Tuesday, July 12, 2011

எழுத்தாளர்;முருக பூபதி



என் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய எழுத்தாளர்.லெ.முருகபூபதி அவர்களுக்கு நாளை 13.07.2011 அன்று அறுபதாவது பிறந்த தினம்.

என்னைப் பல வழிகளிலும் ஊக்குவித்து, கட்டுரைகளை வலிந்து என்னிடம் இருந்து வரவழைத்து,சொந்தச் செலவில் புத்தகங்கள் அனுப்பி, எழுத்தாளர் விழாக்களிலும் என்னை மேடையேற்றி,வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் இந்தப் பெருந்தகைக்கே முழுப் பொறுப்பும் உண்டு.

வாஞ்சையும் எளிமையும் இலக்கிய ஓர்மமும் தன்னலம் கருதா இனிய சுபாவமும் மானுட தர்மமும் நிரம்பப் பெற்றவர்.சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் புத்தக வெளியீடுகளும் அநேகம்.மிகப் பெரிதும் கூட.அதற்காக அவர் ஏற்றுக் கொண்ட; சந்தித்த சவால்கள் பல. அனைத்து விமர்சனங்களையும் உள்குத்துக்களையும் புறங்கையால் ஒதுக்கி விட்டு தான் போகும் வழியில் சளைக்காது நடை போடும் அவர் இலட்சியவாதிகளுக்கும் துயர் கொண்ட நெஞ்சங்களுக்கும் முன் மாதிரி.

இனிய உபசரிப்பிலும் மகிழ்வான மனோபாவத்தாலும் இரக்க சிந்தையாலும் அவர் பலரின் உள்ளங்களில் நிறைந்து வாழ்பவர்.இனியும் வாழ்வார்.அவரின் பிறந்த தினத்தின் போது அவர் சகல வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் சகல வளங்களோடும் வாழ்ந்து இலக்கிய உலகுக்கு - அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய புலம்பெயர் இலக்கிய உலகுக்கு இன்னும் பல
சேவைகளை ஆற்றி மகிழ்ந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூபதி அண்ணா!



வாழி நீ பல்லாண்டு

இனிய மனிதா! பூபதி அண்ணா!
எழுத்துலகில் எனை ஏற்றி
பெற்றுவிட்ட தாயவள் போல் பூரித்து
இன்கதவம் திறந்து இனிதாய் உபசரித்து
புலம் பெயர்ந்த புதுச் செடிக்கு
புலமையொடு நல்ல நீரூற்றி
வாஞ்சையொடு வளர்த்து வரும் வள்ளலே!
வளமோடு நீ வாழி!

எத்தனை துன்பம்?எத்தனை சோதனை?
எத்தனை நிந்தனை? அத்தனையும் மனித குணம்.
அத்தனையும் உந்தனது ஓர்மத்தால்
வியத்தகு நல்ல தீரத்தால்
சிறந்த உந்தன் உழைப்பதனால்
நெஞ்சு நிகர்த்த ஞான நெருப்பதனால்
விலக்கி ஒழித்து வாழ்ந்திட்டாய்.
வானில் விளக்காய் ஒளிர்ந்திட்டாய்
இந் நன் நாளில் வாழ்த்துகிறேன் நீ வாழி!

கேட்டவுடன் புத்தகங்கள் தபால்களோடு வந்து சேரும்
நா நுனியில் விபரங்கள் தொலைபேசியில் கிட்டி விடும்
அன்பான விசாரிப்புகள்;எளிமையான குண இயல்பு
மற்றோரை மதிக்கும் மான்பு மிகு நல்ல குணம்
எல்லோர்க்கும் உதவு குணம் அமைந்திட்ட மாமனிதா!
(உனக்கு நான்)நன்றி சொல்ல நாவேது? நவிலுகிறேன் நல்வாழ்த்து!

உறுதியாய் சொல்லுகிறேன் ஒன்று மட்டும் உற்றுக் கேள்!
புத்திலக்கியச் செடியாம் புலத்திலக்கியச் செடிக்கு
அன்னிய மண்ணதனில் எழுத்தாளர் விழாக் கூட்டி
இலக்கியப் பசளையோடு கலைகளும் புத்தகப் பதியங்களும்
பாங்குடனே போட்டதனால் பற்றை,புதர்க்காட்டிடையும்
அந்தோ பார்! தமிழ் தளிர்!! துளிர்த்ததென்றால்,
பெருமகனே! பூபதியே!! அது உன்னாலே! உன்னாலே!!
அதனாலும் வாழ்த்துகிறேன்; மனையாளொடும்
மக்களொடும்; நீ விரும்பும் நூல்களோடும்
நீடூழி நீ வாழ்க!!

2 comments:

  1. திரு.முருக‌பூப‌தி அவ‌ர்க‌ளின் சிற‌ப்பு உரைத்த‌ ப‌திவுக்கும், அவ‌ருக்கும் எம் இனிய‌ ந‌ல் வாழ்த்துக‌ள்!

    ReplyDelete