Monday, July 20, 2020

நம்ம தமிழ் - 2 - அணிகள் அறிமுகம் - 22.2.2020.

  SBS அரச வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
       
   நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - 22.2.2020

கடந்த மாதம் உலகமொழிகளில் தமிழினுடய இடத்தைத் தெரிந்து கொண்டது போல; இம்மாத ’நம்மதமிழில்’ கலைப் புலவோன் மொழி கொண்டு புனையும் அணிநலன்கள் பற்றிக் காண்போமா?

கவிஞன் ஒருவன் புலமைக் கலைஞனாக உருவாகும் அந்த நுட்பமான இலக்கிய இலட்சணம் உருவாக உதவும் உத்திகளின் உறைவிடம் அணிகள் ஆகும்.

அணி என்றால் அழகு என்று பொருள். ஒரு பாடலில் அமைந்து இருக்கும் சொல்லழகு பொருளழகு இவற்றை மேம்படுத்தவும்; அவற்றை மேலும் அழகுபடுத்தி, தான் சொல்ல வரும் கருத்தை படிப்போர் மனதில் தெளிவாகவும் அழகுணர்வோடும் பதியவைப்பதற்காகவும் கவிஞன் கையாளும் உத்தியினை அணி எனலாம்.

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்கு கோபுரமும் ஆடமைத்தோ நல்லார் கணியும் போல...என்னும் நன்னூல் சூத்திரம் பெரிய மாளிகைக்கு அதன் முன்புறத்தில் அமையும் ஓவியமும், பெரிய நகரத்திற்கு அதன் பகுதியில் அமையும் கோபுரமும் அழகு சேர்ப்பதுபோல் செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி ஆகும் என்று உரைக்கிறது.

அழகுக்கு அணிகள் எவ்வாறு உதவுகின்றன? அது அழகுக்கு அணிகலன்கள் அணிவித்து மேலும் அழகாக்கும் முயற்சி போன்றது.


(0:40 – 1:04 / 3:57 – 4:21. / 4:28 – 4:47) (optional)

( தமிழணங்கை, காதிலங்கு குண்டமாகக் குண்டலகே               சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! என்பார் சங்குப் புலவர். )

( கண்ணுக்கு மையழகு….) சிற்பக்கலைஞனும் ஓவியக்கலைஞனும் தன் எண்ணங்களில் உதிக்கும் இயற்கை உருவங்களையும் கற்பனை எண்ணங்களையும் தன் சிற்ப ஓவியங்களில் அமைத்துக் காட்டுவது போல ஓர் இலக்கியப் புலவோன் தன் எண்னக்கருத்துக்களை அழகுறச் சொற்களால் ஓவியமாக்கிக் காட்டுவதற்கு ஒப்பானது.

‘ஆங்கொரு கல்லை வாயிற்படியென்றமைத்தனன் சிற்பி; மற்றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்றுயர்த்தினன்; உலகினோர் தாய் நீ! யாங்கனே எவரை எங்ஙனம் சமைத்தற்கெண்னமோ அங்ஙனம் சமைப்பாய்; ஈங்குனைச் சரணென்றெய்தினேன். என்னை இருங்கலைப் புலவனாக்குதியே’ – என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி பராசக்தியை வணங்குவது தன்னை, ‘கலைப்புலவன்’ ஆக்குமாறு!

இவ்வாறு ஒருவன் கலைப் புலவனாக ஆகுவதற்கு உதவுவது அணிகள் என்றால் அதற்கான இலக்கணம் தான் என்ன?

இலக்கணம் என்று வருகிறபோது அது செம்மொழியான தமிழின் இன்னொரு பக்கத்தை விரித்துச் செல்லும்.

‘இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணையும் இன்றே
எள்ளினின் றெண்ணை எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்’

எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்தில் இருந்து இலக்கணம் உருவாகும் என்றுரைக்கிறது இந்தப் பேரகத்தியச் சூத்திரம்.
தமிழ்மொழியில் உள்ள இலக்கணங்கள்  ஐந்து வகைப்படுவன. அவை எழுத்து, , சொல், பொருள், யாப்பு, அணி என்பன வாகும். இவ்வைந்தும் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வடிவமைப்பிற்கும் உரியன.

தமிழிலே முதன் முதலிலே தோன்றிய இலக்கண நூல் சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட தொல்காப்பியமாகும். அது மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள்அதிகாரம் என 3 ஆக வகுத்துரைக்கிறது. பொருள்களை அறிந்து கொள்ளவும், கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், எழுப்புகின்ற ஒலிவடிவம் பற்றியும், எழுதுகின்ற வரிவடிவம் பற்றியும் எடுத்துரைப்பது எழுத்திலக்கணம்ஆகும். எழுத்து சொல்லாகும் முறைமை பற்றியும், சொல்லின் வகைகளைப் பற்றியும் விளக்குவது சொல் இலக்கணம். வாழ்க்கை பற்றிய இலக்கணம் பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணத்திற்குள் காணப்படும் செய்யுளியல், யாப்பிலக்கணம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கின்றது. பொருளிலக்கண உவமையியல் அணி இலக்கணம் பற்றி விளக்குகின்றது. யாப்பும் அணியும் பெரிதும் வளர்ந்து, தனித்துப் பிரிவதற்கு முன் அவை பொருளதிகாரத்திற்குள்ளேயே தொல்காப்பியத்துக்குள் அடங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் காவியங்களிலும் புலவோர் பாடிய பாடல்களிலும் பல அணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைநகருக்குச் செல்லும் போது அங்கு கோவலன் கொலையுண்ணப் போகிறான் என்பதனால் வரவேண்டாம் வரவேண்டாம் என்று கையசைத்து மதுரை நகரின் மதில் மேல் இருந்த கொடிகள் அசைந்தன’ என்ற தற்குறுப்பேற்ற அணியை இளங்கோ கையாண்டிருந்ததைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு பல அணிகள் ஆங்காங்கே தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைக்கு தமிழ் மொழியிலே எப்படி ஆங்கில காலணித்துவத்தின் செல்வாக்கால் தமிழ் மொழியிலே ஆங்கிலமொழிச் சொற்கள் பல கலந்து போயுள்ளனவோ; எப்படி ஆங்கில மொழியின் செல்வாக்கினால் தமிழிற்கு இலக்கணக் குறியீடுகள் மற்றும் உரைநடை, சிறுகதை, நாவல், திறனாய்வு, அறிவியல், அகராதி வடிவங்கள், தமிழ் எண்களுக்குப் பதிலான அராபிய இலக்கங்கள் போன்ற இலக்கிய வடிவங்கள் கிடைத்து தமிழ் இன்னொரு படி உயர்ந்ததோ; அது மாதிரி கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட பகுதியில் இந்தியாவின் இன்னொரு செம்மொழியான வடமொழி என்றழைக்கப்படும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கும் ஆரிய ஆதிக்கமும் இந்து சமயமும் தமிழர் மத்தியிலும் தமிழிலும் ஊடுருவத்தொடங்கி விட்டதனாலும் மற்றும் சமூக; நாகரிக வளர்ச்சி போன்ற இன்னோரன்ன காரணங்களாலும்’ இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலம், யாப்பருங்காலக் காரிகை, போன்ற இலக்கண நூல்களோடு வடமொழியின் இலக்கிய இன்பத்தில் மனதைப் பறி கொடுத்த தமிழ் வல்லாளர்கள் வடமொழி அணி இலக்கணத்திலும் ஈடுப்பாடு காட்டத் தொடங்கியதன் விளவாக தமிழில் வடமொழி அணி இலக்கணத்தை ஒட்டியதான அணி இலக்கண நூல் ஒன்று எழுந்தது.

அது சமண புலவரான தண்டி என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட ‘தண்டி அலங்காரம்’ (12ம் நூற்றாண்டு) என்ற அணி இலக்கண நூலாகும். தொல்காப்பியம் மற்றும் ’காவ்ய தர்ஷம்’ என்ற அலங்கார இலக்கண நூலின் சாரமாக அமைந்த இவ் அணி இலக்கண நூலில் 35 வகையான அணிகள் பேசப்படுகின்றன.

இன்று தமிழில் வழக்கிலுள்ள அணி இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியது தண்டி அலங்காரமாகும். தொல்காப்பியர் உவமை இயலில் உவமை உருவகம் ஆகிய அணிகளின் இலக்கணத்தைக் கூறியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பின் வீரசோழியம் அணிகளின் இலக்கணம் கூறும் ஐந்திலக்கண நூலாகத் திகழ்கிறது. இவ் இரு  நூல்களிற்குப் பின்னர் அணி இலக்கணத்திற்கென எழுந்த நூலாகத் தண்டி என்பார் எழுதிய தண்டி அலங்காரம் திகழ்கிறது. இதனை இன்னும் விரிவு படுத்தியதாக அமைந்த அணி இலக்கண நூல்’மாறனலங்காரமாகும்’.

இந்த அணி இலக்கணத்திற்கு ஒரு சிறப்பான கூறு ஒன்றுண்டு.
எழுத்து, சொல், பொருள், யாப்பு ஆகிய நான்கு இலக்கணங்களும் மொழிக்கு மொழி வேறுபடுவன ; மாறுபடுவன. ஆனால் அணி இலக்கணம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது ஆகும். எடுத்துக்கூற விரும்பும் கருத்தை எந்த நடையில் எந்தெந்த முறையில் எடுத்துரைப்பது எனக் கூறுவது எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இது, பிற இலக்கணங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஆகும்.

இனி வரும் நாட்களில் இவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த 10 வகையான அணிகள் பற்றியும் அவற்றின் அழகுகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இன்று விடைபெறும் முன்னர் கவிஞர் வாலி எழுதி எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து 1969ம் ஆண்டு வெளிவந்த பூவா தலையா என்ற திரைப்படத்தில் டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய இப்பாடலை கேட்போமா? அணிகளுக்கோர் அணிகலனைப் போல அமையும் இந்தப்பாடல் தமிழ் நாட்டினை அதன் வரலாற்றின் வடிவினூடு ஒரு பெண்ணாக உருவகித்து நடைபோட வைக்கிறது.



படம் : பூவா தலையா
வரிகள் : வாலி

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே ...

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே...
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த...

காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் பறந்த...

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ ...
புதுவை நகரில் புரட்சி கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
………………………………………………………………………………………………………………….
யசோதா.பத்மநாதன்.
11.2.2020.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …

No comments:

Post a Comment