Sunday, April 18, 2021

மர்மங்கள்....



பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல் நீரில் இருந்து உப்பை பிரிக்கவும்

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


பிறந்தவுடன் கடல் நோக்கி வரவும் 

பை நோக்கி நகரவும் 

சொல்லித் தரவில்லை யாரும் என்ற போதும்,

அறிந்து கொண்டுள்ளன

ஆமை, கங்காரு குட்டிகள்


ஐந்தறிவுக் குழந்தைகளுக்குச்

 சொல்லிக் கொடுத்தது யார்?

பிறந்தவுடன் எழும்பவும் 

தாய்மடி தேடி பால்பெறவும்?


ஆதாம் ஏவாள் காதலுக்கும் 

சேய் கொண்ட தாய்மைக்கும் 

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை யாரும்.


பழம் தந்து விதைபோட்டு வளரும் மரங்கள்

சொல்லித் தருகின்றன வாழ்வின் பாடல்களை!

பழம் தந்து வீழும் வாழையும்

விழுது விட்டு வாழும் விருட்சங்களும்

மெளன மொழியில் சொல்கின்றன

பூமியின் ரகசியங்களை!


முள்ளுள்ள றோஜா; வெள்ளைநிற பாரிஜாதம்

தண்ணீரோடு ஒட்டாமலே தண்ணீரில் வாழும் தாமரை

சொல்லும் பாடங்களும் படிக்க உகந்தன.


குழந்தை உயிரினங்கள் தவழும்

மடியிலெல்லாம்

உயிர்ப்பின்  புன்னகை நிறைந்து கிடக்கிறது.


கொன்று தின்னப் பணிக்கும் இங்கே தான்

தாய்மையின் உயிர்ப்பிலும் குழந்தைகள் பிறப்பிலும்

மறுபடி மறுபடி உயிர்க்கிறது உலகு.


சிப்பிக்குள் இருக்கிறது முத்து.

மண்ணுக்குள் இருக்கிறது வைரம்.

பெறத் தெரிந்த மனிதனுக்கு புரியவில்லை 

பிறப்பின் முன் பின்  மர்மங்கள் மட்டும்.


எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் இலைகளை எல்லாம்

கூட்டிப் பெருக்குகிறாள் சிறுமி.

எனினும்,

மீண்டும் மீண்டும் உதிர்கின்றன இலைகள்.


உலகப் பள்ளியில் அறிய உள்ளன

எண்ணற்ற இரகசியங்கள்....

No comments:

Post a Comment