Tuesday, November 13, 2012

கூசா

கூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.

முற்றிய சுரைக்காயின்  ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.



இக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள,தமிழ், ஸ்லாமிய  மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும்.

மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும்.

இம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர்.அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள்  என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.
















சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.

மின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் இதன் பாவனை மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

காலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

தற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.

இந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.

அவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது  உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.

காண்க: பூட்டுச் செம்பு.

”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில்  தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.

படங்கள்: யசோதா: 30.10.2012.
எடுத்த இடம்: சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை seven hills, N.S.W. Australia.


பின்னிணைப்பு:

நரியும் கொக்கும் விருந்துண்ட நாட்டுப் புறக் கதை:

ஒரு ஊரில் நரியும் கொக்கும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு நாள் நரியினுடய கழுத்தினுள் ஒரு முள்ளொன்று சிக்கி விட்டதால் அது பெருத்த சிரமத்துக்குள்ளானது. அதனால் அது தன் நண்பனான கொக்கினிடம் சென்று தன் தொண்டையில் சிக்கியிருக்கின்ற முள்ளை எடுத்து விடுமாறு கோரியது.கொக்கும் தன் நீண்ட அலகினால் நரியினுடய தொண்டைக்குள் இருக்கின்ற முள்ளை அகற்றி விட்டது.

அதனால் பெரிதும் மகிழ்ந்த நரி தன் நன்றிக் கடனையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதற்காகக் கொக்கினைப் பார்த்து ஒரு நாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பு விடுத்தது.

இதனால் பெரிதும் மகிழ்ந்த கொக்கும் அக் குறிப்பிட்ட நாளில் விருந்துக்குச் சென்றது. அங்கு விருந்துக்காகச் சூப் தயாரிக்கப் பட்டிருந்தது. சூப்பின் வாசனை நன்றாக இருந்ததால் சூப்பின் சூடு ஆறுவதற்கு முன்னர் இருவரும் விருந்துண்னத் தயாரானார்கள்.

நரி தன் உண்னும் இயல்புக்கேற்ற விதமாக சூப்பினை ஒரு தட்டையான அகன்ற கிண்ணத்தில் பரிமாறியது. அவ்வாறு பரிமாறப்பட்டிருந்ததைக் கண்ட கொக்கு பெரும் ஏமாற்றமடைந்தது. அதன் கூரிய நீண்ட அலகினால் அதற்கு தட்டையான பாத்திரத்தில் இருந்த சூப்பினைக் குடிக்க முடியவில்லை. ஆனால் நரியோ மிக இலகுவாக நாக்கினால் அதனை நக்கி நக்கிக் குடித்தது.

இதனால் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்த கொக்கு அதனை வெளிக்காட்டாமல் தன்னுடய வீட்டுக்கும் நரியார் வந்து தான் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து விட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குச் சென்றது.

விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாள் வர, நரியும் மிக்க மகிழ்ச்சியோடு கொக்கின் வீட்டுக்குச் சென்றது. கொக்கும் நல்ல சுவையான விருந்தைத் தயார் செய்து இரண்டு கூசாவுக்குள் சூப்பை வைத்துப் பரிமாறியது. கூரியதும் நீண்டதுமான அலகினைக் கொண்ட கொக்கு அதனைச் சுலபமாகக் குடிக்க நக்கிக் குடிக்கும் இயல்பினைக் கொண்டிருந்த நரியால் அதனைக் குடிக்க முடியாது போனது. அதனால் நரி மிக்க ஏமாற்றமடைந்தது.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் “அவரவர் தன்மைகளை அறிந்து அவரவர் தன்மைக்கேற்ப அவர்களை உபசரிக்க வேண்டும்.”

தாகத்துக்குத் தவித்த காகம் ஒன்று கூஜாவுக்குள் கற்களைப் போட்டு தண்ணீர் உயரத்துக்கு வர, தண்ணீரை அருந்திப் பறந்த புத்திசாலிக் காகம் பற்றிய நாட்டுப் புறக் கதையில் வரும் பாத்திரமும் கூஜா எனவே அழைக்கப்பட்டமை மேலும் நினைவுகூரத்தக்கது.

இவ்விரு கதைகளும் நாட்டுப்புற மக்களிடையேயும் கூஜா என்ற சொல்வழக்கும் பொருள் பயன்பாடும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.






4 comments:

  1. சிறப்பான கருத்துக்களுடன் முடித்துள்ளீர்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அட்சயமாய் கூஜா பற்றிய தகவல்களை அள்ளி வழங்கியமைக்குப் பாராட்டுக்கள்..


    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    ReplyDelete
  3. மகிழ்ச்சி தோழர்களே! உங்கள் ஊரிலும் இவ்வகையான பாத்திரங்கள் பாவனையில் இருந்திருக்கிறதா? இருந்தால் அதனை எப்படி அழப்பீர்கள் என அறிய ஆவல்.

    எல்லோருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    தீபாவளிப் பண்டிகை குறிக்கும் அமைதியும் தர்மமும் அகிம்சையும் எங்கும் நிலைபெறுவதாக!

    ReplyDelete