Thursday, September 18, 2014

இலக்கிய சந்திப்பு - 21 -

அன்புக்குரிய இலக்கிய நெஞ்சங்களே!

உங்கள் இலக்கிய இதயங்கள் நலம் தானா?

இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.



வசந்த காலம் ஆரம்பித்து விட்டது.

இருள் விலகி சூரியன் இதமாய் மேல் வர மெல்லிய தென்றலோடு பூக்ககளின் வாசம் பூலோகமெங்கும்!இலைகளும் பூ மொட்டுக்களும் துளிர்க்கின்றன.கிளிகளும் பறவை இனங்களும் ஆங்காங்கே இணைகளோடு தென்படுகின்றன!! தோற்ற அளவில் மனிதர்களும் கம்பளி ஆடைகள் தவிர்த்து புன்னகை இழையோட பாரமற்று நடக்கக் காண்கிறோம்.

மகிழ்ச்சியாக இருக்கிறது!

குளிர் நீங்கி விட்டதால் நாமும் இனி இயற்கையோடு இணைந்து கொள்ள காலம் கைகூடி விட்டது. பழைய படி பூங்கா கைவிரித்து நம்மை அணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

நிலமையினைக் கண்டு வர கடந்த வார நடுப்பகுதி ஒன்றில் பூங்காவுக்குப் போனேன்.வசந்த கால மலர்களோடு நம்மை வரவேற்ற படி காத்திருக்கிறது பூங்கா.

ஆம். பூக்களால் நிறைந்து போயுள்ளது பூங்கா! அது மட்டுமல்ல, ஓவியக் கண்காட்சி மற்றும் Cumberland மனநோயாளர் வைத்தியசாலையைச் சேர்ந்தோரது  அரும்பொருள் காட்சியகம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருட்களின் கடைகளும் உணவு விற்பனைகளும் அமோகமாக நடைபெறுகின்றன.

இம்மாத இறுதி வர மட்டுமே இத்தகைய அரிய காட்சிகள் அங்கிருக்கும்.

புல் தரையில் பூக்களின் ஊடே நடப்பதுவும்; ஓவியக்கண்காட்சியின் காட்சி விரிவில் இலயிப்பதுவும்; கூடவே உள்ளத்துக்கும் உடலுக்குமாக உறவின் விசித்திரங்களை தரிசிப்பதிலும்; கூடவே,  நீரோடை அருகே உட்கார்ந்து தேநீரோடு தாம் கண்டு கொண்ட கருப்பொருள் பற்றி கலந்துரையாடி அவற்றினூடே இலக்கியக் கருக்களை இனம் கண்டு கொள்வதும் இம்மாத சந்திப்பின் நோக்கமாகும்.

பூவுக்குள் தேனை வைத்து, தேனின் இருப்பிடத்தை தேனீக்களுக்கும் பறவைகளுக்கும் மாத்திரம் சொல்லி வைத்த இயற்கையிடமும் ஓவியக்காட்சிகளுக்குள்ளும் 19ம் நூற்றாணடின் உள்ளத்து நோயின் வாழ்க்கைச் சுவடுகளுக்குள்ளும் ஒழிந்து போயிருக்கின்றன ஓராயிரம் இலக்கியங்களுக்கும் கலைகளுக்குமான கருக்கள்!

கண்டடைய வாருங்கள்!

இம் மாத இறுதி இம்முறை இன்னும் சிறப்பாக நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருப்பதால் எல்லோருமாக கூடி இருந்து அனுபவம் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் என நான் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

வருக! நாளாந்த வாழ்வின் இறுக்கங்களில் இருந்து சற்றே விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியும் புது வெளிச்சமும் பெற இந் நாள் உதவும்.

உங்கள் இன்றய நாளும் இனி வரும் நாட்களும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

2 comments:

  1. இலக்கியச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி குமார்.
    நன்றியும். :)

    ReplyDelete