Wednesday, December 1, 2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)



சில வாரங்களுக்கு முன் நான் Huckleberry Friend என்ற ஆங்கிலப் பதம் பற்றிப் பிரஸ்தாபித்து அதற்கு இணையான தமிழ் பதம் பற்றி நான் மதிக்கின்ற பதிவர்களில் ஒருவரான பழைமை பேசியிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்திருக்கின்ற அழகான தமிழ் விளக்கம் இவ்வாரம் என் வலைப்பூவை அலங்கரிக்கிறது.

மிக்க நன்றி சகோதரா!


ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!

2 comments:

  1. இடருய்தி... என்ன ஒரு அழகான தமிழ்ச்சொல்! முள்ளு வாங்கி,காக்காப் பொன், கைத்தடி பற்றி எல்லாமும் அறிந்தும் அறியாததுமான தகவல்கள்! பழைமை பேசிக்கும், தங்களுக்குமான சிரம் தாழ்ந்த நன்றி!! பழமை பேசி ஐயாவின் பின்னூட்டத்தில் உங்களது ஐயக் கேள்விதான் உங்க வலைப்பூ பக்கம் என்னை அழைத்து வந்தது தோழி!

    ReplyDelete
  2. :)ஓம்.நலமா நிலா?

    அவருடய பதிவுகளைப் பார்த்தீர்களாக இருந்தால் அது முழுக்க முழுக்கத் தனித் தமிழில் அமைந்திருக்கக் காணலாம்.

    தவிரவும், அவருடய பக்கம் முழுவதிலும் எளிமையும் பணிவும் பாரதப் பண்பாடும் ஏதோ ஒரு விதத்தில் தொனித்த வண்ணம் இருக்கும்.

    ஹாமணி என்ற ஆங்கிலப் பதத்துக்கான சரியான தமிழ் பதம் ஒன்றை மின் தபால் மூலமாகக் கேட்டிருந்தேன்.ஒரு நிமிடத்துக்குள்ளாக ஒரு சொல்லில் பதில் வந்தது; ‘இணக்கம்’ என்று.

    அவர் பீற்றிக் கொள்ளாமல் நடமாடும் ஓர் அகராதியும் கூட.

    ReplyDelete