Monday, July 25, 2011

நற்றிணையில் ஒரு காட்சி



சங்க இலக்கியங்கள் கலப்பற்ற தனித்தமிழில் காதலையும் போரையும் இயற்கையோடிணைந்த வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லி நிற்பவை.அவை எட்டுத் தொகை பத்துப்பாடு நூல்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன.அந்த எட்டுத் தொகை நூல்கள் பற்றி ஒரு பாடல் இப்படிச் சொல்லும்.

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை’

அந்த எட்டுத் தொகை நூல்களில் ஒன்று நற்றிணை.இது பல புலவர்களாலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப் பட்டது.இதிலுள்ள 400 பாடல்களிலும் 234வது பாடலிலும் 385 சில பகுதிகள் கிட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.இது முழுவதும் காதல் உணர்வைச் சொல்கிறது.

அதில் வரும் 22வது பாடல் இது.குறிஞ்சி மலைப் பகுதியைச் சேர்ந்தவன் அவன்.விடலைப் பருவத்து இளைஞன் அவன்.கீழைப் புறத்து யுவதி ஒருத்தியைக் காதலிக்கிறான். திருமணம் செய்யத் தீர்மானிக்கிறான் அவ்விளைஞன்.தோழி மூலமாகச் செய்தி சொல்லி விடுகிறான் அவன்.பெற்றோரின் சம்மதத்தைப் பெற வருகிறான் என்ற செய்தி தலைவியை வந்தடைகிறது.

தோழி சொல்கிறாள்.தோழியைத் தயார் படுத்துகிறாள்.எப்படி அச்சத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டுகிறாள் என்று பாருங்கள்.அவள் சொல்லும் போது அவனின் குறிஞ்சி நாட்டு வளத்தை சொல்லும் பாங்கைப் பாருங்கள்.அதற்கூடாக விரிகின்ற காட்சி எவ்வளவு அழகாகாய் இருக்கின்றது என்பதைக் காணுங்கள்.

தோழி, ஊர்புறத்தே நெற்கதிர் முற்றுகின்ற வேளையில் அருகில் இருக்கின்ற ஆறு, குளம், நீரேரி எல்லாம் வரண்டு நீருக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் போதினில் ஒரு நள்ளிரவுப் பொழுதொன்றில் இடி மின்னலோடு மழை பொழிந்தால் எவ்வாறு இருக்கும் சொல்?அது போல உன் காதலன் பொருத்தமான ஒரு வேளையான - பருவம் கனிந்து நிற்கின்ற தருணமான இப்போது உன்னைத் திருமனம் செய்து கொள்வதற்காக வரப் போகிறான்.

அவனுடய - அவன் வாழ்கின்ற குறிஞ்சி நிலம் எப்படியானது என்று தெரியுமா உனக்கு?அங்கே திணை பயிர் செய்யப் பட்டிருக்கின்றது.அந்தத் தோட்டங்களைத் திணைப் புலத்துப் பெண்கள் காவல் காக்கிறார்கள்.அக்காவலையும் மீறி சில புத்திசாலிக் குரங்குகள் அதற்குள்ளே புகுந்து விடுகின்றன. அவை திணை விளைந்து நிற்கின்ற பருவம் மிக்க திணைப் பயிர்களைக் கவனமாக நோட்டம் விடுகின்றன.அதில் இளமையாக இன்னும் முற்ற காலம் இருக்கின்ற திணைக் கதிர்களை விட்டு விட்டு நல்ல பருவமான முதிர்ந்த கதிர்களை மிக அவதானமாகத் தெரிவு செய்து அவற்றைத் தம் கைகள் நிறையப் பறித்துக் கொள்கின்றன.

அவை அவற்றை உடனேயே வாய்க்குள் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.மழை கார் இருட்டானாலும் கொப்பிழக்கப் பாயாத புத்திசாலி மந்திகள் அவை.திணைக் கதிர்களில் இருந்த திணைத் தானியத்தைக் கை நிறயை கொண்டு விட்டது தான் தாமதம்.கொப்பிழக்காமல் அவதானமாக திணைப் புலத்துக் காவல் மங்கையரின் கண்களுக்கு எட்டி விடாமல் பாய்ந்து வருகின்றன.அவதானமாக அதே நேரம் விரைவாகவும் லாவகமாகவும் புலத்துக் காவல் பெண்டிரின் கண்கலுக்குள் தட்டுப் படாமல் தப்புகின்றன. அவை அத்தனையும் பெண்குரங்குகள்.

அவை எங்கே பாய்ந்தோடி வருகின்றன தெரியுமா? அவைகளுடய அனுபவம் இல்லாத உறவினர் கூட்டம் திணைப் புலத்துக்கப்பால் பசியோடு இப் பெண்குரங்குக்காகக் காவல் இருக்கின்றன.காரனம் காவல் உள்ள திணைப்புலத்துக்குப் போய் பாதுகாப்பாய் வருவதென்பதற்கு அனுபவமும் அறிவும் சமயோசிதமும் அவசியமல்லவா? அதனால் இப்பெண் குரங்கு அனுபவமற்ற தன் உறவுக் கூட்டத்தைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறது. அங்கு தான் இது கை நிறைந்த முதிர்ந்து உண்ணத் தயாராக இருக்கும் திணைகதிர் தானியங்களைக் கை நிறைய உருவி எடுத்துக் கொண்டு விரைகிறது.

குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும் தன் உறவுக் கூட்டத்தினராகிய அவர்களை அழைத்துக் கொண்டு இன்னும் பாதுகாப்பான மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இடம் இன்னும் பாதுகாப்பானது என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னால் கூட்டமாக இருக்கும் தன் உறவுக்கூட்டத்துக்கு முன்னால் தன் உள்ளங்கைகளை விரிக்கிறது.சுற்றிவர உறவுக்கூட்டம்.ஆவலும் பசியுமாய் அமர்ந்திருக்கின்றன.தன் உள்ளங்கையில் அவற்றை வைத்துக் தானியங்கள் வேறாவதற்காகக் கசக்குகிறது அக்கதிர்களை.பின் கசடுகளை நீக்கி எல்லோருக்கும் பங்கிடுகிறது.அவற்றை எல்லாருமாகச் சேர்ந்து வாய்க்குள் போட்டுக் குதப்புகின்றன. அதனால் உட்குழிந்த கன்னங்கள் ஊதி விட்டன.எல்லோருமாக பாதுகாப்புப் புறத்தில் இருந்து வாய்நிறைய திணைத் தானியத்தைப் போட்டு பொக்குபொக்கு என்று உட்புறமாகக் குழிந்திருந்த கன்னங்கள் வெளிப்புறமாக தள்ளி இருக்க அவற்றை ஆசையோடு அவை உண்கின்றன.

அந்த நேரம் மலைப் புறத்தே முகில் கூட்டம்.மழை மெல்லத் தூறல் போடுகிறது. ஆனால் அவை அவற்றைக் கவனித்ததாயோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை. அவைகளின் முதுகுப் புறமாக மழைத் தூரல் போடுவதையும் பொருட்படுத்தாமல் அவை திணைத் தானியத்தை உண்கின்றன.

இந்தக் காட்சி எப்படி இருக்கின்றது தெரியுமா? தைத்திங்களில் நோன்பு நோற்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி ஈர உடை உடலோடு ஒட்டி இருக்க நீர் துளிகள் சொட்டுச் சொட்டாக கொட்ட கோயில் பிரசாதத்தை பக்தி சிரத்தையோடும் பவ்வியத்தோடும் உண்பது போல இருக்கிறது.

இப்படியான காட்சிகளைத் தினம் காணக் கூடிய ஒரு நிலப்பகுதியைச் சேர்ந்த ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் தோழி.சிற்றறிவுடய உயிரினங்களும் புத்திசாலித்தனமும் சமயோசிதப் புத்தியுமாக எல்லோருமாகக் கலந்து ஒற்றுமையாக கூடி வாழும் ஊர் அது என்பதும்;நெறிமுறை தவறாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவனையே நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் அவள்.தோழியைத் தயார்படுத்துகிறாள் இவ்வாறு.அந்த நற்றிணைப் பாடல் இது தான்.


"கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம்கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே'' - (நற்றிணை - 22)

இந்த ஊர்க்காட்சியைப் பார்க்கும் போது குற்றாலக் குறவஞ்சி கூறும் தன் மலைவளக் காட்சி நினைவுக்கு வந்து போகிறது. அதுவும் குறிஞ்சிப் புறம். மலையும் மலைசார்ந்த இடம்.அங்கிருக்கும் வானரங்கள் எப்படி இருக்கின்றன தெரியுமா?

‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’.

இன்றய சினிமாவில் மலையாளக் கரையோரம் தமிழ் பாடிச் செல்கிறது குருவி.

2 comments:

  1. சிற்றறிவுடய உயிரினங்களும் புத்திசாலித்தனமும் சமயோசிதப் புத்தியுமாக எல்லோருமாகக் கலந்து ஒற்றுமையாக கூடி வாழும் ஊர் அது என்பதும்;நெறிமுறை தவறாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவனையே நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் அவள்.தோழியைத் தயார்படுத்துகிறாள்//

    அன்றைய புலவர்களின் நுட்பமும் அறிவும் எண்ணி எண்ணி மகிழத் தக்கதல்லவா!

    ReplyDelete
  2. சங்க காலத்து அகப் புறப்பாடல்களைப் பார்க்கும் போது அந்தக்காலத்து எளிமையான இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையையும் புலவர்களின் புலமையையும் எண்னி வியக்காமல் இருக்க முடியவில்லை.

    நன்றி தோழி. மறக்காமல் வந்து அபிப்பிராயம் சொல்லிப் போகும் அந்த அக்கறை உள்ள மனதுக்கு.

    ReplyDelete