Thursday, August 6, 2020

’நம்ம தமிழ்’ - 6 - உருவக அணி






                 
https://www.youtube.com/watch?v=JAsNURZOB04
0.00 – 0.49

காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின் 
மீதொளிர் சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந் தாமரையு, பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை
தாங்குதமிழ் நீடுவாழ்க!

என்ற இந்தப்பாடல் சுத்தானந்த பாரதியார் இயற்றியதாகும். 
ஐம்பெரும் தமிழ் இலக்கியச் செல்வங்களான குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய ஐந்தையும் கூடவே திருக்குறளையும் தமிழுக்கான அணியாக; நகைகளாக உருவகித்துப் பாடப்பட்டிருக்கின்ற இக்கவிதை உருவக அணிக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

உருவக அணி என்றால் என்ன?

உருவக அணி என்பது,’
 
‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃதுருவகமாகும்’ –

என்று தண்டி அலங்காரம் உருவக அணிக்கு இலக்கணம் கூறுகிறது. 
அதாவது உவமைக்கும் கருதும் பொருளுக்கும் வேற்றுமை தோன்றக் கூறினால் அது உவமை ஆகும். இரு பொருளையும் வேறு வேறாகக் காணாமல் ஒன்றிலே மற்றொன்றைக் காண்பது உருவக அணியாகும். 

உதாரணமாக  ’வேல் போல விழி’ என்பது உவமைஅணியாகும்.’விழிவேல்’ என்பது உருவக அணியாகும். வேலே விழியாக ஆகி விடுவது; ஒன்றில் ஒன்று மறைந்து இதுவே அதுவாக ஆகி விடுவது உருவக அணியின் சிறப்பு.
மையோ மரகதமோ மழைமுகிலோ என்று கம்பன் இராமனை வர்ணிப்பதை இன்னும் கொஞ்சம் சந்தத்தோடு இப்போது கேட்போமா?

https://soundcloud.com/kryes/kamban-kali-paa-veyyon-oli-1
0.55 – 1.20. )

இது உருவக அணியைப் பயன்படுத்தி கம்பர் செய்த வித்தை.
தமிழ் சினிமாப்பாடல்கள் பல இந்த உருவக அணியினைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. பெண்ணை வர்ணிக்கும் இந்த சினிமாப்பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும்.


மோகனப் புன்னகை ஊர்வலமே….
https://www.youtube.com/watch?v=W398ID1YRiU 

இவ்வாறு எக்கச்சக்கமான சினிமாப்பட்டல்கள் திரைவானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. அவற்றுள் மேலும் சில கீழ் வருபவை.( அநேகமானவை இணையத் தேடலில் கிட்டியவை )

மூக்குத்தி முத்தழகு
வதனமே சந்ர பிம்பமோ
அவளொரு நவரச நாடகம்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
பேசுவது கிளியா பெண்னரசி மொழியா
காலங்களில் அவள் வசந்தம்
சந்தோரதயம் ஒரு பெண்ணானதோ
மானல்லவோ கண்கள் தந்தது
பொன் என்பேன் சிறு பூ என்பேன்
விளக்கே நீ கொண்ட ஒளி 
மலருக்குத் தென்றல் பகையானால்
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
உள்ளம் என்றொரு கோயிலிலே
அண்னன் ஒரு கோயில் என்றால்
மாசிலா நிலவே நம் காதலை
பச்சைக்கிளி ஒன்று 
முத்துக்களோ கண்கள்
மலரே மலரே நீ சொல்ல
பால்வண்ணம் பருவம் கண்டு
காற்றுக்கென்ன வேலி
சின்ன சின்ன றோசாப்பூவே
குயிலப் புடிச்சு கூட்டிலடைச்சு
பூமாலையில் ஒரு மல்லிகை
மதுரையில் பறந்த மீன் கொடியை
அன்பு நடமாடும் கலைக்கூடமே
இது குழந்தை பாடும் தாலாட்டு
தங்கத்தில் நிறமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
என் ராஜாவின் றோஜா முகம்
மலரே குறிஞ்சி மலரே
நினைவோ ஒரு பறவை
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
தேனே தென் பாண்டி மீனே
ஈரமான றோஜாவே
பனி விழும் மலர் வனம்
வா வெண்ணிலா உன்னைத்தானே
தானா வந்த சந்தனமே
மன்றம் வந்த தென்றலுக்கு
நிலவே முகம் காட்டு
காதல் றோஜாவே
தாலாட்டும் பூங்காற்று
சங்கீத மேகம்
நீ காற்று நான் மரம்
வண்ணம் கொண்ட வெண்னிலவே
ஆகாய வெண்ணிலாவே தரைமீது
மலரே மெளனமா
செம்மீனா வெண்மீனா
கல்யாணத் தேன் நிலா காய்க்காத பால் நிலா
இஞ்சி இடுப்பழகி
தேன் சிந்துதே வானம்
மழை தருமோ என் மேகம்
ஊதா கலரு நிப்பன்
மூக்குத்தி முத்தழகு
ஆடி வெள்ளி தேடி உன்னை
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
கலையோ சிலையோ இது பொன்மான் நிலையோ
தலையைக் குனியும் தாமரையே
வளையாப்பட்டி தவிலே தவிலே
...............................
.............................. 
( இன்னும் பல இருக்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பாடல்கள் நினைவுக்கு வந்தால் தெரிவியுங்கள்.)

பொருளணியில் ஒன்றான இந்த உருவக அணி செய்யுள்களை அழகு படுத்தும் அணிகளிலே கருத்தின் சிறப்புக்கு முன்னுரிமை அளிப்பதால் அவை பாடல்களின் அழகுக்கும் பொருத்தப்பாட்டிற்கும் வித்துவச் சிறப்பிற்கும் கவிஞர் சொல்ல வரும் கருத்திற்கும் இலகுவாகச் சொல்ல ஏற்ற ஓர் உத்திப் பொருளாக அமைந்து விடுகிறது. அதனால் இது இன்றைக்கும் கவிஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓர் அணியாகவும் விளங்குகின்றது.

https://www.youtube.com/watch?v=Tj_5XLu4Mbw
(நிலவு ஒரு பெண்ணாகி...)

இந்தப் பாடலில் நிலவு போல பெண் என்று ஆகி விடாமல் நிலவே ஒரு பெண்ணாக ஆகி விடுவதாக அமைவது உருவகத்திற்கு இன்னொரு உதாரணமாகும்..
இந்த உருவக அணியை ஆரம்பத்தில் கையாண்டவராக திருவள்ளுவர் விளங்குகிறார். அவர் தன் திருக்குறளிலே கையாண்ட ஒரு உருவக அணியை இப்போது பார்ப்போமா?

‘முறிமேனி, முத்தம் முறுவல் வெறி, நாற்றம்
வேல், உண்கண் வேய்த் தோளவட்கு – 1113.

காமத்துப் பாலில் வள்ளுவர் எடுத்தாண்ட உருவகம் இது. அதாவது, இவள்மேனி தளிர் பல்லோ முத்து. மனமோ மலர்; கண்களோ வேல் இவள் தோளோ மூங்கில்” 

முத்துக்களோ கண்கள்


https://www.youtube.com/watch?v=e3ejWO0nMJs

இந்த உருவக அணியிலே 15 வகையான உட்பிரிவுகள் உள்ளன என தண்டியலங்காரம் விபரிக்கிறது எனினும் நாம் உதாரணத்திற்கு தொகை உருவக வகை ஒன்றை இப்போது காண்போம்.

இங்கு ஆகிய என்ற உருபு மறைந்து போல, போன்று போன்ற இணைப்புச் சொற்கள் ஏதுவுமின்றி இதுவே அதுவாக ஆகி வரும் பாடல் ஒன்று இது.

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்
மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை. 

இப்பாடலின் பொருள் என்னவென்றால், ’நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகியஅரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்த காதலுக்கு நண்பா, கரை அதாவது எல்லை ஏதாவது உலகத்தில் உண்டோ? இல்லை!' என்று தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான்.

இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்'ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' எனவந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்தொகை உருவகம் என்றழைக்கப்பட்டது

.. https://tamilmani.wordpress.com/2011/01/28/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/
தோகை இளமயில் ஆடி வருகுது..........................

அறநெறியினால் பண்பட்டது தமிழ் மொழி அல்லவா?. தமிழ் செம்மொழியாகிய அந்தஸ்தைப் பெற பக்தி இலக்கியங்களும் பெரும் தொண்டாற்றி உள்ளன. இத்தகைய பக்தி இலக்கியங்களும் இந்த உருவக அணியினைத் தம் கருத்தினைச் சொல்ல பெருமளவில் பயன்படுத்தி உள்ளன. அதற்கு உதாரணமாக கீழ் வரும் இந்த இரு தேவார பாசுரங்களைச் சொல்லலாம்.
’உள்ளம் பெரும் கோயில்; ஊனுடம்பு ஆலயம்; வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்; கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே’ என்பது திருமூலரின் திருமந்திரமாகும். 

பூதத்தாழ்வாரோ தன் இரண்டாம் திருவந்தாதியில் 

அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி
ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்கிறார்.

அது போலவே 13ம் நூற்றாண்டில் முனைப்பாடியார் பாடிய அறநெறிச் சாரத்திலும் உருவக அணி இவ்வாறாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்’

அதாவது, ’இனிமையான பேச்சை விளைநிலமாகவும் ஈதலை வித்தாகவும் கடுஞ்சொல்லாகிய களையை வெட்டி எறிந்து வாய்மையை எருவாக்கி அன்பை நீராக்கி அறமாகிய கதிரை விளைவிப்பதே பயிர்விளைச்சல்; இதனை இளமைக்காலத்திலிருந்தே செய்’ என்பது அதன் பொருளாகும்.

https://www.youtube.com/watch?v=cWsRU7xKuZg
1.20 -2.07.

கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும்….

தமிழ் எல்லா மதத்தினரும் உரிமை பாராட்டக் கூடிய மொழியுமல்லவா? கிறீஸ்தவர்கள் பெருமைப்படக் கூடிய சிறந்த இலக்கியவளம் மிக்க தமிழ் இலக்கியங்களில் ஒன்று இரட்சணியயாத்திரிகமாகும். அதன் இலக்கியச் செழுமையால் இந் நூலை இயற்றிய ஆசிரியர் கிறீஸ்தவக் கம்பர் என அழைக்கப்படுகிறார். 

அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அது முழுக்க முழுக்க உருவக அணியைப் பயன்படுத்திப் பாடப்பட்டிருப்பதாகும். வரும் பாத்திரங்களும் இடங்களும் நிகழ்ச்சிகளும் உருவகங்களே. இவ்வாறு காப்பியமே உருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு, பாடல்களிலும் உருவக அணி பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்று  கடவுளில் ஒருவரான பரிசுத்த ஆவி, உள்ளமாகிய வயலை உழுது, மெய்பக்தி  என்னும் விதை விதைத்து, நாட்டம் வைத்து, அருள் பாய்ச்சி, நலிவு என்னும் களையகற்றி, முளைத்த பயிரை வாடாமற் காத்து, நற்கதி விளைவித்து அடியார்களை வாழச் செய்பவர் என்று உருவக நிலையில் கூறியுள்ளது. உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல், காத்தல், விளைவித்தல் என்னும் உழுவுத் தொழிலை முறைமை சிறிதும் மாறாது குறிப்பிடப்பட்டுள்ள செயல் கருதற்குரியது. இவ்வுருவக நிலையை,

 “கோட்டமற்று உளம்திருத்தி குலவுமெய்ப் பக்தி வித்தி
 நாட்டம் வைத்து அருள் நீர்பாய்ச்சி நலிவெலாம் அகற்றியாதும்
 வாட்டம் இன்றாக ஒம்பி வரகதி விளைவித்து அன்பர்
 ஈட்டம் ஆர்த்து  உய்த்துப்பிக்கும் இதய நாயகனே போற்றி”

என்ற பாடல் வழி உணர முடிகின்றது.

https://www.youtube.com/watch?v=wb5FFQVGCZ0
தைமாதப் பொங்கலுக்கு…


- யசோதா.பத்மநாதன்.-
28.3.2020.

No comments:

Post a Comment