Monday, July 14, 2025

Snugglepot & Cuddlepie - அவுஸ்திரேலியச் சிறுவர் இலக்கியப் பாத்திரங்கள்

 அவுஸ்திரேலிய செவ்வியல் சிறுவர் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற; மறுபிரசுரங்களைக் கண்டு கொண்டிருக்கின்ற; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதா பாத்திரங்கள் என்றால் இவர்கள் இருவரையும் சொல்லலாம்.



இவர்கள் யார் என்று கேட்கிறீர்களா? இவர்கள் இரண்டு பேரும் Gum Nuts கள். Gum Tree என்று சொல்லப்படுகின்ற மரத்தின் விதைகள் இவர்கள், மிகப் பரந்தளவில் அவுஸ்திரேலியா முழுவதும் காணப்படுகின்ற மரம் இது. அதன் விதைகள் தான் இந்த ஸ்னகிள்பொட்டும்  கட்டிள்பையும்.

அவுஸ்திரேலிய வாழ்வியல் பின்னணியையும் வாழ்க்கை முறைகளையும்  இவை பேசுகின்றன. கற்பனை வளத்திற்கும் குழந்தைகளின் மனநிலைக்கும் ஏற்ற வகையில் கதைகள் பின்னப்பட்டு பாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளனவாக உள்ளன. 

நேற்றய தினம் பழம்பொருட்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தேன். அங்குள்ள புத்தகங்களைக் கிண்டிக் கொண்டிருந்தபோது, இந்த இரண்டு பேரையும் கண்டு பிடித்தேன். அதற்கு முன்னராக இந்த வருட ஆரம்பத்தில் புத்தகக் கடை ஒன்றில் வண்ணங்கள் தீட்டும் புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது  இதன் கற்பனை வளத்தின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக இவர்கள் இரண்டுபேரும் இருக்கின்ற அந்த வண்ணம் தீட்டும் புத்தகத்தையும் வாங்கி இருந்தேன்.

puzzle இல் விடுபட்டுப் போயிருந்த ஒரு துண்டு தற்செயலாகக் கிடைத்ததைப் போல ஒரு சந்தோஷம். $1.00 க்கும் $2.00 டொலருக்கும் தற்செயலாகக் கண்டெடுத்து வாங்கிய இந்தப் புத்தகங்கள் எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தன. 

சில நேரங்களில் சில சந்தோஷங்கள் இப்படியாக அமைந்து விடுகின்றன... ஒரு தேவதை காற்ரு வெளியில் உலா போகும் போது தன் கையில் இருக்கும் மந்திரக் கோலால் என் தலையில் அவ்வப்போது போகிற போக்கில் ஒரு தட்டு தட்டி விடுகிறாள் போலும்!

சரி நான் புத்தகத்திற்கு வருகிறேன்,

இந்தக் கம்னட்களுடய  சாகசப் பயணங்களும் அந்தப் பயணத்தின் போது அவர்கள் சந்திக்கின்ற அவுஸ்திரேலிய விலங்குகளும்  அவர்களுடனான இவர்களின் உரையாடல்களும் அதனூடாக அவை வெளிப்படுத்தும் அவுஸ்திரேலிய வாழ்வியல்களும் சுவாரிசம் மிக்கவை.

தும்பியில் சவாரி செய்யும் இவர்கள் வண்ணம் தீட்டும் புத்தகத்தில் இருந்த ஒரு கதையின் சம்பவதாரிகள். 


இந்தக் கதைகளின் சூத்திரதாரி May.Gibbs என்பார்.  நான் அவரைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்வதை விட நீங்களே கீழே உள்ள link இல் சென்று பாருங்களேன்!

https://maygibbs.org/character/snugglepot-and-cuddlepie/

Friday, July 4, 2025

Art journal

 அண்மைக் காலமாக Art Journal என அறியப்படும் ஒன்றின் மீது பேராவல் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் எக்கச்சக்கமான பாடங்கள் கூட படிமுறைகளாக சொல்லித் தரப்படுகின்றன. அவற்Riன் பாலான ஈர்ப்பினால் இங்கு அதிகம் வர முடியவில்லை. இருந்தாலும் இது என் தாய் வீடு.

என் வைப்புச் சொப்பு எல்லாம் இங்கு தான்.

அதனால் இறுதியில் நான் இங்கு  எப்படியும் வந்து சேர்வேன். இப்போது செய்த சிலவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இங்கு இன்று இப்போது இதனை எழுதுகின்ற போது தான் இந்தத் தளத்தை விட்டு எவ்வளவு தூரம் நான் போய் விட்டேன் என்பது புரிகிறது. அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. 

இனி இங்கு அடிக்கடி வரவேண்டும்.

நீங்கள் எல்லோரும் நலம் தானே!



Free to be Me

Believe

Get up, Dress up, Show up, Never give up

Paper napkins, Stickers, Colors, Stamps இவைகளைக் கொண்டு உருவாக்கப்படுபவை இவை. உங்கள் கற்பனை வளத்திற்கும் உங்களிடம் இருக்கும் மூலப்பொருட்களை வைத்துக் கொண்டும் ஒரு கருப்பொருளை மனதில் இருத்தி இவைகள் உருவாக்கப் படுகின்றன.

உங்களுக்கு  இவைகள் எப்படி இருக்கின்றன?

Sunday, May 4, 2025

இலையுதிர்காலத்து வண்ணங்கள்

 இன்று தேர்தல். 

இப்பொழுது நேரம் 3.5.1025 சனிக்கிழமை இரவு 10.45.

தொழில்கட்சி மீண்டும் பெரும்பாண்மை வாக்குகளோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. சற்று முன்னர் நடைபெற்ற தேர்தல் வெற்றிப் பேச்சையும் எதிர்கட்சியான லிபரல் கட்சித்தலைவர் பீற்ரர் டட்டன் தன் தொகுதி இருக்கையையும் இழந்து போய் தன் ஆதரவாளர்களுக்கு முன் பேசிய பேச்சையும் தேசிய தொலைக்காட்சி சற்ரு முன் ஒளிபரப்புச் செய்திருந்தது.

என்ன ஒரு கண்ணியமான மரியாதையான நாகரிகமான பேச்சாக அது இருந்தது!

படு தோல்வியைச் சந்தித்திருந்த பீற்றரை நினைவுகூர்ந்து அவரது 25 வருடங்களுக்கு மேலான உழைப்பை வியந்து பாராட்டிய அல்போவும் பெரும்பானை வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வந்த அல்போவுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தன் பாராட்டுக்களைத் தனிப்பட்ட முரையில் தெரிவித்ததோடு தன் ஆதரவாலர்கலுக்கு முன்னாலும் தெரிவித்த அரசியல் பண்பாடும் வியந்து போற்றக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

இன்று மதியத்துக்குப் பின்னரான ஓய்வுப் பொழுதொன்றில் வாக்களிக்க அருகில் இருந்த நிலையத்துக்குப் போயிருந்த போது எனக்கு முன்னால் ஒருவரும் என்னோடு ஒருவரும் தான் நின்றிருந்தோம். தேர்தல் என்பதற்கான அத்தாட்சியாக இரு கட்சியின் ஆதரவாளர்கள் 3, 4 பேர் வாசலில் விளம்பரப் பத்திரிகைகளை வைத்துக் கொண்டு நின்றதைத் தவிர வேறெந்த ஆரவாரங்களும் இருக்கவில்லை.

அழகிய ஜனநாயக நாகரிகம் மிக்க நாடு!

அது நிற்க,

இன்று இங்கு மீண்டும் வந்ததற்குக் காரணம் வாக்களித்துவிட்டுத் திரும்பி நடந்து வரும் போது கண்ட இலையுதிர்காலத்துக் காட்சிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தான்.

இங்கு சிட்னியில் இப்போது இலையுதிர்காலம். ஏப்பிரல், மே, ஜூன் மாதங்கள் இலையுதிர்காலத்துக்குரியவை. பச்சையாக இருந்த இலைகள் எல்லாம் நிறம் மாறி மஞ்சளில் இருந்து சிவப்பு மற்றும் பிறவுனுக்கு இடையில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் காட்சியளிக்கும். பச்சை இலைகளும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. குளிரோடும் மழையோடும் இந்த மூன்று மாதங்களும் மெல்ல மெல்ல குளிர்காலத்துக்கு தன்னை உருமாற்ற ஆரம்பிக்கும்.

நேரம் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப் பட்டு எமக்கு ஒருமணி நேரம் அதிகப்படியாகக் கிடைக்கும். காலை ஆறு மணிக்கும் இருள் விலகாதிருக்கும். மாலை விரைவில் இருண்டும் விடும். மாலை ஆறு மணிக்கு முன்னரே  இருள் முழுவதுமாகச் சூழ்ந்து விடும். 

அதுவே  மீண்டும் கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் முன் நகர்த்தப் பட்டு பகல் நேரத்தை அதிகரித்துத் தரச் செய்யும்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் பார்த்த ஆச்சரியங்களுக்குள் எனக்கு இன்றும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு விடயம் இந்த நிறம் மாறும் பச்சை இலைகள் தான். சிறு வயதில் இலை பச்சை நிறம் என்று படித்ததை பொய்யாக்கும் வகையில் எத்தனை எத்தனை வண்ணங்கள்...சரி, நீட்டி முழங்கி என் பிரஸ்தாபங்களை இங்கே சொல்வதை விட வழியில் பொறுக்கிய சில இலைகளை இங்கே கடை பரப்புகிறேன். பிறகொரு நாளில் படம்பிடித்தால் அதனை வேறொரு பதிவாக பின்னர் தருகிறேன்.









நிலத்தில் கிடந்த இலைகள் இவை, பொறுக்கி வந்து செய்தவை கீழே வருகின்றன. இந்த நிறங்களைக் கமறா சரியாகப் பதிவு செய்ததா என்று தெரியவில்லை. நேரே பார்க்கும் போது இலையில் நிறமும் அதன் பளபளப்பும் மினுக்கமும் சத்து நிறைந்து கிடக்கும் அதன் மலர்வான செழுமையும் என்னை சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாத்துவிட முடியாதென்ற போதும் முடிந்த சிலவற்றையேனும் என் ஆசைக்காகப் பாதுகாக்க எடுத்த முயற்கிகள் கீழே வருவன.







சும்மா இவைகளை என் கொப்பி ஒன்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். அவ்வலவு தான். வேறு என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்? லெமெனேற் செய்யலாம் என்றால் என்னிடம் அந்த இயந்திரம் தற்போது கைவசமில்லை.

இவைகள் தான் இந்த நிறங்களில் காட்சியளிக்கின்றனவென்றால் என் வேலைத் தலத்தில் Bottle brush என்ற ஒரு காட்டுத் தாவரம் பூத்திருக்கிற விதத்தைப் பாருங்கள். அது கூட மஞ்சளும் ஒறேஞ்சும் கலந்த ஒரு நூதன நிறத்தில் பூத்திருக்கிறது. எங்கள் கட்டிடத்தின் நிறத்தின் சாயலை ஒத்ததாக அதனை நாட்டியவரின் தூர நோக்குப் பார்வையையும் அந்த நேரத்தில் நான் வியக்காமல் இல்லை. 
அழகாக இருக்கிறது என்று கடந்த வியாழக் கிழமை 2.5.25 அன்று சும்மா என் கை தொலைபேசியில் எடுத்த அந்தப் பூக்கள் இன்று உங்கள் பார்வைக்காகவும்....






இந்தக் காட்டுப் பூக்கள் பல நிறங்களில் பல திணுசுகளில் மலர்வன.  எங்கள் மலர்களின் காதலி கீதமஞ்சரி வந்தால் இது பற்றி நிறைய வியங்களைச் சொல்லுவார். எனக்கு இந்தப் பூ நிறையத் தேனைக் கொண்டிருக்கும் என்பதும் அதன் காரணமாக அதனைப் பருக பஞ்சவர்ணக் கிளிகள் அடிக்கடி வந்து பூக்களில் அமர்ந்து தேனுண்ணும் என்பது மட்டும் தான் நான் கண்டு அறிந்து கொண்டது.

அட, பூக்கள் மட்டும் தான் இந்த நிறங்கள் என்றால் கனிகளும் கூடவா?  ஒரேஞ், அதன் சின்ன குழந்தை போல இருக்கும் மண்டரின் என்று சொல்லப்படும் பழம் - இவைகள் இனி அடிக்கடி மலிவு விலைகளுக்கு சந்தையில் கிடைக்கும். அது நமக்குத் தெரிந்தது தான். அவைகள் காய்க்கிற பருவம் இப்போது. அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால் பியேர்ஸ் பழங்களை சிவப்பும் ஒரேஞ்சும் கலந்த வண்ணத்தில் கண்டிருக்கிறீர்களா? அந்த ஆச்சரியத்தையும் கடந்தவார இறுதியில் என் வேலைத்தலத்துத் தோழி ஒருத்தி எனக்குக் காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். அதனை உங்களுக்கும் காட்டுகிறேன். பாருங்கள்! சிவப்பு நிற பியேர்ஸ் பழம்!








இலையுதிர் காலத்து வண்ணங்களை என்னவென்று சொல்வது? இயற்கை பெரிய பெரிய ஆச்சரியங்களை எல்லாம் தனக்குள் பொத்தி வைத்திருக்கிறது. அவற்றை கண்டு புளகாங்கிதம் அடைய எனக்குக் கொடுப்பனையும் வாய்த்திருக்கிறது. அதனை என்னவென்று சொல்வது.....

வேண்டத்தக்கதறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
யானும் அதுவே வேண்டினேன் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்றுண்டெனில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!


Tuesday, April 22, 2025

அம்மாவின் டையறியில் இருந்து....

 நேற்றய தினம் என் தாயாரின் முதல் வருட சிரார்த்த தினம்.( 21.4.25)

அதை ஒட்டி வீட்டில் சில ஒழுங்குபடுத்தல்கள், சுத்தப் படுத்தல்களைச் செய்ய வேண்டி இருந்தது. அதிலொன்று என் தாயார் பாவித்த தையல் இயந்திரமும் அதை ஒட்டிய பொருட்களும். அது சாமித் தட்டின் கீழ்புறத் தட்டில் அமைந்திருந்ததால் சாமித்தட்டைத் துப்பரவு செய்யும் போது இந்தத் தட்டையும் எடுத்துப் பார்த்து சரிசெய்யவேண்டி இருந்தது. 

இன்றைக்கொ அல்லது என்றைக்கோ ஒருநாள் அவைகளை சரிபார்க்கத் தானே வேண்டும்! 

எத்தனை நாளைக்கென்று அந்த’உணர்வை’ தொடாமலே வைத்திருப்பது....

அங்கே ஒரு கொப்பி கிடைத்தது. அதில் சிறு சிறு துணுக்குகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றினை இங்கு நான் பதிவு செய்து வைத்திருத்தல் பொருத்தம் என்று தோன்றுகிறது....

1. நிலாச் சோறு

குழந்தைக்கு நிலவைக் காட்டி

சோறூட்டுகிறாள் அம்மா

பசியோடு வாய் திறக்கிறது நிலவு.


2.மனம்

காகிதத்தில் 

சின்னக் கப்பல் தான் செய்து கொடுத்தேன்.

வீடு முழுவதையும் 

சமுத்திரமாக மாற்றி வைத்திருந்தது குழந்தை.


3.மயக்கம்

குழந்தைகள்

உதிர்த்த மதுரவார்த்தையில் மயங்கி

தானே உதிர்கின்றன

பவளமல்லிப் பூக்கள்.


4.சுற்றுக்கள்

குழந்தைகள்

கோயில் சுற்றும் போது

சாமி 

குழந்தைகளைச் சுற்றுகிறார்.


5.பாதுகாப்பு

அப்பா அம்மா சண்டையில்

பொம்மைகளை 

மறைத்து வைத்துக் கொள்கின்றன 

குழந்தைகள்.


1. கன்னியின் விநாயகர்

அதிகாலை நீராட்டு முடித்து

ஈரத்தலை சொட்டச் சொட்ட

அவள் அந்த விநாயகரை

வலம் வந்துகொண்டிருந்ததைப் 

பார்த்த மாத்திரத்தில்

எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

பாவி,

இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறார்.

அது அந்த ஆனைமுகன் தானா?

அடி,

நிஜமாலும் தான் துதி சொல்லுகிறாயா?

தோப்புக் கரனமும் வேறா?

சொல்லடி,

அவன் வழிக்கடை நோக்கு அது தானா?

அல்லது

அதுவாகத்தான் அலைபாய்கிறாயா?

இந்தத் தெய்வம்

தன் துதிக் கையில் ஏந்தியிருக்கும் 

கனிந்த பழம் நீதானா?

- லியூகோ கென்ப்மார்க் - 


பசியோடிருப்பவனின் தாகம்

ஒருதுண்டு ரொட்டிக்காகவோ

ஓர் அப்பத்திற்காகவோ

ஒரு கோப்பை கஞ்சிக்காகவோ

வாளோடு அலையும் காலத்தில்

ஒருவன் பசியோடலைகிறான்.

2. ஒருவன் மாணவப் போராளி - ஒருதுளி நீரின்றி சனங்களுக்காகப் பசித்திருக்கையில் நல்லூர் தெரு பசித்திருந்தது.

3. எம் தாயகத்தைத் திலீபன் கேட்டான். இந்தியப் படைகளை வெளியேறச் சொன்னான். மாபெரும் பசியோடு தன்னை உருக்கிய ஒருவனைக் காணாதிருந்தது உலகம்.

4. பிறகும் எமது கிண்னங்களை யாரும் திறந்து பார்த்ததேயில்லை. பிறக்கும் எமது குரலை யாரும் கேட்பதேயில்லை.

5. ஒருவன் பசியோடு உருகி முடிகையில், ஒவ்வொருவரது கிண்ணங்களிலும் கனவு தான் நிரம்பியிருந்தது.

6. நினைவுகளில் 

கனவுப் பசியோடு அலைகிறான் திலீபன் 

இன்னும் விடுபடாத தாயகம்.

7.இன்னும் எம் குரல் கேட்கா உலகம்

நேற்றல்ல,

இன்றும் எம் தெருக்களில் 

8.எம் கனவுகளில்

அவன் பசியோடு

தன் உடலை எரித்துக் கொண்டு 

அமர்ந்திருக்கிறான்.


( எப்போது எங்கிருந்து இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. 2007 அம் ஆண்டுக் காலத்திலிருந்து கொரோனா பேரிடர் காலத்திகு முன்பு வரை ஈழத்து வாரப் பத்திரிகைகளையும் இந்திய வாராந்த சஞ்சிகைகளையும் முன்பதிவு செய்து வாங்கி வாசிப்பது அவரது பழக்கமாக இருந்தது. அவ்வாறு வாங்கி வாசித்த பத்திரிகை ஏதோ ஒன்றிலிருந்து இந்தத் துணுக்குகளை அவர் சேகரித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...)

இன்னுமொரு கையேட்டில் கீழ்வரும் வாழ்த்துக்கள் எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக அவர் தன் பிள்ளைகளான எங்கள் எல்லோருக்கும் கூடவே தன் பேரப்பிள்ளைகளுக்கும் தன் சகோதரர்கள் மற்றும் அப்பாவின் சகோதரர்கள் எல்லோருக்கும் தவறாமல் பிறந்தநாள் வாழ்த்து மடலும் கூடவே ஒரு பெறுமதியான பணப்பரிசும் கொடுக்க அவர் தவறுவதேயில்லை. 

இவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டாத அப்பாவிடமும் எப்படியும் சிறிதளவு பணமும் வாழ்த்துமடலில் கையெழுத்தும் வாங்கிவிடும் சமர்த்தியமும் அவருக்கு இருந்தது.

அதில் எப்போதும் அந்தப் பரிசுக்குரிய நபரைப் பற்றிய மனதைத் தொடும் வார்த்தைகளைத் தன் சொந்த மொழியில் எழுதியிருப்பார். கூடவே வேரு சில பொதுவான வாழ்த்து வார்த்தைகளும் அதனோடு கலந்திருக்கும்.

அவற்றில் சிலவற்றை இப்படியாக எழுதி வைத்திருக்கிறார்....


அன்பான மகள்

பல்கலையும் கற்று வளமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இன்றுபோல் என்றும் மகிழ்வோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.

பல்கலையும் கற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.

சிறப்பாகக் கல்வி கற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்.

சகல செளபாக்கியமும் பெற்று நீழூழி காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பெருவாழ்க்கை வாழ்கவென வாழ்த்துகிறோம்.

30.3.2001.

நான் அவரைச் சந்திக்கும் வரை அவரது ஆத்மா இறைநிழலில் இனிதே இளைப்பாற பிரபஞ்சத்தின் பேரருளை அநுதினமும் பிரார்த்திக்கிறேன்.

ஓம் ஷாந்தி!

Friday, March 28, 2025

ஐஸ் பழமும் நானும் - தீர்க்கமுடியாப் பெரும் கடனும்

 1976/ 77 காலப்பகுதி அது.

பாடசாலையில் நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலப்பகுதி.

மூன்றுமைல் தூரத்தில் பள்ளி. பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வர வேண்டும். ஆனாலும் பஸ்ஸோ நேரத்திற்கு வராது. வந்தாலும் பள்ளிக்குப் போக எனக்கும் மனம் வராது. பிந்தி வரும் பஸ்சில் ஏறிவிட்டு பின்னர் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு நானிருக்க அப்பா என்னை அழைத்துக் கொண்டு பள்ளியில் (வீதியோரம் தான் பள்ளி அமைந்திருந்தது) விட்டு விட்டு காத்துக் கொண்டு நிற்கும் பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போவார். வருவார். 

பள்ளி விட்ட பின்னர் நேரத்திற்கு பஸ் வராது. சிவாண்ணையின் பால் வான் எப்பிடியும் வரும் அதில் ஏறலாம் என்றொரு நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கும். நான் மட்டுமில்லை பல பிள்ளைகள் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.  உயர்வகுப்புப் படித்த அக்காவை தாமாகவே எங்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். 

பள்ளிப் பாடத்தில் வரும் வீட்டு வேலைகளைச் சில புத்திசாலிப் பிள்ளைகள் கூரை இல்லாமல் சுவர் மட்டும் இருந்த பஸ் நிலையத்து சுவர்களில் வைத்து எழுதிக்கொண்டு இருப்பார்கள். பெரிய வகுப்பு படித்துக் கொண்டிருந்த அக்காவை அருகில் இருந்த பிள்லையார் கோயில் திருத்த வேலைக்காகப் பறிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த கருங்கற் பாளங்களின் மேலும் வேர்கள் மேற்கிழம்பி நமக்கு இருக்க இலகுவாக்கி நிழலும் தந்து கொண்டிருந்த ஒரு பேர் தெரிய மரத்தின் வேர்களின் மேலும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

என்னைப்போல ஒரு சில பேர் யாழ்ப்பாண வீதி வழியாகப் போகும் வாகனங்கள் அடித்து விட்டுப் போகும் சிதறு தேங்காயைப் பொறுக்கி சாப்பிடுவதிலும் எட்டுக் கோடு, ஓடிப்பிடித்து விளையாடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

ஆனாலும் ஒரு பெரும் கொடுமை பாருங்கள். சைக்கிளில் வந்து ஐஸ்பழம் விற்கும் அந்த ஒற்றை வியாபாரி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருப்பார். அடிக்கடி தன் கறுப்பு நிற கோன் போன்ற ஒன்றால் பாம் பாம் என்று அடித்து தன் இருப்பை வேறு உறுதிப்படுத்திக் கொண்டும் இருப்பார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் எங்களின் பஸ் காசும் ஐஸ் பழம் ஒன்றின் காசும் ஒரே அளவு தான்.

எப்போதுமே!

ஒரு சிறு பிள்ளை எத்தனை மணி நேரம் தான் ஆசையை அடக்கிக் கொண்டு இருப்பது!  வேளைக்கு பஸ் வந்தால் பறவாயில்லை. வீடு போய் சேர்ந்து விடுவேன். பஸ் வேளைக்கு வராது. வந்தாலும் யாழ் நோக்கிப் போகும் பயணிகளை ஏற்றிப் போகும் களைப்பில் எங்களை ஏற்றி இறக்கி மினைக்கெட அவர்கள் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அவை திருகோண மலையில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் மன்னாரிலிருந்தும் யாழ் நோக்கிப் போபவை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

நம்ம பிழைப்பு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் போகும் பஸ்சினை எதிர் நோக்கியது. அது சிலவேளை இடர்பாடோடும் சன இடிபாடோடும் வந்தால் இந்தச் சின்னஞ் சிறுசுகள் சுமார் 15 - 20 வரை இருப்பவர்களை ஏற்ற அதற்கும் பாவம் இடமிருக்காது.

3.15 க்குப் பள்ளி விட்டு 5.30 , 6.00 மணி வரையும் பஸ் வரவில்லை அல்லது எங்களை ஏற்றவில்லை என்றால் பலரும் நடராசாவில் நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள். யசோதா விளையாடியே களைத்து விடுவதால் இனியும் 3 மைல் தூரம் ஏற்ற இறக்கங்களோடு நடக்க அதற்கு மனசு வராது. எப்படியும் எங்களை விட தூரம் போகும் அக்காவை பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள் என்று விட்டு நானுமவர்களோடு காத்திருப்பேன்.

ஆனாலும் ஒன்று செய்வேன்.

கொஞ்ச நேரம் பொறுமையோடு கைக் காசை பார்ப்பதும் பின் அதனைச் சீருடைப் பொக்கற்றுக்குள்  போடுவதுமாக இருப்பேன். இனி ஐஸ்பழக் கார வியாபாரியும் போய் விடப் போகிறார் எனத் தெரியும் பட்சத்தில் ஒரு தயக்கமும் இல்லாமல் பஸ் காசினை கொடுத்து ஐஸ்பழம் வாங்கி நல்ல சந்தோஷமாக - உலகத்தில் இன்று தான் நான் வாழப்போகும் கடைசி நாள் என்பது மாதிரி ரசித்து ரசித்து சாப்பிடுவேன்.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7.00 - 7.30 மணியளவில் மருதோடைக்குப் போகும் பஸ் வந்து நிற்கும். எனக்கு வீட்டுக்குப் போகக் காசு இருக்காது. அந்த உண்மை அப்போது தான் என் மண்டைக்குள் வெளிச்சமிடும். என்ன செய்வது என்றும் தெரியாது. அப்போது உயர்தர வகுப்புப் படித்த அக்காவை எங்களோடு பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.

அவர்களில் இரண்டு பேரை எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு அக்காவின் பெயர் யோகா அக்கா. மற்றய அக்காவுக்குப் பேர் சறோ அக்கா.

பஸ் வந்து நின்றதும் நடத்துனர் இறங்கி ரிக்கற் போட ஆரம்பிப்பார். நான் மெல்ல சறோ அக்காவிடம் அல்லது யோகா அக்காவிடம் என்னிடம் பஸ்சுக்குக் காசில்லை என்பதைத் தெரிவிப்பேன்.

அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்ததோ என்னவோ,’உம்மோட பெரிய கரைச்சல் யசோ’ என்று சொல்லி விட்டு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பார்கள். வீட்டுக்கு நான் வந்து இது பற்றி மூச்சுக் கூட விட மாட்டேன்.

இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களை நான் கடந்திருக்கிறேன்....ஒரு நாள் கூட அந்த அக்காவை எனக்கு பஸ்ஸுக்கு டிக்கற் எடுத்துத் தர மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை.  பின்னர் ஒருவாறு என் தந்தையாருக்கு  தெரிந்ததோ என்னவோ சீசன் ரிக்கற் வாங்கித் தரத் தொடங்கி விட்டார். சீசன் ரிக்கற் என்பது ஒரு மாதத்துக்கான பணத்தை முன் கூட்டியே டிப்போவில் கட்டினால் அவர்கள் ஓர் அட்டையை வழங்குவார்கள். அதனை நடத்துனரிடம் காட்டினால் அவர் அந்தத் திகதிக்குரிய பகுதியை மட்டும்  அடையாளப்படுத்தி விட்டுத் தருவார். 

பணப்புழக்கத்திற்கு அதன் பிறகு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. கூடவே ஐஸ்பழத்திற்கும்!

என் வீட்டுக்கும் சொல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் சொல்லாமல், என்னை மட்டும் உரிமையோடு கடிந்து கொண்டும்; கண்காணித்துக் கொண்டும், அவ்வப்போது நான் செய்யும் குழப்படிகளைச் சகித்துக் கொண்டும் எங்களை பாடசாலை விட்ட பிறகும் கண்காணித்து பொறுப்போடு எனக்கு அவ்வப்போது பஸ்ஸுக்கு டிக்கற்றும் எடுத்துத் தந்த அக்காவை .......

அவை இப்ப எங்கை என்ன செய்து கொண்டிருப்பினம்?

சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன்....எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத அன்பென்பது இது தானோ?

அழிக்க முடியாக் கடன் கணக்கில் சேர்ந்து விட்ட இந்தக் கடன்களை இனி நான் எப்பிறப்பில் தீர்க்கப் போகிறேன்?

சறோ அக்கா, யோகா அக்கா! 

நீங்கள் செய்தவைகளை நான் என் ஆத்மாவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஜென்மங்கள் கடந்தேனும் இந்தக் கடனைத் தீர்க்க இறையருளை பிரார்த்திக்கிறேன், மனமுருகி வேண்டுகிறேன்.

வேறென்ன நான் செய்ய முடியும்.... 

சொல்லுங்கள்.....

Saturday, March 22, 2025

கம்பராமாயணத்தில் ஓர் அவலக் காட்சி

பாடல் எண் - 5976.

இலங்கை எரியூட்டுப் படலத்தில் இப்பாடல் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, 

ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, 

மற்றொரு மகவு பின் அரற்ற,

நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்

கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.


பொருள்:

 மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொருசிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்று நெருப்பு பற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய்விழுந்தார்கள். அரக்கியர் கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக்கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.   

இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. என்ன ஓர் அவலமான காட்சி! நினைத்துப் பாருங்கள்!! ஒரு பெண் தலைவிரி கோலமாகக் கூந்தல் எல்லாம் நெருப்புப் பற்றி எரிய, இடுப்பிலே ஒரு குழந்தையோடும்; கையினாலே ஒரு பிள்ளையைப் பிடித்துக் கொண்டும்; கடலை நோக்கி ஓடுகிறாள். அவளுடய இன்னொரு குழந்தை இவர்களுக்குப் பின்னாலே தொடர்ந்து ஓடி வருகிறது.

எல்லோரும் தீப்பற்றி எரிய கடலை நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் அரக்கியாக இருக்கலாம். என்றாலும் அவள் ஒரு தாய். தன் பிள்ளைகளைக் கைவிடாத தாய். பிள்ளைகளின் பிடியைக் கைவிடாது கடலை நோக்கி ஓடும் காட்சியும் இவளைப் பின் தொடர்ந்து பின்னாலே ஓடி வரும் மற்றய பிள்ளையும் மனசை உருகச் செய்கிறார்கள்.

என்ன ஒரு அவலக் காட்சி இது!!


சிவ புராணம் - சில சந்தேகங்கள்....சில திருத்தங்கள்........ சில குறிப்புகள்.........

 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பணிந்து, தொழுது இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

முற்குறிப்பு:

6 - 9 நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலப் பகுதியில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கள் அச்சு இயந்திரத்தின் அறிமுகத்துக்குப் பிறகு அச்சுருப் பெற்றன என்பது வரலாறு.

ஓலையில் எழுத்துக்களை எழுதுகிற போது சில சிக்கல்கள் இருக்கின்றன. ஓலையிலே குற்றுகள், சுழிகள், கொம்புகள் போன்ற எழுத்துவடிவங்களை எழுதுகிற போது ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதனால் அதனை எழுதுகிறவர்கள் சந்தர்ப்பம் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவது வழக்கம்.

அதனைப் பிறகு வாசிக்கிறவர்கள் வேறு ஒருவராக இருந்தால் முதலில் அதனை வாசித்துப் பார்த்து, அதன் பொருளை இன்னதென உணர்ந்து, சொற்களை அனுமானித்து, ஒருவாறாக வசனத்தையோ பாட்டையோ வாசிப்பார்கள். அதனை எழுதியவரும் வாசிப்பவரும் வேறு வேறானவர்களாக இருக்கும் பட்சத்தில் அதில் தவறுகள் நேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நம் தேவார திருப்பதிகங்களுக்கும் பொருந்தும். 

இந்தப் பதிகங்களைப் படியெடுக்கின்ற போது நேர்ந்துவிட்ட தவறுகளை நான் மிகவும் போற்றி மகிழும் சிவபுராணத்தில் ஆங்காங்கே கணக்கிடக்கிறது. தேவார திருப்பதிகங்களில் பிழை கண்டுபிடிக்கலாமா என்று யாரேனும் என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். எனது கருத்தையும் அநுமானத்தையும் நான் சொல்கிறேன். அதில் ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் அதனை நிச்சயமாகத் திருத்திக் கொள்வேன். யாரும் எதிலும் நிபுணர்கள் கிடையாது. எல்லோருக்கும் தவறுகள் நேர்வது இயல்பு. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு, திறந்த மனதோடு நாம் பாடல்களைச் சரியான அர்த்தத்தோடு பாடவேண்டுமே தவிர, எழுதி வைத்து விட்டதை சரியோ பிழையோ என்று பாராது அப்படியே ஒப்புவிப்பதைத் தவிப்பதற்காக இப் பாடலை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

நன்றி. தவறிருப்பின் பொருத்தருள்க. மறக்காமலெனக்கும் சுட்டிக் காட்டுக.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க                                         வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க                                    கோள்களை ஆண்ட

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க                                   நின்று அன்னிப்பான்

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5


வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க                                வேதம் கொடுத்தாண்ட

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க           மெய்கழல்கள்

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க                பிறந்தார்க்குச் 

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க              கரம் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10        சிரம் குவிப்பார்


ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15


ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்                                           பல் மிருகமாகிப்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30                                          செல்லாது நின்ற


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்                               விடை பகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40


ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்                    நின்று எழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45


கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை                                                        மலம் சேரும்

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55


விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே                                                   பேசாது நின்ற

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே                                      ஓதாதார் உள்ளத்து / ஒழிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே                               துன் இருளே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                   வந்தறிவாய்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே        ஊற்றானார் உண்ணா அமுதை உடையானே 

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே                                          மீண்டு இங்கு வந்து

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 


மேலதிக குறிப்புகள்:

1.கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க  கோள்களை ஆண்ட

கோகழி என்பதற்கும் கோகழியினை ஆண்ட என்பதற்கும்  என்னால் சரியான அல்லது பொருத்தமான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கோள்களை ஆண்ட என்று வருகிற போது நவக்கிரகங்களையும் கோள்களையும் அதன் வலிமைகளையும் நம்புகிற இந்துக்கள் அவற்றை ஆள்கின்றவனாக கடவுளைப் போற்றி, கோள்களை ஆண்ட குரு மணி (தன் - அவன்) தாள் வாழ்க என்று வருகிற போது அது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

2. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க        நின்று அன்னிப்பான்

ஆகமமுமாகி அதிலிருந்து அன்னிப்பவனாகவும் ( ஆகமங்களில் இருந்து தள்ளி நிற்பவனும் ஆகியவனின் தாள் - பாதங்கள் வாழ்க.

3. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க    வேதம் கொடுத்தாண்ட 

வேகங் கெடுத்தாண்ட என்பதற்கு எவ்வாறாக அர்த்தம் கற்பிக்க இயலும்? ‘வேதம் கொடுத்த ஆண்டவர்’ என்று நாம் இறைவனை துதிக்கிறோம். வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்று இந்துக்களாகிய நாம் நம்புகிறோம். அதனால் வேதங்களைக் கொடுத்து ஆண்ட வேந்தன் - அரசனுடய அடிகள் வெல்க என்று வருவது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

4.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க   மெய்கழல்கள் 

பிறப்பினை இல்லாது செய்யும் பிஞ்ஞகன் ( அவனுடய) மெய்கழல்கள் - கழல் என்பது காலில் அணியும் ஒரு பாத அணி. இங்கு அதனை அணிந்திருக்கிறவனுடய பாதங்களைக் குறிக்கிறது.  உண்மையான பாதங்கள் வெல்க.

5.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க  பிறந்தார்க்குச்

சேயோன் என்ற சொல்லுக்கு சிவன், சிறந்தவன், சிவந்தவன் என்றெல்லாம் தமிழில் பொருள் கூறப்படுகிறது. இந்து சமயத்தில் புறத்தார் என்று சிறு தெய்வ வழிபாடுகளைச் செய்துவரும் இந்துக்களை குறிப்பிடுவதாகச் சில கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்து சமயத்துக்குள் நல்லறிவும் ஞானமும் நல்லமைச்சுப் பதவியும் பெற்றிருந்த மாணிக்க வாசகர் இந்துசமயத்துக்குள்ளேயே பாகுபாடுகளைச் சுட்டிப் பாடி இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பிறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க - அதாவது பிறந்த எல்லாருக்கும் சிவனாக இருக்கிறவனுடய பூப் போன்றதும் கழல்களை அணிந்துருக்கிறதுமான பாதங்கள் வெல்க! என்பது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

6.கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க  கரங் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க    சிரங் குவிப்பார்

கரங் குவிவார் / சிரம் குவிவார் என்பதை விட கரம் குவிப்பார் / சிரம் குவிப்பார் என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கரம் குவிப்பவர்களுடய உள்ளங்கள் மகிழும் கோன் - அரசன்/ தலைவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

சிரங்குவிப்பார் - தலைகுனிந்து வணங்குபவர்கள் - அவர்களை ஓங்கி ( உயரச் செய்யும்) சீரோன் - சிறப்பானவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

7.பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்      பல் மிருகமாகிப்

பல் மிருகமாகி - பலவிதமான மிருகங்களாக உரு எடுத்து என்று வருதல் பொருத்தமாக இருக்கும். அதனை அடுத்துப் பறவையாய் பாம்பாகி என்று வருவதால் முன்னால் இருக்கும் சொல் பல்மிருகம் என்று வருதல் மிகவும் பொருளுடைத்து.

8.செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்     செல்லாது நின்ற

செல்லா அ - செல்லாது நின்ற - இதுவரை பிறபெடுக்காமல் இருக்கின்ற தாவரக் குழுமத்துக்குள் என்று பொருள் கொள்க.

9.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்       விடை பகா வேதங்கள்.

இதில் ஓர் எழுத்துப் பிழை தான் நேர்ந்திருக்கிறது என்பது என் அனுமானம். விடைப்பாகா என்பது விடை பகா - அதாவது விடை பகராத - விடை தராத வேதங்கள் என்று வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

10.போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்  நின்று தொழுதால்

இது ஓரு மறை பொருளாய் நிற்கும்சொல் என்றே எனக்குத் தோன்றுகிறது. நிந்தொழும்பின் என்பது நின்று தொழுதால் - நிந்தொழும்பின் என்று பொருள் கொள்ளல் சாலப் பொருந்தும்.( நின்று வணங்குவீர்களானால்)

11மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை  மலம் சேரும்

மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கும். இந்துக்களாகிய நாம் நம் ஆத்மாவை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள் பீடித்திருக்கின்றன என நம்புகிறோம்.

மலஞ்சோரும்  என்பதற்குத் தனியாக அர்த்தம் காண்பதை விட அச் சொற்தொடருக்கு முழுதாக அர்த்தம் காணின் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

’ஒன்பது வாயில் குடில்’ என்று ஓர் அழகான பதத்தை உபயோகிக்கிறார் மாணிக்க வாசகர். எங்களுடய உடல் ஒன்பது வாயில்களைக் கொண்ட ஒரு குடில் என்று சொல்கிறார் அவர். அவை எவை ஒன்பது வாயில்கள்?

கண்கள் - 2

காதுகள் 2

மூக்குத் துவாரங்கள் - 2

சலவாசல் - 1

மலவாசல் - 1

யோனிவாசல் - 1 

இவ்வாறாக மொத்தம் ஒன்பது வாசல்கள் எங்கள் உடலுக்கு உண்டு. இந்த ஒன்பது வாயில்களைக் கொண்ட குடிலை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் சேரும். (சோரும் என்று அர்த்தமாக மாட்டது)

இந்த உடல் குறித்த உவமைகளை இந்து சமயக் குரவர்கள் பலவாறாகப் பாடியுள்ளார்கள்.

’.......மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி....’ 

என்று ஒளவையார் விநாயகர் அகவலில் செப்புகிறார்.

அது போல, 

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்கிறார் திருமூலர் தன் திருமந்திரத்தில். 

பூதத்தாழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு பாடுகிறார்,


‘அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியாக, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்’. 

எவ்வளவு அழகிய பாடல்கள் இல்லையா? 


திருமூலரின்  இன்னொரு பாடல் 

’உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே’ - என்றும்


’உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வி இலோரே’!

 - என்றும் உள்ளத்தினுள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெல்லாமோ தேடி அலையும் பக்தர்களைத் திருமூலர்  பாடுகிறார். 

அது போல ’ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...’  என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன் பிடித்த பத்து என்று தரும் இந்தப் பாடல்களில் வரும் பக்தி கனிரசத்தை சற்றே நுகர்ந்து பாருங்கள்.

 

1. உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு

வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!

செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!

எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

2. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!

முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,

கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!

இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

3.அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

4. அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!

பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

5. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!

மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

6. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,

பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!

திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!

இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

7. பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,

பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!

தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

8. அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்

சித்தனே! பக்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

9. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உவப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

10. புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்

என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!

துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!

இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?


இது போல வள்ளலார் தரும் பாடல் ஒன்றும் இனிது நோக்கத் தக்கது. ( சொல்ல வந்த விடயத்தைத் தாண்டி பதிவு வேறு திசை திரும்பினாலும் பாடல்களின் பொருள்வளத்தினாலும் அதன் அருட் திறத்தினாலும் அர்த்தபுஷ்டியான பாடல் செழுமையினாலும் அவற்றையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.)

’கங்கையில் காவிரியில் நூறுமுறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி

வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து

பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்

தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்’.

என்கிறார் வள்ளலார்.


சரி நாம் இனி நம் விடயத்திற்கு வருவோம்.


12. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே    பேசாது

பேராது என்பதற்குப் பதிலாகப் பேசாது நின்ற என்று வருவது பொருத்தமாக அமையும் போலத் தோன்றுகிறது. இறைவன் உயிர்களோடு நேரடியாகப் பேசுவதில்லை; என்றாலும் கருணைக்குரியவனாக; - கருணைக்குரிய பேராறாக அவன் விளங்குகிறான். அதனால், பேசாது நின்ற பெருங்கருணைப் பேராறே என்பதே பொருத்தமான சொல்லடியாக இருக்க வேண்டும்.

13.ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே       ஓதாதார் உள்ளத்து ஒழிக்கும் ஒளியானே

ஓதாதார் அதாவது ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய என்ற மந்திரத்தை ஓதாதவர்களுடய உள்ளத்தில் ஒழித்து ( மறைந்து) இருக்கும் ஒளி பொருந்தியவனே - ஒளியானே என்பது பொருத்தமான சொற்தொடராக எனக்குப் படுகிறது.

ஒழி- மறைத்தல்  / இல்லாது செய்தல்

ஒளி - வெளிச்சம் / பிரகாசம்

இந்த வரியில் வரும் இரண்டும்  ( ஒழி / ஒளி )  இருவேறு அர்த்தங்களில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

14. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                  வந்தறிவாய்

 தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

 ஊற்றான உண்ணா ரமுதே உடையானே  ஊற்றானார்; உண்ணா அமுதை உடையானே

இந்த வரிகளுக்கு முதல் மூன்று வரிகளோடு சேர்த்து பொருள் கூறலே பொருத்தம் என்று தோன்றுகிறது. அதாவது, நீ இந்த உலகத்தில் எப்போதும் வந்து போகும் வெவ்வேறான மாற்றங்களாக அறியப்படுகிறாய். ( என்றாலும்) எம்மைத் தேற்றுகிறவனாகிய நீ தேற்றுவதனால் என் சிந்தனை தெளிவடைகிறது. ஊற்றானவனே! உண்ணாத அமுதை உடையவனே! அதாவது,உண்ணாத அமுதை உடையவர் சிவனார். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வெளிவந்த அமுதத்தை விழுங்கிய போது அது நஞ்சென்று அறிந்த பார்வதி சிவனாரின் தொண்டையை இறுகப் பற்ற, அது தொண்டயில் தங்கி விட்டது என்கிறது புராணம். அதனால் அவர் நஞ்சுண்ட கண்டன் ( கண்டம் - தொண்டை) ஆனார். அதனைத் நாவுக்கரசரின் திருஅங்கமாலை என்ற தேவாரத் திருப்பதிகம்  இப்படிப் பகரும். ( பதிகம் என்பது 12 பாடல்களால் ஆனது) ( அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனைத் தொழும் ஆற்றை அவர் பாடும் திறன் வியந்து நோக்கற்பாலது. அதனால் அதன் முழுப் பாடலையும் இங்கு பதிவிடுகிறேன்)

தலையே நீவணங்காய் - தலை

  மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

  தலையே நீவணங்காய்.  1  


கண்காள் காண்மின்களோ - கடல் 

  நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

  கண்காள் காண்மின்களோ.  2  


செவிகாள் கேண்மின்களோ - சிவன்

  எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 

  செவிகாள் கேண்மின்களோ.  3 


மூக்கே நீமுரலாய் - முது

  காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

  மூக்கே நீமுரலாய்.  4  


வாயே வாழ்த்துகண்டாய் - மத

  யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

  வாயே வாழ்த்துகண்டாய்.  5  


நெஞ்சே நீநினையாய் - நிமிர் 

  புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

  நெஞ்சே நீநினையாய்.  6  


கைகாள் கூப்பித்தொழீர் - கடி 

  மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

  கைகாள் கூப்பித்தொழீர்.  7 


ஆக்கை யாற்பயனென் - அரன் 

  கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 

  வாக்கை யாற்பயனென்.  8  


கால்க ளாற்பயனென் - கறைக் 

  கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 

  கால்க ளாற்பயனென்.  9  


உற்றா ராருளரோ - உயிர் 

  கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

  குற்றார் ஆருளரோ.  10  


இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

  கிறுமாந் திருப்பன்கொலோ.  11  


தேடிக் கண்டுகொண்டேன் - திரு

  மாலொடு நான்முகனுந்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 

  தேடிக் கண்டுகொண்டேன்.  12

இவ்வாறாக உண்ணா அமுதை உடையவனே என்பது பொருந்தும்.


15. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே     மீண்டு இங்கு வந்து

மீண்டு இங்கு வந்து வினைகளினால் ஏற்படுகின்ற பிறவிகள் சேராமல் ( இந்தப் பூமியில் பிறந்து ஆனவம் கன்மம் மாயை இவைகளினால் பீடிக்கப் பட்டு நாம் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் ஆற்றி இறைவனை அடையும் பாக்கியத்தை மறந்து மீண்டும் மீண்டும் பிறவிச் சாகரத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறோம். 

அவ்வாறு மீளவும் இந்த உலகில் பிறந்து வினைப் பிறவியினை எடுக்காமல் என்பது இதன் பொருளெனில் தவறாகா.

இறுதியாக,

.......சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர்

சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

( இந்தப் பாட்டினைப் பொருளுணர்ந்து சொல்லுபவர்கள், பலரும் போற்றும் விதமாக, சிவபுரத்தில் இருக்கின்ற சிவனுடய திருவடியைச் சென்று சேர்வார்கள்.) என்று முடியும் இந்தச் சிவபுராணத்து இறுதி வரிகளோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

பிற்குறிப்பு:

பேசாப் பொருளொன்றைப் பேச நான் புகுந்தேன். சரி தவறு தெரியுமளவுக்கு நான் இன்னும் ஞானத்தை அடைந்து விடவில்லை. இருந்த போதும், இந்தச் சிவபுராணத்தை ஓதுகின்ற அன்பர்கள் அதன் பொருளுணர்ந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி இதனை நான் இங்கு பதிவிடுகிறேன்.

தவறெனில் சிறியேனின் பிழை பொறுத்து ஏற்பது உம் கடன்.