Thursday, July 9, 2020

தமிழ் துமி(ளி) - அறிந்ததும் பகிர்வதும் -

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை - அன்பே
உன்மேல் பிழை.....

என்று கவிஞர் தாமரையின் கவி வரிகளுக்கு திரைக்கலையில் ஓர் இசைவடிவம் கிடைத்திருக்கிறது. இந்தப் பாடலில் நெஞ்சுக்குள் ஒரு மாமழை பெய்கிறது.

தமிழ் இலக்கியத்திலோ ஒரு மா அலை அடிக்கிறது; ஐங்குறு நூறு காதலன் ஒருவனுக்கு. சங்க காலத்து மனிதனின் காதல் இது.

ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!

இதன் சுருக்கமான; வரட்சியான விளக்கம் என்னவென்றால் கடலிலே அலைகள் ஓய்வில்லாமல் சத்தம் போட்டு இரைந்த படி இருக்கும். அது போல பெண்ணே, உன்னால் என் மனமும் இரவெல்லாம் நித்திரை இன்றி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

இதனை இப்படியே பார்த்து விட்டு எளிதாகக் கடந்து போய் விடலாம். அப்படி போய் விட்டால் அது சாதாரண கண். அதனுள்ளே ஒரு அழகியல், அருமை பெருமை ஒரு காட்சி எல்லாம் ஒளிந்து போயுள்ளது. அதனைக் காணும் போது தான் கவியுள்ளம் கவி இன்பத்தைப் பெறுகிறது. அந்த இன்பம் என்ன என்பதைச் சற்று பார்ப்போமா?

அது எல்லாம் சரி, பாடலுக்குள்ளே போகு முன், அது என்ன ஒண்தொடி? ஒண்தொடி என்பது ஒளிபொருந்திய வளையல் என்பதாகும். திருக்குறளிலே கூட அப்படி ஓர் இடம் வரும். காமத்துப் பாலில் 1101 வது குறள் அது!

’கண்டு,கேட்டு, உண்டு,உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள’

என்பார் வள்ளுவனார். கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. என்று மு. வரதராசனார் அதற்கு உரை எழுதியுள்ளார்.

இங்கும் அதே ஒளிபொருந்திய வளையல் அணிந்த பெண் தான் இந்த ஐங்குறு நூற்றுப் பெண்ணும். இந்தப் பெண்ணை குறிப்பாக ‘அரிவை’ என்கிறான் காதலன். ஒரு குறிப்பான கூற்று அது. 

அது என்ன அரிவை வகைப்பாடு? அங்கு தான் தமிழின் இன்னொரு நுட்பமான அழகு வெளிப்படுகிறது. பெண், ஆண் அகிய பாலினங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வளர்ச்சிப் பருவங்களை சங்கத் தமிழ் 7 பருவங்களாகப் பிரித்துள்ளது. பெண் வளர்ச்சிப் பருவம் 

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ ’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ ’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ ’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்பு என மொழிப.’ ’’ 227 என்கிறது பன்னிரு பாட்டியல். 

அதன் படி இந்த ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண் 19 - 24 வயதுக்கிடைப்பட்ட இளம் பெண்ணாவாள். இப்போது நம்மால் ஒளி பொருந்திய வளயல்கள் அணிந்த ஓர் இளம் பெண் நம் மனக் கண்ணில் தெரிகிறாள் அல்லவா? இவள் தான் ஐங்குறு நூற்றுக் காதலனின் மனம் கவர்ந்தவள். இப்போது அவளை நாங்கள் கண்டு விட்டோம். இனி அவலைக் கண்டதனால் அவன் மனம் படும் பாடு என்னவென்று நாம் அறிய வேண்டாமோ? 

. இப்படியாக ஒண்தொடி அரிவை என்றவன்  மேலும் சொல்கிறான், ‘வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரை போல,..’ என்கிறான். இங்கு தான் பாண்டி நாட்டுக் கடற்கரையின் இயல்பு சொல்லப்படுகிறது. தொண்டி நாடு என்பது பாண்டிய நாட்டுக் கடற்கரை பட்டிணங்களிலே ஒன்று. தற்போதய தமிழகத்து இராமநாதபுர மாவட்டத்தில் இந்த இடம் அமைந்துள்ளதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. 

இந்தக் கடற்கரை பட்டிணத்திலே வண்டுகளின் ரீங்காரம் எப்போதும் கேட்ட படியாக இருக்கிறது. அலைகளோ எந்த நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இரைந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு காட்சி ஒன்று படிமமாக நம் மீது படிந்து விடுகிறது இல்லையா?. ஒரு விதமாக வண்டுகள் ரீங்காரம் செய்கிற;
அலைகள் ஓய்வு  இல்லாமல் இரைச்சல் இட்டபடியே இருக்கிற; கடற்கரை காட்சி ஒன்று நமக்கு மனக்கண்ணிலே தெரிகிறதல்லவா?. வண்டுகளுக்கும் ஓய்வு இல்லை; கடல் அலைகளுக்கும் ஓய்வு என்பது இல்லை. இடைவிடாத சத்தம் Disturbance. அது.
அது போல என் நெஞ்சமும் துயில் இல்லாமல் ஒரு விதமான Disturbance இல் இருக்கிறது என்கிறான் இந்தக் காதலன்.

அட, நம்ம ஊருப்பா; நம்மட ஆக்கள். தமிழர்! பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் நிலத்தில் வாழ்ந்தவர்கள். நம் இனத்தார். அந்தக் காலத்து தமிழ் இளைஞன் அவன். அவனுடய காதல் உள்ளம் இது!

அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் காதல் தானே உலகத்தையே இயக்கிக் கொண்டு இருக்கிறது? இன்றய நூற்றாண்டுக் காதலனுக்கும் அதே உணர்வு தான். திரைக்கலை ஒன்று அதனை இப்படி இசையோடு தருகிறது.

அடி ஆத்தாடி ஒரு மனசொன்று ரெக்கை கட்டி பறக்க,
 அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா? என்கிறது இந்தக் காதல்.


No comments:

Post a Comment