Saturday, July 25, 2009

சொல்லும் பொருளும்;சொல்லின் பொருளும்


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனைக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.

வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும் பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும் அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)


ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் செய்யப் படுவது ஊழியம். அதனால் உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.
பட உதவி;நன்றி,இணையம்

(பதிவு மறு பிரசுரம்.ஈழத்து முற்றத்திலும் இது பதிவாகியுள்ளது)

Sunday, July 19, 2009

சோகம்



இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லை
எல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.
கொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.
விரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.
கொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்
எந்தக் கறையும் இல்லை.
இரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,
கத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.
தரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை நிறம்.

சுவடேதுமில்லாமல் மறந்து போன இந்த இரத்தம்
ஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதியல்ல;
அதனிடம் சென்றடைய
எனக்கு வழி காட்டுபவர் யார்?
பேரரசர்களுக்கான சேவையின் போது
சிந்தப்பட்ட இரத்தமல்ல-
அது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,
அதன் எந்த ஒரு ஆசையும் பூர்த்திசெய்யப்படவில்லை.
பலிச் சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல அது.
கோயிலிலுள்ள புனிதக் கோப்பையில்
பிடித்து வைக்கப் பட்டதுமல்ல.
எந்த ஒரு சண்டையிலும் சிந்துப்பட்டதல்ல-
வெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு
யாராலும் பயன்படுத்தப் பட்டதுமல்ல.

ஆயினும் யாருடய செவிக்கும் எட்டியிராத அது
தன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்
கூக்குரலிடுகிறது.
கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை;விருப்பமில்லை.
கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது
இந்த அனாதை இரத்தம்.
ஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை.
வழக்கு ஏதும் பதிவு செய்யப் படவில்லை.
தொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு ஊட்டமாக இருந்தது
தூசி மட்டுமே.
பிறகு அது சாம்பலாயிற்று,சுவடு எதனையும்
விட்டுச் செல்லாமல்
தூசிக்கு இரையாயிற்று.

கவிஞர்;

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்

பட உதவி; நன்றி;இணையம்.

இராணுவ முகாம்களில் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டு சுவடேதும் இல்லாமல் காணாமல் போய் விட்ட ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.

Sunday, July 12, 2009

திருமணத்தின் முன்னும்;பின்னும்

அண்மையில் மின் தபால் மூலம் வந்த சிறு உரையாடல் பகுதி இது.மூலம்(www.wackywits.com)

திருமணத்துக்கு முன்பான உரையாடல் இது.திருமணத்திற்குப் பின் எப்படி என்று அறிய விருப்பமா? இதே உரையாடலைக் கீழிருந்து வாசித்துப் பாருங்கள்.

John: Ah..At last.I can hardly wait!

Jane: Do you want me to leave?

John: No! Don't even think about it.

Jane:Do you love me?

John: Of course!Always have and always will.

Jane: Have you ever cheated on me?

John: No! Why are you even asking?

Jane: Will you kiss me?

John: Every chance i get!

Jane: Will you hit me?

John: Hell no! Are you craze?!

Jane: Can i trust you?

John: Yes

Jane: Darling!

புன்னகைக்க முடிகிறதா?

Thursday, July 2, 2009

அறிவின் விழிப்பு - முருகையன் -

27.06.2009 அன்று காலமான கவிஞர் முருகையன் அவர்களின் நினைவாக!

நான் யாழ் வளாகத்தில் கற்றபோதும்; வேலை செய்த போதும் பதிவாளராகக் கடமையாற்றியவர்.உருவத்தில் சிறியவராகவும்; சுபாவத்தில் அமைதியானவராகவும் விளங்கியவர்.உணர்வுகளை வென்றவராக அவர் விளங்கினார்.அதனால் போலும் சர்ச்சைகள் அவரிடம் சொந்தம் கொண்டாடியதில்லை.

அவர் தமிழுக்குத் தந்த கவிதை இது!!!
ஈழத் தமிழருக்கு விட்டுச் சென்ற அவரின் சிந்தனைச் செல்வத்தில் ஒன்று!!



இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமை எங்களுக்கு



இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு

மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின்முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.
தேட்டம் என்று நம்பி,சிதைந்த பழம் பொருளின்
ஓட்டை,உடைசல்,உளுத்த இறவல்கள்,
பீத்தல்,பிறுதல்,பிசகி உதிர்ந்தவைகள்,
நைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டு
சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை -
இப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து
மூட்டைகட்டி, அந்த முழுப்பாரம் கண்பிதுக்கக்
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.

மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.
பாதை நடையின் பயணத் துயர் உணரா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.
ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.

மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்
பற்றி, முயன்று, பகை களைந்து,மேலேறி
விண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக
மண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,
வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்
ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்
நெஞ்சம் இசைந்தார்.
நிகழ்த்தினார் நீள்பயணம்.

பின் முதுகில் பாரப் பெருமை இல்லாதவர்கள்
இத்தனையும் செய்தார்.
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
நாமோ
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்
சற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வு பெற்றுப்
புத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.

மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக்
கொட்டி உதறி, குவிகின்ற கூழத்துள்
வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி,
அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ
சற்றேனும் இல்லோம்.
சலிப்பும் வலிப்பும் எழ,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த,
ஊருகிறோம்;ஊருகிறோம் - ஓயாமல் ஊருகிறோம்.

பரந்த உலகோர் பலரும், சுமையைச்
சுருங்கும் படியாகக் குறைத்துச் சிறிதாக்கிக்
கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,
வெற்றுக்கை கொண்டும் வியப்புகள் ஆக்குகையில்,
புத்தி நுட்பம்,செய்கை நுட்பம்,போக்கு நுட்பம் என்பவற்றால்
சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,
நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர் படுத்த
ஊருகிறோம்,ஊருகிறோம் - ஓயவில்லை,
ஊருகிறோம்.

வேண்டாத குப்பை விலக்கி,மணி பொறுக்கி
அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஓ!
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;
பண்பாட்டின் பேரால் பல சோலி எங்களுக்கு.



"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து....

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.