Monday, August 17, 2015

இலக்கிய சந்திப்பு - 23


அன்பான இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

பல இலக்கிய உள்லங்கள் ஏன் இலக்கிய சந்திப்பு நிகழ்த்த வில்லை? இம்மாதம் இலக்கிய சந்திப்பு உண்டா என நேரிலும் தொலைபேசி மூலமாகவும் கேட்டிருந்தார்கள். ஆம். கடந்த சில மாதங்களாக நம் சந்திப்பு நிகழ இயலாமல் போனமைக்கு குளிர்காலம் ஆரம்பித்தமை ஒரு பிரதான காரணம்.நாம் பூங்காவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் குளிர்காலத்துக்கு அது தோதாக இல்லாமை ஒரு காரணம். கணப்புகளுடன் கூடிய மூடிய கூடாரங்களைப் பெற்ருக் கொள்வதன் சிரமங்கள் இன்னொரு காரணம்.

இதோ சற்றே மெல்ல சூரியன் வெளியே வர தொடங்கி விட்டான்.

நீண்ட குளிர் காலத்தின் பின் மீண்டும் ஒரு மாலையில் சந்திக்க இருக்கிறோம். இன்னும் குளிர் முற்றாகத் தீராத போதும் சில இலக்கிய நண்பர்களின் விருப்பின் பேராலும் தூண்டுதலின் பேராலும் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும் நம் சந்திப்பை 4.00 மணியாக முன்னாக்கி நிகழ்த்த முடிவு செய்திருக்கிறோம். பின்னாலும் விரைவில் குளிர் ஆரம்பித்து விடும் என்பதால் ஒரு மணி நேரத்துக்குள் முடித்து விடவும் தீர்மானித்திருக்கிறோம்.

இம்முறை ஈழத்துக் கவி மொழி பற்றியதாக நம் கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். ஈழத்துக் கவிதைகள் அதன் பொருளடக்கத்திலும் சொல்லும் முறையிலும் தாய்தமிழ் நாட்டின் அடிப்படையில் இருந்து காலத்துக்குக் காலம் தனித்துவமாகவும் வேறுபட்டும் சில வேளைகளில் ஒன்று பட்டும் விளங்கி வந்திருக்கிறது. ”இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி” என்பதற்கிணங்க சமூக வாழ்வும் அதன் அரசியல் பொருளாதார பின்னணிகளும் கவிதைகளில் எவ்வாறு பிரதி பலித்திருக்கின்றன என்ற பார்வை நமக்கு புது பரிமானங்களின் தரிசனங்களைத் தரலாம். உங்கள் ஒவ்வொருவருடய பார்வைகளும் நம் கண்களுக்கு புலனாகாத புதிய பக்கங்களை கானச் செய்யும். அதனால்,ஈழத்துக் கவிதைகளின் களமும் வளமும் பலமும் பலவீனமும் பற்றிய ஒரு அலசலாக இம்மாத சந்திப்பை அமைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

இலக்கிய ஈடுபாடுடய அன்பர்கள் தயவு கூர்ந்து அவை பற்றிய உங்கள் பார்வைகளை; படித்ததை; மனதில் பதிந்ததை; அல்லது மறுப்பதை அன்றேல் முரண்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள். 

பல மாத இடைவெளிக்குப் பின் உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடையோம்.

தமிழால் இணைந்திருப்போம்.

Tuesday, August 11, 2015

புறநானூற்று மனிதன்




உண்பது நாழி!
உடுப்பது இரண்டே!!

புறநானூற்று மனிதனின் தேவைகள் இந்த இரண்டுக்குள்ளும் அடங்கி விட்டன.

இந்தத் தேவைகள் மட்டும் தானா மனிதனின் வாழ்வு? சந்தோஷம் என்பதை எது தரும்? சங்க காலத்து மனிதன் அதையும் சொல்கிறான். இப்படி.

அவர் ஒரு முதியவர். தன் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குப் போகிறார். அந்த பக்கத்து ஊர் மக்கள் இவரைப் பார்க்கிறார்கள். வயதான தாத்தா நல்ல சந்தோஷமாக துள்ளல் நடையோடு போகிறார். தலையில் ஒரு நரை மயிரையும் காணோம். குடிமக்கள் அவரை வழி மறிந்த்து கேட்கிறார்கள். இவ்வளவு சந்தோஷமாக நீங்கள் இருப்பதன் இரகசியம் என்ன?

அவர் சொல்கிறார். எனக்கு மாண்புள்ள மனைவி இருக்கிறாள். சொல்வது கேட்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள். விசுவாசமான வேலையாட்கள் இருக்கிறார்கள். அறநெறியில் இருந்து வழுவாமல் ஆட்சி செய்கிற அரசன் எங்களை ஆட்சி செய்கிறான். கல்வி அறிவு நிரம்பப் பெற்றதால் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என் சுற்றமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். அதனால் நான் நல்ல இளமையோடும் சந்தோஷத்தோடும் இருக்கிறேன் என்கிறான். (காண்க: புறநா.பாடல் 191)

தேவைகளையும் சந்தோஷத்துக்கான ரகசியத்தையும் சொன்ன புறநானூற்று மனிதனின் வாழ்வின் கொள்கையை விழுமிய சிந்தனையை பார்க்க வேண்டாமா?

எல்லாம் எங்களுடய ஊர் தான். எல்லோரும் எங்களுடய உறவினர் தான்.எங்களுக்கு வருகிற இன்பமும் துன்பமும் மற்றவர்களால் வருவதல்ல.மாறாக அது எங்களின் ஊழ்வினைப் பயனால் வருவதே. எங்களுடய சந்தோஷமும் துக்கமும் அதனால் வருவதென்பதால் நான்  அதை இட்டு சந்தோஷப்படுவதோ கவலைப்படுவதோ இல்லை.வாழ்க்கை நிரந்தரமற்றது மாத்திரமல்ல. அது ஆற்று வெள்ளத்தில் அதன் போக்கில் அள்ளுண்டு செல்லும் ஒரு மிதவையைப் போல ஊழ்வினையின் உந்துதலால் தள்ளப்பட்டுக் கொண்டு தன் வழி செல்கிறது. இந்தத் தெளிவு நமக்கு இருப்பதால் நாங்கள் மாண்போடு வாழும் மாந்தரைப் பார்த்து வியப்பதும் இல்லை.சிறுமையோடு வாழும் எளியவரைப் பார்த்து இகழ்வதும் இல்லை. (காண்க புறநா. 192)

இவ்வளவும் தான் புறநானூற்று மனிதன். அப்படி என்றால் அவன் ஏன் போர் புரிந்தான். ஏன் அரச புகழ் பாடித்திரிந்தான் என்பதெல்லாம் ஒரு புறமாக இருக்கட்டும்.

காதலையும் காமத்தையும் தமிழன் பாடியதைப் போல வேறுயார் பாடி இருக்கக் கூடும்? அகநானூறு மட்டுமல்ல தமிழ் இலக்கிய வரலாறு முழுக்க பரவிக் கிடப்பவை அவை. கம்பன் ஓரிடத்தில் ஊர் அழகைச் சொல்லும் போது அந் நாட்டு வீரர்கள் நாண் இழுத்து ஒரு இலக்கை குறி வைத்து அம்பினை எய்தால் அக்குறி ஒரு போதும் தப்புவதே இல்லையாம். அது போல அந் நாட்டு பெண்கள் கண்ணினால் குறி வைத்து ஒருவனை நோக்கினால் அவன் தப்பியதாய் கூட சான்றில்லை என்பான். அப்படி ஊரை; வீரத்தைச் சொல்லும் போது கூட காதலையும் அதனூடு கலந்து சொன்னவன் தமிழன். அது பற்றி பின்னொருமுறை பேச ஆவல். அதற்கு கத்தி முனையில் நடக்கும் ஒரு லாவன்யம் என் தமிழ் நடைக்கு வர வேண்டும். வரும் போது அதைப் பார்ப்போம்.

இன்றய தினம் 11.8.15 அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் செய்தி பார்த்த போது ரஸ்மானிய மாநிலத்து செனற்ரர் Jacqui.Lambie தன் 21 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டதோடு அது தன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு விட்டதாகவும் இனி நான் இது பற்றி மகனோடு பேசப்போவதில்லை எனவும் போதைப்பொருளோடு பேசப்போவதாகவும் கூறி, தேசத்துக்கு போதைப்பொருள் சம்பந்தமாக இத் தேசம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றிக் கண்ணீரோடு பேசக் கேட்டேன்.

தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள் நம் பாசையில். இந்தத் தேசம் போதைப் பொருளுக்கு மாத்திரம் அடிமையாகிக் கிடக்கவில்லை. மது, போதைவஸ்துப்  பாவனை, அளவுக்கு அதிக உடல் எடை, நடத்தைக் குறைபாடுகள், (behavior problems) உள ஆரோக்கிய பிரச்சினைகள் / குறைபாடுகள் (mental health problems) அதிகரிக்கும் விவாக ரத்துக்கள். (இத் நாட்டில் 40% விவாகரத்தானவர்கள் என்று அரச தரவு ஒன்று தெரிவிக்கின்றது.) மிகப் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

எங்கோ அடிப்படையில் ஒரு கோளாறு இருக்கிறது.

தேசம் இது பற்றி சிந்திக்கட்டும். நாம் எப்படி இருக்கிறோம்?

இன்றய மனிதனின் தேவைகள் எப்படியானவையாக இருக்கின்றன? ஒரு நாழி சாப்பாடும் இரண்டு துண்டு உடுப்புகளோடும் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா? எங்களுக்கு எத்தனை ஆசைகள்... தேவைகள்... மின்சாரம் இல்லாமல்; கைத்தொலைபேசி இல்லாமல் ஒரு வாழ்வை கற்பனை பண்ணத்தான் நம்மால் முடியுமா?

நம் சந்தோஷம் என்பது புறநானூற்று மனிதனின் சந்தோஷம் மாதிரியா இருக்கிறது? எங்களுக்கு எது சந்தோஷத்தைத் தருகிறது?

 பெரிய வீடு, போய் வர வாகனம், பீற்றிக் கொளள பதவிகள், கைத் தொலைபேசிக்குள் அடங்கி விட்ட உலகம்......

கை விட்டுப் போன பொறுமை,எனக்கு மட்டும் என்ற சிந்தனைகள், தற்காலிகங்களை தேடி ஓடும் வேகம், விழுமியங்களை மறந்து விட்ட வாழ்வு.......

என் வேலைத்தலத்தில் சீன அவுஸ்திரேலிய கலப்புக் கொண்டவள் சொன்ன சீனக் கதை இது. ஒரு செம்மொழி அந்தஸ்துக் கொண்ட மொழி மூலக்கூறு ஒன்றில் இருந்து கிளர்ந்த கதை.

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் 1000 ஆண்டுகள் தான் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டான். அதனால் தன் குடி மக்களிடம் அப்படி வாழுவதற்கான சிரஞ்சீவிச் செடியைக் கொண்டு வருமாறு காட்டளை இட்டான். அப்படி கொண்டு வர முடியாதவர்களை அவன் சிரச் சேதம் செய்தான். ஒரு நாள் ஒரு சிறுமி சென்றாள். தான் அந்த இரகசிய சிரஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். அரசன் ஆவலோடு எங்கே என்று கேட்டான். அவள் அதனை தன் வாயினாலே தான் சொல்ல முடியும் என்றாள். எங்கே சொல் பார்க்கலாம் என்றான் அரசன். அவள் சொன்ன 4 இரகசியங்கள் இவை தான்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு.
2. வியர்வை சிந்தும் உழைப்பு.
3.போதுமான உறக்கம்.
4. திறந்த நல்ல இதயம்.

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் மன்னா என்றாள் சிறுமி.

“நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூப சக்தியே வரலாறு”

அந்த சங்கிலித்தொடரில் நாங்கள் காணாமல் போன இடம் எது?