ்வாறு இருக்க,

இது வைகை ஆறு குறித்தது.



வைகைக்கரைக் காற்றே நில்லு! வஞ்சிதனைப் பார்த்தச் சொல்லு...
தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு....
வைகைநதி பெருகி வர வண்ணமலர் ஊர்ந்து வர.....

என்றெல்லாம் சினிமாப்பாடல் சொல்லும் அதே வைகை தான் இன்றய பதிவின் கதாபாத்திரம்!

பரிபாடலில் புரண்டு வரும் நதி இது...

‘ நிறைகடல் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்
பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
நிலமறைவது போல் மலிர்புனல் தலைத்தலைஇ
மலைய இனங்கலங்க மலைய மயிலகவ
மலைமாசுகழிய கதழும் அரவி யிழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாராமை
மேவிப்பரந்து விரைந்து வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்’

என்னவாமெனில்,

கடல் நீரை முகர்ந்து கொண்ட மேகங்கள் தங்களுடய நீரின் பாரத்தை தாங்க முடியாமல் இளைப்பாற நினைத்ததைப் போல பெரும் மழையைப் பொழிந்தன. ( கவனியுங்கள்; சங்க காலத்தில் மழை எப்படி பொழிகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பின்நாளில் ஆண்டாளும் அதைக் தன் அழகு தமிழில் சொல்லுவாள் )

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மலைவாழ் உயிரினங்கள் கலங்க; மயில்களோ களிப்பால் அகவுகின்றன. மலைப்பகுதிகளில் வீழ்ந்த மழைநீர் வருகிற வீச்சினால் மலைகளில் உள்ள  தூசிகளை நீக்கிக் கழுவிக்கொண்டே கீழிறங்குகின்றது. இப்போது வெள்ளம் அடிவாரத்தில் பெருகி ஓடுகிறது.

அது எப்படி இருக்கிறதென்றால் குற்றமற்ற நூலறிவு கொண்டவர்கள்  புலவர்கள். அவர்கள்  நா அறிவுரைகளைக் கூறும். அவர்கள் அழகிய நல்ல கவிதைகளைப் புனைவார்கள். அவை ஒருபோதும் பொய்யாகிப் போவதில்லை. அறிவுச் செல்வத்தின் வீரியம், அழகு எல்லா இடத்தும் பரவும். அதனால் பல நன்மைகள் விளையும்.

அது போல வைகைவெள்ளம் பெருகி வருகிறதாம்!

சரி, மலையிலிருந்து எல்லாவற்றையும் கழுவித் துடைத்துக் கொண்டு கீழே வந்து விட்டது வெள்ளம்.வைகை வெள்ளம். அதன் குணாம்சம் எப்படி இருக்கிறது?

”நளியிருஞ் சோலை....” என்ற பாடல் அதை இப்படிக் குறிக்கிறது.

நரந்தம் புற்களில் மேலாக; வேங்கைமரத்தின் உதிரல்களை எல்லாம் கூட்டிக் கொண்டு மலைகளில் இருந்து இறங்கும் போது முறித்தெடுத்துக் கொண்டு வந்த மரக்கிளைகளையும் தன்னோடு எடுத்துக் கொண்டு, உயரமான இடத்தில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து பள்ளமான இடங்களை நிரப்பிய படியுமாக அது வந்து கொண்டிருக்கிறது. கரைபுரண்டு வருகிறது வைகை.

அதனால் உழவர்களுக்கு மகிழ்ச்சி.அதனால் முழவுகளையும் பறைகளையும் ஒலிக்கிறார்கள்.

இந்தக் காட்சிக் கோலம் எப்படி இருக்கிறதென்றால்,

ஆடல்கலையை முறைப்பட தெரியாத ஒருத்தி தாறுமாறாக ஆடி வருவதைப் போலவும்; ஊடல் என்றால் என்ன என்று தெரியாத ஒருத்தி சந்தோஷப்படாமல் செருக்கோடு போவதைப் போலவும்; புது வெள்ளம் ஒரு வித செருக்கோடு போகிறதாம். அது தனக்கு பிடித்த வழியில் போகிறது. அது தடைகளை ஒரு பொருட்டாக மதிக்காத படி போகிறது. விதிமுறைகளுக்கு ஆட்படாத ( விதிமுறைகளைத் தெரியாத)  ஒருவன் தான் விரும்பியபடி உடலுக்கு பூசும் கலவைச் சாந்தினை ( பவுடர்) தயாரித்து பூசிக்கொண்டிருப்பதைப் போல ஒரு வித புது மணத்தோடு சிவந்த அழகிய வைகை நதி ஓடுகிறது.

என்ன அருமையான கற்பனை இல்லையா?