Thursday, April 15, 2010

இயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்


ஒரு சிறு பூச்சி வீதியோரம் எவ்வளவு உற்சாகமாக கமறாவுக்கு முகம் கொடுக்கிறது பாருங்கள்!

அடுத்து வரும் ஒரு வாகனத்தில் அதன் தோற்றமே தெரியாமல் அது அடி பட்டு விடக் கூடும்.என்றாலும் அதன் அழகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதனை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலும் அழகாக இருக்கிறதில்லையா?

அது உற்சாகமா? என்னை ஒன்றும் செய்து விடாதே என்ற வேண்டுதலா? அல்லது மனிதனைக் கண்ட வியப்பா? அல்லது அது சொல்லும் ஏதோ ஒரு மொழியா?

தெரியவில்லை.

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!

மின் தபாலில் வந்தது இப் படம்.

இது போல சிறு குருவியாக இருக்கும் தூக்கணாங் குருவியும் அதன் தூக்கணாங் குருவிக் கூடும் அதன் நேர்த்தியும் மூன்று அறைகள் கொண்ட அதன் உள் வீட்டு அமைப்பும் வீட்டுக்கு வெளிச்சம் வர அது கொண்டு போய் ஒட்டி வைக்கும் மின்மினிப் பூச்சிகளும் ....

எத்தகைய ஒரு மதி நுட்பம் அதன் சின்னஞ்சிறு தலைக்குள்!

யார் சொல்லிக் கொடுத்தார் இவை எல்லாம்? அதன் கூட்டை போல் ஒன்றை மனித வலுவால் பின்னி எடுக்க முடியவில்லையே!

இயற்கையின் வனப்புத் தான் எத்தனை அழகு!

நன்றி மணி.இந்தப் படம் 'எழிலாய் பழமை பேச' என்ற வலைப் பூவில் இருந்து நன்றியோடு பெறப்பட்டது.

இது போல பறவைகளின் நேச உணர்வு, நட்புறவு இன்னுமொரு அழகு. அவை யார் சொல்லிக் கொடுத்தும் வந்ததில்லை. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளில் அத் தன்மை இயல்பாக அமைந்திருக்கும்.தமக்குள் ஒரு சுமூகமான உறவை அவை பேணிக்கொள்ளும். நாய்,பூனை,கோழி,தாரா,ஆடு,மாடு,இவைகளோடு அவர்கள் என்ன மொழியில் பேசிக் கொள்கிறார்களோ தெரியாது. ஆனால் தம் வீட்டு மனிதர்களைப் போலவே சக ஜீவராசிகளையும் அவை அடையாளம் கண்டு கொள்கின்றன.தம் பாசையில் நேசிக்கின்றன.

அண்மையில் ஆனந்த விகடனில் ஜனா என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார்.

'எஜமானி குழந்தை பெற்று விட்டாள்'
ரைகரும் ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோஷமாய் வால்களை ஆட்டிய படி
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக் கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களைப் போலவே!

என்ன ஒரு அருமையான விலங்குலகம்!

இந்தப் படமும் மின் தபாலில் வந்தது தான்.

அது போல பறவைகளின் தாய்மை உணர்வு மிகப் பிரசித்தி வாய்ந்தது.பருந்திலிருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியும், தாய்ப் பசுவிலிருந்து பாலினை மனிதன் கறக்கும் போதே பிள்ளைக்கு பாலை ஒழித்து வைக்கும் தாய்ப்பசுவும்,குஞ்சுக்கு இரை கொடுக்கும் பறவைகளும் நாம் அன்றாடம் சந்திப்பவை தான்.

இதனைச் சொல்லும் போது ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது.முன் ஒரு முறை எங்கள் வீட்டில் செல்வி என்றொரு தாய் பசு கன்று போட்டிருந்தது.காலையில் உணவு தேடச் சென்ற தாய்ப் பசு பின்னர் வீடு திரும்பவில்லை. (அதற்குப் பல காரணங்கள்! எல்லையோரக் கிராமம் என்பதால் சிலர் இதற்காகவே காத்திருந்து மாட்டை இறச்சிக்கு தடம் போட்டு பிடித்துச் சென்றிருப்பார்கள்.)சற்று நேரத்திலெல்லாம் அது வந்து கன்றுக்குப் பால் கொடுக்கும். அருகாகவே தான் எங்கேனும் மேய்ந்து கொண்டு நிற்கும். ஆனால் அன்று வரவில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தாயிற்று. அதனைக் காணோம்.கன்றுக்கோ பசி.இது ஜேசி இனத்தைச் சேர்ந்தது.

மாலையில் மற்றய மாடுகள் பட்டிக்கு வந்து சேர்ந்தன.நம்மிடம் சீமாட்டி என்றொரு மாடும் ஒன்று நின்றது. அதுவும் கன்று போட்டிருந்தது. இரண்டு கன்றுகளையும் அவிட்டு விட்டோம். இரண்டும் இரண்டு பக்கமும் ஓடிச் சென்று பாலைக் குடிக்க தாய் சீமாட்டி இரண்டுக்கும் பாலைக் கொடுத்துக் கொண்டு நின்ற காட்சி மனதை விட்டு என்றும் அகலாதது. மனதை நிறைத்த காட்சி அது.செல்வியின் கன்றையும் தன் பிள்ளை போல் வளர்த்தெடுத்து தந்தது அப் பசு!

அது சீமாட்டி தான்!

இப்படி விலங்கு, பறவைகளின் சாம்ராஜ்ஜியங்களுக்குள் எத்தனையோ வண்ணங்கள்,அழகுகள் செய்திகள் ஒழிந்து போயுள்ளன.

நமக்குத் தான் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு நேரமில்லை.

இப்போதெல்லாம் அரசாங்கங்களும் நாடுகளும் கட்சிகளும் பசுமைப் புரட்சி என்றும் சூழல் வெப்பமடைவதைத் தடுக்கும் பொருட்டும்,இயற்கையோடு வாழும் வாழ்க்கையைப் பரிந்துரை செய்கின்றன.
இரசாயணங்களும், மின்சார பாவனைகளால் பாவிக்கப் படும் உபகரணங்களும், வா
கனங்களும் இல்லாத பூமியும்; போட்டிகளும் ஏமாற்றுகளும்,ஆடம்பரங்களும் இல்லாத அன்பும்,அகிம்சையும்,எளிமையும் சக பிராணியில் நேசமும்,மன நேர்மையும் கொண்ட மக்களும் பெருகும் போது தான் அது சாத்தியப் படும் போலத் தோன்றுகிறது.


எல்லோருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment