Wednesday, September 10, 2025

சரஸ்வதி பூசையும் குருபரனின் பக்தித் தமிழும்

இன்று காலையிலேயே மழை!

’ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி; ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து; பாழியந் தோளுடய பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி; வலம்புரி போல் நின்றதிர்ந்து; தாழாதே சார்ங்க முதைத்த  சர மழை போல...’, ஒரு மழை!

குடை பிடித்தேனும் இன்று நடந்தே வேலைக்குப் போவது என்று தீர்மானம்.

பாதையும் பயணமும் சிறியது தான். சொல்லப் போனால் அது ஒரு 15 - 20 நிமிட நடை தூரம் தான். இதனை நான் இத்தனை காலமும் எப்படித் தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சொகுசு கேட்கும் வாழ்க்கைமுறையின் சோம்பேறித் தனங்கள்..... - இது தான் காரணம்; வேறென்ன? 

சரி உங்களுக்காக இன்றைக்கு ( 10.9.2025 புதன் காலை)   பாதையில் கண்ட சில காட்சிகள்.






பாதையில் அறிமுகமான ஒருவரைக் கண்டேன். 

அவரிடம் இருந்து நேற்றய தினம் வட்ஸப்பில் ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. இம்முறையேனும் நீங்கள் எங்கள் நவராத்திரிப் பூசையில் கலந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அவரை வீதியில் கண்டபோது சற்று சங்கோஜமாக இருந்தது. 

புன்னகைத்துப் பிரிந்தோம்.

அவர் ஒரு தமிழகத்துப் பிராமணப் பெண்மணி. ஆசாரங்களைச்  சிரத்தையாகக் கடைப்பிடிப்பவர். இந்த வேண்டுதலை என்ன செய்யலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு போய் என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை.

பொதுவாக ஈழத்தவர்களாகிய நாம் தமிழகத்தவர்கள் போல் கோலாகலமாக நவராத்திரியைக் கொண்டாடுவதில்லை. கொலு வைப்பதும் துதிப்பாடல்கள்  பாடுவதும்  நம்மிடையே வழக்கத்தில் இல்லை. பாடசாலைகளில் மாத்திரம் ஒன்பது நாளும் கோலாகலமாக பூசைகளும் பிரார்த்தனைகளும் நடந்தேறும். கும்பம் வைத்து, ஐயர் வந்து, மந்திரங்கள் சொல்லி; சுண்டல், பொங்கல் பிரசாதங்களோடு கொண்டாட்டங்கள் நடைபெற்று ஒரு கலை விழாவோடு சரஸ்வதிப் பூசை நிறைவுக்கு வரும்.

பாடசாலை மாணவர்களைக் கொண்டிருக்கிற குடும்பங்கள் விரதமிருப்பதோடு கடைசி நாள் ( ஒன்பதாம் நாள் இரவு) ஆயுத பூசை என்று ஒன்றை வைத்து, அன்றைக்கு சுவாமி அறையில் தொழிலாளர்கள் தங்களுடய தொழில்சார்ந்த ஆயுதங்கள், உபகரணங்களையும்; பாடசாலைப் பிள்ளைகள் தங்கள் பாடப்புத்தகங்களையும் வைத்து பொங்கல், பிரசாதங்கள், பூ, பால், பழங்கள் எல்லாம் படைத்து வணங்குவதோடு எங்களுடய சரஸ்வதிப் பூசை இனிதே நிறவு பெறும்.

எங்கள் வீட்டிலும் இதுவே வழக்கமாக இருந்தது.

எங்கள் பாடசாலையில் நடைபெறும் சரஸ்வதிப் பூசை என்றைக்கும் என்னால் மறக்கவொண்ணாதது. பள்ளிக் கூடமே கலைக்கோலம் பூண்டிருக்கும். பாடசாலை ஆரம்பித்ததும் முதல் இரண்டு பாட வேளைகளும் பூசைக்காக ஒதுக்கப் பட்டுவிடும். ஒன்பது நாளும் ஒன்பது வகுப்புகளுக்குரியது. நாமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரிப்பில் ஈடுபட்டிருப்போம். சுவரோடு அமைந்திருக்கிற கரும் பலகைகள் எல்லாம் வண்ணச் Chalk குகளினால் சரஸ்வதியும் லக்ஷ்மியும் துர்க்கையும் உயிர்ப்போடு விளங்குவார்கள். 

பாடசாலை முடிந்த பிறகு  மறுநாளுக்குரிய வகுப்பு ஆண் மாணவர்கள் நின்று அலங்கரிப்பில் ஈடுபடுவார்கள். எங்கிருந்தோ சைக்கிளில் டபிள் போய் செந்தாமரைப் பூக்களையும் தென்னை ஓலைகளையும் வெட்டி வந்து அந்த மண்டபத்தை அலங்கரிப்பது அவர்களுடய பொறுப்பு. பெண்பிள்ளைகள் மறுநாள் காலை வீட்டில் இருந்து எல்லோருமாகக் கொண்டுவரும் பிளிந்த தேங்காய் பூக்களையும் அரிசி முதலானவற்றையும்  நிறமூட்டிக் கோலம் போடுவார்கள். மயிலும் தாமரையும் தண்ணீர் தடாகமும், பூக்களும் என பல்வேறு கோலங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் பூமாலைகள் கட்டி முப்பெரும் தேவியரையும் அலங்கரிப்பதும் பெண்பிள்ளைகளின் பிரதான கடமை.

பூக்களும் சந்தனமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் கற்பூரமும் மாணவர்களின் ஒத்துழைப்பும் பிரசாதங்களுமாக அது ஒரு தெய்வீக வாசனை; தெய்வீகப் பொலிவு!....

இன்னுமொரு முக்கியமான காரியமும் அங்கு நடைபெறும். சகலகலாவல்லி மாலையும்  நினைவில் இப்போது இல்லாத, வேறொரு நீண்ட பெரிய பாடலும் அந்த வகுப்பு மாணவர்கள் பாட வேண்டும். அந்த நீண்ட  பாடல் நமோ நம என்று முடியும். அந்த நேரம் அதாவது, நமோ நம என்கின்ற போதும்; சகலகலாவல்லியே என்கின்ற போதும், மேடையில் திருவுருவப் படங்களின்  இருபுறமும் நிற்கின்ற முழுப்பாவாடை சட்டை அணிந்திருக்கின்ற இரண்டு மாணவிகள் தாங்கள் ஏந்தி வைத்திருக்கும் தட்டில் இருந்து பூக்களை எடுத்துச் சுவாமிக்கு போட வேண்டும். அதற்கான பயிற்சியும் யார் பூ போடுவது என்ற தெரிவும் வகுப்பாசிரியரின் பொறுப்பாக இருக்கும். ( பூக்களை வெறுமனே எறியாமல் அதனைக் கைகளை மேலே உயர்த்தி மெதுவாகக் கீழே இறக்கிப் பூவினை மென்மையாக சாமிப் படத்தின் முன்னால் வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தந்த அறிவுறுத்தல் எனக்கு இன்னமும்  நினைவிருக்கிறது ) அந்த இருவர் மாத்திரம் அன்றைக்கு முழுப்பாவாடை சட்டையோடு பாடசாலைக்கு வரலாம். எனையவர்கள் சீருடை தான் தரித்திருக்க வேண்டும்.

பூசை முடிந்ததும், மேடையில் வீற்றிருக்கும் சுவாமிகள் மாத்திரம் அப்படியே இருக்க, வீபூதி, சந்தனம், பிரசாதம் எல்லாம் அவற்றுக்குப் பொறுப்பான வகுப்பு மாணவர்கள் கொடுத்து முடித்த பின், கூட்டம் கலையும். அந்த மண்டபம் மீண்டும் வகுப்பறைகளாக மாறிவிடும். மாலை 3.30க்கு பாடசாலை விட்டதும் அடுத்த நாளுக்குரிய வகுப்பு மாணவர்கள் மாத்திரம் நின்று அலங்கரிப்பில் ஈடு படுவார்கள். வகுப்பாசிரியர் மேற்பார்வையில் ஈடுபட்டிருப்பார்.

பாடசாலை நாட்களில் அது தான் எங்களுக்கான அதிகபட்ச சந்தோஷமும் கோலாகலமும்.

அது நிற்க, 

இந்த அழைப்பிதழ் வந்த போது எனக்கு என் பாடசாலை ஞாபகமும் சகலகலாவல்லி மாலையுமே நினைவுக்கு வந்தது.

சகலகலா வல்லி மாலை! இதனைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா? குமரகுருபரர் அருளிச் செய்த பத்துப் பாடல்கள்!

அது பக்தித் தமிழின் பிளிந்தெடுத்த அமுதம்! 

ஆண்டாளின் திருப்பாவை போல;  மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போல; தமிழும் பக்தியும் அதில் மிளிரும் கம்பீரமும், கடவுளுடனான அவர்களின் அன்னியோன்னிய உரிமை வெளிபடும்;  பாங்கும்;  பாட்டும்;  பாடும் தமிழும்; அதன் இனிமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

தமிழ் கம்பீரமாகவும்; பக்தி வசீகரமாகவும்; விளங்குவது  என்பதுவும்; அது நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதுவும்; தமிழர் பண்பாட்டுக்கே பெருமை சேர்ப்பது;. அவை தமிழ் மகுடத்துக்குப் பதிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பெருமை மிகு  இரத்தினங்கள்; ஒளிரும் பிரகாச நட்சத்திரங்கள்.

அது பாடப் பாட பரவசம் தருவது; பருகப் பருக பக்தி பெருகுவது...

குருபரர் பாடுகிறார்,

‘வெந்தாமரைக்கு அன்றி, நின் பதம் தாங்க, என் வெள்ளை உள்ள(மான) தண் தாமரைக்குத் தகாது கொலோ?’ என்கிறார். வெந்தாமரையில் பாதம் பதித்தபடி நின்றிருக்கிறாயே ( சரஸ்வதி தேவி) உன் பாதத்தைத் தாங்க எனது வெள்ளை உள்ளமான குளிர்மையான தாமரைக்குத் தகுதி இல்லையா?  - என்று கேட்கிறார்.

மேலும், ’நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் ( என்னைப் ) பணிதருள்வாய்!’ என்று கேட்கும் அந்த தமிழின் கம்பீரத்தைப் பாருங்கள். அதிலே ஓர் அன்பும் கட்டளையும் ஒழிந்து / ஒளிர்ந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சும்மா பாடல் இல்லை. சொற்சுவையும் பொருள் சுவையும் தோய்ந்திருக்கத் தக்கதாகப் பாடுகிற பணி - அதிலே என்னைச் சேர்த்து விடு என்று எத்தனை அழகாய் கேட்கிறார் பாருங்கள்!

பிறகு ஆதங்கப் படுகிறார் எப்படி என்றால், . புலவர்கள் உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவலினை ( அவர்கள் )  சிந்தக் கண்டு களிப்பவளே! ( கலாப மயிலே - சரஸ்வதி தேவி) (அந்தப் புலவர்கள் மாதிரி,)  ‘அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது ஆர்த்து உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?’ - எனக்கும் அப்படி ஒரு பாக்கியத்தைத் தந்தருள மாட்டாயா? என்று இறைஞ்சிக் கேட்கிறார். அப்படிக் கேட்டுவிட்டுப் பிறகு, ‘ தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்(ந்த) வாக்கும் பெருக ( எனக்குப்) பணித்தருள் என்பது அவரது வேண்டுதல்./ ஒருவித உரிமைக் குரலாக அந்தத் தமிழ் தொனிக்கிறது பாருங்கள்! - ஒருவித அதட்டல்; உரிமையான - எனக்குத் தரவேண்டியதைத் தந்து விடு என்பதான ஒரு கோரிக்கை அது!

அப்படிக் கேட்ட பிறகும் வரவில்லையே என்று விம்முகிறது அந்தப் பக்தித் தமிழ். ஏன் நீ இன்னமும் என்னிடத்தில் வரவில்லை என்ற ஏக்கம் தொனிக்கும் அடுத்த பாடலில் ( 5 ) அதனை அவர் இப்படி முன்வைக்கிறார். ‘பாத பங்கேருகம் என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே?’ என்று கேட்டுவிட்டு ஆறாவது பாடலில், ’பண்ணும் பரதமும், தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது (தாக) எய்த நல்காய்!’ என்று மீண்டும் ஒரு வேண்டுதல் விடுக்கிறார்; விண்ணப்பம் வைக்கிறார். .- நான் நினைக்கிற போது பண்ணும் பரதமும் தீஞ்சொல் பனுவலும் எனக்கு எளிதாகக் கிடைக்க நீ அருள வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

’கிடைக்க வை’ என்பதை ’எய்த நல்காய்’ என்று சொல்லும் இந்தத் தமிழ் சுவை எத்தனை உவப்பாக இருக்கிறது! இல்லையா? இந்தத் தமிழை நாங்கள் வரலாற்றின் எந்தப் பாதையில்; எந்தத் திசையில்; எங்கு? எப்படித் தொலைத்தோம்?

அவரது அடுத்த இறைஞ்சுதலும் விருப்பமும் ஆவலும் இப்படியாக வருகிறது.  ‘ பாட்டும், பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் (தேவி) என்று இவ்வாறாகக் கேட்டுவிட்டு என்னை உனது அடிமையாக்கு என்று அடுத்த பாடலில் ஒரு போடு போடுகிறார்.’ ’சொல்விற்பனவும் அவதானமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து என்னை அடிமை கொள்வாய்’ ( தேவி) என்றவர், இறுதிப்பாடலில் 

‘மண்கண்ட வெண்குடை(குக்) கீழாக

மேற்பட்ட மன்னரும்

என் பண் கண்ட அளவில்

பணியச் செய்வாய்!

படைப்போன் முதலாம் விண்கண்ட தேய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில், உன்போல் கண் கண்ட தெய்வம் உளதோ? சகலகலா வல்லியே! என்று முடிக்கிறார்!

பூமியிலே வாழ்கிற வெண்கொற்றக்குடைக்குக் கீழாக நிமிர்ந்து நிற்கின்ற மன்னரும் என்னுடய பண்ணை - பாட்டை - கேட்ட அளவில் பணியச் செய் என்று கம்பீரமாகக் கேட்கிறது குருபரனின் பக்தித் தமிழ்!

‘படைத்தல் தொழிலைச் செய்பவன் உட்பட எவ்வளவோ கோடானு கோடி தெய்வங்கள் இருக்கின்றன தான்; ஆனாலும், சொல்லப் போனால் (விளம்பில்)  உன்னைப் போல ஒரு தெய்வம் உள்ளதோ சகலகலாவல்லியே? இது குருபரர். - குமர குருபரர்.

விண்ணுக்கொரு மருந்தை; வேத விழுப்பொருளை; கண்ணுக்கினியானை; பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக ... சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை என்று உருகினார் மாணிக்க வாசகர். ( திருவெம்பாவை) 

’கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்; ஏழில் இயம்ப, இயம்பும் வெண்சங்கெங்கும்; கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை; கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?’ என்று உருகி உருகி வையகம் வாழத் தமிழ் செய்கிறாள்  ஆண்டாள். ( திருப்பாவை)

என்னே தமிழ்!

என்னே பக்தி!!

சகலகலாவல்லியே நீயே சரண்!!

Monday, September 8, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே... - 3 -

 ஆண்டவனின் தோட்டத்திலே ... - 1 -

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 2 -

சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா?

அப்பாடா, ஒருபடியாக, இறுதியாக இப்போது இங்கு வந்து சேர்ந்து விட்டேன். :)

இந்தக் கடையில் வாங்கும் பொருட்களினால் எவ்வாறாக நாம் இந்தத் தேசத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் என்பதை ஆங்காங்கே மாட்டி வைக்கப் பட்டிருக்கின்ற இந்த கீழ்கண்ட பிரசுரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

( பத்து டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் நீங்கள் வீடற்ற ஒருவருக்கு ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள். )


( இருபது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒரு குடும்பத்தின் ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள்)


(முப்பது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒருவர் ஓரிரவு உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறீர்கள். அதற்கு நன்றி. Your purchase has a purpose) 

பார்த்தீர்களா? நாம் மலிவு விலையில் பல அரிய பொருட்களை வாங்குகிறோம் என்பதையும் தாண்டி அது மற்றவர்களுக்கும் இந்தப் பூமிக்கும் எவ்வளவு நன்மையை விளைவிக்கிறது பாருங்கள்.

சரி அது இருக்கட்டும், நான் வந்த வேலையையும் சொல்லவந்ததையும் முதலில் சொல்லி விடுகிறேன்.

பொதுவாக இந்தக் கடைக்கு நான் வந்தால் முதலில் என் கண்ணோட்டம் போவது தளபாடங்கள், பின்னர் கைவினைப் பொருட்கள் ( காகிதங்களோடு தொடர்பு பட்டவை ) பின்னர் புத்தகங்கள்.

இங்கு இருக்கும் புத்தகங்களைப் பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். இந்த நாடு கடந்த 100 க்கு மேலான ஆண்டுகளில் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்திருந்தது; அதன் அழகுகள், வரலாறு, விளையாட்டு, கைவினைப் பணிகள், மருத்துவம், கவிதை, இலக்கியம், சிறுவர் வாழ்வு, தோட்டக்கலை, சமையல், தளபாடவகைகள், உலக வரலாறு, பெரியார்கள், கல்வி, பற்றிய பல்வேறு கிடைக்கற்கரிய புத்தகங்கள், மாதாந்த சஞ்சிகைகள், தையல் கலை, மனையியல் கலைகள், பின்னல் கலை குறித்த பல்வேறு புத்தகங்கள் இங்கு 2,3, டொலர்களுக்கும் 4,5 டொலர்களுக்கும் விற்பனைக்கு இருக்கும். குறிப்பாக விக்ரோரிய மகராணி காலத்தைய புத்தகங்களும் அவற்றில் காணப்படும் வண்ணப் படங்களும் புத்தகங்களின் பரிமானங்களும் பேப்பரின் தரமும், அச்சு பதிப்பும், புத்தகக் கட்டும், அதன் உறுதிப்பாடும் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும்.

என்னுடய கைப்பணிகளுக்காகவும் வரலாறில் எனக்கிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவும் வாங்கி வைத்திருக்கிற புத்தகங்கள் ஏராளம். ஆனாலும் அவற்றைத் தேவைக்குத் தானும் வெட்டவோ கிழிக்கவோ மனசு வராது. அதன் தரமும் உள்ளடக்கமும் அத்தனை சிறப்பாக இருக்கிறது.

ஒரு புத்தகத்தின் உயிரினை அதன் ஆத்மாவினை கிழித்து பாவித்து விட்டால் அதனை எங்ஙனம் மீண்டும் காண்போம்? டிஜிட்டல் உலகுக்கு நாம் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளை நாம் கடந்து விட்டாலும் கையில் விரித்து வைத்திருக்கும் ஒரு பழம் பெரும் புத்தகத்தின் வாசமும் அவற்றில் இருக்கும் வாசகங்களும் எங்களோடு இன்னமும் ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டு தானே இருக்கிறது.... ஒரு செய்தியினை சொல்லிக் கொண்டு தானே இருக்கிறது. அதன் குரலை எவ்வாறு மறுதலிப்பது? அதன் குரல்வளையை எவ்வாறு நசிப்பது? 

அரிய; அதிலும் குறிப்பாக விக்ரோரிய ராணியின் சகாப்தத்தில் இருந்த வாழ்வு முறை, நடை உடை பாவனைகள், பவித்த பொருட்கள், பிள்ளைகளின் விளையாட்டுகள், குழந்தைப் பாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றில் காணப்படும் வண்ணப் படங்கள்.....அவற்றின் வடிவழகை; பேப்பரின் தரத்தை; பைண்டிங்கின் கச்சிதத்தை சிதைப்பதென்பதெங்ஙனம்?

இதனாலேயே இவற்றைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒரு வைக்கோல் பட்டைடை நாயின் கணக்காக!

இருந்த போதும் எல்லாவற்றையும் வாங்கிவிடும் அவாவோ குறைந்த பாடில்லை. எப்போது அங்கு போனாலும் புத்தகங்களைப் பார்க்கலாம் என்பதே எனது மனதுக்கு மகிழ்ச்சியான விடயமாக இருக்கும். மிக ருசியான உணவினை வைத்திருந்து இறுதியாகச் சாப்பிடுவது போல மிக இறுதியாகத் தான் புத்தகப் பக்கத்திற்குப் போவேன்.

இன்றைக்கு பூக்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை வாங்குவது எனது நோக்கமாக இருந்த படியால் முதலில் புத்தகம் இருக்கும் பக்கத்திற்குப் போனேன்.

எனது கண்ணுக்கு முதலில் தென்பட்ட புத்தகம் ஒன்றைப் பற்றி இனி நான் சொல்லப் போகிறேன். சொல்வதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு குறிப்பொன்றைச் சொல்ல வேண்டும்.

இந்தப் புத்தகம் பதிப்புரிமை உடையது. எந்த ஒரு வடிவிலும் உரியவர்களின் அனுமதியின்றி பிரசுரிக்கப்படலாகாது என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இருந்த போதும் இதனை நான் வியாபார நிமித்தமோ இலாப நோக்கிலோ இதனைப் பிரசுரிக்காது இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகத்திற்காக இதன் மிகச் சிறியளவிலான படங்களை இங்கு பதிவேற்றுவதனால் அவர்கள் என்னை பொறுத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.

புத்தகம் நியூசிலாந்து நாட்டில் 2016ம் ஆண்டு பிரசுரமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க நீர்வர்ணத்தினால் அமைந்த  பூக்களின் படங்களைக் கொண்டமைந்திருக்கின்ற இந்தப் புத்தகத்தின் தலைப்பு Reflections in a monastery garden. ( மடாலயத் தோட்டத்தின் பிரதிபலிப்பு) இதனை அருட்சகோதரி Teresa. Kelleher ocd என்பார் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். மொத்தமாக 63 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவகையான பூக்களின் படங்கள்.தரமான அட்டை வடிவமைப்பும் கூட. 

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இந்த அருட்சகோதரி தான் சிறு பெண்ணாக தன் தாய் தந்தையரோடு இருந்த போது ஒரு கோடை விடுமுறைகளின் போது முதன் முதலாக ஒரு நீல மலரை பறித்தெடுத்துக் கொண்டு புல்வெளியில் படுத்திருந்தபடி இந்தப் பூவின் அழகின் சிருஷ்டியை அதிசயித்ததையும்; இந்த நீல ஆகாயத்தையும், மென்மையான பச்சைப் புல்வெளியையும் மென்மையான இறைவனின் எதிரொலியாகத் தான் கண்டுகொண்டதையும் நினைவுகூர்கிறார்.

மேலும், ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் தாயாரோடும் தன் சகோதரியோடும் தாவரவியல் பூங்காவுக்கு  வழக்கமாக நடை உலா போவது பற்றியும்; அங்கு பழங்காலத்து நேரமறியும் நேரமானி ஒன்று  இருந்தது பற்றியும்; அங்கு, பூக்களின் மத்தியில் பாராயணம் செய்யத்தக்க வாசகம் பொறிக்கப்பட்ட கல் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகிறார். அதில், 

‘ The kiss of the  sun for pardon,
The song of the birds for mirth,
One is nearer God's heart in a garden,
Then anywhere else on earth'

( From 'God's garden By Dorothy. Frances Gurney, 1913) 

இதனை வெண்பா வடிவில் Char GPT இப்படித் தருகிறது.

‘மன்னிக்கும் சூரியனின் முத்தமழை
மகிழும் பறவைகளின் பாடலிசை
தன்னிலே நண்ணரு மாலடியை
தோட்டம் தவமே தரும்’

என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் குறிப்பிட்டு, சில வருடங்களின் பின் குருத்துவம் பெற கார்மல் என்ற குருத்துவப் பாதையில் சென்று சேர்ந்து கொண்டமையையும் அங்கு பைபிளின் பழைய ஏற்பாடு படித்த போது கார்மல் என்பதற்கு ‘அழகின் இருப்பிடம்’ என்று பொருள் என்று தான் அறிந்து கொண்டமையையும் குறிப்பிடுகிறார். 

இறைவனின் படைப்பில் அழகின் சாயலை தன் வாழ்வில் எங்ஙனும் காண்பதை நினைவு கூரும் அவர், தன் குருத்துவ வாழ்வில் தன் தேவாலயத்துத் தோட்டத்தை இறைவனின் சிருஷ்டியின் ஓரழகாகப் - பேரெழிலாகக் காண்கிறார். நெடுத்துயர்ந்த மரங்கள், பூப்பூக்கும் செடிகள், செழித்து நிற்கும் சிவப்பு ஓர்க் மரம், லிக்குடைம்பர் ( liquid-amber )என்று சொல்லப்படும் ஒருவித Gum Tree, golden elm என்று சொல்லப்படுகின்ற தங்க நிற இலுப்பை மரம், இவைகள் எல்லாம் இணைந்ததாக அவரது தேவாலயத்தின் தோட்டம் அமைந்திருந்திருக்கிறது.

தேவாலயத்தின் சுவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு இறைவனின் அழகின் சிருஷ்டியை; தன் தேவாலயத் தோட்டத்தில் மலர்ந்திருக்கின்ற தெய்வீகத்தின் தோற்றத்தினை; தன் தூரிகையினால் சுமந்து, இந்த புத்தகத்தின் வழி நம்மோடு பகிர்வதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் இது அவரது கண்வழி அவர் கண்ட இறைவனின்  பேரழகு என்கிறார். ( 2016 - ஈஸ்டர்)

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்வதை விட இந்த வண்ணப் படங்கள் அதன் தாற்பரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும். என் சொற்களுக்கு இங்கு எந்த விதப் பயனுமில!

இந்தப் புத்தகம் நியூசிலாந்தில் இருந்து எப்படி சிட்னிக்கு வந்து, இந்த பழம்பொருள் விற்கும் கடையை அது எவ்வாறு இறுதியாக வந்தடைந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் முதல் பக்கத்தில் அருள் தந்தை ஜோன் கோல்டிங் சப்ளின் என்பார் 2021ம் ஆண்டு டிசெம்பர் மாதம் பதின்மூன்றாம் திகதி முன் பக்கத்தில் எழுதிய குறிப்பொன்று இவான் என்பவருக்கு இப்புத்தகம் பரிசளிக்கப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது.

அந்த அருள் தந்தை எவ்வளவு அழகாக அதனை எழுதியிருக்கிறார் என்று நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த முதல் பக்கத்தை அப்படியே படம் எடுத்துப் போடுகிறேன்.


இனி நான் இடையில் நிற்கவில்லை. அந்தப் புத்தகத்தில் இருக்கும் படங்களில் ஒருசிலவற்றை மட்டும் அதன் சுவை கருதி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ( அருள்சகோதரியாரே! உங்கள் புத்தகத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருள்க!)























மிக அற்பமான விலைக்கு வைக்கப்பட்டிருந்த; விலைமதிக்க முடியாத ஆத்மாவை: இறைவனின் பேரருளினை; அழகின் பெரும் இரகசியத்தைச் சுமந்திருக்கிற இந்தப் புத்தகத்தை; என் கைப்பணி வேலைகளுக்காக எங்ஙனம் நான் தீண்டுவேன்?

அழகில் கடவுளைக் காணும் இந்த அருட்சகோதரர்களும்; அது எடுத்துக் கூறி நிற்கும் தாற்பரியமும்; இந்த அழகும் விலைமதிக்கமுடியாத பெரும் பேறன்றோ!

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆஹாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது!!

இப்போது, திருஞான சம்பந்தர் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.’ ”மாசில் வீணையும்; மாலை, மதியமும்: வீசு தென்றலும்; வீங்கிள வேனிலும்; மூசு வண்டறை; பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே!”

இறுதியில் எல்லா சமயங்களும் ஒன்றைத்தானே போதிக்கின்றன!; எல்லா நதிகளும் இறுதியில் கடலையே சென்றடைகின்றன!

  ஆகையினால் அன்புடையீர், 
Find joy in every Sunrise
Take the scenic route and
Live gently upon Earth!

நாளும் நலமுடன்
வாழ்க! வளமுடன்!!

Sunday, September 7, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 2 -

 ஆண்டவனின் தோட்டத்திலே....- 1 -

சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா...?

இப்போது இங்கு வசந்தகால ஆரம்பம். செப்ரெம்பர் முதலாம் திகதியிலிருந்து நவம்பர் முப்பதாம் திகதிவரை மிக நல்ல ரம்மியமான சூழல் நிலவும். அளவான சூட்டில் சூரியன்; மென்மையாக வீசும் குளிர் தென்றல், கண்ணுக்கு இதமான காட்சிகள்,  இலைகள், துளிர்கள், பூக்கள், மொட்டுக்கள் என அவை விரியும். காதுக்குக் கேட்கும் பறவைகளின் / குருவிகளின் / வண்டுகளின் ரீங்காரங்கள், தேனெடுக்கத் திரியும் தேனீக்கள், பூமியில் இருந்து முளைத்து உயர்ந்து நிற்கும் மரங்களில் குடியிருக்கும் இனங்களுக்கு இது இனப்பெருக்க காலம். அதனால் குஞ்சுகளின் கீச் கீச் ஒலிகளும் அவ்வப்போது கேட்கும்.

நடக்கவும் பார்க்கவும் நல்ல இதம். 

என் வீட்டு வீதியோரம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பலரை நான் அன்றாடம் காண்கிறேன். தலைக்குக் Head phone ஐ மாட்டிக்கொண்டு ரோபோக்கள் போல யாரோடோ பேசிக்கொண்டு அல்லது போனைப் பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள்.......

கொஞ்சம் இந்த சாதனங்களில் இருந்து தள்ளி இருந்து தான் பாருங்களேன். சுற்றி இருக்கும் இந்தச் சுற்றாடலைத் தான் கொஞ்சம் ரசியுங்களேன் என்று சொல்லத் தோன்றும். நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதாவது இந்த நல்ல காற்றை; பூக்களை; சுற்றாடலைக்; சுற்றிவர நடக்கும் மனிதர்களை;  கொஞ்சம் பாத்தால் தான் என்ன? சற்றே சிரித்தால் தான் என்ன? ஏன் எல்லோரும் ஒருவித மாய உலகில் சஞ்சரித்தபடி திரிகிறார்கள் என்று தோன்றுகிறது...

 செல்லும் வழியெங்கும் பூக்களின் நிலப்பாவாடை...இந்தப் பூமி நமக்காக எத்தனை அழகோடு மலர்ந்திருக்கிறது!  ஐம்புலன்களுக்கும் எத்தனை பெரிய விருந்தைப் படைத்து வைத்து விட்டுக் காத்திருக்கிறது....

அவற்றை நாமாவது கொஞ்சம் பார்ப்போமா? 
































நான் நடந்து சென்ற பாதை ஓரங்களிலும், நான் கடந்து செல்லும் வீடுகளின் வீட்டு வளவுகளுக்குள்ளும் மலர்ந்து நிற்பவை இவை.

நான் இன்னும் நான் சொல்ல வந்த விடயத்துக்கு வந்து சேரவில்லைப் பாருங்கள்....இந்தப் பதிவோடு இதனை முடித்து விடலாம் என்று தான் பார்த்தேன். ஏனோ முடியவில்லை....

இன்றைக்கு இந்தப் பதிவிற்கு இது போதும் என்று தோன்றுகிறது. முடிவுப் பகுதிக்கும் சில பல படங்கள் வர இருப்பதால் இதனை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

கடமையும் அழைக்கிறது. விரைந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். மிக விரைவாக இதன் தொடர்ச்சியை பதிவிடுகிறேன்.

வந்த நண்பர்களுக்கு நன்றி.

இன்று தந்தையர் தினமும் கூட.
 
தந்தையர்கள் எல்லோருக்கும்; மற்றும் தந்தைமையை உள்ளத்தில் கொண்டிருப்போருக்கும் எனது ஆத்மார்த்தமான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

’எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்கா பண்புடை மக்கட் பெறின்’ என்கிறார் வள்ளுவர். - பிறருடய பழிக்கு ஆளாகாத நற்குனங்களை உடைய மக்களைப் பெற்றால் அவர்கள் செய்யும் நற் செயல்களால் ஏழுவகையான பிறப்புகள் நம்மைத் தொடர்ந்தாலும் தீய துன்பங்கள் எங்களை ஒருநாளும் அணுகாதாம்.

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்

உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்

நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்

நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் 

சத்தியம் உங்களைக் காத்துநிற்கும்