Thursday, September 30, 2010

தோழிமார் கதை - வைரமுத்து -


ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்கு;நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!


சிறு வயசுத் தோழிமார் தம் நட்பு - அதிலும் கிராமத்துச் சிறு பெண்களின் நட்பு பற்றிய வைரமுத்துவின் இக்கவிதை -அதிலிருக்கின்ற உண்மை - அது வெளிப்படுகின்ற கிராமத்து வாடை வீசும் எளிய தமிழ் - அதன் ஊடு பொருளாக இருக்கும் உணர்வுப் பெருக்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது இல்லையா?

இதுவும் கையால் அள்ளிய கடலின் ஒரு துளி!

No comments:

Post a Comment