Monday, March 18, 2013

கல்கி “நடை”

அன்ன நடை, சிங்க நடை, கம்பீர நடை, நளின நடை, மெது நடை, விரைவு நடை என நடைகள் பலவிதம்.

அட, நான் சொல்வது வசனநடை.

சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மூலமாக நம்மை காவியகாலத்துக்குள் வாழ வைத்த பெருமை கல்கியைச் சாரும். எம்மை நூற்றாண்டு தாண்டி பின் நோக்கிக் கூட்டிச் சென்ற நடை அது! கல்கியின் இந்தக் காவிய நடையை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், தெரியாத ஒரு நடையும் அவரிடம் இருந்தது. அதனை நான் சொல்வதை விட அதனை அப்படியே தந்தால் தான் நல்லது.

ஜனவரி 1954ல் அவர் இலங்கைக்கு வந்து திரும்பிய பின் ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாவது அத்தியாயம் இது.

கல்கிநடை!

 இலங்கையில் ஒரு வாரம்


தமிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது; என் இரத்தத்தில் கொதித்துக் கொண்டிருந்தது; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகி விட்டது. “ எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெருவெள்ளம் முதலிய உற்பதங்களாக உருவெடுப்பேன்!” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத்திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற்கூறிய உற்பதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன? ஆனால் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை: அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி விட வில்லை. அந்த ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் என் முன்னால் தென்பட்டன.

ஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனப் பதவிக்குத் தேர்தலுக்கு நிற்கவேண்டும். அல்லது குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும்! இது ஒரு வழி!

ஆனால், இந்த வழியில் சிறிது புகுந்து பார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலைபோல குறுக்கிட்டது. இந்த வழியில் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகு தூரம் முன்னேறி என்னைப் போன்றவர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில் பொய், புளுகு, போர்ஜரி,கள்ளக் கையெழுத்து, கள்ள மார்க்கட்டு, லஞ்சம், சிபாரிசு - ஆகிய மகானுபவர்கள் தான். அடிப்படையில் காங்கிரஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதிலிருந்தே அத்தகையோர் விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய ஆகாஸ சூரர்களுக்கு முன்னால் நாம் எங்கே? ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத் தான் நான் தேட வேண்டியதாயிற்று.

அந்த இரண்டாவது வழி, தமிழ் நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலைபோகிற பிரச்சினையாயிருப்பது உணவுப் பிரச்சினை: அதாவது உணவு இல்லாத பிரச்சினை. உணவு இல்லாத கேடு காரணமாக சில ஸ்திரீகள் குழந்தைகளை விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக் கூட விலைகூறி விற்று விடுவதாகச் செய்திகள் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்றால் வாங்கிக் கொள்ளுகிறவர்கள் அக் குழந்தைகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வாரகாலமாவது வெளிநாட்டுக்குச் சென்று விட்டு வந்தால் அந்த வரையில் உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா? இப்படியே ஒவ்வொருவரும் செய்தால்  அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒரு வார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷீ மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா? நாம் திரும்பி வரும் போது ஸ்ரீ ரோச் விக்ரோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா?

எனவே, வெளி நாட்டுக்குப் போவதன் மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித்தேன். எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக். ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத்தேன்.”உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார்: உடனே ஒரு ஸுபர் போர்ட் பம்மர் விமானம் அனுப்பவும்” என்று. “விலாசத்தார் அகப்படவில்லை” என்று தந்தி திரும்பி வந்து விட்டது! அடுத்த படியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்குக் கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா?  அல்லது “அழுகிய  வாழைப்பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால்  புரோகிதருக்குத் தானம் கொடுத்து விடு!” என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்லுகிறார்களா?

இதை நேரில் தெரிந்து கொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமூகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன். ( நாம் இங்கே ‘விஜயம் செய்தல்’ என்று சொல்வதை நமது யாழ்ப்பாணச் சகோதரர்கள் சமூகம் கொடுத்தல் என்று சொல்லுகிறார்கள்) இலங்கை போவதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.

1. கொழும்பு தமிழ் சங்கத்தார் தங்களுடய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொளள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை ‘ஒழுங்கு செய்து’ தருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

2.தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ் திருவிழாவை இலங்கையில் நடத்தவேண்டும் என்ற அழைப்பை ஒப்புக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் இலங்கையில் தமிழ் விழாவை நடத்துவதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகளை ‘ஒழுங்கு செய்து’ விட்டு வரும்படி ஸ்ரீ பெரியசாமித் தூரனையும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. பதினொரு வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்றாலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவறாமல் சொல்லி வந்தேன். அது என்னவென்றால் “உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டுமென்றால் யாழ்ப்பானத்திலே தான் காணவேண்டும்” என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனால், சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடிமருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்றாக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவமாடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பானத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்.

இப்படியாகப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லி வந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி  விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிறோம். பன்னிரெண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால்  பதிவு செய்த பத்திரம் கூடக் ‘காலாவதி” ஆகிவிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.அப்படியிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்? மறுபடியும் ஒருதடவை போய் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப்பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனால் தமிழ் கூட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லக் கூடாதென்றால் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது?

எனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ‘சமூகம்’ அளித்து விட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

இலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வது என்பது சமான்யமான காரியமல்ல.’பாஸ்போர்ட்’ வாங்க வேண்டும்: ’விஸா’ வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக் காலத்தில் இலங்கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத்தமிழர்களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடங்களில் குத்திக் கொள்ள வேண்டும்: காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்.

அம்மை ஊசி என்னை அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டுவிட்டது. ஆனால் காலரா ஊசி குத்திக் கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை ரெலிபோனில் அழைத்து ‘சுரம் வந்திருக்கிறது!’ என்றேன். ‘சும்மா வரட்டும்; பறவாயில்லை: எனக்கு பரபரபாயிருக்கிறதே! என்றேன். ‘ஆப்டித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூட புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் - பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய் விடும்!’ என்றார் டாக்டர்.

“ அப்படியா செய்தி? இருக்கட்டும்! இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியது தான்!” என்று முடிவு செய்தேன்.

ஆனால், காலரா ஊசியினால் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப்பற்றி பழிவாங்கும் எண்னத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.

சுரத்துடன் அறையில் படுத்திருந்த போது வெளியே யாரோ சிலர் வந்தார்கள். “கல்கி இருக்கிறாரா?” என்று விசாரித்தது என்காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை  “இருக்கிறார்; ஆனால் அவருக்கு காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், சரி, சரி! பிற்பாடு வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததே இல்லை! “காலரா” என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள்!

இதையெல்லாம்ம் இங்கே விபரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951ம் வருஷம் ஏப்பிரல் மாதத்தில் தமிழ் நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கைக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும் திருவாரூரிலும் கோயம்புத்தூரிலும் நடந்தது போன்ற மாபெரும் தமிழ் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அந்த விழாவுக்கு போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதிகளுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமாயிருக்கும்.


3 comments: