Saturday, February 13, 2021

ஆரிய, திராவிட சிந்தனை மரபு

 நாலே நாலு விஷயம் தான். 

ஆதித் திராவிடத் தமிழர்களின் வாழ்க்கை முறை ஆரிய பண்பாட்டுச் செல்வாக்கிற்கு முன்னால் எப்படியாக இருந்தது என்பதை 4 சிறு உபதலைப்பின் கீழ் காணுதல் இந்தக் கட்டுரையில் நோக்கம்.

1. நாளாந்த வாழ்க்கை

2. இயற்கையை போற்றிய வாழ்வும் ஜீவகாருண்யமும்

3.கல்வியும் அறிவு சகலருக்குமானதாக இருந்தமை

4.உழவுக்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தமை.

இதற்குள்ளே நிற்கவேண்டும் என்று எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டாயிற்று; மேலும் தகவல்களைத் தேடாமல் மனம் குறித்துக் கொண்ட விடயங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களை நேரடியாக இங்கு  எழுத்தில் பதித்து விட வேண்டும் என்றும் தோன்றிற்று.

அண்மையில் பரிபாடல் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட ஒரு பாடல் வரி தான் இந்த எண்ணப் பதிவுக்குக் காரணம். அது,

‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புவீர்யீ! கேண்மின் சிறந்தது;

காதற்காமம் காமத்துச் சிறந்தது; 

விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;

புலத்தலிற் சிறந்தது கற்பே......’

என்றவாறாக விரிந்து பெருகும் பாடல் அது! 

1. அது சொல்லும் பொருள் என்னவென்றால் ’நான்குவேதங்களையும் விரித்துரைத்து அவற்றின் புகழை எல்லாம் உலகுக்கு விளக்குகிற, வாய்பேச்சில் வல்லவர்களான வடமொழிப் புலவர்களே! சிறந்த ஒன்றைக் கூறுகிறோம்;  கேளுங்கள்! ‘காதலோடு மனமொத்துக் கூடிப் பெறுகிற இன்பமே காம இன்பங்களுக்குள் சிறந்தது. பிற பெண்களிடம் சென்றுவிட்டு ஊடலினால் பெறும் இன்பம் உண்மையில் இன்பம் அன்று; தம் கணவர் தம்மைவிட்டு அகன்றதை அறியாதவரான இல்லத் தலைவியர்களை வருத்தும் தவறினைச் செய்யாத;  தள்ளுவதற்கு இயலாத அகப்பொருள் பண்பாட்டின் இலக்கணத்தோடு அமைந்த தண்மை பொருந்திய தமிழ் பண்பாட்டின் வழியிலே வந்த மக்கள் வாழும் பரம்குன்றம் இது’ என்றவாறு பொருள் கொள்ளத்தக்கதாக அப்பாடல் அமைந்துள்ளது.

இந்தப் பாடல் கிளப்பிய சிந்தனைதான் இந்த ஆரிய திராவிட சிந்தனை மரபின் வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் காணும் ஆர்வத்தைத் தூண்டியது. 

சங்க காலமாகிய கிபி 1 - 3 நூற்றாண்டுகளுக்குள்ளேயே வட இந்திய ஆரிய சமஸ்கிருத பண்பாட்டு வாழ்க்கைமுறை, தத்துவார்த்த சிந்தனைகள் எல்லாம் தென் இந்தியா எங்கும் புகுந்து மக்களால் பின்பற்றப்படும் வாழ்க்கைமுறையில் ஒன்றாகி விட்டது.

அதனால் ஆதித் திராவிட பண்பாடு அதாவது சுத்த தமிழ் பண்பாடு எது ஆரியப் பண்பாடு எது என்பது குறித்துப் பார்ப்பது, நம் மூலத்தை அறிந்து; நம் மூல வேர் எது? நம் சிந்தனை மரபு எத்தகையது என்ற தெளிவினை பெற அது உதவும்.

திராவிட வாழ்க்கைமுறையில் சாதிப்பாகுபாடுகள்; இனப் பாகுபாடுகள்; ஆண்பெண் பேதம் எதுவுமில்லாததாக அது விளங்கியமைக்கு சங்க காலப் பாடல்கள் சாட்சி. அதனைப் பாடியவர்கள் பல்வேறு தொழிலைப் புரிந்தவர்களாக இருந்தார்கள்; பெண்பாற்புலவர்களும் இருந்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்தார்கள். வாழ்வு பற்றி அறிவார்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அதனால் ’பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்ந்தல் அதனிலும் இலமே’ என்று அடக்கத்தோடு வாழ்ந்தார்கள். யாண்டு பலவாக என்ற சங்கப்பாடல் ’கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று பெருமை கொள்ளும் படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். ‘உண்பது நாழி; உடுப்பவை இரண்டே’ என்று எளிமை வாழ்வை அதன் அடிப்படை தேவைகளை சொன்னது தமிழ் அறம்.

இதே காலப்பகுதியில் உள்ளே புகுந்த ஆரியப் பண்பாட்டின் செல்வாக்குகள் ஆங்காங்கே ஒலிப்பதை சங்கப் பாடல்களிலேயே காணலாம். அவர்கள் வர்ண பாகுபாட்டை கொண்டு வந்தார்கள். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக பிறக்கிறான் என்றார்கள்.  படிப்பும் அறிவும் பிறப்பால் உயர்ந்தவனாகப் பிறக்கும் ஒருவனுக்கே உரியது என்றார்கள்.இப்படியாகப் பின்நாளில் தமிழரின் மேன்மை பொருந்திய  வாழ்க்கை ஒன்று சாதியால் பிளவு பட்டது. அது நம் ஆதி வாழ்வு அல்ல; அது நம் வாழ்வில் புகுந்த ஒன்று.

2. ஆதித் திராவிட தமிழன் இயற்கையை ஆராதித்து இயற்கையை தன் வாழ்வின் ஒரு கூறாகவே கண்டான். அதற்கும் சங்கப் பாடல்களே சாட்சி. ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்று முல்லையோடு கோவிக்கும் தலைவியும்; புன்னைமரத்தடியில் என்னைச் சந்திக்காதே காதலா! அது மரமல்ல என் தங்கை  என்று காதலனுக்கு சொல்லும் காதலியும்; நாம் சந்தித்ததற்கு நாரை மட்டும் தான் சாட்சி என்று நாரையை சாட்சிக்கழைக்கும் தலைவியையும் கொண்டதாக அமைந்தது தமிழ் திராவிட காதல் வாழ்வியல். முற்றத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது அணில்கள் கொண்டாட்டமாக ஓடித்திரியும் என்பதை கண்டு பாடலில் அதனை வைத்ததால் அணிலாடும் முன்றிலார் என்று ஒரு புலவர் பெயர் கொண்டது தமிழ் திராவிட பண்பாட்டின் அழகியல். மாறாக ஆரியப் பண்பாடு உயிரினங்களை ஆகுதி ஆக்கி அக்கினியில் போடப் பணித்தது. கடவுளை மகிழ்விக்க யாகங்கள் பிறந்தன. அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் மாத்திரம் உயரிய உரிமைகளை அது வழங்கியது.

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆதித் திராவிடத் தமிழ் பண்பாடு சகல உயிர்களையும் தன்னைப் போலவே பிறரையும் பிற உயிரினங்களையும் மட்டுமல்ல இயற்கை வளங்களையும் மரங்களையும் கூட நேசிக்கும் அறத்தை கொண்டு விளங்கியது.

ஜீவன்கள் மீதான அவர்களின் காருண்யம் எத்தகைய மேன்மை பெற்றதாக விளங்கியதென்பதற்கு புறநானூறில் வரும் கோவூர் கிளாரின் 46வது பாடல் சாட்சி.(நீயே, புறவின் அல்லல்...)  இரவு நேரம் கடற்கரை மணலில் நண்டுகள் ஓடித்திரியும். அவைகளில் தேர்சக்கரம் மிதிபடாமல் வர வேண்டி இருப்பதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று தலைவிக்கு ஆறுதல் சொல்லும் நற்றிணைத் தலைவியும் (பெய்யாது வைகிய கோதை...11) ; தேரில் வேகமாக வரும் போது எழும் மணி ஓசை வண்டுகளின் காதலை தடுத்து நிறுத்தி விடுமோ என்று எண்ணி மணிகளின் நாக்குகளை அசையாமல் இறுகக் கட்டி விட்டு மெதுவாக வருவதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று சொல்லும் அகநானூற்றுத் தோழியும் ( முல்லை வைந்நுனை தோன்ற...4) அழகியல் சார்ந்த தமிழரின் வாழ்வியல் சாட்சிகள்,.

3. திராவிட சிந்தனை மரபில் கல்வி. அது எல்லோருக்குமானதாக இருந்தது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று சொல்லும் புறப்பாடல் (183) ஒன்று முடியும் போது ‘நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’ என்று முடியும்.

இப்பாடல் நேரடியாகவே ஆரியத்தோடு அறிவால் முரண்பட்டு ஆதித்திராவிட வாழ்வின் மகத்துவத்தை வீரியத்தோடு சொல்லக் காணலாம். ஆரிய பண்பாடு பிறப்பாலே தான் ஒருவனுக்கு கல்வி என்ற போது; இல்லை, அது நீங்கள் சொல்லும் பிராமண, சத்ரிய, வைசிய,சூத்திர வர்ணத்துள்ளும் ஒருவன் கற்றால் அவன் மேற்பாலுக்கு வரலாம் என்று ஒரு எதிர்ப்புக் குரலாக இங்கு ஒலிக்கக் காணலாம். இதனை பின்னாளில் வள்ளுவரும் சிறப்பாகச் சொல்லுவார். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்பொருளை காண்’ என்றவர் வள்ளுவர்.

வள்ளுவரும் புத்தரும் ஆரியத்துக்கெதிராக தொடுத்த போர் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. குறிப்பாக வள்ளுவர் அதனை வெகு சமர்த்தாகச் செய்திருக்கிறார். புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர், ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’  ( குறள் -259) என்கிறார்.  இவைகளை விரித்துச் சென்றால் முன்னர் சொன்னது போல் கட்டுரை வேறு பாதையில் திசைமாறிவிடும் என்பதால் அதனை இந்த இடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

4.உழவுத் தொழில்; பிராமணரும் அரசரும் பிறப்பால் முதல் இரண்டு இடத்தையும் பெற மூன்றாவது இடத்தை வணிகர்கள் கைப்பற்ற வாழ்க்கைக்கு ஆதார சுருதியினர் பின் தள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை ஆரிய சித்தாந்தம்  கற்பிக்க உழவுத்தொலைச் சிறப்பித்து; ’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்றுரைக்கிறார் வள்ளுவர்; ஆரியம் எல்லாம் தெய்வத்தாலே நிர்ணயிக்கப் பட்டது என்று சொல்ல வள்ளுவன்’ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என்கிறார். ஆரிய தர்மத்தை நிறுவிய மனு பிறப்பாலே தான் ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்று சொல்ல புறநானூறு (18) நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று உழவனையும் உழவையும் முன்னிலைப் படுத்துகிறது. பிறப்பால் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை வள்ளுவன் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறான்.

இந்த நமக்கே நமக்குச் சொந்தமான; ஆதித் தமிழ் திராவிட வாழ்க்கையை மீட்டெடுத்தால் நம் வாழ்வு எத்தனை அர்த்தமுடையதாக இருக்கும் இல்லையா?

2 comments:

  1. "பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை....."
    நாங்கள் பாடசாலையில் படிக்கும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவதில்லை ஆனால் தற்பொழுது தாயக‌ பாடசாலைகளில் காலில் விழுந்து வண‌ங்குகின்றனர் ,பரிசுகள் பெற்றவுடன் அதிபர்கள் காலில் விழுந்து வணங்குகின்றனர்..அதிபர்களும் ஆசிரியர்களும் அதை தடுக்காமல் விழுந்து கும்பிடுங்கள் என்ற வகையில் நிற்கின்றனர்....வட இந்திய கலாச்சாரம் இன்று எம்மவர்கள் மத்தியில் வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது...புலம்பெயர்ந்த பிரதேசங்களில் எங்களின் பிள்ளைகளும் சங்கீத,நடன வகுப்புக்களில் விழுந்து எழ வேண்டிய நிலை ஆனால் பிரதான பாடசலைகளில் ஆசிரியர்களை பெயர் சொல்லி அழைக்கின்றனர்...(பெரியோரை வியத்தலும் இலமே)
    ஆரிய பண்பாடு எமக்கு இந்து மதம் ஊடாக நன்றாகவே ஊறிவிட்டது இதிலிருந்து விடுபடுவது கடினமான விடயம்....

    ReplyDelete
  2. இந்த ஆரிய மத நம்பிக்கைகள் நம்மிடம் ஆரிய நம்பிக்கைகள் திராவிடக் கலாசாரத்தில் ஊடுருவாமல் இருந்திருந்தால் நம் சிந்தனை நெறி வேறு திசையில் சென்றிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
    மேலைத்தேயக் கலாசாரங்களில் மரியாதை என்பது அவரவர் சம்பாதித்துக் கொள்வது. வயதில் பெரியவர் என்ற காரணமாகப் பெறப்படுவதில்லை.
    என்றாலும் ஒரு சிறந்த குருவை காண்கின்ற போது எனக்கும் வீழ்ந்து பணியத் தோன்றுவதுண்டு...

    ReplyDelete