Sunday, June 28, 2009

வல்லாரைச் சம்பல்

தேவையான பொருட்கள்;

கழுவிக் காம்பு நீக்கிய வல்லாரை இலைகள் 2 கைப்பிடி
தயாராக்கப் பட்ட தேங்காய் பூ -ஒரு சிறங்கை
பெரிய வெண்காயம் -பாதி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் -1
நற் சீரகம் - சிறிதளவு
மிளகு - 4-5
தேசிக்காய் - பாதி

செய்முறை:

புதிய வல்லாரை இலைகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.(குறுனலாக அல்ல). அதே போல வெண்காயத்தையும் பச்சை மிளகாயையும் வெட்டிக் கொள்ளவும்.இவற்றோடு மிளகு, சீரகம் என்பவற்றையும் தேங்காய்பூவையும் போட்டு மிக்சியில் உங்களுக்கு விருப்பமான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.சம்பல் பதம் சிறப்பாக இருக்கும். இறக்கிய பின் தேசிக்காய் புளி விடவும்.

5 நிமிடத்தில் செய்து விடத்தக்க இப்பாகம் மிகச் சுவை நிறைந்ததும் சத்துக்கள் சேர்ந்ததும் மலிவானதுமாகும்.

சோறோடு சாப்பிடலாம்.செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.இது போல் முருங்கையிலை வறையும் சோறோடு சாப்பிடச் சுவையானது.

Friday, June 26, 2009

நெருடல்

உயிருக்காய்
ஊர் விட்டோடிய போது
கட்டவிழ்க்க மறந்த
பச்சிளங்கன்றும் தாய்ப்பசுவும்
எட்டாத அருகில் நின்ற நினைவும்,

வைரவ மடையில்
மனிதக் காலனின்
கத்தியின் கீழ் மிரண்ட
அப்பாவி ஆட்டின்
அவல முடிவும்
நினைவுக்கு வர

பதறுது மனசு.

உன் நினைவு குறித்த நெருடலோடு!

Thursday, June 18, 2009

ஒரு நட்பின் புன்னகை

புறம் பார்த்து-
ஒரு நட்பின் புன்னகையோடு
நீ என்னைத் தேர்ந்தெடுத்தாய்.

நன்றி எனினும்
நண்பா,

ஆடைகள் பார்த்து
ஆளை எடை போடும் உலகில்
என் இருத்தலின் உன்னதம்
புரிவதுனக்கு
எங்ஙனம்?

என் அக எல்லைகளின் ஆழ அகலங்கள் பற்றி...
அதன் அலங்காரங்கள் பற்றி...
அறைகளை நிரப்பும் வெளிச்சங்கள் பற்றி..
மூலைகளில் படிந்து கிடக்கும் தூசிகள் பற்றி..
இரத்தம் காவித் திரியும்
பரம்பரை அலகுகள் பற்றி..
இன்னும்..இன்னும்..
அந்தக் கரும் பாறை பற்றி...

இவ்வாறு பூமியுள்ளே ஊன்றியுள்ள
என் விருட்ச வேர்களைப் பற்றி அறிவாயாக!

உரத்துப் பேசாத இந்த
உரையாடலின் சாரமே நானாவேன்.

உடலல்ல நான்.
உடலுக்குள்ளே தான் நான்.

நண்ப,
உன் ஆண் என்ற சட்டையைக்
களைந்து விட்டு வருவாயாக!
பால்களைத் தாண்டிய பரிமானம் ஒன்றில்
உன் பாதங்கள் பதிவதாக!

பாலால் என்னைப் பாகுபடுத்து முன்
மனிதனாய் என்னை மதிப்பாயாக!!

வா!இனி உன்
நட்பின் புன்னகை பற்றிப் பேசுவோம்.

Thursday, June 11, 2009

இயற்கையின் ஸ்பரிசம்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலை இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!


கார் கால மாலையில்
செழித்த மரக்கிளையில்
பஞ்ச வர்ணக் கிளிகள் இரண்டு
சிறகுலர்த்திக் கொஞ்சுதல் போல!


வளர்த்த நாய்க்குட்டி
வாஞ்சையான அன்பினை
வார்த்தைகளின்றி வெளிப்படுத்துதல் போல!


நிர்மல வானில் பூரண நிலவு
மரங்களுக்கிடையே
குளிரொளியோடு வருவது போல!


பயமறியா இளங்கன்று
பால் குடித்துப் புல் வெளியில்
துள்ளி ஓடும் சுதந்திரம் போல!


தாய்க் கோழி குஞ்சுக்கு
தீனி கொடுத்துப் பத்திரமாய்
பருந்திலிருந்து காத்தல் போல!


சின்னச் சின்ன வாச மலர்கள்
மழைத் துளியில் சிலிர்த்தபடி
புன்னகை செய்வதைப் போல!


மழை நின்றதோர் மஞ்சள் மாலையில்
ஏரிக் கரையின் புல் வெளி ஓரமாய்
தாராக்களும் மனிதர்களும்
குடும்பங்களாய்ச் செல்லுதல் போல!


யாரோ ஒரு வழிப் போக்கன்
போகிற போக்கில்
சினேகமாய் ஒரு புன்னகையைச்
சிந்தி விட்டுப் போவதைப் போல!


மேலும் ஒரு
தாயான பெண்ணின்
முதல் புன்னகை போல!


எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலர் இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

Thursday, June 4, 2009

சின்னச் சின்னச் சந்தோஷங்கள்.....

மனம் சோர்வாக, கவலையாக,இருக்கின்ற போதுகளில்......
முயற்சித்துப் பார்க்கக் கூடியவை.

* சுடு நீரில் சுகமான ஸ்னானம்:சுத்தமான பருத்திஆடை

* கடற்கரைக்குப் போதல்; அதன் இயற்கையை ரசித்தல்

*பூந்தோட்டம் செய்தல்; களைஎடுத்தல்; பண்படுத்தல்

*வீட்டை மீண்டும் ஒருமுறை ஒழுங்கு படுத்துதல்

*ஜெபம்,தியானம்,யோகா செய்தல்

*காலார நடந்து போய் வருதல்.

*பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல்.

* தண்ணீர் குடித்தல்

*நண்பர்களோடு பேசுதல்

*உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.

*புதிய சமையல் ஒன்றை முயற்சித்துப் பார்த்தல்

* ஆண்களாயின் நண்பர்களோடு ரெனிஸ்,கிறிக்கெற் விளையாடுதல்.

*பாடல்,இசை கேட்டல்.படம் பார்த்தல்,புத்தகம் வாசித்தல்

*டையறி எழுதுதல்

*கடைகளுக்குப் போய்வருதல்

* தலை முடியை வேறுவிதமாக மாற்றிக் கொள்ளுதல், முக ஒப்பனை

*பிற்போடப் பட்டுக் கொண்டிருந்த வேலைகளைச் செய்து முடித்தல்
(உ+ம் புத்தகங்களை அடுக்குதல்,அலுமாரியில் ஆடைகளை அடுக்குதல்,குறையான தையல் வேலைகளை முடித்தல்,போன்றன)

*குழந்தைகளோடு விளையாடுதல்

*செல்லப் பிராணிகளோடு நேரம் செலவளித்தல்.

*உணர்வுகளைக் கலைவடிவமாக்கிப் பார்த்தல்.
(கவிதை,கதை,ஹக்கூ,....)

*பாதகமில்லாத புதிய ஒரு விடயத்தை தொடங்குதல்.
(உ+ம் உண்டியலில் காசு சேர்த்தல்,சமூக சேவை,நண்பர்களாகச் சேர்ந்து ஒரு விடயத்தை சாதித்தல்....)

*எல்லாம் நன்மைக்கே என்ற மனப் போக்கு.

*நண்பர்கள் வீட்டுக்குப் போய் வருதல்.

*விட்டுப் போன விருந்தாளிகளை அழைத்து சுவையான விருந்தளித்தல்

*கோயிலுக்குப் போய் வருதல்

இப்படிப் பல.

உங்களது சின்னச் சின்னச் சந்தோஷங்கள் என்ன?

உங்களுக்கு தெரிந்தவற்றைப் பின்னூட்டமிடுங்கள்.மற்றவர்களுக்கும் அது பயனுடயதாக இருக்கும்.

சின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிரம்பியிருக்கிறது வாழ்க்கை