Friday, October 26, 2012

இலக்கியச் சந்திப்பு - 8




(படத்தின் மீது அழுத்தி அழைப்பிதழைத் தெளிவாகப் பார்க்கலாம்)

Tuesday, October 23, 2012

Aajeeth......!
















இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பாடும் எல்லாக் குழந்தைகளுமே திறமைசாலிகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு பக்கம் எடுப்பதென்பதோ ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதென்பதோ இயலாத காரியம். அது உண்மையில் கொடிதான காரியம்.

ஆனாலும் என்ன செய்வது? ஆஜித் கொள்ளை கொண்டு போகிறான்.

குழந்தைகளா.... ஆஜித்தை முதல் ஐந்துக்குள் வர விடுவீர்களா....?



Friday, October 12, 2012

பதிவுலகப் பண்பாடு

” இந்த வலையுலகம் இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்களோ அது தான் உங்கள் வாழ்க்கை”

- அண்மையில் புரட்டிக் கொண்டு போன ஒரு புத்தகத்தில் இதனை வாசித்த போது ஏனையவற்றைப் போலவே இதனையும் இலகுவாகத் தாண்டிப் போய் விட்டேன்.

வாசித்தவை எல்லாம் வடிந்து போய் இந்த சிந்தனை மட்டும் ஞாபக ஏட்டில் பதிவாயிருந்ததை அடுத்த நாள் தான் உணரமுடிந்தது.இந்தப் பதிவுலகுக்கு வரு முன்னரும் பதிவுலகத்துக்குள் வந்த பின்னரும் என்று ஒரு காலப் பகுதியைப் பிரித்தால் நாங்கள் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறோம் என்பதை உணரலாம்.

அந்த இடைவெளியில் நம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் வலையுலகம் நமக்குத் தந்த பண்பாடாகிறது.

இந்த மாயப் பெட்டி ஒரு நேரம் தின்னியாக இருக்கிறது.

இந்த மாயப் பெட்டி ஒரு உறவுக் கொல்லியாக இருக்கிறது.

இந்த மாயப் பெட்டி அன்பினை இடம் மாற்றி வைக்கிறது.

இந்த மாயப் பெட்டி ஒருவனை சுவீகரித்து கொண்டு போய் விடுகிறது.

இந்த மாயப் பெட்டி பண்பாட்டைப் புரட்டிப் போட்டு விடுகிறது.

இந்த மாயப்பெட்டி மனிதர்களை கேள்விகளால் கொழுவி வாழ்க்கையை இழுத்துச் செல்கிறது.

கொட்டிக் கிடக்கும் உண்மையும் பொய்யும் நன்மையும் தீமையும் விகாரங்களும் குறைபாடுகளும் நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும் கொண்ட தொட்டுணர முடியாத தகவல் குப்பைகளுக்குள் நாம் புதைந்து போய் இருக்கிறோம்.சுதந்திரம் என்ற பெயரால் நாம் போய் கொண்டிருக்கின்ற இந்தப் பாதையில் மன உறுதி மிக்கவர்கள் மாத்திரமே திரும்பிப் போய் இருக்கிறார்கள் அல்லது தமக்கான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றய தினம் வேலைக்கு வெளிக்கிட்டு Free way யில் பயணித்த போது ஒரு மாபெரும் விபத்து எங்கோ நடந்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் நகருவதாக இல்லை. இரண்டு கிலோமீற்றர் தூரத்தை 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களையும் கொடுத்துக் கடந்த பின் வேலைக்கு சென்று சேரும் சாத்தியம் இல்லை எனக் கருதியதால் திரும்பி குறுக்குப் பாதை ஒன்றினூடாக வீடு வந்து சேர்ந்தேன்.

செய்வதற்கு வேலை ஏதும் இல்லாததால் இந்த மாயப் பெட்டிக்குள் நுழைந்தேன். ஆரம்பகால பதிவுலக நண்பர்களின் நினைவு வர அவர்களுடய பக்கங்களுக்குப் போனேன்.யாரும் இப்போது இல்லை என்ற உண்மை முகத்தில் அடித்து ஒரு உண்மையைச் சொன்னது.

ஆரம்ப காலம் என்பது எதுவாக இருந்தாலும் எப்போதும் மனதில் பதிந்து போயிருக்கும் இல்லையா? அப்படித் தான் அவர்களும் பதிவுலகின் மூலமாக எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். அவர்களுக்கு நான் பினூட்டமிட்டும் அவர்கள் எனக்கு பின்னூட்டமிட்டும்: அவர்கள் பதிவை நான் படித்தும் என் பதிவை அவர்கள் படித்தும் பரஸ்பரம் பரீட்சயமாகி இருந்தோம்.

அது அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தது.

காலப் போக்கில் வேறு வேறு பதிவர்கள் வேறு வேறு உலகங்கள் என நண்பர்களை விரிவாக்கி வேறு வேறாக வேறு பயணித்தோம். அது ஒரு வித போதை போல எம்மை ஆட்கொண்டிருந்தது. எழுத்துகளினூடாக ஒருவரை அடையாளப் படுத்துவது என்பது மிக நம்பிக்கைக்கும் உண்மைக்குமுரிய பார்வையாக நானே நிச்சயப் படுத்தியும் கொண்டேன். ( நல்ல வேளையாக முகப்புப் புத்தகத்துக்குள் நுழைந்து பார்த்ததோடு நிறுத்திக் கொண்டேன்)

நேற்றய தினம் என் ஆரம்பகால நண்பர்களைத் தேடிப் போனேன். யாரும் பதிவுலகில் இல்லை என்பது மாத்திரமில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரணமும் சொல்லாமலே போய் விட்டார்கள். ஒவ்வொரு விதமான குண இயல்புகளைத்  தம் எழுத்துக்களூடாக வெளிப்படுத்தி தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள்! குழந்தையின் மனஇயல்பு கொண்டவர்கள், நாகரிகமான எழுத்துக்களை வைத்திருந்தவர்கள், மனிதாபிமானத்தை மாண்பாகக் கொண்டிருந்தவர்கள், குறும்புத்தனமானவர்கள், மிக உண்மைத் தன்மையோடு அரசியலைப் பேசியவர்கள், குமுறியவர்கள், கும்மாளம் போட்டவர்கள், புன்னகைத்தவர்கள்,அதிசயிக்கப் பண்ணியவர்கள்..... இப்படிப் பலர்!

என்ன ஆயிற்று இவர்களுக்கெல்லாம்? ஏன் இவர்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரனமும் சொல்லிக் கொள்ளாமல் தொலைந்து போனார்கள்? தம் கடவுக் குறியை மறந்து போனார்களா? அல்லது வாழ்க்கை திசை மாறிப் போயிற்றா? இது இனி வேண்டாம் என்று முடிவெடுத்துப் போனார்களா? என்னவென்று புரியவில்லை? அவர்களின் நண்பர்களுக்குக் கூட ஏதும் சொல்லாமல் ஏன் போனார்கள்? எப்படி நாம் அவர்களைக் கண்டடைந்து என்னவாயிற்று உனக்கென கேட்பது?

தொடர்பு கொள்ள எந்த ஒரு தகவலையும் விட்டு வைக்காமல் எப்படி எம்மைக் கடந்தார்கள்?

1980களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாணத்து இரவுகள் மிக பயங்கரமானவையாக இருந்தன. திடீர் திடீர் என இளைஞர்கள் காணாமல் போனார்கள்.முதல் நாள் புன்னகைத்தவர்கள் அடுத்த நாள் எங்கென்று தெரியாத ஒரு திகீர் மனநிலை அங்கு அபோது நிலவியது. அதனைத் தான் இந்த பதிவுலக மறைவுகளும் எனக்குப் புலப்படுத்தி நிற்கிறது.

நம்மைச் சுற்றிவர இருக்கின்ற உறவுகளை, நேரத்தை, அருமையான தருணங்களை, வாழ்க்கைகளைத் தொலைத்து எந்த மாயத்தை உண்மையென்று நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம்? எந்த ஒரு பிடிமானத்தில் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று நம்புகிறோம்?

பயமாக இருக்கிறது!

சுய மதிப்பீடு அவசியமாக இருக்கிறது!!

நம்முடய வாழ்க்கை முறையச் சற்றே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது!!!

இது - இந்த வலை என்ற ஒன்று - இல்லாமல் வாழ்க்கை இனி வரும் காலத்தில் சாத்தியமா என்ற பயமுறுத்தும் கேள்விக்கு பதிலைத் தேடிய படியே இந்த மாயப் பெட்டி நம்மை - நம் வாழ்க்கையை விழுங்கி விடாமல் அவதானமாக நடந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

புகை - போதை - வலை என்று வகைப்படுத்தி  வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள சொல்லித் தருகிறது அனுபவங்கள்!

திரும்பிப் பார்க்கிறேன்: திருப்பிப் பார்க்கிறேன்:

விழித்துக் கொள்ளச் சொல்கிறது வலை!