Thursday, March 19, 2009

சிந்திய முத்துகள்

எடுக்கவா? கோர்க்கவா?

தமிழர் வரலாற்று மணற் பரப்பில் நவரத்தினங்களாய் புதையுண்டு கிடக்கும் இலக்கியச் செல்வங்கள் எத்தனையோ! சில அடையாளம் காணப் பட்டன; சில பட்டை தீட்டப் பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன;சில கேட்பாரில்லாமல் சிந்துண்டு போயுள்ளன.

சில தனிப்பட்ட புலவர்கள் பாடி வைத்த பாடல்கள் அத்தகைய தன்மையின.அவர்களில் பலர் ஊரின் நடுவிலே உலாவித் திரிகின்ற பயன் தரும் கனி மரங்களைப் போல் இருந்திருக்கின்றனர்.வறுமையும் வசதியின்மையும் அவர்களை மண்ணுக்குள் தள்ளி விட்டன.அவர்கள் மிளிராது போயினர் எனினும், தனிப் பாடல்களாய் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் ஆங்காங்கே தோற்றம் காட்டுகின்றன.அவ்ர்களிடம் திருவள்ளுவர், கவிச் சக்கரவத்திகள், சான்றோர்கள் ஆகியோரிடம் இருக்கின்ற திறமைகள் போல சில வேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவின் எல்லைகளுக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும், இயற்கை அழகுகளையும் வசீகரிக்கத்தக்க வகையில் சொல்லும் சமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.அவ்வாறு மண்ணுக்குள் புதைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் சில தனிப் பாடல்களை தருவது இந்தப் பதிவின் நோக்கம்.

யார் பாடியது என்று தெரியவில்லை ஒரு பாடல் இருக்கிறது.இதோ, சூரியன் உதிக்கிறது;சூரியகாந்திப் பூ முகம் மலர்கின்றது;மஞ்சள் மகரந்தங்களால் முகம் மினுக்கி, சூரியன் செல்லும் திசை நோக்கித் தவம் கிடக்கிறது அம் மலர்;இந்தக் 'கள்ளத்'தவத்தை சூரியனின் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டால் சிரிக்குமோ? அழுமோ ஆரறிவார் என்று அழகுறக் கற்பனை கொள்கிறது கவிஞ மனம். பாடல் இது தான்,

"மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடி பூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருகுக்குமோ ஆரறிவார்."

என்ன காரணமோ தெரியவில்லை. அந்தக்காலத்தில் வறுமையும் புலமையும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்திருக்கின்றன.இப்போது கூட அது விதிவிலக்கல்ல. இன்றய எழுத்தாளர்களின் நிலை பற்றி திருப்பூர்.கிருஷ்னன் அவர்கள் கார்த்திகை '08 யுகமாயினியில் மிகவும் விசாரப் பட்டு எழுதியிருந்தார்.பொன்னாடைக்குப் பதிலாக ஒரு வேட்டியையாவது போர்த்தக்கூடாதா?உடுத்துக் கொள்ளவாவது பயன்படுமே! என்று கேட்டிருந்தது தான் ஞாபகம் வருகிறது.

படிக்காசுத் தம்பிரான் என்ற புலவரும் அதற்குத் தப்பவில்லை.அந்தக் காலத்தில் புலவர்கள் வள்ளல்களைப் பாடிப் பரிசுப் பொருட்களைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இப் புலவர் சீதக்காதி என்ற வள்ளலை புகழ்ந்து பாடிய பாடல் இது.


"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி; கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்; தொல் பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவண்ணர் நெஞ்சம்; அனு தினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி திருக்கரமே!"

இப் புலவர் வாழ்ந்த காலம் கி.பி.1686-1723 என்று அறியப் படுகிறது.
இப் பாடலைப் பார்க்கும் போது கர்ணன் திரைப் படத்தில் கர்ணனின் ஈகையைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று உங்களுக்கு ஞாபகம் வரலாம். அது'கொடுத்துச் சிவந்தன கர்ன மாமன்னர் திருக்கரமே'என்று முடியும்.சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய பாடல் அது.

புலவர்கள் தம் வறுமையை வேடிக்கையாகவும், நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் கூடப் பாடி இருக்கிறார்கள்.அவர்கள் மிகக் கோபக்காரர்களும் கூட.இரட்டையர்கள் இதில் வெகு சமர்த்தர்.இவர்களில் ஒருவர் குருடர்; மற்றவர் முடவர்; இருவரும் புலவர்கள்.குருடரின் தோளில் முடவர் ஏறிக் கொள்வார்.முடவர் வழிகாட்ட, குருடர் அவ்வழி நடப்பார்.முடவர் காட்டும் வழியோ குருடருக்கு குன்றும், குழியுமாக இருக்கும்.இதனால் சலிப்புற்றுப் பாடிய பாடல் இது.இவர்களில் முதல் பாதியை ஒருவர் பாட, மற்றவர் மறு பாதியை முடிப்பார்.முதல் பாதியைக் குருடர் பாடுகிறார்,

"குன்றுங் குழியும் குறுகி வழி நடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ?"

என்று அவர் அடி எடுத்துக் கொடுக்கிறார்.அவர் தோளில் குஷியாகக் குந்தியிருக்கும் முடவர் அதற்கு பதில் கூறுகிறார், இப்படி,

"- ஒன்றுங்
கொடாதானை கோவென்றும் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்."


இங்கு கோ என்பது பசு; காம தேனு.கா என்பது கற்பக தரு.இரண்டும் வேண்டுவனவற்றை இல்லையெணாது வழங்குவன.( உணவினை வழங்கும் அட்ஷய பாத்திரம் போல :) )

காளமேகம் என்றொருவர் இருக்கிறார். கோபத்திற்கும், நையாண்டிக்கும், புலமைக்கும் மிகப் பேர் போனவர்.இவரும் வறியவர் தான்.


'இம்' என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
'அம்' ந்ன்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே ஆயின்
பெரும் காள மேகம் பிள்ளாய்!


என்று தன்னைப் பற்றிப் பாடியவர்.இம் என்பதற்கு முன் 700.800 பாட்டுகளும்,அம் என்று சொல்லிய மட்டில் 1000 பாட்டுகளும் பாடி முடிந்து விடுவேன்.சும்மா இருப்பேன்; எழும்பினேன் என்றால் மழை போல் பாட்டுகள் பொழிவேன். பிள்ளை, நான் கவி காளமேகம் கண்டியளோ என்பது அப்பாட்டின் பொருள். காள மேகம் என்பது மழை பொழியத் தயாராக இருக்கும் மேகம்.

இந்தக் காளமேகத்தார் பெரும் கோபக்காரர்.வறுமையோடும் வாழ்ந்தவர்.சோழ தேசத்துச் சத்திரம் ஒன்றுக்குச் சாப்பிடப் போகிறார்.புலவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் முன் குடும்பி வைத்த பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.பரிசாரகர் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்க, பிராமணரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது முன்குடுமி சாப்பாட்டுக்குள் விழுந்து விட்டது.அவர் சாப்பிடுவதை நிறுத்தாமலே குடும்பியை எடுத்து உதறினார். அது முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்த காள மேகத்தின் மேல் விழுந்துவிட்டது. வந்ததே கோபம்.கோபத்தோடு பிறந்தது பாடல்,


"சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனை ஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!"

எப்படி இருக்கிறது கோபமும், பாடலும்?

அவரது சாப்பாடு, சுகபோகம் எல்லாம் சத்திரத்தில் தான்.அதிலும் அவருக்கு சாப்பாடு நேரத்திற்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் இரவுச் சத்திரத்தில் சாப்பாடு ஆக்க சற்றுத் தாமதமாயிற்று.அது தாமதமானால் என்ன? காள மேகத்திற்குப் பாடல் பொழிய ஆரம்பித்து விட்டது. இப்படி.


"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி
உலையிலிட ஊருறங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்."

:).

எங்கோ போய் விட்டேன்.ஏதோ எழுதப் போய் எதிலேயோ வந்து முடிந்திருக்கிறது இந்தப் பதிவு.இலக்கியத்துக்குள் நடக்கப் புகுந்தால் அது இப்படித்தான்.நம்மை மறந்து தொலைந்து போய் விடலாம்.எம்மை அறியாமல் அது எங்களை எங்கோ கொண்டு சென்று சேர்த்து விடும்.அங்கு மலிந்து கிடக்கும் செல்வங்கள் அப்படி! வளங்கள் அத்தகையன.

விடயத்திற்கு வருவோம்.இரட்டையரும், காளமேகமும் ஓரளவு அடையாளம் காணப் பட்டவர்கள் தான்.தனிப்பட்ட புலவர்களின் வித்துவச்சிறப்பும் சொல்சிலம்பமும் இன்னும் நயக்கத்தக்கன.அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இப்போது நீங்கள் போவதற்கு முன் இன்னொரு பாட்டு.

மதுர கவி என்று ஒரு புலவர்.அவர் ஒரு வள்ளலைக் கண்டு பாடிப் பரிசு பெற்று விடை பெற ஆயத்தப்பட்ட போது அவ் வள்ளல்,'ஏன் இப்படிப் பறக்கிறாய்' என்று வினவ, அவர் இப்படிப் பாடுகிறார்.

கொக்குப் பறக்கும்,புறா பறக்கும்,
குருவி பறக்கும், குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்; நானேன்
பறப்பேன்? நராதிபனே!
திக்கு விசயம் செலுத்தியுயர் செங்கோல்
நடாத்தும் அரங்கா! நின்
பக்கமிருக்க, ஒருநாளும் பறவேன்!
பறவேன்! பறவேன்!

என்கிறார். நராதிபன் - நரர்கள் - மனிதர்கள் - நராதிபன் - மனிதர்களுக்குத் தலைவன். என்பது பொருள்.

2 comments:

  1. அருமையான பதிவு..

    ReplyDelete
  2. உங்களுடய வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி வண்ணாத்திப் பூச்சியார்.மீண்டும் வாருங்கள்.

    யாரும் பார்ப்பதே இல்லையோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.உங்கள் வரவும் பின்னூட்டமும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete