Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; என் சிற்றறிவுக்கு எட்டிய தீர்வு - 3 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 2 - பிரச்சினையை இனம் காணுதல்

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 1 - பிரச்சினையைக் கண்டறிதல்

( இந்தப் பதிவு முன் வந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாகும். அவற்றை வாசிப்பதற்கு மேலே உள்ள தலைப்பினை அழுத்தவும்: நன்றி ) 


புலம்பெயர்ந்து வாழும் சமூகம் ஒன்றில் நற்பண்பாட்டின் மூலக் கூறுகளை

சமயம் சொல்லத் தவறி விட்ட ஒன்றை;

பாடசாலைகள் தீர்த்து வைக்க முடியாத ஒன்றை;

குடும்பங்களால் தீர்வு காணப்பட முடியாத ஒன்றை;

சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது. எவ்வாறு அறக்கருத்துக்களை பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த வழிவகைகளில் சொல்லிக் கொடுக்கலாம்? 

அதற்குப் பல வழிவகைகள் இருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த வழிவகைகளில் ஒன்றை மட்டும் சில சான்றாதாரங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களையும் என்னோடு தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவை என் பார்வைப் புலத்தை விசாலிக்கப் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் சமூகமாக இந்திய இலங்கைத் தமிழர்கள் இணைந்து ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? 

இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும் இடமாக;

கலைகள் ( இசை, நடனம், வாத்திய கலைகள்) இலவசமாகக் கற்றுக் கொடுக்கப் படும் இடமாக;

இலக்கியம் அதன் சுவை அதன் பாடுபொருளை சுவையோடு சொல்லிக் கொடுக்கும் ஓர் இடமாக,

ஓரிடமும்; 

கூடவே அங்கு நம் பாரம்பரியப் பொருட்கள் - இன்று பாவனையில் இல்லாத பொருட்கள் - பார்வைக்கு வைக்கப்பட்டு - எத்தகைய ஒரு வாழ்வு முறையை நம் மூதாதையர் பின்பற்றினார்கள்; எப்பேற்பட்ட ஆழமான பண்பாட்டு வாழ்க்கைமுறை வேரில் இருந்து நாம் வந்திருக்கிறோம்; எப்படி எல்லாம் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை பார்க்கும் விதமாக ஒரு மியூசியமும் உள்ளதாக ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ - 

இதற்கு அவ் அவ் துறையில் துறைபோகிய சமூகசேவை மனப்பாண்மை கொண்ட குருமார் அவ் அவ் கலைகளை இலவசமாக பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சினேக மனப்பாண்மையோடு  கற்றுத்தர முன் வருவார்களாக இருந்தால் அது எத்தகையதான சமூகத்தை உருவாக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவே மனதுக்கு பூரண இதத்தைத் தருவதாக  இருக்கிறது!!

சுமார் 5,6 வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண, சமான்ய தோற்றம் கொண்ட ஒரு மனிதரை என் வேலை நாளொன்றில் சந்தித்தேன். கூச்ச சுபாவத்தோடு தயங்கித் தயங்கி என்னை அணுகினார். அவரின் பெயர் சிவசோதி. யாழ்ப்பானத்தில் உள்ள ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, கொட்டைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், போர் சூழலால் துரத்துண்டு தமிழ் நாட்டில் சிலகாலங்கள் வசித்து, அதன் பின்னால் சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர். இலங்கையில் இருந்த போது அச்சகத்தில் பணியாற்றியதாகக் கூறினார். அவர் கடந்த 17.12.21 அன்று தனது பிறந்ததினத்தைக் கொண்டாடியதோடு அவரின் கொண்டாட்டப் படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதனை உங்களோடும் அவசியம் பகிர்ந்து கொள்வேன்.

சிவசோதி ஐயா தன் மனைவியோடு

சிவசோதி ஐயா தன் பேரப்பிள்ளைகளோடு

அவரைப் பற்றி நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன் வாழ்நாளில் சேகரித்த சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். ஊரை விட்டுப் புலம் பெயரும் போதும்; பின்நாளில் தமிழ் நாட்டை விட்டுப் புலம் பெயரும் போதும்; அவர் தன்னோடு கொண்டுவந்த பொருட்கள் என்னவென்றால் பழங்கால முத்திரைகள், நாணயங்கள், முதல்நாள் தபால் உறைகள், அரசால் வெளியிடப்பட்ட நாட்டுத்தலைவர்கள் குறித்த சிற்றேடுகள் போன்றவை தான்.



அரிதாக அச்சிடப்பட்ட 1 ரூபாய் தாள் 1963.6.5.
1 ரூபாய் தாளின் பின் புறம்


1974ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்து இன்று காணமுடியாத 10 ரூபாய் நோட்டு


அந்த 10 ரூபாய் நோட்டின் பின் புறம்

சுமார் 1974ம் ஆண்டளவில் புழக்கத்தில் இருந்த 2 ரூபாய் தாள்

2 ரூபாய் தாளின் பின் புறம்


பின்நாளில் வந்த 10 ரூபாய் நாணயம்



இவைகள் எல்லாம் பண்பாட்டின் கருவூலங்கள்; இன்று பார்வைக்குக் கிடைக்கப் பெறாதவை; அவைகளின் சில ஒளிப்படங்களைய் உங்கள்  பார்வைக்காகத் தருகிறேன். இது போல பல கலைப்பொக்கிஷங்கள் அவரிடம் உள்ளன.

இந்த இந்திய நாணயங்களைப் பாருங்கள்.



இந்த இந்திய நாணயங்களில் 5ம் ஜோர்ஜ் மன்னர் காலம், 1 பைசா, 1 அனா,2,3,5 பைசாக்கள், கால் அனா,1/2 ரூபா நாணயங்கள் இதில் பார்வைக்கு உள்ளன. இவை போல பல உள்ளன. ( எனக்கு இந்த பைசா, அனா, ரூபாய்களுக்கான வேறுபாடுகள் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்.) 
இவைகளோடு கூடவே புராதன தலைவர்களின் தபால் தலைகள், 1st day cover என்று சொல்லப்படும் தலைவர்களின் படம் பொறித்த தபால் உறைகள் மற்றும் அவர்களைப்பற்றி தபாலகம் வெளியிட்டுள்ள சுருக்கப் பதிவுகள் என்று ஏரளமான வரலாற்றுக் குறிப்புகள் சிவசோதி ஐயா வழியாக என் வசம் தற்போது உள்ளன.

அவை சரியான இடத்தில் வாழ்நாள் பூராக சேகரித்து அதனைப் பொக்கிஷமாகக் காத்து வந்த சிவசோதி ஐயா அவர்களின் பெயரோடு நம் எதிர்கால சந்ததிக்குப் போய் சேர வேண்டும் என்பது என் அவா. ஒரு பெரும் கனவு. 

காலங்கள் கடக்கின்றன. வருடம் ஒன்று போக வயதும் ஒன்று கூடுகிறது. மலையில் ஏறிய காலம் கடந்து, நாம் இப்போது மலையில் இருந்து இறங்கும் வாழ்க்கைக் காலத்தில் இருக்கிறோம். இருக்கும் போது பிடித்தவற்றைச் செய்து விட வேண்டும் என்றும்; அதனை காலம் தாழ்த்தாது இப்போதே செய்து விட வேண்டும் என்றும் நுணுயிர் கிருமிகளும் வாழ்க்கைப் பாடங்களும்; வாழ்வியல்புகளும் நமக்கு உணர்த்திய வண்ணமாக உள்ளன. நாம் அதனை உதாசீனம் செய்து விடக் கூடாது என்று எஞ்சி இருக்கும் வாழ்க்கை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது...

 நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதாலோ என்னவோ இவைகளின் சொந்தக்காரர் இவற்றை மகிழ்வோடு என்னிடம் தந்து வைத்திருக்கிறார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் பூதம் பொக்கிஷத்தைப் காப்பதைப் போல இவற்றைக் காத்து, காத்து வருகிறேன்.

இதனால் என்ன பயன்? இவை எல்லாம் சமூகத்துக்குப் பயன்படும் போது தானே அது எல்லோருக்கும் பயனுடயதாகும்!!

கூடவே என்னிடமும் சில மூதாதையர் பயன் படுத்திய பொருட்களை பெரும் முயற்சி எடுத்து தாயகம் போன ஒரு விடுமுறை நாளில் உருக்குப் பட்டறைகளில் இருந்து மீட்டெடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். 

இவைகளையும் கூட உங்கள் பார்வைக்கு தருகிறேன்.












இவைகள் எல்லாவற்றையும் கூடவே ஒவ்வொரு ஈழ, தமிழகத் தமிழர்களும் ஊருக்குப் போய் வரும் போது கண்டெடுத்து வரும் அரும் பொக்கிஷங்களையும் ஓரிடத்தில் - அதாவது இந்த - தமிழர் கலாசார இல்லத்தில் - பார்வைக்கு வைத்து, மாணவர்களின் பார்வைக்கு வைத்தால் அது சமூகத்தில் கலைவழி கற்றலினாலும் பார்வை வழி புரிதலினாலும் அறிதலின் வழி ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வராதா?

அதற்கு நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?

இந்தப் புது வருடத்தில் அதற்கு ஒரு வழி கிட்டாதா?

......................

எல்லோருக்கும் இன்னும் இரு நாளில் மலர இருக்கின்ற 2022 புதுவருட நல்வாழ்த்துக்கள்!

காலம் காயங்களை ஆற்றி எல்லோருக்கும் நல்வழி காட்டட்டும்!

மனிதம் மலரட்டும்!!

No comments:

Post a Comment