Thursday, March 26, 2009

நினைவுகளில்.....!

போர் சூழ்ந்த தாய் நாட்டில் இருந்தது நான் வாழ்ந்த கிராமம்.விவசாய பூமி.பின் பக்கம் புகையிரதப் பாதையும் முன் பக்கம் யாழ் - கண்டி வீதியும் எல்லைகளாகக் கொண்ட 5 ஏக்கர் நீள் சதுர நிலப் பகுதி.

மனிதர்கள் மட்டுமன்றி குரங்குகள், மயில்கள்,கிளிகள்,கொக்குகள் வண்ணப் பறவைகள்,வண்ணாத்திப் பூச்சிகள்,மான்,மரை, பன்றி,யானை என்று எல்லோரும் நம் உறவினர்கள்.அடிக்கடி வந்து சுகம் விசாரித்துப் போவார்கள்.அன்பின் மிகுதியால் உரிமையோடு குரங்குகள் மாங்காய்களையும், யானைகள் தென்னங்கன்றுகளையும் வந்ததன் அடையாளமாய்க் கொண்டு போவதுமுண்டு.

அவர்கள் போதாதென்று வீட்டில் நாய்,பூனை, ஆடு, மாடு, கோழி என்றும் சில உறவினர்கள்.நாய் பூனையோடு கோவிப்பதும்,ஆட்டுக்குட்டிகள் கதிரையில் ஏறித் தூக்கம் போடுவதும் கோழிகள் முற்றத்தில் அடிக்கடி எச்சம் போடுவதும் அன்றாட நிகழ்வுகள்.

சகல கனி வர்க்கங்களாலும் தென்னை மரங்களாலும் பூஞ்செடிகளாலும் குரோட்டன்களாலும் ஒரு மலிகைப் பந்தலாலும் சூழப்பட்டு மூன்று அறைகளாய் கட்டப் பட்ட எங்கள் கல் வீடு வெள்ளையாய் நடுவில் நின்றிருந்தது.

பாமர மக்களால் சூழப்பட்ட கிராமம் அது. அருகில் ஒரு பிள்ளையார் கோயில்.காலையும் மாலையும் கோயில் மணி கேட்கும்.எங்கோ கூலி வேலை முடித்துப் போகும் ஆண்களும் பெண்களும் நம் கிணற்றில் தொட்டியில் நிறைத்திருக்கும் தண்ணீரில் குளித்துக், கலகலத்து ஈரத்துணியை கழுவிப் பிளிந்து தோளில் போட்டபடி வீட்டுக்கு வருவார்கள்.

முற்றத்தில் வந்து பெண்கள் குந்தினார்கள் என்றால் அவர்களுக்குக் காசு கடனாகவோ அல்லது தேனீரோ அல்லது தம் குறை நிறைகளை அம்மாவிடம் சொல்ல வேண்டிய தேவை ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்.அதுவே ஆண்களாக இருந்தால் கிடுகோ, தேங்காயோ, மண்ணெண்ணையோ,தென்னம் மட்டைகளோ தேவை என்று அர்த்தம்.அதுவே சின்னப் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடய புதுச் சட்டை தைக்கப்பட வேண்டும் அல்லது சாரம் மூட்டப் பட வேண்டும் அல்லது தாயார் முட்டை அல்லது காசு கடன் வாங்கி வரும் படி அனுப்பப் பட்டிருப்பார்கள்.சில வேளை பாலும் பழவர்க்கங்களும் அவர்களது வேண்டுகோளில் ஒன்றாய் இருக்கும்.எளிமையிலும் நேர்மையோடும், கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்ந்த சனங்கள்.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நிற்குக் காலங்களில் 'என்னங்கம்மா, பெரிய தங்கச்சி வந்திருச்சா' என்று தவறாமல் ,லெமென் பவ்'பிஸ்கட்டோடு கேட்டு வரும் கறுப்பையா,பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு என்னைத் தவறாமல் பார்க்க வரும் புஸ்பா, வெற்றிலைக் காவி படிந்த பற்களால் மிக அருமையாய் வெகுளியாய் சிரித்தபடி வரும் பூமணி,சிறு வயதில் என் தங்கையோடு கூடி விளையாடிய பாலன்,தடியில் ரின் மூடி பொருத்தி கார் விளையாடும் கால்சட்டை'கட்டி' இருக்கும் சிறு பிள்ளைகள்,5,6மைல்கள் சைக்கிளில் 'சாவகச்சேரி'பிலாப்பழத்தை கட்டிக் கொண்டு 'என்னவாம் கிறஜுவட்' என்றபடி வரும் பனங்கட்டி மாமா,நான் தவறாமல் விசிட் பண்ணும் பக்கத்து வீட்டு பாலன் கமத்தன்ரி.முன் வீட்டு மோனைச் சித்தப்பா,தனியாக வசித்து வந்த வேலு,.......

இதுவே நான் 'வாழ்ந்த' கூடு.எனக்கு 'உண்மை வாழ்வை' உணர்த்திய காடு.

இன்று கூடு பிரிந்த பறவைகளாய்.......

யார் யார் எங்கெங்கோ....?

எங்கிருந்தாலும் வாழ்க நீவீர்!

பாதுகாப்பாய்! பாதுகாப்பாய்!! பாதுகாப்பாய்!!!

2 comments:

  1. /பாதுகாப்பாய்/ தோழி உங்கள் அன்பும் அக்கறையும் மட்டுமே அவர்களை பாதுகாக்கும். நானும் உங்களுடன் ப்ரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  2. ஒரு கணம் என்னையும் என் தாய்மண்ணையும் நினைத்து ஏங்கினேன். கண்ணீரும் வந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete