இன்று தேர்தல்.
இப்பொழுது நேரம் 3.5.1025 சனிக்கிழமை இரவு 10.45.
தொழில்கட்சி மீண்டும் பெரும்பாண்மை வாக்குகளோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. சற்று முன்னர் நடைபெற்ற தேர்தல் வெற்றிப் பேச்சையும் எதிர்கட்சியான லிபரல் கட்சித்தலைவர் பீற்ரர் டட்டன் தன் தொகுதி இருக்கையையும் இழந்து போய் தன் ஆதரவாளர்களுக்கு முன் பேசிய பேச்சையும் தேசிய தொலைக்காட்சி சற்ரு முன் ஒளிபரப்புச் செய்திருந்தது.
என்ன ஒரு கண்ணியமான மரியாதையான நாகரிகமான பேச்சாக அது இருந்தது!
படு தோல்வியைச் சந்தித்திருந்த பீற்றரை நினைவுகூர்ந்து அவரது 25 வருடங்களுக்கு மேலான உழைப்பை வியந்து பாராட்டிய அல்போவும் பெரும்பானை வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வந்த அல்போவுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தன் பாராட்டுக்களைத் தனிப்பட்ட முரையில் தெரிவித்ததோடு தன் ஆதரவாலர்கலுக்கு முன்னாலும் தெரிவித்த அரசியல் பண்பாடும் வியந்து போற்றக் கூடிய வகையில் அமைந்திருந்தது.
இன்று மதியத்துக்குப் பின்னரான ஓய்வுப் பொழுதொன்றில் வாக்களிக்க அருகில் இருந்த நிலையத்துக்குப் போயிருந்த போது எனக்கு முன்னால் ஒருவரும் என்னோடு ஒருவரும் தான் நின்றிருந்தோம். தேர்தல் என்பதற்கான அத்தாட்சியாக இரு கட்சியின் ஆதரவாளர்கள் 3, 4 பேர் வாசலில் விளம்பரப் பத்திரிகைகளை வைத்துக் கொண்டு நின்றதைத் தவிர வேறெந்த ஆரவாரங்களும் இருக்கவில்லை.
அழகிய ஜனநாயக நாகரிகம் மிக்க நாடு!
அது நிற்க,
இன்று இங்கு மீண்டும் வந்ததற்குக் காரணம் வாக்களித்துவிட்டுத் திரும்பி நடந்து வரும் போது கண்ட இலையுதிர்காலத்துக் காட்சிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தான்.
இங்கு சிட்னியில் இப்போது இலையுதிர்காலம். ஏப்பிரல், மே, ஜூன் மாதங்கள் இலையுதிர்காலத்துக்குரியவை. பச்சையாக இருந்த இலைகள் எல்லாம் நிறம் மாறி மஞ்சளில் இருந்து சிவப்பு மற்றும் பிறவுனுக்கு இடையில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் காட்சியளிக்கும். பச்சை இலைகளும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. குளிரோடும் மழையோடும் இந்த மூன்று மாதங்களும் மெல்ல மெல்ல குளிர்காலத்துக்கு தன்னை உருமாற்ற ஆரம்பிக்கும்.
நேரம் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப் பட்டு எமக்கு ஒருமணி நேரம் அதிகப்படியாகக் கிடைக்கும். காலை ஆறு மணிக்கும் இருள் விலகாதிருக்கும். மாலை விரைவில் இருண்டும் விடும். மாலை ஆறு மணிக்கு முன்னரே இருள் முழுவதுமாகச் சூழ்ந்து விடும்.
அதுவே மீண்டும் கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் முன் நகர்த்தப் பட்டு பகல் நேரத்தை அதிகரித்துத் தரச் செய்யும்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் பார்த்த ஆச்சரியங்களுக்குள் எனக்கு இன்றும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு விடயம் இந்த நிறம் மாறும் பச்சை இலைகள் தான். சிறு வயதில் இலை பச்சை நிறம் என்று படித்ததை பொய்யாக்கும் வகையில் எத்தனை எத்தனை வண்ணங்கள்...சரி, நீட்டி முழங்கி என் பிரஸ்தாபங்களை இங்கே சொல்வதை விட வழியில் பொறுக்கிய சில இலைகளை இங்கே கடை பரப்புகிறேன். பிறகொரு நாளில் படம்பிடித்தால் அதனை வேறொரு பதிவாக பின்னர் தருகிறேன்.
நிலத்தில் கிடந்த இலைகள் இவை, பொறுக்கி வந்து செய்தவை கீழே வருகின்றன. இந்த நிறங்களைக் கமறா சரியாகப் பதிவு செய்ததா என்று தெரியவில்லை. நேரே பார்க்கும் போது இலையில் நிறமும் அதன் பளபளப்பும் மினுக்கமும் சத்து நிறைந்து கிடக்கும் அதன் மலர்வான செழுமையும் என்னை சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாத்துவிட முடியாதென்ற போதும் முடிந்த சிலவற்றையேனும் என் ஆசைக்காகப் பாதுகாக்க எடுத்த முயற்கிகள் கீழே வருவன.