Sunday, September 11, 2016

பார்வைகள்....






பார்வைகள்....

ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் பார்க்கிற விதங்களில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கண்களில் தான் எத்தனை விதமான பார்வைகள்....

அண்மையில் ஒரு பொழுது போக்கு வணிக சஞ்சிகை ஒன்றில் (16.5.15 குங்குமம்) ஆல்தோட்ட பூபதியின் குட்டிச் சுவர் சிந்தனை இப்படிப் போயிருந்தது. ‘ கருணை அருளும் கடவுள்தான் என்றாலும் கையில் வேல் வைத்திருப்பது போல,வீட்டின் பாதுகாப்புக்குத் தான் கதவு என்றாலும் அதில் பூட்டுத் தொங்குவது போல, இடுப்பில் இறுக்கமாய் ஜீன்ஸ் இருந்தும் அதில் பெல்ட் இருப்பது போல, பள்ளிக் கூடப் பேருந்துகளில் கம்பி இருந்தும் அதற்கு வெளியே கம்பி வலை இருப்பதைப் போல, காவல் நிலையம் என்றாலும் கண்காணிப்புக் கமரா இருப்பதைப் போல, பிணக்கிடங்குக்கு முன் காவல் காக்கும் வாட்ச்மன் போல, சாவி போட்டுத் தான் ஸ்ராட் செய்ய முடியும் என்றாலும் சென்றல் லொக்கிங் இருப்பதைப் போல, கடவுள் படங்களுக்குக் கண்ணாடிச் சட்டம் இருப்பதைப் போல, புத்தி சாலி என்றாலும் படித்துப் பெற்ற பட்டம் போல, மருத்துவ மனைக்கு முன்னால் இருக்கும் பிள்ளையார் சிலை போல,அன்பு மட்டுமே மொழி என்றாலும் அவ்வப்போது வரும் அம்மாவின் அதட்டல் போல......

எப்பிடி எல்லாம் பாக்கிறாங்கப்பா.....

கடந்த வார நடுப்பகுதியில் என் வேலைத்தலத்து கம்போடிய நாட்டுச் சினேகிதி ஒருத்தி மிக ஆர்வமாக ஓடி வந்து தன் முகப்புத்தகத்தில் தான் ஒரு இந்தியரை இணைத்திருப்பதாகவும் அவர் போடும் இந்து சமயச் சுவாமிப்படங்கள் மிக அருமையாக இருக்கிறதென்றும் இந்தச் சுவாமிகளை எல்லாம் உனக்குத் தெரியுமா? இப் பெண் சுவாமிகள் எத்தனை அழகாய் இருக்கின்றன பார்த்தாயா என மிக ஆர்வமாகக் காட்டினாள்.

மிக அழகாய் தான் இருந்தன.

கூடவே அவள் காட்டிக் கொண்டு போன போது சிவலிங்க படங்களும் வந்தன. தம் அங்கோர்வாட் கோயிலில் இத்தகைய சிற்பங்கள்  இருப்பதாகவும் அவற்றை தாம் லிங்கா, யோனி என அழைப்பதாகவும் சொன்ன போது நாமும் அவ்வாறு அழைப்பதுண்டு என்றேன்.

உரையாடல் பின்னர் சொற்கள் பற்றியும் அது கூறும் கருத்துக்கள் பற்றியதுமாகத் திரும்பியது. அச் சிவலிங்க ‘புருஷ பிராகிருதி’ தத்துவம் பற்றி சொன்ன போது மிக ஆர்வமாகக் கேட்டு அதையே தான்  அங்கோர்வாட் கோயிலுக்குப் போன போது கைட்டும் சொன்னதாக மிக ஆச்சரியப் பட்டாள்.

பின்னர் அவ் உரையாடல் ஒரு புன்னகையோடு முடிவுக்கு வந்தது.

மறு நாள் என்னைக் கண்ட போது  கண்களில் ஆர்வம் கொப்பளிக்க ஓடோடி வந்து, இந்து சமயத்தின் சிவலிங்க வணக்க முறையையும் படத்தையும் அதன் தத்துவார்த்த விளக்கத்தையும் தன் அவுஸ்திரேலியக் காதலனுக்கு விளக்கிக் கூறியதாகவும் அவர் மிக ஆச்சரியப் பட்டுப் போனதாகவும்கூறி, ‘இது நல்ல மொடேர்னான சமயமாய் இருக்கும் போலிருக்கு’ என்று சொன்னதாகவும் சொல்லி போனாள். சிற்றின்பமே வாழ்வின் உன்னத இலட்சியமாய் இருப்போருக்கு அது மேலான சமயமாய் இருப்பதில் வியப்பேது?

பார்க்கிற பார்வைகள்......

இந்தச் சம்பாசனையை என் இலக்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இப்படிச் சொன்னார். அவர் தான் குடும்பத்தோடு நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த இஸ்லாமியக் குடும்பத்தவர் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் இருக்கும் தலத்தின் முற்றலில் அதன் காரண விபரணங்களை அக்கறையோடு கேட்டு விட்டு ‘இவரும் நம்மளப் போல நம்ம சமயம் சொல்லுறதத் தான் செய்யிறாரு’ என்றாராம்.

பார்க்கிற பார்வைகள்......

கூடவே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயங்கள் சம்பந்தமான உரையாடலின் போது என்னை ‘உலகத்தின் மிகப் பழைமையான சமயம் (இந்து சமயம்) எனதென்றும்; இவர்கள் குரங்கு, (ஆஞ்சநேயர்) மாடு, யானை இவைகளை எல்லாம் இன்றும் வழிபடுகிறார்கள் என்று அறிமுகப் படுத்தியமையும் நினைவுக்கு வந்தது.

பார்க்கிற பார்வைகள்.....

4 comments:

  1. அருமை....
    ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானதுதான் என்பதை படம் அழகாய் சொல்ல, பதிவும் அருமை...

    ReplyDelete
  2. இந்தப் படம் எனக்கு வட்ஸப் பில வந்தது குமார்.

    உண்மையாவும் நல்லாவும் இருக்கில்ல?

    ReplyDelete
  3. படம் நீங்கள் எழுதியதை அப்படியே பிரதிபலிக்கின்றது

    ReplyDelete