Saturday, February 20, 2021

அந்த நீல மாபிள் கண்களும் அவலச் சுவையும் நம் தத்துவப் பரிஹாரங்களும்....

 நேற்றய தினம் உருகி நின்ற நீல மாபிள்கள் இரண்டைக் கண்டேன். 

அது பிங்லேடி அப்பிளின் மேல் பதிந்து நின்ற இரு நீலக் கண்கள். 

ஆறுவயதுக் குழந்தைக்குரியவை. தனியே விடப்பட்டதன் அச்ச உணர்வை கொண்டிருந்த உணர்ச்சிக் குவியலென அவை....உணர்வுக் குவளையென அந்தக் கண்கள்....உருகி நின்ற நீல மாபிள்கள்...கண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த நீல டொல்பின்கள்.......அதற்குள் ஊடாடி நின்ற மருட்சி! அது ஒரு மான்குட்டியின் மருட்சி!  

அவளை சமாதானம் செய்ய ஒரு ஸ்டிக்கர் போதுமாக இருந்தது. என்றாலும் அந்தக் கண்களை; அது கொண்டிருந்த உணர்ச்சிகளை மறக்க முடியவில்லை; அது துன்பத்தின் பாற்பட்டதல்ல; அது ஒரு அவல, பய உணர்வின் வெளிப்பாடு. என்ன செய்யப் போகிறேன் என்று எதுவுமே தெரியாது நிற்கதியாய் நிற்கும் நிலை. ஒரு பரிதவிப்பு நிலை.

 போரில் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.... 

போர் ஒன்றை எந்த ஒரு உயிரினமும் இனிப் பார்க்காதிருக்க இந்தப் பிரபஞ்சம்  அருள்பாலிக்க வேண்டும்! 

...........................

இதனைப் பார்த்த போது அண்மையில் படித்த சமஸ்கிருதப் பெண் ஒருத்தி நினைவுக்கு வந்தாள். அவள் அன்பு கொண்டிருந்த தலைவன் பரத்தையிடம் போய் விட்டு வருகிறான். அவன் எங்கு போய் வந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். போகிறவனை அவள் என்ன செய்துவிட முடியும்? 

மாருளை என்ற பெண் கவிஞை ஒருத்தி வட மொழி இலக்கியத்தில் பதித்தது அது. ஒருவித நிர்க்கதியோடு அவனை எதிர்கொள்கிறாள் பெண். மனசெல்லாம் பாரத்தோடு அவள் நிற்கிறாள். முட்டி வழிகிறது வருத்தம். ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல அவன் கேட்கிறான். ஏன் மெலிந்து போயிருக்கிறாய்? அவள் சமாதானம் சொல்கிறாள். நான் அப்படித்தானே! மேலும் அவன் தொடர்கிறான்... ஏன் அழுக்காக உன்னைக் கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? அவள் வீட்டுவேலை என்று மழுப்புகிறாள். உனக்கு என் நினைவு இருக்கிறதா என்று மேலும் அவன் கேட்கிறான். அவ்வளவு தான்!  இல்லை, இல்லை என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கிவிட்டாளாம்.

இந்த நிர்க்கதி நிலை பின்னர் கண்ணீரை கொண்டுவருகிறது. நம் திராவிடப் பெண்கள் அழுதிருக்கிறார்கள். காதலுக்காக; கடந்து போனவர்களுக்காக; போரில் மாண்டவர்களுக்காக அவர்கள் அழுதிருக்கிறார்கள். அதன் உச்ச பட்சமாக இறந்தவர்களை; வீர நாயகர்களை தெய்வாம்சத்துக்கு உயர்த்தி அவர்களை நடுகற்களாக வழிபட்டிருக்கிறார்கள். ஆனாலும், காதலையும் போரையும் தாண்டிய ஒன்றை அவர்கள் கற்பனை பண்ணவில்லை. மிக யதார்த்தமாக வாழ்க்கையை எதிர்கொண்டு ‘அனுபவித்து’ வாழ்ந்திருக்கிறார்கள். 

வாழ்க்கை குறித்த தத்துவார்த்தம் தொனிக்கும் பாடல்களிலும் கூட இந்த வாழ்க்கை தற்காலிகமானது ஆற்றில் விழுந்துவிட்ட இலை ஒன்று ஆற்றின் ஓட்டத்துக்கு ஏற்ப ஓடுவது போன்றது தான் நம் வாழ்க்கை என்றவாறாகவே வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார்கள். உண்பது நாழி உடுப்பது இரண்டே தான் என்று தேவையை வரையறுத்து வைத்திருந்தார்கள். அதனால் பேதமற்ற எளிய வாழ்வு சித்தித்திருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் வருத்தங்களுக்கு மாற்று கருத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

மாறாக சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு அப்பாலான கடவுள் சித்தாந்தம் ஒன்றை கற்பனை செய்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்டது. அதனால் வரும் துன்பங்களுக்கு விதியே காரணம் என அது ஆறுதல் கொண்டது. 

நம்முடய எண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன நம் வாழ்க்கை பற்றிய பார்வையை; வாழ்க்கையை  எப்படி எல்லாம் மாற்றியமைக்க வல்லதாக இருக்கிறது என்பது ஒரு அதிசய விஞ்ஞானம்; 

விஞ்ஞிகை என்ற பெண் விதியின் வலிமையைப் பற்றி சொல்லும் ஸ்லோகம் ஒன்றில் ’துன்பமாகிய பொல்லினால் (தண்டம்) மனதுக்கு அடிக்குமேல் அடி கொடுத்து அதனை மண்ணைப் போல பிசைந்து அதனை உருட்டிப் பிடித்து ஓயாமல் சுளன்றுகொண்டிருக்கும் சிந்தை (எண்ணம்) என்ற சக்கரத்தில் வைத்து பெரிய குயவன் ஒருவனைப் போல இந்த விதி என்னைச் சுளற்றுகிறதம்மா; நான் என்ன செய்வேன்? என்று வருந்துகிறாள்.( இவளுடய காலம் 7ம் நூற்றாண்டு என்று அறிய முடிகிறது. மேலும் இவள் இரண்டாம் புலிகேசியின் புதல்வனான சந்திராதித்தியனின் மனைவி என்றும் தெரிகிறது)

சுபத்திரை என்ற பெண் கவிஞை விதியை - அது நல்லவர்களையே வாட்டுகிறது என்பதை பாலுக்கு உவமை சொல்லிப் பாடுகிறாள். பால் அதன் தரம், சிறப்பு என்பவற்றுக்காக பசுவில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டது; பிறகு அதனைக் காய்ச்சி அதன் இனிமை எடுக்கப் பட்டது; அதன் பிறகு கடைந்து அதன் சாரமாகிய வெண்னையும் எடுக்கப் பட்டது; இவ்வாறெல்லாம் அபகரிக்கப் படுவதற்கு பாலின் சுவை, தரம், தன்மை அன்றோ காரணமாகி விட்டது என்கிறாள் அவள்.

இந்த விதி குறித்து சரஸ்வதி என்ற பெண் கவிஞை காணும் காட்சி சற்று வித்தியாசமானது. அவள், தாளையை பார்த்து சொல்கிறாள். ‘தாளையே உன் இலைகள் வாளைப் போல கூர்மையுடன் இருக்கின்றன. உன்னிடம் தேனே இல்லை; உன் பூவிலுள்ள மகரந்தப் பொடிகளோ காற்றில் கலந்து கண்ணை உறுத்துவனவாக உள்ளன. ஆனாலும் உன்னை நாடி வண்டுகள் வருகின்றன. உன் பூவின் மணம் என்ற ஒன்று எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறதே என்கிறாள்.

லக்ஷ்மி என்ற பெண் தன் சுலோகத்தில் விதியை இப்படியாகக் காண்கிறாள். பலர் விஷய தானங்களோடு அறிவுடையவர்களாக இருந்தாலும் அதிஷ்டமும் அபிமானமும் சிலருக்கே கிட்டுகிறது என்பதை கண்ட அவள், ‘காடுகளில் புது மலர்கள் எல்லாவற்றிலும் விழுந்து புரளும் வண்டு கந்தபலி என்ற பூவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை; அதற்கு என்ன மணமும் குணமுமா இல்லை? அழகுக்கு என்ன குறைச்சல்? ஆனாலும் வண்டுகள் ஏன் முகர்வதில்லை? இது தான் விதிச் செயலோ என்று கேட்கிறாள்.

நம் இலக்கியப் பெண்கள் எல்லாரும் முத்துமுத்தாக கண்ணீர் விடுவார்கள். பிறகு  அவர்கள் இறந்தவர்களை பாட்டிலும் நடுகல்லிலும் வைத்தார்கள். யதார்த்த வாழ்க்கையினை அதன் இயல்போடு அப்படியே ஏற்றுக் கொண்டு  வாழ்ந்தார்கள். உண்மையும் இயல்பும் இயற்கையும் காதலும் போரும் சமத்துவமுமான வாழ்வு அது. 

இல்லாத ஒன்றை அவர்கள் காணாததால் தன்னம்பிக்கை அங்கு நிறைந்திருந்தது. காத்லித்தவன் கைவிட்டதற்கு அவர்கள் விதியைச் சரனடையவில்லை. மாறாக காதலனைக் காணாமல் அவனைத்தேடிப் புறப்பட்ட வெள்ளிவீதியாரையே நாம் இலக்கியத்தில் காண்கிறோம்.அந்தக் கவிஞை விதியை குற்றம் சாட்டவில்லை; இல்லாத அல்லது தெரியாத தெய்வீக அம்சத்தில் அவள் பழி போடவில்லை; அவள் தன்னை விட்டு விட்டுப் போனவனை குறுந்தொகையில் தேடுகிறாள் இப்படி,


நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  (குறு;130)

நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா? அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு!

அவள் திராவிட பெண்! 

அவர்களுடய அழுகை வீரத்துக்காக விளைந்த ஆனந்த அழுகையாக இருந்திருக்கிறது. அல்லது காதலுக்காக அழுத பிரிவுத்துயரால் விளைந்திருக்கிறது. கீழே வரும் பாடல் வீரமரபில் வந்த தலைமயிர் நரைத்த கிழவியின் ஆனந்தக் கண்ணீர் வகை சார்ந்தது.

புறம் 277 இல்

மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெழுத்திருப்பது போல நரைத்த கூந்தலைக் கொண்டிருக்கும் பெண் தன் மகன் போர்களத்தில் யானையைக் கொன்று தானும் மாண்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அவனைப்பெற்றதிலும் பார்க்க மகிழ்கிறாள். ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கிறாள். இருந்தாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர். அது எப்படி இருக்கிறதென்றால் மழைத்தண்ணீர் மூங்கில் இலையில் இருந்து துளித்துளியாய் விழுவதைப் போல இருக்கிறதாம். ( மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல்.....)

'பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 

பிறங்கு இரும் முன்னீர் வெறு மணலாக

புறங்காலின் போக இறைப்பேன் முயலின்

அறம் பனையாகலும் உண்டு’

நல்லந்துவனாரின் இந்த பாடல் அடிகள் (144)

அலை எழுந்து பொங்கும் பெருங் கடலே என்னைப் பேணாமல் என்னை விட்டு விட்டுப் போனவனைத் தேடிப் போக எனக்கு கொஞ்சம் வழிவிட்டுத் தாருங்கள். அப்படி நீங்கள் எனக்கு வழி விடவில்லையானால் என் புறங்காலால் இந்த நீர் முழுவதையும் இறைத்து உன்னை வெற்று மணலாக்கி விடுவேன். இது இயலுமா என்றால் இயலும். என் முயற்சிக்கு நல்லறம் துணை நிற்கும். எனவே என்னால் அது இயலும் ‘ என்று தன்னம்பிக்கை மிளிர பாடும் இந்தப் பாடல் திராவிட சிந்தனையின் ஒரு முத்து எனிலும் பொருந்தும். 

அது கடவுள் மீதோ விதியின் மீதோ பழி போடவில்லை. சரியாக நடந்தால் அந்த அறமே அதைக் காக்கும். என்னால் வென்றுவிடமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது அப் பாடல். ‘நன்றும் தீதும் பிரர் தர வாரா என்ற பண்பாட்டின் வழி அது!

கலித்தொகையின் பிறிதொருபாடலில் காதலனைப் பிடித்து தராவிட்டால் நிலவிலே இருக்கிற முயலை நாயிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிற தோழியை நல்லந்துவனார் இப்படிக் காட்டுகிறார். அந்தப் பாடல் இது.

‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயலால்

எம்கேள்! இதனகத்து உள்வழி காட்டீமோ?

காட்டீ யாயின் கதநாய் கொளுவவேன்

வேட்டுவர் உள்வழி செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீரா யெனின் (144)

தலைவி தலைவனைத் தேடிச் சலித்துப் போய் விடுகிறார். இந்த பரந்த உலகில் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உலகம் முழுவதையும் உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலவிடம் கேட்கிறாள்; இங்க பார்! நிலவு! உன்னட்ட இருக்கிற முயல் இங்க முயலாகத் தான் தெரியுது. ( நிலவில் இருக்கிற களங்கத்தை இவள் முயலாகக் காண்கிறாள். நாம் ஒரு பாட்டி கால்நீட்டி இருக்கிறாள் என்று கதை சொல்கிறோம் இல்லையா; அதுமாதிரி) முயலே! என் தலைவன் எங்க இருக்கிறான் எண்று எனக்குச் சொல்லிவிடு. இல்லையென்றால் உன்மீது சினம் கொண்டு நாயை ஏவி விடுவேன்.அல்லது வேடர்களிடம்  உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன். நான் இப்ப மூளை (மதி) கலங்கிப் போய் இருக்கிறேன். இப்ப என் துயரத்தை நீ தீர்த்து வைக்கவில்லை  என்றால் சந்திரனோட ( மதியோட) உன்னையும் சேர்த்து பிடிக்கச் சொல்லி பாம்பையும் ஏவி விடுவன் எண்டு எச்சரிக்கிறாள்.

தன்னம்பிக்கையும் வெளிப்படை உணர்வும் கொண்ட வசீகரமான கம்பீரமான தமிழ் திராவிடப் பெண்கள் இவர்கள்!

நம்மிடம் இந்த ஆரிய மத நம்பிக்கைகள் ஊடுருவாமல் இருந்திருந்தால் நம் நம்பிக்கைகள் வேறொரு பாதையில் போயிருக்கும் என்றே தோன்றுகிறது.

நேற்றய தினம் Eda என்ற சிறுமியின்  நீல மாபிள் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரும் அது என்னைக் கண்டதும் சிதறி விழுந்த அதன் உடைவும்  எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்து விட்டுப் போயிருக்கிறது.....

எடாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment