Friday, June 15, 2012

”உயர்திணை” - அதன் பின்பக்கம்.

நம்முடய இலக்கியச் சந்திப்பின் நாலாவது காலடி!

திரும்பிப் பார்க்கிறேன்.(வரலாறு படித்ததாலோ என்னவோ ஒரு வித வரலாற்று நோக்கில் இது போகும். சலிப்பூட்டக்கூடியது எனத்தெரிந்தும் ஒரு விதமான ஆவணப்படுத்தலுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கிறது: பொறுத்துக் கொள்வீர்களாக)

சென்ற மாசி மாதம் கடசி வாரத்து ஞாயிற்றுக் கிழமை நம் முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் நாலு பேர்: பாஸ்கரன்,செல்வம்,கார்த்திகா, மற்றும் நான் - கூடினோம். இப்படி ஒன்றை செய்ய ஆவல் இருக்கிறது என கூறிய போது முதல் பச்சைக்கொடியை காட்டிய கோகிலா அவர்களும்; பின்னாளில் அறிந்து அழைப்பு விடுத்த போது வந்திணைந்து கொண்ட இந்துமதியும் பின்னாளில் எமக்குக் கிடைத்த பெரிய பலம்.

இவ்வளவு பேர் தான் நாங்கள்.

பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை. மாதம் ஒரு தடவை கூடி நாம் உருவாக்கிய இலக்கிய வடிவங்களை ரசித்து மகிழ்ந்த தரிசனங்களை பகிர்ந்து மகிழ்ந்து செல்வது மாத்திரமே எங்கள் எண்ணமாக இருந்தது.

முதல் சந்திப்பில் அந்த வீரியம் கொண்ட விதை ஊன்றப்பட்டது. அதன் அடுத்த மாதத்தில் அது மெல்ல முளை விட்டதைக் கண்டோம். அடுத்த மாத சந்திப்புக்கு முதல் ஈழத்தின் மலையகத்தைச் சேர்ந்த எளிய மக்களின் குரலை உயர்த்திக் காட்டிய தெளிவத்தை யோசெப் அவர்களின் சுகயீனத்துக்கு அவர் சர்வதேச தமிழர்களிடம் உதவி கேட்ட செய்தி நம்மை வந்தடைந்தது. அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது நாம் எல்லோரும் நம் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு இடையூறு வந்ததைப் போல உணர்ந்தோம்.

ஒரு சொற்ப நேர தொலைபேசிஉரையாடலில் சேர்ந்த பணத்தை TSS நிறுவனத்தினூடாக அனுப்பப் போன போது அதன் நிறுவனர் பார்த்திபன் அதனை இலவசமாக அனுப்பி தன் பங்கினைக் கேட்காமலே செலுத்தினார்.

நம்மிடையே இலக்கியம் சார்ந்து ஒரு குடும்ப நெருக்கத்தை உணர வைத்த நிகழ்வு இது.

இதற்கிடையில் கோடை காலம் போய் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. பரமற்றா பூங்காவில் கூடிய நம்மை இயற்கை கூடாரம் ஒன்றுக்குப் போகத் தள்ளியது. எங்கு போகலாம் என்று யோசித்த போது yaarl function centre தன் அகலக் கதவுகளை எமக்காக இலவசமாகத் திறந்து விட்டது.

அந்தச் சந்திப்பு நடந்து அடுத்த சந்திப்புக்கான இடைவெளியில் மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்ற நீண்ட வார விடுமுறையில் ஜீவநதி அவுஸ்திரேலியச் சிறப்பிதழை நமக்கூடாக சிட்னி மக்களுக்கு அறியத் தரும் ஆவலை வெளியிட்டிருந்தார்.

நம்மிடையே அது பற்றிக் கலந்து பேசிய போது விருப்பமும் குழப்பமும் எப்படிச் செய்வதென்ற யோசினையுமாக நாம் இருந்தோம். செய்வதென்று தீர்மானித்த போது நாம் யார் என்பதை - நம் நோக்கம் என்ன என்பதைத் தீமானிக்கும் நிலமைக்கு நாம் தள்ளப் பட்டோம்.

இங்கு பல பல நிறுவனங்களும் சங்கங்களும் அமைப்புக்களும் அதன் குடுமிப்பிடிச் சண்டைகளும் பலரிடம் ஒருவித வெறுப்பை விளைவித்திருந்ததாலும் ஒரே விதமான போக்குகளால் பலரும் சலிப்புற்றிருந்ததாலும் நம்மிடையே அதற்கான தயக்கமும் இருக்கவே செய்தது.

விமர்சனங்களை மாத்திரம் முன் வைக்காமல் இதனை ஒரு குழுவாக ஒரு முன்மாதிரியாக நம்முடய தனித்துவமான பார்வையில் இதனைச் செய்வோம் என்ற ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இதனைச் செய்வோம் எனத் தீர்மானித்தோம்.

நிறைய ஆர்வமும் சக்தியும் வந்து சூழ நிகழ்ச்சி நிரலை வகைப்படுத்தினோம்.ஜேகே என அழைக்கப்படும் ஜெயக்குமரனை அழைக்கும் ஆவல் என்னை உந்தித்தள்ள அழைப்பெடுத்துக் கேட்ட போது கவிதையின் விற்பன்னன் கேதாவையும் உடன் அழைத்து வருகிறேன் என்ற போது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அவர்களுக்கு அது 8 - 10 மணி நேரக் கார் பயணம்!

நாளாந்த நம் முழு நேர வேலைகளின் நடுவே இதனைச் செய்வதும் நம் ஆத்மாவைத் திருப்திப் படுத்தும் ஒரு நிகழ்வாக இருந்தது.அதற்கு ஒரு இடம் தேவையாக இருந்தது. மாலை நேரச் சிற்றுண்டியைக் கொடுக்க பணம் தேவையாக இருந்தது. மற்றும் நமக்கென ஒரு பெயரை அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டி இருந்தது. நன் ஒரு சமூக நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்ததால் (புலம்பெயர்ந்தோர் வள நிலயம்(MRC) அவர்களிடம் இருந்து வசதியான அறை ஒன்றை 5 மணி நேரத்துக்கு பெற முடிந்தது.

அவசரத் தேவைக்காக நான் அடிக்கடி போகும் நம் தெருமுனையில் இருக்கும் இளந்தமிழன் ஒருவரின் கணணிக் கடை ஒன்றில் உரிமையோடு நம்முடய நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்ட போது கேட்டதை விட அதிகளவு ஆதரவை பெற்றோம்.

இப்போது நம்முன்னால் நமக்கு என்ன பெயர் சூட்டுவது என்ற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான பெயர்களைப் பரிந்துரைத்தோம்.வெளி, உள்ளொளி, சாகரம்,பிரபஞ்சம்,ழகரம்,சாளரம்,அகரம்,உள்வெளி,திசைகள், கோணங்கள், கண், மெளழவு,தேமதுரம்,தாய்மொழி, ழகரம்இலக்கியப்பூ,எழுது, சங்கு,பசுந்தி,....எனப்பல பெயர்கள் முன் மொழியப்பட்டன. அதில் உள்ளொளி என்ற சொல் பலருக்கும் பிடித்துப் போக அதனை நமக்கு பெயராக வைப்பதெனத் தீர்மானித்தோம்.

மறுநாள் இணையத் தளங்கள் ஏதேனும் அப்படி இருக்கின்றதா என இணையத்தில் ஆராய்ந்த போது அப்பெயர் ஏற்கனவே எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்து கொண்டோம்.அதனால் அப்பெயர் கைவிடப்பட மீண்டும் பெயர் வேட்டையில் இறங்கினோம். அவசரம் காரணமாக நமக்குத் தெரிந்த தமிழ் மீது ஆர்வம் கொண்டிருக்கிற சிலரிடம் கூட சில ஆலோசனைகளைக் கேட்டோம்.

அதன் ஒருவகையாக மெல்போனில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் சந்ததித் தமிழின் தோழன் ஜேகே யிடமும் கேட்டேன். அவர் உங்களுடய நோக்கம் என்ன என்று கேட்டார்.கோகிலா அவர்கள் ஆர்வத்தோடு தந்திருந்த “கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதல்” என்ற முதலாவது வசனத்தைக் கேட்டவுடன் ‘ உயர்திணை’ எப்படி என்று கேட்டார். மேலும் உடனடியாக என் மனதில் பட்டது என்று விட்டு வேறேதாவது சொல் தட்டுப்பட்டால் சொல்கிறேன் என்றார்.

அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்கும் அது பிடித்துப் போய் விட கணனிப் பக்கங்களில் எல்லாம் அப்படி ஒரு பெயர் இருக்கிறதா எனத் தேடிய போது இல்லை என்ற நற்செய்தி கிட்ட நாம் “உயர்திணை” ஆனோம்.

இவற்றை எல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விதை வளர்ந்து முளைகொள்ளத் தேவையான அனைத்து விடயங்களும் இந்த நான்கு மாதங்களுக்குள் தாமாகவே வந்து சேர்ந்தன என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்கத் தான்.

அதன் பின்னர் அழைப்பிதழ் தயாரானது.




அதன் நிகழ்ச்சி நிரல் கீழ் கண்டவாறு தயாராயிற்று.


 ”உயர் திணை” நடாத்தும் ஜீவநதி
சிறப்பிதழ் விமர்சன அரங்கு 10.06.2012

Toongabbie Community Centre,” Billard Room” 244,Toongabbie Road, Toongabbie.

                        நிகழ்ச்சி நிரல் 
         நிகழ்ச்சி நெறியாளர்:திரு.ம.பிரவீணன்   
  
1.00– 1.30 -  அமர்வு
1.30 – 1.35 – வணக்கமும் வரவேற்பும்;
1.35 – 1.45 – ”உயர்திணை” அறிமுகம்: திருவாட்டி.ப.யசோதா.
1.45 – 2.00 – “ஜீவநதி” அறிமுகம்: திரு; லெ.முருகபூபதி.

2.00 – 4.00             விமர்சன அரங்கு  
          நெறிப்படுத்துபவர்: திரு.செ.பாஸ்கரன்
15 நிமி. விமர்சனம்: சிறுகதைகளைமுன்வைத்து:திரு:ஆறு.குமாரசெல்வம்
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர் திரு;ச.ஜெயக்குமாரன்
15 நிமி. விமர்சனம்: கவிதைகளை முன்வைத்து: திருவாட்டி.ம.கோகிலா.
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்: திரு;இ.கேதாரசர்மா.
15 நிமி.– விமர்சனம்: கட்டுரைகளை முன்வைத்து; திருவாட்டி;சி.இந்துமதி.
        – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்;திருவாட்டி.க.செளந்தரி


4.00 – 4. 05 –நன்றியுரை – திருவாட்டி.ப.யசோதா.
4.05. – 4.30 - தேநீர் விருந்தும் குறும்படக்காட்சியும் கலந்துரையாடலும்         நெறிப்படுத்துபவர்:திரு.செ.பாஸ்கரன்.


இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கான முன் மொழிவுகள் ஆரம்பமாயின.நாட்டியக் கலாநிதியும் ATBC யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருக்கும் திருவாட்டி.கார்த்திகா. கணேசர் அவர்கள் என்னை வற்புறுத்தி வானொலி நிலயத்துக்கு அழைத்து அரைமணி நேர நேர்முகத்தை வழங்கி பலரையும் இச் செய்தி கிட்ட வழிவகை செய்தார். மின் பத்திரிகை நடத்தும் பாஸ்கரன் அழைப்பிதழை தன் பத்திரிகையில் பிரசுரித்து பலரும் அரிய வழிவகை செய்தார். ஜேகே தன் http://www.padalay.com  இல் அவருக்குரிய பாணியில் அதனை அறிமுகம் செய்திருந்தார். இவை எல்லாம் நாம் கேட்காமலே தாமாக முன் வந்து செய்யப் பட்டவை.

அதே நேரம் இந் நிகழ்ச்சி தயாரான போது அந்த மூன்று விடுமுறை நாட்களிலும் ஒரு பெரும் இசைவிழா அருகிருந்த பெரு நகரத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் பாரதத்தில் இருந்து வருவிக்கப் பட்டு நடாத்தப் படும் வருடாந்த விழா அது. அதற்கான ஏற்பாடுகள் மிகத்திட்டமிட்டு கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரம் சிட்னி மாநகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் நடந்து கொண்டிருந்தது.

இத்தகைய ஏற்பாடுகளின் இடையே தான் இந்த நிகழ்வும் ஏற்பாடாக்க வேண்டி இருந்தது.

தொடரும்........

                                         

2 comments:

  1. “உயர்திணை” சிறப்பாய் சிகரம் தொட வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. செந்தாமரைத் தோழி! வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete