Thursday, June 11, 2009

இயற்கையின் ஸ்பரிசம்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலை இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!


கார் கால மாலையில்
செழித்த மரக்கிளையில்
பஞ்ச வர்ணக் கிளிகள் இரண்டு
சிறகுலர்த்திக் கொஞ்சுதல் போல!


வளர்த்த நாய்க்குட்டி
வாஞ்சையான அன்பினை
வார்த்தைகளின்றி வெளிப்படுத்துதல் போல!


நிர்மல வானில் பூரண நிலவு
மரங்களுக்கிடையே
குளிரொளியோடு வருவது போல!


பயமறியா இளங்கன்று
பால் குடித்துப் புல் வெளியில்
துள்ளி ஓடும் சுதந்திரம் போல!


தாய்க் கோழி குஞ்சுக்கு
தீனி கொடுத்துப் பத்திரமாய்
பருந்திலிருந்து காத்தல் போல!


சின்னச் சின்ன வாச மலர்கள்
மழைத் துளியில் சிலிர்த்தபடி
புன்னகை செய்வதைப் போல!


மழை நின்றதோர் மஞ்சள் மாலையில்
ஏரிக் கரையின் புல் வெளி ஓரமாய்
தாராக்களும் மனிதர்களும்
குடும்பங்களாய்ச் செல்லுதல் போல!


யாரோ ஒரு வழிப் போக்கன்
போகிற போக்கில்
சினேகமாய் ஒரு புன்னகையைச்
சிந்தி விட்டுப் போவதைப் போல!


மேலும் ஒரு
தாயான பெண்ணின்
முதல் புன்னகை போல!


எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலர் இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

No comments:

Post a Comment