Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; என் சிற்றறிவுக்கு எட்டிய தீர்வு - 3 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 2 - பிரச்சினையை இனம் காணுதல்

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 1 - பிரச்சினையைக் கண்டறிதல்

( இந்தப் பதிவு முன் வந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாகும். அவற்றை வாசிப்பதற்கு மேலே உள்ள தலைப்பினை அழுத்தவும்: நன்றி ) 


புலம்பெயர்ந்து வாழும் சமூகம் ஒன்றில் நற்பண்பாட்டின் மூலக் கூறுகளை

சமயம் சொல்லத் தவறி விட்ட ஒன்றை;

பாடசாலைகள் தீர்த்து வைக்க முடியாத ஒன்றை;

குடும்பங்களால் தீர்வு காணப்பட முடியாத ஒன்றை;

சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது. எவ்வாறு அறக்கருத்துக்களை பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த வழிவகைகளில் சொல்லிக் கொடுக்கலாம்? 

அதற்குப் பல வழிவகைகள் இருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த வழிவகைகளில் ஒன்றை மட்டும் சில சான்றாதாரங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களையும் என்னோடு தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவை என் பார்வைப் புலத்தை விசாலிக்கப் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் சமூகமாக இந்திய இலங்கைத் தமிழர்கள் இணைந்து ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? 

இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும் இடமாக;

கலைகள் ( இசை, நடனம், வாத்திய கலைகள்) இலவசமாகக் கற்றுக் கொடுக்கப் படும் இடமாக;

இலக்கியம் அதன் சுவை அதன் பாடுபொருளை சுவையோடு சொல்லிக் கொடுக்கும் ஓர் இடமாக,

ஓரிடமும்; 

கூடவே அங்கு நம் பாரம்பரியப் பொருட்கள் - இன்று பாவனையில் இல்லாத பொருட்கள் - பார்வைக்கு வைக்கப்பட்டு - எத்தகைய ஒரு வாழ்வு முறையை நம் மூதாதையர் பின்பற்றினார்கள்; எப்பேற்பட்ட ஆழமான பண்பாட்டு வாழ்க்கைமுறை வேரில் இருந்து நாம் வந்திருக்கிறோம்; எப்படி எல்லாம் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை பார்க்கும் விதமாக ஒரு மியூசியமும் உள்ளதாக ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ - 

இதற்கு அவ் அவ் துறையில் துறைபோகிய சமூகசேவை மனப்பாண்மை கொண்ட குருமார் அவ் அவ் கலைகளை இலவசமாக பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சினேக மனப்பாண்மையோடு  கற்றுத்தர முன் வருவார்களாக இருந்தால் அது எத்தகையதான சமூகத்தை உருவாக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவே மனதுக்கு பூரண இதத்தைத் தருவதாக  இருக்கிறது!!

சுமார் 5,6 வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண, சமான்ய தோற்றம் கொண்ட ஒரு மனிதரை என் வேலை நாளொன்றில் சந்தித்தேன். கூச்ச சுபாவத்தோடு தயங்கித் தயங்கி என்னை அணுகினார். அவரின் பெயர் சிவசோதி. யாழ்ப்பானத்தில் உள்ள ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, கொட்டைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், போர் சூழலால் துரத்துண்டு தமிழ் நாட்டில் சிலகாலங்கள் வசித்து, அதன் பின்னால் சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர். இலங்கையில் இருந்த போது அச்சகத்தில் பணியாற்றியதாகக் கூறினார். அவர் கடந்த 17.12.21 அன்று தனது பிறந்ததினத்தைக் கொண்டாடியதோடு அவரின் கொண்டாட்டப் படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதனை உங்களோடும் அவசியம் பகிர்ந்து கொள்வேன்.

சிவசோதி ஐயா தன் மனைவியோடு

சிவசோதி ஐயா தன் பேரப்பிள்ளைகளோடு

அவரைப் பற்றி நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன் வாழ்நாளில் சேகரித்த சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். ஊரை விட்டுப் புலம் பெயரும் போதும்; பின்நாளில் தமிழ் நாட்டை விட்டுப் புலம் பெயரும் போதும்; அவர் தன்னோடு கொண்டுவந்த பொருட்கள் என்னவென்றால் பழங்கால முத்திரைகள், நாணயங்கள், முதல்நாள் தபால் உறைகள், அரசால் வெளியிடப்பட்ட நாட்டுத்தலைவர்கள் குறித்த சிற்றேடுகள் போன்றவை தான்.



அரிதாக அச்சிடப்பட்ட 1 ரூபாய் தாள் 1963.6.5.
1 ரூபாய் தாளின் பின் புறம்


1974ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்து இன்று காணமுடியாத 10 ரூபாய் நோட்டு


அந்த 10 ரூபாய் நோட்டின் பின் புறம்

சுமார் 1974ம் ஆண்டளவில் புழக்கத்தில் இருந்த 2 ரூபாய் தாள்

2 ரூபாய் தாளின் பின் புறம்


பின்நாளில் வந்த 10 ரூபாய் நாணயம்



இவைகள் எல்லாம் பண்பாட்டின் கருவூலங்கள்; இன்று பார்வைக்குக் கிடைக்கப் பெறாதவை; அவைகளின் சில ஒளிப்படங்களைய் உங்கள்  பார்வைக்காகத் தருகிறேன். இது போல பல கலைப்பொக்கிஷங்கள் அவரிடம் உள்ளன.

இந்த இந்திய நாணயங்களைப் பாருங்கள்.



இந்த இந்திய நாணயங்களில் 5ம் ஜோர்ஜ் மன்னர் காலம், 1 பைசா, 1 அனா,2,3,5 பைசாக்கள், கால் அனா,1/2 ரூபா நாணயங்கள் இதில் பார்வைக்கு உள்ளன. இவை போல பல உள்ளன. ( எனக்கு இந்த பைசா, அனா, ரூபாய்களுக்கான வேறுபாடுகள் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்.) 
இவைகளோடு கூடவே புராதன தலைவர்களின் தபால் தலைகள், 1st day cover என்று சொல்லப்படும் தலைவர்களின் படம் பொறித்த தபால் உறைகள் மற்றும் அவர்களைப்பற்றி தபாலகம் வெளியிட்டுள்ள சுருக்கப் பதிவுகள் என்று ஏரளமான வரலாற்றுக் குறிப்புகள் சிவசோதி ஐயா வழியாக என் வசம் தற்போது உள்ளன.

அவை சரியான இடத்தில் வாழ்நாள் பூராக சேகரித்து அதனைப் பொக்கிஷமாகக் காத்து வந்த சிவசோதி ஐயா அவர்களின் பெயரோடு நம் எதிர்கால சந்ததிக்குப் போய் சேர வேண்டும் என்பது என் அவா. ஒரு பெரும் கனவு. 

காலங்கள் கடக்கின்றன. வருடம் ஒன்று போக வயதும் ஒன்று கூடுகிறது. மலையில் ஏறிய காலம் கடந்து, நாம் இப்போது மலையில் இருந்து இறங்கும் வாழ்க்கைக் காலத்தில் இருக்கிறோம். இருக்கும் போது பிடித்தவற்றைச் செய்து விட வேண்டும் என்றும்; அதனை காலம் தாழ்த்தாது இப்போதே செய்து விட வேண்டும் என்றும் நுணுயிர் கிருமிகளும் வாழ்க்கைப் பாடங்களும்; வாழ்வியல்புகளும் நமக்கு உணர்த்திய வண்ணமாக உள்ளன. நாம் அதனை உதாசீனம் செய்து விடக் கூடாது என்று எஞ்சி இருக்கும் வாழ்க்கை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது...

 நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதாலோ என்னவோ இவைகளின் சொந்தக்காரர் இவற்றை மகிழ்வோடு என்னிடம் தந்து வைத்திருக்கிறார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் பூதம் பொக்கிஷத்தைப் காப்பதைப் போல இவற்றைக் காத்து, காத்து வருகிறேன்.

இதனால் என்ன பயன்? இவை எல்லாம் சமூகத்துக்குப் பயன்படும் போது தானே அது எல்லோருக்கும் பயனுடயதாகும்!!

கூடவே என்னிடமும் சில மூதாதையர் பயன் படுத்திய பொருட்களை பெரும் முயற்சி எடுத்து தாயகம் போன ஒரு விடுமுறை நாளில் உருக்குப் பட்டறைகளில் இருந்து மீட்டெடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். 

இவைகளையும் கூட உங்கள் பார்வைக்கு தருகிறேன்.












இவைகள் எல்லாவற்றையும் கூடவே ஒவ்வொரு ஈழ, தமிழகத் தமிழர்களும் ஊருக்குப் போய் வரும் போது கண்டெடுத்து வரும் அரும் பொக்கிஷங்களையும் ஓரிடத்தில் - அதாவது இந்த - தமிழர் கலாசார இல்லத்தில் - பார்வைக்கு வைத்து, மாணவர்களின் பார்வைக்கு வைத்தால் அது சமூகத்தில் கலைவழி கற்றலினாலும் பார்வை வழி புரிதலினாலும் அறிதலின் வழி ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வராதா?

அதற்கு நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?

இந்தப் புது வருடத்தில் அதற்கு ஒரு வழி கிட்டாதா?

......................

எல்லோருக்கும் இன்னும் இரு நாளில் மலர இருக்கின்ற 2022 புதுவருட நல்வாழ்த்துக்கள்!

காலம் காயங்களை ஆற்றி எல்லோருக்கும் நல்வழி காட்டட்டும்!

மனிதம் மலரட்டும்!!

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; இனம் காணல் - 2 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையை கண்டறிதல் - 1 -

( முதல் பகுதியை வாசிக்க மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.)

சரி, அப்படி என்றால் அதனை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க என்னதான் செய்ய வேண்டும்? 

நாம் பாடசாலைகளை நிறுவி இருக்கிறோம்; கோயில்களைக் கட்டி இருக்கிறோம்; நடை, உடை பாவனைகள், உணவு முறைகள், பண்டிகைகள் எல்லாவற்றையும் முடிந்தவரை பின்பற்றுகிறோம். இனி என்னதான் செய்வது என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

குடும்ப அலகில் இருக்கும் நாம்  ஒரு குடும்பச் சூழலில் ஒரு முக்கியமான வேலை ஒன்றைச் செய்ய நாம் தவறிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

அது, அறத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பது தான். 

அறத்தோடு நின்ற வாழ்க்கை நமது. சங்க காலத்து காதல் வாழ்வில் இருந்தே நமக்கு அதற்கான ஆழ வேர்கள் விரவி விருட்சமாகி நம் பண்பாட்டில் தளைத்து நிற்கிறது. இன்றய தமிழில் எளிமையாகச் சொல்வதாக இருந்தால் ‘மனச்சாட்சியோடு இருத்தல்’, மனிதத்தன்மையோடிருத்தல்  என்று இலகுவாக அதனைத் தெளிவு படுத்தி விடலாம். 

இதனை தமிழ் பாடசாலைகள் கற்றுக் கொடுக்கவில்லை; கோயில்கள் கற்றுக் கொடுக்கவில்லை; பண்டிகைகளோ கொண்டாட்டங்களோ கற்றுக் கொடுக்கவில்லை; கூடவே குடும்பங்களும் அதனைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இது கற்றுக் கொடுத்து வருவதா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம்; இங்கு அதனை நாம் கற்றுக் கொடுத்துத் தான் ஆகவேண்டும். ஆங்கிலப் பாடசாலைகளில் அதன் கல்வி முறைகளில் தனி மனித சுதந்திரம்; தனிமனித சிந்தனை; முயற்சி அதன் வழி பெறப்படும் வெற்றி என்பது முதன்மைப் படுத்தப் படுமிடத்து; இல்லங்களில் பணத்தின் வழி பொருட்கள் நிறைந்து அன்பு பற்றாக்குறையாகிப் போகுமிடத்து; இரு பண்பாட்டுக்குள் வாழும் ஒரு குழந்தை அறத்தைக் கற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சுயநலம் மேலோங்கும் சாத்தியம் தானே அநேகம்....விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது; சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது; ஒரு பொருளின் அருமை புரியாது; அன்பு என்பதன் வலிமையும் அதன் தார்ப்பரியமும் புரிந்து கொள்ளப்படாததாக ஆகி போயிருக்க தன்னை மையப்படுத்தியதாக ஒரு குழந்தை வளரத்தானே சாத்தியம் அதிகம்...

இவற்றுக்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? சமூகமாக நாம் இணைந்து இதற்கு என்ன செய்யலாம் என்பது இன்று நமக்கு முன்னால் உள்ள சவால்.

பண்பாட்டின் வேர்களை இன்னும் ஆழமாகச் சொல்ல கல்விச்சாலைகளை விட வேறென்ன வழிவகைகள் உள்ளன? கவர்ச்சியாக; விரும்பும் படியாக; அவர்களின் ஆர்வத்தை ஊட்டும் படியாக;  பார்வைப் புலன் வழியாக பார்த்து; ஸ்பரிசித்து; உணர்ந்து பார்த்து, இளம் சமூகத்துக்கு ஒரு கருத்தினைக் கொண்டு செல்ல இருக்கும் வேறு வழி வகைகள் எனென்ன?

இது தான் நமக்கு முன்னால் இன்று நமக்குள்ள கேள்வி.

தொடரும்.....

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையைக் கண்டறிதல் - 1 -

 வருடம் ஒன்று நிறைவடையப் போகிறது. 2021 போய் 2022 வர இருக்கிறது.

கடந்த இருவருடங்கள் கொரோனா பேரிடர் பல வாழ்க்கைத் தத்துவங்களை நமக்குச் சொல்லி வருகிறது.  நாடுகள் ஒற்றுமையாக இணைந்து இந்த வைரஸைத் துரத்தினாலொழிய அதனை இப்போதைக்கு இல்லாது செய்ய முடியாது என்பதை அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் ஆழும் அரசுகளுக்கும் அது அடித்து அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனை செவிசாய்க்க எந்த வல்லரசு நாடுகளும் தயாராக இல்லை. ஆபிரிக்காவின் அழுகுரலை; தமக்கு முதலாவது தடுப்பூசியே போதுமான அளவு கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதன் ஈனக்குரலை யாரும் செவிமடுப்பதாக இல்லை. நாமோ போதுமான அளவு தடுப்பு ஊசியினை போட்டுவிட்டுக், கையிருப்பிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது ஊசிக்கும் நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் வளங்களைச் சுரண்டி எடுத்து வந்து விட்டு அவர்களை ஏழைகளாக வைத்திருந்தபடியே அவர்கள் மீது எந்த இரக்கமோ மனசாட்சியோ இல்லாது ஒதுக்கி வைத்திருக்கிறது முதலாம் உலக நாடுகள்; இன்று வரை.  அவர்கள் மீதான குறைந்த பட்ச இரக்கத்தை; மனிதாபிமானத்தை; நீதியை தர மறுக்கிறது அது!  

போதாததற்கு மூன்றாவது ’ஒமிக்குரோன்’ வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லி அவர்களுடனான போக்குவரத்து தொடர்புகளை முற்றாகத் துண்டிக்கிறது ஏனைய நாடுகள்.... பாவம் ஆபிரிக்கா....நாங்கள் எப்போது இயற்கையிடம் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்... எப்போது சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்று ஒற்றுமையாக எல்லோரையும் அரவணைத்துப் போகப் போகிறோம்... தெரியவில்லை.

சரி, நாம் இதற்கு என்ன செய்யலாம்? அதுவும் தெரியவில்லை...கிடைத்திருக்கிற இந்த வீட்டில் சும்மா இருக்கிற தன்மை அடுத்த வருடமும் நீடிக்கப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

இந்த lockdawn காலப்பகுதி கொஞ்சம் படிப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் எதிர்கால பார்வை நோக்கி என்னைத் திருப்பியது.

இது ஒரு பின்னணி.... இனி விடயத்துக்கு வருகிறேன்,

.......................

சிலப்பதிகாரத்தில் ஓரிடம்,

கண்ணகி பாண்டியன் வாயிலில் வீராவேசத்தோடும் கோபம் நிறைந்த துக்கத்தோடும் அறச் சீற்றத்தோடும் வாசலுக்கு வருகிறாள். காவலன் அவளை மறித்து நீ யார் என்று கேட்கிறான். அதற்கு அவள்,

’தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று சொல்லி விட்டு,

’எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார்என் பதியே’ 

என்று ஆரம்பிக்கிறாள். எது என் நாடு; எது என் தாயகம் என்பது அவள் சொல்லும் முதல் கூறு. அதிலும் ஓர் அடைமொழி வைக்கிறாள். எத்தகையது என் நாடு தெரியுமா? அழும் மாட்டுக்கும் நீதி வளங்கிய அறம் கொண்ட நாடு அது என்கிறாள்.அதன் பிறகு தான்,

’அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி’

என்கிறாள். அதாவது, அந்த ஊரில் உள்ள பெருங்குடிமக்களான வணிகனான மாசாத்துவானின் மகனை மணந்து ஊழ்வினை துரத்தியதால் உன் நகருக்கு வந்து சிலம்பை விற்கப் போனதால் கொலைக்களப்பட்ட கோவலனின் மனைவி நான் என்கிறாள்.

இந்தத் தன்மை தமிழ் மொழிப் பண்பாட்டில் மட்டுமல்லாது சமஸ்கிருத மொழிப் பண்பாட்டிலும் இடம்பெற்றே வந்திருக்கிறது. பிராமணப் புதல்வனான அறிவில் சிறந்த கவி புனையும் ஆற்றலும் நடிப்பு வல்லமையும் கொண்ட அஷ்வகோஷ் என்பான்  பிரபா என்கிற கிரேக்கப் பெண்ணைக் காதலித்து, கிரேக்க நாடக உத்திகளை பிராகிருத மொழிக்கு ( சமஸ்கிருதத்திற்கு முற்பட்ட மொழி வழக்கு) கொண்டுவந்து இந்தியாவின் முதல் நாடக ஆசிரியனாக வரலாற்றில் புகழப்படும் (ஊர்வசி வியோகம்’ என்பது பிராகிருத சமஸ்கிருத கலப்போடு எழுதப்பட்ட முதல் நாடகம்) அஷ்வகோஷ் பிராமணீய தத்துவங்களை எல்லாம் கற்றுத்தேர்ந்து அதன் சாதி குறித்த  பாதகங்களை உணர்ந்து பின்நாளில் புத்த தத்துவங்களால் கவரப்பட்டு பெளத்தனான, அறிவாற்றல் மிக்கவனான  அஷ்வகோஷ் தன் சிருஷ்டிகளில் எல்லாம் முடிவில் தன் கையொப்பத்தை இடும் போது, “ சாகேதத்தைச் சேர்ந்த, ஆர்ய சுவர்ணாட்சியின் புதல்வன் அஷ்வகோஷ் எழுதியது” என்று எழுதி தன் பெயரோடு கூட தான் பிறந்த சாகேதத்திற்கும் பெற்றெடுத்த தாய் சுவர்னாட்சிக்கும் சிரஞ்சீவித்தன்மையை ஏற்படுத்திவிட்டான் என்று கூறப்படுகிறது. (வொல்காவில் இருந்து கங்கை வரை - பக் 318 - 345 )

இந்தியப் பெரும் பரப்பில் வரலாற்றால் அறியப்படும் இவர்கள் இரண்டு பேரும் இரு பெரும் பண்பாடுகளின் முகவர்கள். அதாவது கண்ணகியும் அஷ்வகோஷும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் தாம் பிறந்த நாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

தாயகம்; நாம் பிறந்த பொன்னாடு என்பதற்கு அத்துணை மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் வரலாற்றினால் அறியப்படும் அளவுக்கு மனித மனங்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

அதற்கு புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடி வந்திருக்கும் நாம் என்ன விதிவிலக்குகளா என்ன!!

காலமாற்றத்துக்குள்ளாகி எண்ணிம (டிஜிட்டல்) உலகில் அறிவினாலும் போரினாலும் இன்னபிற காரணங்களாலும் புதிய நாட்டொன்றுக்கு வந்திருக்கிற நாம், அடுத்த இரண்டு சந்ததிகளை புதிய தாயகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிற நாம், நம் தாயக சிந்தனையை அதன் பண்பாடு பாரம்பரிய நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை எப்படி அடுத்த சந்ததிக்கு கொடுக்கலாம் என்பது பெரும் சவாலாகி வரும் இந் நாட்களில்; பிள்ளைகள் பல புதிய பண்பாட்டு மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ள ஏனையவர்களோடு பழகும் வாய்ப்பும் கலப்பு மணங்களும் கூடிவரும் இந் நாளில், இதெல்லாம் தேவையா என்று கேட்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான். தேவையா தேவை இல்லையா என்ற கேள்விக்கப்பால் இருவேறு பண்பாட்டுக்குள் திருமணம் வழியாக இணையும் உள்ளங்கள் எந்த இடத்தில் தம் சமநிலை புள்ளியை வைத்திருக்கப் போகிறார்கள் என்பது திருமணத்துக்குப் பின்பான சவால்களுக்கப்பால் இவர்கள் கண்டடைய வேண்டி இருக்கிற மேலதிக சவால்.

இதனைச் சவால் என்று பார்க்காமல் அது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற தனி வாய்ப்பு என்றும் கருதலாம். அவர்களின் முன்னே ஒரு பிரச்சினையைத் தீர்க்க இரு பண்பாடு சொல்லிக் கொடுத்த  வழிமுறைகள் முன்னால் இருக்கின்றன. அது ஒரு பெரிய வரப் பிரசாதம் தான்.

ஆனால், அதனைத் தெரிவதற்கு அவ்வப் பண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்தப் புதிய பண்பாட்டுக்குள்ளும் நாம் நிலை பெற்று நிமிருவதற்கிடையில் எண்ணிமப்புரட்சி நடந்து தொழில்நுட்பமும் நம்மை கட்டுப்படுத்தி வரும் சூழலில் இந்த புதிய சந்ததியினரின்  நிலை என்ன?

அதற்கு நாம் எத்தகைய வழிகாட்டுதல்களை வழிகளை அவர்களுக்குக் காட்டி இருக்கிறோம் என்பது தான் நமக்கு முன்னால் இருக்கின்ற பெரும் கேள்வி. ஆம் கோயில்கள் கட்டி இருக்கிறோம், மொழிப் பாடசாலைகளை உருவாக்கி இருக்கிறோம், அறிவகம் உண்டு, சமூக வானொலிகள் உண்டு, பண்பாடு சொல்லிக் கொடுத்த உணவு, உடை, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் சில பல குறை நிறைகளோடு. அது மட்டும் அவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளப் போதுமா?

இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தோற்றங்களின் வழியாக; பார்வைப் புலன்களின் வழியாகவே பலவற்றையும் உள்வாங்குகிறார்கள். கற்றுக் கொடுத்தலும் மொழியும் அவர்களை சலிப்படையச் செய்வனவாக உள்ளன. பொதுவாகவே விரைவாக ஒன்றில் சலிப்படைந்து விடுகிற தன்மை இளைய சந்ததியிடம் பரவலாகக் காணப்படுகிறது. 

நாம் சந்ததியினர் ஒன்றினைப் பெறக் கடினமாகப் போராட வேண்டி இருந்தது. அதன் காரனமாகவோ என்னவோ அதன் பின்னால் கிடைக்கும் அந்தப் பொருள் அருமையானதாக போற்றத்தகுந்ததாக இருந்தது அன்று.ஆனால்  இன்றோ முயற்சி எதுவும் செய்யாமல் விரைவாகவே வேண்டியதை பெற்றுவிடும் வாய்ப்பு வந்து விட்டதால் அதன் அருமை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகி விரைவில் சலிப்படையச் செய்து விடும் ஒன்றாக மாறி விடுகிறது போலும்! 

இங்கு இருக்கிற சொகுசான வாழ்வு; கடின உழைப்பு என்பதை; சிக்கனம் என்பதை கற்றுக் கொடுக்கவில்லை. அன்பு, பற்று, பாசம், அக்கறை என்பதை காட்ட பண்பாடு கற்றுத்தரவில்லை. ‘ஒருவருக்காக நிற்றல்’ என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது. பாசம் பணத்தால் நிறுக்கப் படுகிறது. அறம் என்பது பற்றிய புரிதல்கள் இல்லாதே போயின. சுயநலம், பணபலம் இவைகளால் பெறுமதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழின் மூல சொத்தே ‘அறம்’ தான் இல்லையா?

இவைகளை நாம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

 ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? என்று  ஒருசாரார் கேட்கக் கூடும். வாழ்க்கை முறை மாறினாலும் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் மனித ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒன்று தான்.இரத்தமும் வியர்வையும் ஒன்றுதான் என்று சொல்வார்களே அது மாதிரி.  இழப்புகள், விபத்துகள், துன்பங்கள், இன்பங்கள், நோய்கள், பிறப்புகள், இறப்புகள் எல்லாம் எல்லோருக்கும் ஒன்று தானே!

இவைகளை எதிர்கொள்ளும் அணுக்க வழிமுறைகளை ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு விதமாக  கற்றுக் கொடுக்கின்றன. ஒரு தமிழன் பிரச்சினை ஒன்றை அறத்தின் வழியாக அணுகுகின்றான். ஒரு மேலைத்தேய பண்பாட்டினன் தன்னம்பிக்கையின் வழியாக அணுகுகிறான். மத்திய தேசத்தவன் மத நம்பிக்கையின் வழியாக ஆறுதலை கண்டடைகிறான். ஆசிய நாட்டவன் விடாத முயற்சி, பயிற்சி மற்றும் வேறொன்றில் மனதைச் செலுத்துதல் வழியாக சம்பவத்தை மறக்க முயல்கிறான்.

இவ்வாறாகப் பண்பாடுகள் சொல்லிக் கொடுக்கும் மூலோபாயங்கள் வேறு வேறானவை. அவைகளை - குறைந்த பட்சம் நம் பண்பாடு நமக்குச் சொல்லிக் கொடுத்த அணுகு முறைகளை அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோமல்லவா? 

எப்படி இதனைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

ஓர் இளங்குடும்பம் - அவளது கணவனை அவளின் நெருங்கிய தோழி சுவீகரித்துக் கொண்டு சென்று விட்டதோடு மட்டுமன்றி அவளின் வீட்டுக்கருகிலேயே தலை நிமிர்ந்து வாழவும் செய்வதை அண்மையில் கண்கூடாகக் கண்டேன்.

புற்றுநோய் வந்துவிட்ட இரண்டு பிள்ளைகளின் தாயொருத்தியை அப்படியே விட்டு விட்டு தன் பள்ளிக் காலக் காதலியை முகப்புப் புத்தகத்தில் கண்டுபிடித்து அவளோடு உலகம் சுற்ற போன ஒரு கணவனை என் வேலைத்தலத்தில் கண்டேன்.

இவ்வாறெல்லாம் செய்யத் துணிவதற்கு எது காரணமாயிற்று என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

பண்பாடு பற்றிய அறிதலில் ஏற்பட்ட வெற்றிடம்.

அந்த வெற்றிடம் ஒன்றே தான்! 

தொடரும்......

Sunday, January 22, 2017

ஒலி வடிவில் ஒரு கலை வலம்

வருகிற வியாழக்கிழமை 26.1.17 அன்று மாலை யாழ்நிகழ்வரங்கில் கீதா.மதிவாணனின் ‘என்றாவது ஒரு நாள்’ - அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு வைக்கப் பட இருப்பது நீங்கள் அறிந்ததே!

இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரச ஊடக வானொலியில் (சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது) கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்தது.

அவ் ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.

கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)

ஒலிவாகனம் ஏறி அகிலமெல்லாம் ‘கலைவலம்’ செய்ய வைத்த கலைஞ உள்ளங்கள் அனைவருக்கும் நம் மனம் நெகிழ்வான நன்றிகளைச் சொரிந்து மகிழ்கிறோம்.........
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ciinnnttvnnninnn-aavi?language=ta

“சீனத்தவனின் ஆவி”

Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெரும் எழுத்தாளர். அவரின் உருவப்படத்தை ஆஸ்திரேலிய பணத்தில் அச்சிடுமளவு அவர்மீது இந்த தேசம் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது. Lawson எழுதிய சிறு கதைகளை தமிழில் மொழிபெயர்த்து என்றாவது ஒருநாள் என்ற தலைப்பில் எதிர்வரும் 26ம் திகதி புத்தகமாக வெளியிடுகிறார் கீதா மதிவாணன் அவர்கள். அந்தச் சிறுகதைகளில் சீனத்தவனின் ஆவி எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றேணுகா துரைசிங்கம்.

Wednesday, December 21, 2016

’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -


இனிய தமிழ் இலக்கிய உள்ளங்களே!

வருகிற புது வருடம் உங்கள் எல்லோருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எடுத்து வருவதாக!

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடும் என் தமிழோடும் பயணித்த உங்கள் எல்லோருக்கும் என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறேன்.

புது வருடம் என்னவெல்லாவற்றையும் எடுத்து வரும் என்பது நத்தார் பாப்பா கொண்டு வரும் பரிசுப் பொருள் போல புதினமானது.

இருந்த போதும், ’முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமெல்லோ’? என் அன்புத் தோழி கீதாவின் / கீதா.மதிவாணனின் முதலாவது புத்தக வெளியீடு நம் அமைப்பான உயர்திணை ஊடாக முதலாவது புத்தக வெளியீடாக எதிர் வரும் தைத் திங்கள் 26ம் திகதி அவுஸ்திரேலிய தினமான விடுமுறைநாளாக இருக்கும் வியாழன்று வெளியிட இறையருள் கூடி இருக்கிறது.

கீதாவின் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பிலக்கிய வகை சார்ந்தது. அவுஸ்திரேலியாவின் செவ்வியல் எழுத்தாளரான ஷென்றி லோஷனின் அவுஸ்திரேலியாவுக்கு ஆங்கிலேயர்கள் புலம்பெயர்ந்து வந்த போது அவர்கள் எதிர் கொண்ட சவால்கள்/ வாழ்வியல்கள்/ பாடுகள் / பண்பாடுகளைப் பேசுகிறது. 

தமிழ் இலக்கியத்துக்கு இது வரை வெளிவந்திராத புதுவகை வாழ்வியல் அறிமுகம் இது. எளிய தமிழில் ஒரு பண்பாட்டையே தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழின் ஆழுமை கதைகள் எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்ததால் தமிழுக்கு சாத்தியமாகி வரும் இத்தகைய புதிய இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்றய தினம் அவுஸ்திரேலியா என்ற தேசம் உருவாகிய காலத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குறும் படம் ஒன்றும் காட்டப்பட இருக்கிறது. இவை அக்கால வாழ்வியலை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பது நம் நம்பிக்கை.

நிகழ்ச்சி நிரல் விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப் படும்.

வர முடிந்தவர்கள் வாருங்கள்....
         வர வேண்டும்.....

Saturday, May 14, 2016

இலக்கியச் சந்திப்பு - 25


வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?


பல மாதங்கள் வெறுமனே கடந்து போயின...புலம்பெயர்ந்த நாடுகளில் வேலையும் வாழ்க்கையும் நம் எல்லோரையும் ஓடிக்கொண்டே இருக்கப் பண்ணியதில் பல மாதங்கள் நம் சந்திப்புக்களை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது.


இருந்த போதும் பல இலக்கிய நிகழ்ச்சிகளும் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் வாராந்த மாதாந்த கூட்டங்களும் சிறப்பாக இங்கு நடந்த வண்ணமே உள்ளன. அவைகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதிலும் புளகாங்கிதம் அடைய வைப்பதிலும் தம் பங்கினை செவ்வனே ஆற்றியும் வருகின்றன. அங்கு நாம் சந்திக்கிற அன்பர்கள் எப்போது அடுத்த சந்திப்பு எனக் கேட்ட வண்ணமாகவே இருந்தனர்.நீங்கள் எல்லோரும் நம்மோடு பக்க பலமாக இருக்கிறீர்கள் என்பதை அப்போதெல்லாம் அறிந்து மகிழ்ந்தோம்.


இத்தோடு அண்மையில் ஈழத்தில் இருந்து இங்கு விஜயம் செய்திருக்கும் கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்கள் அவரது 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.


அவரைச் சிறப்பிப்பதோடு அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் முகமாக ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கிறோம். “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” என்பது சம்பந்தமாக அவரது பேச்சு அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து கருத்துக்களுக்கும் அனுபவப்பகிர்வுகளுக்கும் தக்க களமும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


ஈழத்து இலக்கிய மரபும் அது காலா காலங்களில் எவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது என்பதும் இன்றய கால கட்டத்தில் அது எவ்வாறான போக்குகளைக் கொண்டிருக்கிறது என்பதும் ஈழத்து இலக்கியம் சம்பந்தமாக ஒரு ஒரு சிறந்த பார்வையை அது நமக்குத் தரும் என்பது நமது நம்பிக்கை.

அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப் படும். அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.


இந் நிகழ்வு சிறப்புற உங்கள் வரவை வேண்டி நிற்கிறோம்.


இந் நிகழ்வின் ஊடாக ஈழத்து இலக்கிய மரபு பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டமும் நமக்கே நமக்கான கலை வடிவமான கூத்தின் பாரம்பரிய சிறப்பினையும் கண்டு நம் பண்பாட்டின் வேர் பற்றிய தெளிவோடும் பயனோடும் நாம் இந் நிகழ்வினை நிறைவு செய்வோம் என்பது நம் நம்பிக்கை.


எல்லோரும் வாருங்கள்.

நடை பெறும் இடம்:Mayura Function and Event Center,

54 - 47, Boomereng Place, SEVEN HILLS - 2147
( புகையிரத நிலையத்திற்கு முன்பாக)

காலம்: மாதாந்த இறுதி ஞாயிறான 29.05.2016

நேரம்: 3.00 - 6.00 (நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பமாகி சரியான நேரத்திற்கு நிறைவு பெறும்)

உங்கள் எல்லோரது வரவையும் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறோம்.
நன்றி.

Monday, August 17, 2015

இலக்கிய சந்திப்பு - 23


அன்பான இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

பல இலக்கிய உள்லங்கள் ஏன் இலக்கிய சந்திப்பு நிகழ்த்த வில்லை? இம்மாதம் இலக்கிய சந்திப்பு உண்டா என நேரிலும் தொலைபேசி மூலமாகவும் கேட்டிருந்தார்கள். ஆம். கடந்த சில மாதங்களாக நம் சந்திப்பு நிகழ இயலாமல் போனமைக்கு குளிர்காலம் ஆரம்பித்தமை ஒரு பிரதான காரணம்.நாம் பூங்காவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் குளிர்காலத்துக்கு அது தோதாக இல்லாமை ஒரு காரணம். கணப்புகளுடன் கூடிய மூடிய கூடாரங்களைப் பெற்ருக் கொள்வதன் சிரமங்கள் இன்னொரு காரணம்.

இதோ சற்றே மெல்ல சூரியன் வெளியே வர தொடங்கி விட்டான்.

நீண்ட குளிர் காலத்தின் பின் மீண்டும் ஒரு மாலையில் சந்திக்க இருக்கிறோம். இன்னும் குளிர் முற்றாகத் தீராத போதும் சில இலக்கிய நண்பர்களின் விருப்பின் பேராலும் தூண்டுதலின் பேராலும் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும் நம் சந்திப்பை 4.00 மணியாக முன்னாக்கி நிகழ்த்த முடிவு செய்திருக்கிறோம். பின்னாலும் விரைவில் குளிர் ஆரம்பித்து விடும் என்பதால் ஒரு மணி நேரத்துக்குள் முடித்து விடவும் தீர்மானித்திருக்கிறோம்.

இம்முறை ஈழத்துக் கவி மொழி பற்றியதாக நம் கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். ஈழத்துக் கவிதைகள் அதன் பொருளடக்கத்திலும் சொல்லும் முறையிலும் தாய்தமிழ் நாட்டின் அடிப்படையில் இருந்து காலத்துக்குக் காலம் தனித்துவமாகவும் வேறுபட்டும் சில வேளைகளில் ஒன்று பட்டும் விளங்கி வந்திருக்கிறது. ”இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி” என்பதற்கிணங்க சமூக வாழ்வும் அதன் அரசியல் பொருளாதார பின்னணிகளும் கவிதைகளில் எவ்வாறு பிரதி பலித்திருக்கின்றன என்ற பார்வை நமக்கு புது பரிமானங்களின் தரிசனங்களைத் தரலாம். உங்கள் ஒவ்வொருவருடய பார்வைகளும் நம் கண்களுக்கு புலனாகாத புதிய பக்கங்களை கானச் செய்யும். அதனால்,ஈழத்துக் கவிதைகளின் களமும் வளமும் பலமும் பலவீனமும் பற்றிய ஒரு அலசலாக இம்மாத சந்திப்பை அமைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

இலக்கிய ஈடுபாடுடய அன்பர்கள் தயவு கூர்ந்து அவை பற்றிய உங்கள் பார்வைகளை; படித்ததை; மனதில் பதிந்ததை; அல்லது மறுப்பதை அன்றேல் முரண்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள். 

பல மாத இடைவெளிக்குப் பின் உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடையோம்.

தமிழால் இணைந்திருப்போம்.

Thursday, July 16, 2015

தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி




தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
 பரிசு 3000.00 உருவா

கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்.
பொறிஞர்இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500

க.தமிழ்மல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்.

இங்கு வரும் என் நண்பர்கள் பலர் தனித்தமிழில் வாஞ்சையும்  வல்லமையும் கொண்டிருப்பதோடு சிறுகதையை கலை நயத்தோடு நெய்யவும் வல்லவர்கள்.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் போல விபுலானந்த பெருந்தகையின் எளிமை கூட்டி மலர இருக்கும் கதைகளுக்கு முன் கூட்டியே என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.



Tuesday, January 6, 2015

இலக்கிய ஒன்றுகூடல் - 25.1.15


uyarthinai - logo
இலக்கிய உள்ளங்களே!
எல்லோரும் நலம் தானா?
நீண்ட மாதங்களின் பின்பான சந்திப்பு.
மீண்டும் ஒரு வருடத்தைத் தாண்டி இருக்கிறோம். புதிய வருடம் ஒன்றின் ஆரம்பத்தில் நின்றபடி கடந்த வருடத்தைத் திரும்பிப் பார்க்கையில் சொல்லக்கூடிய நிகழ்வுகளாக பல புதிய முகங்களின் அறிமுகங்களையும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள் பற்றிய மேலதிக புரிதல்களையும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரை சந்திக்கின்ற வாய்ப்பும் தனித்துவமான உரையாடல் களங்களையும் வலுவான இலக்கியப் பிணைப்பையும் தந்த ஒரு வருடமாக கடந்த வருடம் அமைந்திருந்தது.அதிலும் குறிப்பாக தனபாலசிங்கம் ஐயா அவர்களின் பிரசன்னமும் அவர் எழுப்பிச் சென்ற அலைகளும் கடந்த வருடத்தின் முக்கிய பாகமாய் இருந்தன. சுமார் 25 பேருக்கு மேல் கலந்து கொண்ட திரு சத்தியநாதன் அவர்களின் பரிசு பெற்ற சிறுகதை பற்றிய விமர்சன சந்திப்பு பல எழுத்தாளர்களைச் சந்திக்கப் பண்ணிய வெற்றி நிகழ்வாகவும்; உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை வசீகரித்த நிகழ்வாகவும்;கடல்கடந்த; மாநிலம் கடந்த எழுத்தாளர்களை ஒன்றுகூட்டிய நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
ஒவ்வொரு மாதமும் கிரமமாக சந்திப்பினை நடத்த முடியாமல் போன இயலாமையையும் கட்டாயமாக இங்கு குறிப்பிடாக வேண்டும். அதிலும் குறிப்பாக இரண்டு இலக்கிய ஆளுமைகளை கடந்த வருட இறுதியில் நாம் இழந்திருந்தோம். ஒன்று காவலூர் இராசதுரை அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம். மற்றொன்று எஸ்போ ஐயா விட்டுச் சென்ற இடைவெளி.இவர்கள் விட்டுச் சென்றிருக்கிற இடைவெளிகள் பற்றிய; பங்களிப்புப் பற்றிய; இலக்கிய சாகரத்தில் அவர்கள் எழுப்பிச் சென்றிருக்கிற அலைகள் பற்றிய ஆளுமை அலசல்களும்; நமக்கு முன்னால் இருக்கிற கடமைகள் பற்றியும்  நாம் கலந்துரையாடக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதே வேளை நம் கன்பராக் கவிஞை ஆழியாழ் கடுகு போல; ஒரு மிளகு போல கைக்கடக்கமான ’கருநாவு’ என்றொரு கனதியான கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். அது போல விண்வெளியியல் பற்றிய ஆராய்ச்சியில் கலாநிதிப் பட்டம் பெற்று சிட்னி பக்லலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராக மிளிரும் கலாநிதி.பிரவீனன் ’ஏலியன் கதைகள்’ என்ற விஞ்ஞானக்கதைகளை புத்தகமாக்கி தமிழுக்குத் தந்திருக்கிறார். பரத நாட்டியத்தில் மற்றய இனத்தவரின் ஆடல்கலைகளையும் ஏனைய நமக்கான ஆடல்கலைகளையும் வரலாற்று வடிவங்களையும் கலந்து நாட்டியக்கலையில் இன்னொரு பரிமானத்திற்கு நாட்டியத்தை நகர்த்திய நாட்டியக்கலாநிதி. கார்த்திகா கணேசர் இரண்டு நாட்டியக்கலைகள் சம்பந்தமான புத்தகங்களைத் தந்திருக்கிறார். தாவரவியலில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் ‘கறுத்தக் கொழும்பான்’ என்றொரு புத்தகத்தினூடாக புதிய இலக்கிய வகை ஒன்றைத் தமிழுக்கு பரீட்சயப்படுத்தி இருக்கிறார். இளம் எழுத்தாளராக இணைய உலகில் பிரபலமாகி வரும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருக்கும் ஜேகே அவர்கள் போராட்ட கால இளையோரின் ஒரு காலகட்ட வாழ்வை புனைவினூடே ஓர் வரலாற்றனுபவமாக நமக்கும் இனி வருவோருக்கும் ‘கொல்லைப்புறத்துக் காதலிகள்’ என்ற பெயரில் தனக்கே உரிய பாணியில் தனித்துவமாகத் தந்திருக்கிறார்.( 2012இன் தொடக்கத்தில் நம் சந்திப்பினை ஆரம்பித்த போது “உயர்திணை” என்ற பெயரை நம் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தவரும் அவரே.) கீத மஞ்சரி அவுஸ்திரேலிய நாட்டு பழங்குடியினரின் கதைகளை மொழிபெயர்த்து தமிழுக்கு புது மகுடம் சூட்டி இருக்கிறார்.
இவை அனைத்தும் கடந்த அரேவருட இறுதி அளவில் வெளிவந்திருக்கின்றன. இவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியத் தமிழர்கள். புலம்பெயர் இலக்கியத்துக்கும் கலைக்கும் வளம் சேர்த்திருக்கிற சிற்பிகள்.புதிய தலைமுறை எழுத்தாளுமை மிக்க கலைஅஞர்கள்.செதுக்கி செதுக்கி இவர்கள் தந்திருக்கிற கலைக்கருக்கள் நேர்மையோடும் அழுத்தமாகவும் விமர்சனத்தோடும் ஆழத்தோடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடும் அணுகப்பட்டு அதன் இருப்பு; அதற்கான சிம்மாசனம் கொடுக்கப்படுதல் நிச்சயிக்கப்பட வேண்டும்.அவை தமிழுக்கும் புலம்பெயர் இலக்கியத்திற்கும் புதுச் செழுமை சேர்ப்பவை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அவற்றிற்கு பரவலான அறிமுகம் கிடைக்க ஏற்றன செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொன்றும் தனித்துவமான தனித்தனி முத்துக்கள். தமிழின் பல்வேறு பக்கங்களை செழுமை செய்பவை.அழகூட்டுபவை.
புலப்பெயர்வின் அழகுகள்! 
நமக்கு முன்னால் பல கடமைகளும் சுகமான சுமைகளும் அனுபவிக்கப்படக் காத்திருக்கின்றன.
புதிய வருடம் மலர்ந்திருக்கிறது. அதன் முதலாவது சந்திப்பை  நாம் எல்லாம் சந்திக்கும் ஓர் ஒன்றுகூடலாகவும் அதே நேரம் இவ்வருடத்தை திட்டமிடும் ஒரு கலந்துரையாடலாகவும் அமைக்க எண்ணி உள்ளோம்.
ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்!
இம்மாத இறுதி நீண்ட வார விடுமுறையாக இருப்பதனால் பலரும் உங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ந்திருக்கப் பிரியப்படுவீர்கள். மேலதிகமாக ஒரு நாள் ஓய்வொன்றினையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அதனால் இம்மாத நம் சிற்றுண்டியோடு கூடிய ஒன்று கூடலையும் கலந்துரையாடலையும் திட்டமிடலையும் 25.1.1015 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 - 7.00 மணி வரை வழக்கமான நமது பரமற்ரா பூங்காவில் தேநீர் சாலைக்கு முன் புறம் அமைந்திருக்கின்ற கூடாரத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்க வருவீர்களாக!
uyarthinai - logo 
முக்கிய குறிப்பு:  இந்த இலக்கிய சந்திப்புக்கான இலட்சினையை உருவாக்கி இலவசமாக எமக்களித்தவர் எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்கள். அவருக்கு இலக்கிய சந்திப்பின் சார்பில் நமது மனமார்ந்த நன்றி 

Thursday, September 18, 2014

இலக்கிய சந்திப்பு - 21 -

அன்புக்குரிய இலக்கிய நெஞ்சங்களே!

உங்கள் இலக்கிய இதயங்கள் நலம் தானா?

இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.



வசந்த காலம் ஆரம்பித்து விட்டது.

இருள் விலகி சூரியன் இதமாய் மேல் வர மெல்லிய தென்றலோடு பூக்ககளின் வாசம் பூலோகமெங்கும்!இலைகளும் பூ மொட்டுக்களும் துளிர்க்கின்றன.கிளிகளும் பறவை இனங்களும் ஆங்காங்கே இணைகளோடு தென்படுகின்றன!! தோற்ற அளவில் மனிதர்களும் கம்பளி ஆடைகள் தவிர்த்து புன்னகை இழையோட பாரமற்று நடக்கக் காண்கிறோம்.

மகிழ்ச்சியாக இருக்கிறது!

குளிர் நீங்கி விட்டதால் நாமும் இனி இயற்கையோடு இணைந்து கொள்ள காலம் கைகூடி விட்டது. பழைய படி பூங்கா கைவிரித்து நம்மை அணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

நிலமையினைக் கண்டு வர கடந்த வார நடுப்பகுதி ஒன்றில் பூங்காவுக்குப் போனேன்.வசந்த கால மலர்களோடு நம்மை வரவேற்ற படி காத்திருக்கிறது பூங்கா.

ஆம். பூக்களால் நிறைந்து போயுள்ளது பூங்கா! அது மட்டுமல்ல, ஓவியக் கண்காட்சி மற்றும் Cumberland மனநோயாளர் வைத்தியசாலையைச் சேர்ந்தோரது  அரும்பொருள் காட்சியகம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருட்களின் கடைகளும் உணவு விற்பனைகளும் அமோகமாக நடைபெறுகின்றன.

இம்மாத இறுதி வர மட்டுமே இத்தகைய அரிய காட்சிகள் அங்கிருக்கும்.

புல் தரையில் பூக்களின் ஊடே நடப்பதுவும்; ஓவியக்கண்காட்சியின் காட்சி விரிவில் இலயிப்பதுவும்; கூடவே உள்ளத்துக்கும் உடலுக்குமாக உறவின் விசித்திரங்களை தரிசிப்பதிலும்; கூடவே,  நீரோடை அருகே உட்கார்ந்து தேநீரோடு தாம் கண்டு கொண்ட கருப்பொருள் பற்றி கலந்துரையாடி அவற்றினூடே இலக்கியக் கருக்களை இனம் கண்டு கொள்வதும் இம்மாத சந்திப்பின் நோக்கமாகும்.

பூவுக்குள் தேனை வைத்து, தேனின் இருப்பிடத்தை தேனீக்களுக்கும் பறவைகளுக்கும் மாத்திரம் சொல்லி வைத்த இயற்கையிடமும் ஓவியக்காட்சிகளுக்குள்ளும் 19ம் நூற்றாணடின் உள்ளத்து நோயின் வாழ்க்கைச் சுவடுகளுக்குள்ளும் ஒழிந்து போயிருக்கின்றன ஓராயிரம் இலக்கியங்களுக்கும் கலைகளுக்குமான கருக்கள்!

கண்டடைய வாருங்கள்!

இம் மாத இறுதி இம்முறை இன்னும் சிறப்பாக நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருப்பதால் எல்லோருமாக கூடி இருந்து அனுபவம் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் என நான் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

வருக! நாளாந்த வாழ்வின் இறுக்கங்களில் இருந்து சற்றே விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியும் புது வெளிச்சமும் பெற இந் நாள் உதவும்.

உங்கள் இன்றய நாளும் இனி வரும் நாட்களும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

Friday, February 21, 2014

இலக்கிய சந்திப்பு - 17 -


இனிய இலக்கிய உள்ளங்களே!


எல்லோரும் நலம் தானா?

புது வருட பொங்கல் வாழ்த்துக்கள் சகலருக்குமானதாக மலர்க! 2014 கலை இலக்கிய படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் சுபீட்சமான ஆண்டாக பரிணமிப்பதாக!

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோருடனும் முதலில் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். அது நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் திரு. சத்திய நாதன் அவர்களுக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் ”விண்னைத்தாண்டி வருவேனே” என்ற அவரது சிறுகதை மூன்றாம் பரிசினை வென்றிருக்கிறது. 

பேருவகையோடு அந்த மகிழ்வை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுகின்ற அதே வேளை அவருக்கு நம் உயர்திணையின் இலக்கிய சந்திப்பின் சார்பாக நம் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்ந்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறோம். மேலும் மேலும் நாம் வாழும் நிலம் சர்ந்தும் வாழ்வு சார்ந்தும் இலக்கியம் பல பூப்பதாக!

அத்தோடு இன்னொரு தகவல். மார்ச் மாதம் 22ம் திகதி எழுத்தாளர் விழா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடக்க ஏற்பாடாகி இருப்பதாக அறிகிறேன். அந் நிகழ்வுக்காக மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து செல்லும் ஜனரஞ்சக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் செல்வதாகவும் திரும்பி வரும் போது சிட்னிக்கு வருவதாகவும் அறிந்து மகிழ்ந்தோம். அவரை நம் மார்ச் மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது மிக்க பேரன்போடு வர உறுதி அளித்துள்ளார் என்ற செய்தியையும் உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதில் மனம் பெரிதும் மகிழ்கிறது.

கடந்த மார்கழியில் தவிர்க்க முடியாது பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு மேலும் தைத்திங்களில் 26.1.14 அன்று அவுஸ்திரேலிய தினம் காரணமாகவும் நாம் கூடும் பூங்கா அவுஸ்திரேலிய தினத்தால் களை கட்டி இருந்ததன் காரணமாகவும் பாடசாலை விடுமுறை காரணமாகவும் மேலும் ஒரு மாதம் பிற்போடப்பட்டு இம்மாதம் முதலாவதாக நடந்தேற இருக்கிறது.

பலரும் இயற்கை சார்ந்த மூலிகை வாசம் சுமந்து வரும் தென்றல் வருட குருவிகளின் இசைப்பின்னணியில் இலக்கியம் பேசவே பிரியப்படுவதால் தொடர்ந்தும் நம் நிகழ்வுகள் – கட்டிட வசதிகள் இருக்கின்ற பொழுதிலும் – பூங்காவிலேயே இடம் பெறும்.

இம்மாதம் கடந்த மார்கழித்திங்கள் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட நாம் அகத்திய குறுமுனி என நாம் வாஞ்சையோடு அழைக்கும் இலக்கியத்தால் அழகுறும் திரு தனபாலசிங்கம் அவர்களின் சிறப்புரையோடு ஆரம்பமாகிறது.

உங்கள் எல்லோருடய பிரசன்னமும் நிகழ்ச்சியை அழகுறுத்தும் என நான் சொல்லவேண்டியதில்லை.

வந்து இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்க!

உயர்திணை உங்கள் எல்லோரையும் அன்போடு வருக வருக என உள்ளன்போடு அழைக்கிறது. மேலதிக விபரங்களை அழைப்பிதழில் காண்க!

நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

Wednesday, January 22, 2014

தமிழுக்குக் கிடைத்த கூடாரம்

பொங்கலன்றான திறப்பு விழா – 14.1.2014

Image

Image

Image


Image















ஈழத்தமிழர் கழகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட தமிழர் கழகமாகும். அது பல சமூக நல திட்டங்களில் தன்னை இணைத்து பல்வேறு விதமான சமூக சேவைகளை பல ஆண்டுகளாக ஆற்றி வருகிறது.

அவர்களுக்காக அவுஸ்திரேலிய மாநில அரசு தமிழ் சமூகத்தினரின்  தன்னார்வ சமூக  செயற்பாடுகளுக்காக வீடொன்றினைக் கையளித்துள்ளது.

இங்கு தமிழ் சமூகத்தவர் தம் இலாப நோக்கற்ற சமூக நல சேவைகளுக்காக இந்த அழகிய கூடாரத்தைப் பாவிக்க காலம் கைகூடி இருக்கிறது.

ஈழத்தமிழர் கழகத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரமும் வெகுமானமும் அவர்களின் உழைப்புக்கு அரசு கொடுத்த சன்மானமாகும். அதன் பொருட்டு – குறிப்பாக அதன் நிர்வாக பீடத்திற்கு என் தலை தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

உத்தியோக பூர்வமான திறப்பு விழா தமிழுக்கு தைத்திங்கள் முதல் நாளன்று 14.1.14 அன்றுபொங்கல் தினத்தோடு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.




Image





















Image

Image














தமிழுக்கும் தமிழருக்கும் அரசாங்கத்தினால் கிடைத்த இந்த உயர்வான அங்கீகரத்துக்கு உழைத்த எல்லோருக்கும் மீண்டும் என் நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளை இவ்வாறு ஒரு இடம் தமிழருக்குக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு நமக்கு அறியத்தந்து பொங்கலன்றான திறப்பு விழாவுக்கும் நம்மை அழைத்தமைக்கும் கூடவே எவ்வித தயக்கமும் இன்றி  நமக்கும் அங்கு நம் மாதாந்த இலக்கிய சந்திப்பை நடாத்த கருணைகூர்ந்து இடம் ஒதுக்கித் தந்ததற்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் வாத்சல்யத்தையும் தெரிவிப்பதில்  பெருமிதமும் கொள்கிறேன்.

Image

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!