Wednesday, July 28, 2010

தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே


மகா பாரதத்தில் ஒரு இடம் வருகிறது.

கங்கை கன்னியுடல் தரித்து மானிட உலகத்துக்கு வருகிறாள். அவளின் அழகில் மோகித்த சந்தனு மகாராஜா அவளை மணம் புரிந்து கொள்ள வேண்டுகிறான்.அவள் தன்னுடைய நிபந்தனைகளைச் சொல்கிறாள்.மகாராஜாவும் அதற்கு சம்மதிக்கிறான்.
சந்தனு மகாராஜாவின் மனைவியானாள் கங்கை.

அவர்களுடய இல்லறம் பற்றி மகாபாரதத்தில் ஒரு இடம் வருகிறது. சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்கையின் இல்லறக் குண இயல்பு பற்றியது அது.

"கங்கா தேவியினுடய வினயமும், ஒழுக்கமும்,உபசாரமும்,கூட இருக்கும் போதும் இல்லாத போதும்,ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பும்,அரசனுடய இதயத்தைக் கவர்ந்தன."

"கூட இருக்கும் போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பு"
ஒரு நுட்பமான பதிவு என்றே தோன்றுகிறது.இது ஒரு அரிய குண இயல்பு.உள்ளார்ந்த சுடரின் ஒளி அது.உண்மையின் பிரகாசம்.உண்மையாக இருத்தலின் அழகு அது.ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய குண அழகு.சொத்து.அது தனக்கும் தன்னை வரிந்தவனுக்கும் அவள் கொடுக்கும் வெகுமதி.

இதே மாதிரியான வினயமும், ஒழுக்கமும், உபசாரமும், அகச் சுடரும் கொண்ட ஒரு பெண்ணை அண்மையில் வாசித்த ஒரிசா நாட்டுக் குறுநாவல் தந்தது.நாவலின் பெயர் கடமை. அந்த அரிய கதையைத் தந்தது யுகமாயினி இதழ் 32.மே 2010 சஞ்சிகை.மூலக் கதையாசிரியர் ஜே.பி. தாஸ் அவர்கள்.ஆங்கில வழியிலிருந்து அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.(கட்டாயம் பெண்கள் வாசிக்க வேண்டிய குறு நாவல் அது)

அதில் வருகிற கதை நாயகி 17 வயதில் திருமணம் செய்து கொண்ட கிராமத்து அடக்கமும், அப்பாவித்தனமும், தனக்கென வரிந்து கொண்ட வாழ்க்கை நியமங்களையும் கொண்ட பெண்.
நகரம் பற்றிய பயங்கள் நிரம்பியவள்.சந்தனு மகாராஜாவைப் போலவே அவனும் நல்ல கணவன். நகரின் வேலை நிமித்தம் நகருக்கு வருகிறார்கள்.வெளியே போய் மற்ற பெண்களைப் போல நடமாடி வர அனுமதித்த போதும் வீட்டை விட்டு தனியே போக அவள் ஒரு போதும் விரும்பியதில்லை.அவளை ஒரு ஆசாரமிக்க ஒரு இஸ்லாமியப் பெண்ணாகக் கற்பனை பண்ணுங்கள்.

ஒரு நாள் கணவன் வேலைக்குச் சென்ற பின் கதவு தட்டப் பட்டது.அவள் கதவைத் திறக்க மறுத்து விட்டாள். கணவன் வந்த போது அது பற்றித் தெரிவித்தாள். அதற்கு அவன் அது தபாற்காரனாக இருக்க வேண்டும்.இதோ தபால் வெளியே கிடந்தது எனக் காண்பிக்கிறான்.வேறொரு நாள் அதே போல கதவு தட்டப் பட்டது.அவள் தபாற்காரனாக இருக்க வேண்டும் என்று நினைத்து கதவைத் திறக்காது தபாலைக் கதவுக்குக் கீழே போட்டு விட்டுப் போகும் படி கூறுகிறாள்.ஆனால் அது சுகயீனம் காரணமாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்ட அவள் கணவனாகும்.

கணவன் இருக்கின்ற போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பண்பினைப் பெற்ற துணை அது.உண்மையின் ஒளிர்வு.நேர்மையின் பிரகாசம்.அமைதியின் ரகசியம்.வாழ்க்கையின் சுபீட்சம் அதற்குள் இருக்கிறது."உண்மையாய் இருத்தல்" என்பதுவே அது.

அது இயல்பாகவும் இயற்கையாகவும் வெளிப்படுகின்ற போது அழகாகிறது.வாழ்க்கைத் துணையும் இல்லத்தின் அறமும் இவ்வாறு இருந்தால் அழகாகுமில்லையா?

Wednesday, July 21, 2010

வரலாற்றுப் பாதையில் தவறவிட்ட ஆட்டுக் குட்டி - 2.



சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப் பட்ட இன்னுமொரு அழகான கவிதை இது.மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் தான் இதையும் எழுதியிருக்கிறார். ரிஷான் ஷெரீப் இதனை அழகுற மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.உயிர்நிழல் 32ல் வெளியாகியிருக்கின்ற 11 மொழிபெயர்ப்புக் கவிதைகளில் இதுவும் ஒன்று.

மஹேஷ் முனசிங்ஹவின் பாடு பொருளும் அதனைச் சொல்ல அவர் எடுத்தாளும் மொழி நயமும் தைரியமும் தனித்துவமும் கொண்டவை.பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கே சரி பிழைகளை தனக்கே உரித்தான உணர்வுகளின் மொழியினூடாகச் சொல்வதற்கு அசாத்தியமான துணிச்சலும் நேர்மையும் தார்மீக உணர்வும் வேண்டும்.அது அவ்வளவு எளிதானதல்ல.உண்மையான வீரன் ஒருவனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அது அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது.

கவிதையின் பேசு பொருள் போரும் போரின் பின்பான ஒரு மனச்சாட்சியும் (அது பக்தியும் தர்மமும் நிறந்த பெளத்த மனிதனின் குரல்).ஒரு இராணுவ வீரனின் குரல் எனவும் கொள்ளலாம் இதனை.போரின் வெற்றியை அரசு பறை சாற்றிய பின் புத்த கோயிலுக்குப் போகிறான் இந்த இராணுவ வீரன். கடவுளோடு (புத்தரோடு)பேசுகிறது அவனின் மன சாட்சி. உண்மைகளின் - சத்தியத்தின் ஒளியில் அவன் நடுங்குகிறான்.கவிதையின் தலைப்பு இது தான்;

ஊனமுள்ள இராணுவ வீரனும் புத்தரும்


முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயது வந்தோர்
பிணக் குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
பிரித் நூலும் கட்டப் பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து.

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்து போயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
என் தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப் பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையே தானா?

பாளிச் செய்யுளை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க
இரு விழிகளையும் மூடிக் கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமல் இருக்கின்றேன்.

கவிதையில் முரண்கள் பேசப் படுகின்றன.போரில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் அவனின் கண்முன்னே வருகின்றன.முதியோர்,காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள்,வயது வந்தோர் என்று தொடரும் பட்டியலில் யாரோடு தான் போரிட்டேன் என்பதும் உண்மையும் அவனை நெருடுகின்றன.நிராயுத பாணிகளான அப்பாவிகளின் முகங்கள் அவனைக் கேள்வி கேட்கின்றன. 'பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகள்' என கொல்லாமையைப் போதித்த புத்தனின் வழி வந்த துறவிகளின் முரண் பேசப் படுகிறது.'நாட்டைக் காத்தல்'என்ற பெயரின் பின்னால் தாயும் தாய்மையும் விலைப்பட்டுப் போனது சொல்லப் படுகிறது. இவற்றை எல்லாம் தாண்டியும் புத்தர் மகாபுருஷர் என்பது அந்த வீரனுக்குப் புரிந்திருக்கிறது.'என் தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்' என்பது ஒரு தனித்துவ மொழி.அது பெரும்பாண்மையான எல்லோரையும் தாண்டி அவனுக்கும் புத்தருக்கும் மட்டுமே புரியும் மனசாட்சியின் மொழி.உண்மையான பெளத்தனின் புரிதலுக்கு மட்டுமே உரித்தானது.

ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
அவனுக்குப் புரிகிறது யாரைத் தான் கொன்றேன் என்பது. எல்லோரையும் அப்பாவி மனிதர்களாய்க் காண்கிறான்.எல்லோருக்குமே எனது முகம் என்று சொல்வதில் தொனிக்கும் சோகம்; மென்மையும் ஆழமும் அதே நேரம் அதிலிருக்கும் மனிதமும் அக்கவிஞனின் அழகியலின்,திறமையின் வீரியத்தை சொல்லி நிற்கிறது.

'நூறு ஆயிரமெனக் கொன்றொழித்திருப்பது என்னையே தானா?' என்ன ஒரு சொற்கட்டு!அது சொல்லி நிற்கும் அர்த்தங்கள் தான் எத்தனை!என்னுடைய ஆத்மாவையல்லவா நான் கொன்றொழித்து விட்டு இங்கு வந்து நிற்கிறேன் என்று தர்மத்தின் வழியிலிருந்து தவறிய தன்னையே காண்கிறான்.புத்தரைப் பார்க்க முடியாமல் அவன் கண்கள் அச்சம் கொள்கின்றன; கரங்கள் உயர மறுக்கின்றன. கூனிக் குறுகி புத்தனின் முன்னால் நிற்கிறான் இந்த இராணுவ வீரன்.

ஆனால் இலங்கை தேசம் அதனை வெற்றி எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

உண்மை புத்தனின் முன்னால் ஊனமுற்றுக் கிடக்கிறது.

ரிஷான் மிக அழகாக இதனை மொழி பெயர்த்திருக்கிறீர்கள். சிறப்பான இக்கவிதைத் தெரிவுக்கும் தமிழுக்கு இதனைக் கொண்டு வந்தமைக்கும் என் தோழமை மிக்க நன்றிகள்.அந்த சிங்களக் கவிஞனுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களும் உரித்தாகட்டும்!

அண்மையில் ஒரு ஹைக்கூ வாசித்தேன்.

"இருண்ட காட்டுக்குள்
வானம் தோன்றி மறைகிறது
அரைக் கணம்
மின்மினிக் கூட்டங்கள்"

உங்களதும் சகோதரி பஹீமாவினதும் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பை விடப் பெரியதும்;வலியதுமாகும்.அதற்கு ஒரு சீரிய நோக்கும் ரசனையும் ஆற்றலும் தன்னலமற்ற தன்மையும் வேண்டும்.நன்றி அதனை சாத்தியமாக்கும் எல்லோருக்கும்.

Wednesday, July 14, 2010

வரலாற்றுப் பாதையில் தவற விட்ட ஆட்டுக்குட்டி - 1

அண்மையில் கையில் கிட்டிய 'உயிர்நிழல்' சஞ்சிகையில் வாசிக்கக் கிடைத்த சிங்களத்திலிருந்து ரிஷான் ஷெரீப் பாலும் பஹீமா ஜெஹானாலும் தமிழாக்கம் செய்யப் பட்ட இரண்டு கவிதைகள் சிங்கள மக்களின் - குறைந்த பட்சம் இளகிய மனம் கொண்ட - மனித நியாயங்களை இன உணர்வுக்கப்பால் இருந்து சந்திக்கும் கவிஞனை தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டின.

அது நொந்து போயிருக்கும் தமிழ் மனங்களுக்கு சிறிது ஆசுவாசத்தையும் கூட அளிக்க வல்லதாக இருந்தது.அந்தக் கவிதைகளோடு சேர்த்து இனி வரும் சில வாரங்களுக்கு மேலும் சில கலைப் படைப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது என் விருப்பம்.

அதற்கு முதல் தமிழும் சிங்களமும் தெரிந்த அன்பர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுதல்
தமிழ் இலக்கியத்துக்கும் சிங்கள இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும் என்பதற்கும் அப்பால் மொழியால் பகை கொண்ட இரு இனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வைக்க ஒரு பாலமாகவும் அது இருக்கும்.

இன்று உங்களோடு பகிர இருக்கின்ற கவிதை சிங்கள மொழியில் மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் எழுதியது. அதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பஹீமா ஜஹான்.இதனைப் பிரசுரம் செய்திருகிறது உயிர்நிழல் இதழ் 32.

இக் கவிதையின் களம் வன்னியில் 'மனிதாபிமான' நடவெடிக்கையின் போது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கற்பிணித் தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிங்களக் கவிஞன் ஒருவரின் உணர்வுகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சமும் ஒன்று உண்டு. நாம் (தமிழர்) 'இன அழிப்பு' என்று வரையறுப்பதை அவர்கள் (சிங்களவர்) 'மனிதாபிமான' என்ற சொற் தொடரால் வரையறை செய்கின்றனர்.முரண்பாடு என்பது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது போல் தோன்றுகிறது.ஆனாலும் எனது பேசு பொருள் அரசியலல்ல; மாறாக இலக்கியமே!அத்துடன்,இது பற்றிப் பேசுவதற்கு என்னிடம் வல்லமையும் போதிய அறிவும் பரீட்சயமும் இல்லாமையால் அதனைத் தவிர்த்து கவிதைக்குள் நுழைகிறேன்.

பிறக்காத கவிதை



கண்களைக்கூடத் திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கற்பத்துக்குள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள் கொடியின் மேலாக
எச்சில் படுத்தப் படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது.

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தழும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரை ஒத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலின் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்
வெறி பிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத் துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்
வன்னி அதிக தூரமெனக்கு.பொறுத்திருக்கிறேன்
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டு சென்று
விரலை (அது)பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்.



சில குறிப்புகள்:-


1. இக் கவிதையில் வரும் 'வன்னி அதிக தூரமெனக்கு' என்ற வரி சொல்லி நிற்கும் அர்த்தங்கள் ஏராளம்.ஒரு இனத்தால், மொழியால், இடத்தால்,மனதால், பகை உணர்வால் மிகவும் பிளவுபட்டு போரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் போது மனிதம், நியாயம்,உண்மை - இவற்றுக்கு அங்கு இடமேது?

தமிழ் மக்களின் மனதுக்குத் தூரமாக என்ற அர்த்தத்திலும் இதனைக் கொள்ளலாம்.

கையாலாகத தன் நிலை எனவும் கொள்ளலாம் இதை.

2. மிக அழகாகத் தமிழில் இதனைக் கொணர்ந்த சகோதரி பஹீமா வுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

3......
மூலப் பிரதியில் 'நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை' என்று ஒரு வரி அமைக்கப் பட்டிருந்தது.அதனை 'நித்தமும் இரத்த வாடைகளை'என்று அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று தோன்றியது.

4.'வாழ்வொன்று எங்கே இருக்கும்'என்பதன் பின்னால் வினாக்குறியும்(?)'அவர்கள் எடுத்திருக்க' என்பதன் பின்னால் வியப்புக் குறியும்(!) போடப்பட்டிருந்தால் கவிதை சொல்ல வரும் உணர்வுகளை அக்குறியீடுகள் இன்னும் சற்று அழுத்திச் சொல்ல வல்லதாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது.


அவரிடம் எனக்கு சில ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள், விண்ணப்பங்களும் உண்டு.

1.சிங்கள பாஷையில் வந்திருக்கும் இவ்வாறான அல்லது பிரபலமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு காலத்தின் பணியை நீங்கள் ஆற்றுதல் வேண்டும்.இருபாஷைகளையும் அறிந்து வைத்திருக்கின்ற அதே நேரம் சிறந்த கவிஞையாகவும் பிரகாசிக்கிற உங்களால் அதன் சிறப்பும் மென்மையும் நளினமும் மாறாமல் அதனை எடுத்துவர முடியும். இழைக்கப்பட்ட மன வலிகளுக்கப்பால் பெருந்தன்மையும் புரிதலும் கொண்ட பெண்ணிடம் கேட்கும் ஒரு விண்ணப்பம் இது.

11.அது போலவே தமிழில் வெளி வந்திருக்கிற கவிதைகளையோ கலைப்படைப்புகளையோ கூட பெரும்பாண்மையான இனத்தவர் மத்தியில் எடுத்துச் செல்வதால் ஒரு பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழி சமைக்கலாமில்லையா சகோதரி?

111. அவ்வாறு ஏற்கனவே நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால் அதற்கான எதிர்வு கூறல்கள் எவ்வாறு இருந்தன என்று அறிய ஆவலுடையேன்.



அடுத்தவாரம் ரிஷான் ஷெரீப் மொழி பெயர்த்த ஒரு கவிதைப் பகிர்வு இடம் பெற இருக்கிறது.

Thursday, July 8, 2010

அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011

சில தினங்களுக்கு முன் மின் தபாலில் திரு ஜீவகுமாரன் அவர்களிடம் இருந்து வந்த செய்தியை ஒரு தகவல் கருதி உங்களோடு அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.



சிறுகதைத் தொகுப்பு
ஆயிரம் புத்தக இலவசத் திட்டம்
அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011



அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கும்,


தை2011ல் இலங்கையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் 'வாசித்தலை பரம்பலடையச் செய்தல்'என்ற விடயத்தை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் இலங்கையில் 10,11ம் வகுப்பில் தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளுக்கும், தமிழ் புத்தகங்களை வாசிக்கும் - இரவல் கொடுக்கும் பகுதியாகக் கொண்ட நூலகங்களுக்கும் 1000 நூல்களை இலவசமாகக் கொடுக்கும் திட்டம் பற்றி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுடன் தீவிரமாக ஆலோசனைகள் செய்து அதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளேன்.

இது முழுக்க முழுக்க புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் பொருளாதாரப் பங்களிப்புகளுடனும், இலங்கையில் உள்ள மற்றைய எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,புத்தக விற்பனை நிலையங்களின் ஆதரவுடனும் அனுசரனையுடனும் மேற்கொள்ளப் பட இருக்கும் முயற்சியாகும்.

இதன் முழுமையான விபரங்கள் எழுத்தாளர் விழாவில் அறியத் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் விழாக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே விழாவில் குறைந்தது 5 எழுத்தாளரின் 5000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப் பட உள்ளன.



மேலும் இந்த விழாவினை ஒட்டி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை சாதாரண தொகுப்பாக இல்லாது "புலம்பெயர் வாழ்வு" என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு அதனடிப்படையில் இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளரிடம் இருந்து சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்.

80 களில் இந்திய பாகிஸ்தான் எல்லைகளின் ஊடாக நடந்தும் பஸ்களிலும் புகையிரதங்களிலும் ஆரம்பமான இந்த ஓட்டம் பின்பு விமான மார்க்கமாகவும் கடல் மார்க்கமாயும் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது மட்டுமன்றி நடுக்கடலில் வைத்து அரசுகள் பேரம் பேசும் அவல வாழ்வாயும் பெருமளவில் பணம் புரளும் வியாபாரமாயும் மாறி விட்டது.

உயிர் பாதுகாப்பு,பொருள் தேடல் என்ற இரண்டு முகங்கள் இந்தப் புலம்பெயர் வாழ்வில் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆயினும் இந்தப் புலம்பெயர்வாழ்வில் பெற்றதை விட இழந்தவைகளே அதிகம் என்பதை ஒரு கலாச்சார ஆராய்ச்சியாளன் என்றும் மறக்க மாட்டான்.

இந்தப் புலம்பெயர் மக்களை புலத்தில் உள்ள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் புலத்தை விட்டுச் சென்ற பின்பு அவர்கள் உறவுகள் எவ்வாறு உள்ளது என்பதை இலங்கையில் உள்ள எழுத்தாளர்களும்...

புலம் பெயர்ந்த நாட்டில் உள்ள மக்களுடன் அவர்களின் அந்த நாட்டு வாழ்க்கை,சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்....

மலேசிய, சிங்கப்பூர், இந்திய எழுத்தாளர்கள் இந்த இருசாராரையும் எப்படிப் பார்க்கிறீர்கள் எனவும் எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



விதிமுறைகள் மிக இலகுவானவை;

1.இச் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

2.தட்டச்சில் அல்லது கொம்பியூட்டரில் 5 - 6 பக்கங்களுக்கு இருக்க வேண்டும்.

3.ஆக்கங்கள் word இல் (Bamini Font பாவித்து )அல்லது கையெழுத்துப் பிரதியாயின் அதை Scan செய்து pdf வடிவில் அனுப்ப வேண்டும்.

4. ஆக்கங்கள் 30.09.2010 க்கு முன்பாக அனுப்பப் பட வேண்டும்.

5. அனுப்ப வேண்டிய முகவரி jeevakumaran5@gmail.com