Saturday, November 6, 2021

ஆதித் திராவிடத் தமிழர்களின் ஜீவ காருண்யம்

 


காருண்யம், இரக்கம், அன்பு,அக்கறை  என்பது எல்லாம் உயர்வான ஒரு மனநிலை. மேலான மனங்களில் மேலோங்கி நிற்பன.

அது என்ன தமிழரிட்ட மட்டும் அது தனியா இருக்கிற ஒரு பண்பா எண்டு கேட்டா நிச்சயமா இல்லை. அது எல்லா இன, மொழி, பண்பாடு கொண்ட மக்களிட்டையும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  இருக்கு. அது ஒரு நல்ல மனிசரின்ர குணம்.

இண்டைக்கு நான் இங்க குறிப்பா சொல்ல விரும்புற விஷயம் என்னெண்டா எங்கட தமிழ் மரபில; அதிலயும் குறிப்பா வேற எந்த ஒரு சிந்தனைக் கலப்பு, பண்பாட்டு செல்வாக்குகளும் தமிழுக்குள்ள வராமல் இருந்த ஒரு காலத்திலயே இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயம் தமிழன்ர மனநிலையில நிலைச்சு இருந்திருக்கு எண்டதத் தான்.

அது தெளிவா தெரியிற ஒரு தனித்தமிழ் வேர். பின்னாளில அது பிறகு அறமா நிலைக்கிறதுக்கு இது தான் அடிப்படையா அமைஞ்சிருக்கு. இதுக்கு தமிழ் இலக்கியத்தின்ர பாதை யெல்லாம் தொடர்ச்சியான தெளிவான சான்றிருக்கு. அத எல்லாம் இணைச்சா  ஒரு பெரிய தமிழ் Free Way யே போட்டிடலாம். அவ்வளவு கிளியர் அது!

சரி அது இருக்கட்டும், நாங்கள்  ஆதித்தமிழ் திராவிட வாழ்க்கை முறையின்ர தொடக்கத்துக்கு வருவம்.  தமிழ் மூதையையரின்ர தனித்தமிழ் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் வாழ்க்கை. காதல், சண்டை இந்த ரெண்டு பிறக்கெட்டுக்குள்ளயும் எங்கள அடைச்சுப் போடலாம். இதுக்குள்ள தான் மானம் ரோசம், அறிவு புலமை, அன்பு பண்பு, ரசிப்பு ருசிப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாம் அடங்கி இருந்திருக்கு. 

ஏன் சண்டையள் வந்திருக்கு எண்டு பாத்தா அது நாட்டுக்கு நாடு நிலம் பிடிக்கிறதா இல்லாட்டி ஒருத்தரின்ர மந்தையளை அடுத்த நாட்டுக்காரன் வந்து கடத்திக் கொண்டு போக இந்த நாட்டுக்காரர் அதை மீட்க  சண்டைக்கு போன விதமா தான் இருந்திருக்கு. போரில போய் செத்த வீரருக்கு அவர தாட்ட இடத்தில ஒரு கல்லை வச்சுப் போட்டு அந்த நடுக்கல்ல கடவுளா வழிபட்ட வாழ்க்கை தான் இவையின்ர கடவுள் கொள்கை. ஒரு விதமான செய்நன்றிக்கடன். அதத்தாண்டி அவை வேற ஒண்டையும் யோசிக்கேல்ல. 

கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த வாழ்க்கையை எல்லாரும் ஒரேமாதிரி; ஒரு பாகுபாடும் இல்லாமல்; நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கினம். தன்னைச் சுத்தி இருக்கிற இயற்கையை  அவை அவதானிச்சு நேசிச்சு வாழ்ந்திருக்கினம்.

உதாரணமா ஒரு சின்ன சம்பவத்தை உங்களோட பகிர்ந்து கொள்ளலாம். நற்றிணை எண்ட இலக்கியத்தில வாற உலோச்சனார் எண்ட புலவர் பாடின பாட்டு இது. ரெண்டு இளஞ் சினேகிதியள் கதைக்கினம். வேறை என்ன? காதல் தான். வாறன் எண்டு சொன்ன காதலனைக் காணயில்லை. இது தான் ரொபிக். ஒரு சினேகிதி மற்றச் சினேகிதியயிட்ட இதச் சொல்லி கவலைப்படுரா. மற்ற சினேகிதி இவவுக்கு கவுன்ஸிலிங் செய்யிறா; இப்பிடி. இங்க பாரு, ஆருஞ் சூடாமல் சும்மா வச்சிருக்கிற பூமாலை மாதிரி வாடுறியே! முதல்ல இப்பிடி கவலைபடுறத நிப்பாட்டு எண்டு முதல்ல கவலையை நிப்பாட்டச் சொல்லிப் போட்டு ஏன் அவன் வரத் தாமதமாகுது எண்டதுக்கு காரணம் சொல்லுறா.

 ஏனெண்டா அவன் கடற்கரை வழியா இரவு வர வேணும். இரவில நண்டுகள் எல்லாம் கடற்கரையில ஓடித்திரியும். இப்பிடி நண்டுகள் ஓடித்திரியிற பாதைவழியா தேரை ஓட்டி வரவேணும். அது லேசான காரியமில்லை. இந்தகாலத்தில நாங்கள் இரவு ரோட்டுகளில கங்காருகள் குவாலாக்கள் ரோட்டுகள குறொஸ் பண்ணேக்கை அடிபடாமல் கவனமா கார் ஓட்டி வாற மாதிரி - அந்தக்காலத்தில  நண்டுகளை மிதிச்சிடாமல் தேரை ஓட்டி வரவேண்டிய தேவை இருந்திருக்கு போல. அப்பிடி அவன் கவனமா நண்டுகளை கவனிச்சு தேர் ஓட்டி வாறதால தான் தாமதமாகுதாம் எண்ணுறா. பெய்யாது வைகிய கோதை போல... எண்டு தொடங்குற அந்தப்பாட்டில அந்தச் சினேகிதி.

அட இதெல்லாம் என்ன பெரிய விஷயமா எண்டு நீங்க கேட்டா, அது பெரிய விஷயம் தான் எண்டு சொல்லுறதுக்கு தமிழிட்ட ஒரு காரணம் இருக்கு. அது என்னெண்டா கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில செம்மொழியா; தெய்வீக மொழியா; தேவ பாஷையா  வளர்ச்சி அடைஞ்சிருந்த சமஸ்கிருதத்தில - யாகம் எண்டு ஒரு சடங்கு நடந்திருக்கு.  வேதங்களும் பாரத இராமாயண இதிகாசங்களும் செல்வாக்கோட இருந்த  அந்த ஆரிய வாழ்க்கையில - அதின்ர சிந்தனைப் பண்பாட்டில - வேத மந்திரங்களை ஓதி, அக்கினி வளர்த்து அதில கடவுளுக்கான உணவுப் பொருள்களை அவிப்பாகமாக போட்டு  கடவுளோடு அவர்கள் தொடர்பு கொண்டு தமக்கு தேவையானதை பெற்ற முறை அது. அப்பாவி உயிரினங்களை அக்கினியில போட்டு ஆகுதி ஆக்கி கடவுளுக்கு சமர்ப்பிக்கிற முறையும் அதில இருந்து இருக்கு. 

இதை எல்லாம் நாங்கள் சிம்பிளா ஒரு வரியில கடந்து போயிட முடியாது. பக்கம் பக்கமா; கிட்ட கிட்டவா; அருகருகா வளர்ந்து வந்த  சிந்தனைப்பண்பாடு  எண்டாலும் வேற வேறயான வாழ்க்கை நெறிமுறையள் நம்பிக்கையள் இந்த ரெண்டு பண்பாட்டிலயும் இருந்திருக்கு. அதுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒண்டு சொல்லலாம்.

’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே’ எண்டு தன்ர காதலன் போரில செத்தாப்பிறகும் எங்கட வீட்டுல இருக்கிற  நீ எப்பிடி இப்பிடி பூத்திருக்கிறாய் எண்டு முல்லைப்பூவோட ஒரு தமிழ் காதலி கோவிச்சுக்கொண்டிருந்த தமிழ் பண்பாட்டு நிலவின அதே காலத்தில  குதிரையின்ர முதுகில அரசன் வெற்றிக் கொடியை வச்சு அது சுத்தித்திரிஞ்ச ஊரெல்லாம் தன்ர ஊர் எண்டு பிரகடனப்படுத்தி, அந்தக் குதிரைய வேற ஒரு அரசன் பிடிச்சிட்டா அவனோட போர் செய்து, அவனை வெற்றி கொண்டு, அதுக்குப் பிறகு  தன்னை சக்கரவர்த்தி எண்டு பிரகடனப்படுத்தி, அந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக யாகம் செய்து அதில அதே குதிரையை கொன்று அதின்ர கொழுப்பை ஆகூதி ஆக்கி அந்த முளாசி எரியுற அக்கினியில அந்த குதிரையின்ர  மாமிசத்தை வாட்டி விருந்து கொடுத்து ‘அஸ்வமேத யாகம்’ நடத்திக் கொண்டிருந்தது தேவ பாஷை. 

சரி, இப்ப இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயத்துக்கு வருவம். இண்டைக்கு நான் உங்களோட பகிர்ந்து கொள்ள இருக்கிற பாட்டு புறநானூறு எண்ட இலக்கியத்தில கோவூர் கிழார் எண்ட புலவர் பாடின 46வது பாட்டு.

இந்தப் பாட்டை சொல்லுறதுக்கு முதல் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னால் நல்லா இருக்கும். கிள்ளிவளவன்; மலையமான் எண்டு ரெண்டு சோழ ராசாக்கள். ரெண்டுபேருக்கும் பகை. ஒருமுறை கிள்ளிவளவன் மலையமானின்ர ரெண்டு பிள்ளைகளையும் உயிரோட பிடிச்சுக்கொண்டு வந்திட்டார். யானையால பிள்ளையளக் கொண்று பழி தீர்க்கிறது தான் கிள்ளி வளவன்ர நோக்கம். இது தான் சம்பவப் பின்னணி.

பிள்ளையள் சின்னவை. ரோற்றிலர்ஸா இருந்திருப்பினம் போல.  பெரிய ஆக்களின்ர உலகம் போல இல்லத் தானே குழந்தையளின்ர உலகம்! பிள்ளையளுக்கு இடம் ஆக்கள் எல்லாம் புதுசா இருக்கு; பழக்கமில்லாத இடம். மருண்டு போய் நிக்கினம். என்ன நடக்குது; ஏன் தாங்கள் அங்க நிக்கிறம் எண்ட ஒண்டும் அவைக்கு விளங்கேல்ல. யானை கொண்டுவரப் படுது. யானையை கண்ட உடன பிள்ளையளுக்கு கொண்டாட்டம். வாவ்... யானை... எண்டு ஆச்சரியமும் குதூகலமுமாக எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா ஒரு விதமான கூறியோசிற்ரியோட அதப் பாத்துக் கொண்டு நிக்கினம்.

கோவூர் கிழார் பாடுறார்.


நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!

இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்!

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த 

புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண் நோவு உடையார்!

கேட்டனை! ஆயின், நீ வேட்டது செய்ம்மே!

மன்னா, புறாவின்ர துன்பம் போக்கின சோழ பரம்பரையில வந்தவன் நீ. புறாவுக்கு மட்டுமா? எல்லா உயிர்களின்ர துன்பங்களையும் போக்குகிறவன் நீ. இந்தப் பிள்ளையளப் பாரு! இவையும் பெரிய குடும்பத்தில பிறந்த பிள்ளையள் தான். படிச்ச ஆக்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது எண்ணுறதுக்காக தங்கட செல்வங்களை எல்லாம் பகிர்ந்து குடுத்து வாழுற மரபில வந்த பிள்ளையள் இவை!

நேற்றுவரைக்கும் குளிர்மையான நிழலில; ஒரு கவலையுமில்லாமல் பாதுகாப்பா விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையள். இண்டைக்கு உனக்கு முன்னால கைதியளா நிக்கினம். இந்த புது இடத்தைப் பாத்து திகைச்சுப் போய் நிக்கினம். 

இவையை கொல்லுறதுக்காக நீ யானையை கொண்டு வந்திருக்கிறாய். அது கூட தெரியாமல் அதுகள் யானையை பார்த்து சந்தோஷமா ஆச்சரியப்பட்டுக் கொண்டு  நிக்குதுகள்.. இந்த அப்பாவிப் பிள்ளையளையா நீ கொல்லப் போறாய்?

என்னவோ நான் சொல்லுரத சொல்லியிட்டன். இனி நீ உனக்கு எது சரி எண்டு படுதோ அப்படிச் செய் 

எண்டு சொல்லுறார். 

ஒரு காருண்யமான காரியத்தை உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு சுடச் சுட சொல்லாமல்; மென்மையா உணர்த்திற அதே நேரம் எதிரி மன்னன்ர குண இயல்புகளை அதுக்காக இகழ்ந்து கூறியோ அல்லது இந்த மன்னனிட்ட பணிஞ்சு போயோ சொல்லாமல் கோவூர் கிழார் சொன்ன பாணி எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? 

கோவூரார்; தமிழ; அதின்ர ஜீவகாருண்யத்தை சொன்ன முறையும் இந்த வரலாற்று சம்பவமும் அதைப் பாட்டுக்குள்ள புகுத்தி காட்சிப்படுத்தின பாங்கும் தமிழ் உள்ள வரை தமிழன்ர அறம், கருணை, காருண்யம், மனசாட்சி எல்லாத்துக்குமான தொடக்கப் புள்ளியா இருந்தே வரும்.

இப்பிடி எத்தினையோ பாட்டிருக்கு. அதில இது ஆதித் தமிழ் திராவிடனிட்ட இருந்த காருண்யத்தின்ர ஒரு சிறு துளி!

No comments:

Post a Comment