Sunday, May 31, 2009

நம்மை நமக்கு மீட்டுத் தர.....

அழகான இந்தத் தலைப்பு உமாவின் பதிவிலிருந்து பெறப்பட்டது.சலிப்பும் சோர்வும் கொண்டிருந்த போது இச் சொல் புதிதாய் ஒரு கதவை மனதில் திறந்து சென்றது.

பிரச்சனைகளை எப்படி நாம் சமாளிக்கலாம் என்பதற்கு அவரவருக்கென்று சில வழிமுறைகள் உண்டு.புறக் காரணங்களாலும் அகக்காரணங்களாலும் ஏற்படும் மன அழுத்தங்கள் தீரும் வழிமுறைகள் பற்றி நேற்றய தினம் ஒரு கலந்துரையாடல் STARTTS இன் ஆதரவோடு இடம் பெற்றது.அவை பலருக்கும் பயனுடயதாக இருக்கலாம் என்பதால் இங்கு உங்களோடு இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1) குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை விட அச் சம்பவம் பற்றி நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளே பெரும்பாலும் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணமாகின்றன.உதாரணமாக எமக்குத் தண்ணீர் விடாய்க்கிறது என்றும்;ஒரு பாத்திரத்துக்குள் பாதியளவு தண்ணீர் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.இதனை நாம் எப்படிப் பார்ப்போம்?
ஆஹா..தண்ணீர் இருக்கிறது!
ம்ம்.. பாதியளவு தானே இருக்கிறது.
எனக்கிது போதாது.
பாதியளவாவது கிடைத்ததே!
இது ஒருவாய்க்குக் காணுமா..?
பறவாயில்லை போதும்..!
நாளைக்கு என்ன செய்வது..?
இன்றைக்குச் சமாளிக்கலாம்.

இப்படிப் பலவிதமாகப் பார்க்கலாம்.இதனால் பாதியளவு தண்ணீர் என்பதல்ல பிரச்சினை; அதனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது பிரச்சினை.நாம் பார்க்கின்ற பார்வையில் தான் பிரச்சினை.

பொதுவாக நம்முடய நடைபாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது கல்லடிபட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். நாம் எப்படி அதனை மற்றவர்களுக்குச் சொல்கிறோம்? "கல்லடித்துவிட்டது" என்று தானே!உண்மையில் கல்லா நம்மை அடித்தது? நாமன்றோ கல்லை அடித்தோம்!நாம் அதனை எவ்வாறு பொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அதனால் உண்மையில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாக அடையாளம் கண்டுகொள்வது என்பது மிக முக்கியமானது.சரியான மூலத்தினை அடையாளம் கண்டு கொண்டு விட்டோம் என்றால் அந்த இடத்திலேயே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடுகின்றன.பின்னர் தீர்வுகளும் இலகுவாகி விடுகின்றன.

அதனால் நாம் அச் சம்பவத்தால் என்ன உணர்வினைப் பெற்றிருக்கிறோம் என்பதை முதலில் இனம் கண்டு கொள்வதும்(துன்பம்,கோபம்,உடன்படாமை,வெறுப்பு...); அதன் மூல காரணத்தை அடையாளம் கண்டு கொள்வதும்; நமக்கு நம்பிக்கையானவர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

சரி நமக்குத் தெரியாத புறக் காரணிகளால் வருகின்ற தொந்தரவுகளை,பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்?உதாரணமாகக் கோபமாக இருக்கும் அனால்,யாரோடு கோபப் படுவது என்று தெரியாமல் இருக்கும்.ஈழப் பிரச்சினையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.யாரோடு நாம் நோகலாம்? இந்த வலியை எங்கு சென்று நாம் தீர்த்துக் கொள்ளலாம்?

பொதுவாக நாம் இழப்பையோ வலிகளையோ சந்திக்கின்ற போது அது 6 கட்டங்களைச் சந்திப்பதாகச் சொல்லப் படுகிறது.

1) உயிர் தப்புதல்.
2) துன்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தல்.
3) கடவுளோடு பேரம் பேசுதல்.
4) கோபம் கொள்ளுதல்.
5) துன்பமடைதல்.
6) ஏற்றுக் கொள்ளுதல்.

எந்த ஒரு உயிருக்கும் முதலில் உயிர் தப்புதலே பிரதானமாக இருக்கும்.உதாரணமாக வளிநாடுகளுக்கு நம்மைப் போல் தப்பி வந்தவர்கள்.அதன் அடுத்த கட்டமாக இந்த 'இரண்டக நிலையை' ஏற்றுக் கொள்ள மறுத்தல் இருக்கும்.புலம் பெயர்ந்த தமிழரிடம் இருக்கும் இந்த 'ஈழதாகம்'அதனைச் சரியாகப் புலப்படுத்தும்.பின்னர் அது நம்மை விட மேலான ஒரு சக்தியிடம் பேரம் பேசுவதாகவோ அல்லது எடுத்துரைப்பதாகவோ இருக்கும்.உதாரணமாக பரீட்சை எழுதிவிட்டுக் கடவுளிடம் நேத்தி வைப்பதில்லையா அது போலத் தான்.புலம் பெயர்ந்தோர் தத்தம் நாட்டு அரசுகளோடு மகஜர்களைக் கொடுத்ததையும் இதற்கு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

அதன் அடுத்த கட்டமாகக் கோபம் புலப்படும்.இப்போது நம்மவர் இருக்கின்ற நிலையை அதற்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.குற்றவுணர்வும் இதற்குள் கலந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.இக்கோபம் தத்தம் நாட்டு அரசு மீதானதாகவும் சில வேளை தம்மீதானதாகவும் கூட இருக்க வாய்ப்புண்டு.(சிட்னியில் இடம் பெற்ற கைகலப்புகள் பொலிஸாரின் தலையீடு என்பன கவனிக்கத்தக்கது.)

இது பின்னர் துன்பமாக மாறி ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்று கூறப் படுகிறது.

இந்தப் படிநிலைகளை உணர்ந்து கொள்வதன் மூலம் நாம் இப்போது என்ன மனநிலைப் படிமுறையில் இருக்கிறோம் என்பதை இனம் கண்டு கொண்டு போவது நல்லது.

இவை முழுக்க முழுக்க இயல்பானவை;இயற்கையானவை;எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோல்விகளையும் இழப்புகளையும் சந்தித்திருப்போம்.ஆதனால் அவை எல்லாம் இயற்கையானவை என்றும் இயல்பானவை என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

சரி, இந்தக் கோபத்தை,அன்றாட பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? நேற்றய தினம்(30.05.09) ஒவ்வொருவரும் எப்படி எப்படித் தப்பிக் கொள்கிறார்கள் என்பது பற்றி சுவாரிஸமான பல தகவல்களைத் தந்தார்கள்.

அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment