நேற்றய தினம் என் தாயாரின் முதல் வருட சிரார்த்த தினம்.( 21.4.25)
அதை ஒட்டி வீட்டில் சில ஒழுங்குபடுத்தல்கள், சுத்தப் படுத்தல்களைச் செய்ய வேண்டி இருந்தது. அதிலொன்று என் தாயார் பாவித்த தையல் இயந்திரமும் அதை ஒட்டிய பொருட்களும். அது சாமித் தட்டின் கீழ்புறத் தட்டில் அமைந்திருந்ததால் சாமித்தட்டைத் துப்பரவு செய்யும் போது இந்தத் தட்டையும் எடுத்துப் பார்த்து சரிசெய்யவேண்டி இருந்தது.
இன்றைக்கொ அல்லது என்றைக்கோ ஒருநாள் அவைகளை சரிபார்க்கத் தானே வேண்டும்!
எத்தனை நாளைக்கென்று அந்த’உணர்வை’ தொடாமலே வைத்திருப்பது....
அங்கே ஒரு கொப்பி கிடைத்தது. அதில் சிறு சிறு துணுக்குகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றினை இங்கு நான் பதிவு செய்து வைத்திருத்தல் பொருத்தம் என்று தோன்றுகிறது....
1. நிலாச் சோறு
குழந்தைக்கு நிலவைக் காட்டி
சோறூட்டுகிறாள் அம்மா
பசியோடு வாய் திறக்கிறது நிலவு.
2.மனம்
காகிதத்தில்
சின்னக் கப்பல் தான் செய்து கொடுத்தேன்.
வீடு முழுவதையும்
சமுத்திரமாக மாற்றி வைத்திருந்தது குழந்தை.
3.மயக்கம்
குழந்தைகள்
உதிர்த்த மதுரவார்த்தையில் மயங்கி
தானே உதிர்கின்றன
பவளமல்லிப் பூக்கள்.
4.சுற்றுக்கள்
குழந்தைகள்
கோயில் சுற்றும் போது
சாமி
குழந்தைகளைச் சுற்றுகிறார்.
5.பாதுகாப்பு
அப்பா அம்மா சண்டையில்
பொம்மைகளை
மறைத்து வைத்துக் கொள்கின்றன
குழந்தைகள்.
1. கன்னியின் விநாயகர்
அதிகாலை நீராட்டு முடித்து
ஈரத்தலை சொட்டச் சொட்ட
அவள் அந்த விநாயகரை
வலம் வந்துகொண்டிருந்ததைப்
பார்த்த மாத்திரத்தில்
எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
பாவி,
இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறார்.
அது அந்த ஆனைமுகன் தானா?
அடி,
நிஜமாலும் தான் துதி சொல்லுகிறாயா?
தோப்புக் கரனமும் வேறா?
சொல்லடி,
அவன் வழிக்கடை நோக்கு அது தானா?
அல்லது
அதுவாகத்தான் அலைபாய்கிறாயா?
இந்தத் தெய்வம்
தன் துதிக் கையில் ஏந்தியிருக்கும்
கனிந்த பழம் நீதானா?
- லியூகோ கென்ப்மார்க் -
பசியோடிருப்பவனின் தாகம்
ஒருதுண்டு ரொட்டிக்காகவோ
ஓர் அப்பத்திற்காகவோ
ஒரு கோப்பை கஞ்சிக்காகவோ
வாளோடு அலையும் காலத்தில்
ஒருவன் பசியோடலைகிறான்.
2. ஒருவன் மாணவப் போராளி - ஒருதுளி நீரின்றி சனங்களுக்காகப் பசித்திருக்கையில் நல்லூர் தெரு பசித்திருந்தது.
3. எம் தாயகத்தைத் திலீபன் கேட்டான். இந்தியப் படைகளை வெளியேறச் சொன்னான். மாபெரும் பசியோடு தன்னை உருக்கிய ஒருவனைக் காணாதிருந்தது உலகம்.
4. பிறகும் எமது கிண்னங்களை யாரும் திறந்து பார்த்ததேயில்லை. பிறக்கும் எமது குரலை யாரும் கேட்பதேயில்லை.
5. ஒருவன் பசியோடு உருகி முடிகையில், ஒவ்வொருவரது கிண்ணங்களிலும் கனவு தான் நிரம்பியிருந்தது.
6. நினைவுகளில்
கனவுப் பசியோடு அலைகிறான் திலீபன்
இன்னும் விடுபடாத தாயகம்.
7.இன்னும் எம் குரல் கேட்கா உலகம்
நேற்றல்ல,
இன்றும் எம் தெருக்களில்
8.எம் கனவுகளில்
அவன் பசியோடு
தன் உடலை எரித்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறான்.
( எப்போது எங்கிருந்து இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. 2007 அம் ஆண்டுக் காலத்திலிருந்து கொரோனா பேரிடர் காலத்திகு முன்பு வரை ஈழத்து வாரப் பத்திரிகைகளையும் இந்திய வாராந்த சஞ்சிகைகளையும் முன்பதிவு செய்து வாங்கி வாசிப்பது அவரது பழக்கமாக இருந்தது. அவ்வாறு வாங்கி வாசித்த பத்திரிகை ஏதோ ஒன்றிலிருந்து இந்தத் துணுக்குகளை அவர் சேகரித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...)
இன்னுமொரு கையேட்டில் கீழ்வரும் வாழ்த்துக்கள் எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக அவர் தன் பிள்ளைகளான எங்கள் எல்லோருக்கும் கூடவே தன் பேரப்பிள்ளைகளுக்கும் தன் சகோதரர்கள் மற்றும் அப்பாவின் சகோதரர்கள் எல்லோருக்கும் தவறாமல் பிறந்தநாள் வாழ்த்து மடலும் கூடவே ஒரு பெறுமதியான பணப்பரிசும் கொடுக்க அவர் தவறுவதேயில்லை.
இவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டாத அப்பாவிடமும் எப்படியும் சிறிதளவு பணமும் வாழ்த்துமடலில் கையெழுத்தும் வாங்கிவிடும் சமர்த்தியமும் அவருக்கு இருந்தது.
அதில் எப்போதும் அந்தப் பரிசுக்குரிய நபரைப் பற்றிய மனதைத் தொடும் வார்த்தைகளைத் தன் சொந்த மொழியில் எழுதியிருப்பார். கூடவே வேரு சில பொதுவான வாழ்த்து வார்த்தைகளும் அதனோடு கலந்திருக்கும்.
அவற்றில் சிலவற்றை இப்படியாக எழுதி வைத்திருக்கிறார்....
அன்பான மகள்
பல்கலையும் கற்று வளமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்.
இன்றுபோல் என்றும் மகிழ்வோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.
பல்கலையும் கற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.
சிறப்பாகக் கல்வி கற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்.
சகல செளபாக்கியமும் பெற்று நீழூழி காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பெருவாழ்க்கை வாழ்கவென வாழ்த்துகிறோம்.
30.3.2001.
நான் அவரைச் சந்திக்கும் வரை அவரது ஆத்மா இறைநிழலில் இனிதே இளைப்பாற பிரபஞ்சத்தின் பேரருளை அநுதினமும் பிரார்த்திக்கிறேன்.
ஓம் ஷாந்தி!