Friday, October 21, 2016

எட்டுக்குப் பின்னே.....

இலக்கம் எட்டு பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொடுத்திருக்கிறது. எண்ணியல் சாஸ்திரப் பிரியர்களுக்கு அது ஓர் அதிஷ்டமற்ற எண்.

இங்கு வாழும் சீனர்களுக்கோ அது ஓர் பூரணத்தின்; சுபீட்சத்தின்; அதிஷ்டத்தின் அறிகுறி. அவர்கள் தேடித்தேடி அந்த இலக்கம் வரத்தக்கதான வீடுகளை வாங்குகிறார்கள். அவர்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் ஆடம்பர வாகனங்களுக்கு அதன் இலக்கத் தகட்டுக்கும் எட்டு என்ற இலக்கம் வரத்தக்கதான இலகக்த் தகட்டை மேலதிக விலை கொடுத்து வாங்கிப் பொருத்துகிறார்கள்.

இப்படியாக நம்பிக்கைகள்.........

ஆனால் நான் இங்கு சொல்ல வருவது எட்டு என்ற இலக்கம் அல்ல. அதற்கு பின்னால் வரும் ஒன்பது என்ற இலக்கம் பற்றியது.

தமிழில் ஒன்பது என்று ஓர் இலக்கம் இல்லையாம் என்ற தகவல் எனக்குப் புதியதாய் இருந்தது. அண்மையில் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்றொரு புத்தகம் பார்த்தேன். அதிலிருக்கும் நொறுக்குத் தீனி போலான தகவல்கள் மிக சுவாரிசமானவை. அதனை என். சொக்கன் என்பார் தந்திருக்கிறார். அதனை பார்த்த பின்னே அதைப் பற்றி என் இலக்கிய நண்பர்கள் பலருக்கும் சொல்லித் திரிகிறேன். அவருடய பல ஆக்கங்கள் இணையவெளிகளிலும் பரவலாகப் பார்க்கக் கிடைக்கின்றன. அதிலொன்றில் இருந்து தான் இந்தத் தகவலை பெற்றுக் கொண்டேன்.

நான் இனி இடையில் நுழையவில்லை.

( நன்றி http://www.tamiloviam.com )
(ஆக்கம்: கண்ணில் நிறைந்த பாவை)

”................
திருக்குறள் பதின்கவனகர் திரு. ராமையா அவர்களின் கேள்வி - பதில் தொகுப்பான, 'கேட்டதும் கிடைத்ததும்' நூல் வாசித்தேன். (இளமதி பதிப்பகம் - 256 பக்கங்கள் - விலை ரூ 50/-)

அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

இதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.

அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

.... ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...

ஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,

ஏழு
எட்டு
தொண்டு
பத்து

என்றுதான் வரவேண்டும்.

ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.

அதாவது,

எழுபது
எண்பது
தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

இதேபோல்,

எழுநூறு,
எண்ணூறு,
தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

இதேபோல்,

ஏழாயிரம்
எட்டாயிரம்
தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.

இப்படியே, ஒவ்வொரு சொல்லாக இடம் பெயர்ந்து, பெரிய குழப்பத்தையே  உண்டாக்கிவிட்டது என்று நிறுவுகிறார் பதின்கவனகர் திரு. ராமையா”.


1 comment:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete