Friday, March 8, 2019

மு. புஷ்பராஜன்

இந்த மனிதனை ஒரு கவிதை வழியாக நேற்றுத் தான் சந்தித்தேன். வழமைபோல ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டு போகும் போது வந்து சிக்கியது அக்கவிதை. தேடல் வேறொன்றய்  இருந்ததால் அப்போதைக்கு அதனைக் கடந்து போவது மிக எளிதாக இருந்தது.

அன்றய வேளையைக் கடந்து மருத்துவ நிலயத்தில்  மருத்துவருக்காக காத்திருந்த பொழுதில் இந்த மனிதனும் அந்தக் கவிதையும் மனதில் பதிந்து போனதையும் ‘தேடிய பொருளை’ விட பாதையில் ‘கடந்த இந்தப் பொருள்’ மனதில் ஸ்திரமாக உட்கார்ந்து கொண்ட விசித்திரத்தையும் ஒரு மூன்றாம் நபராக பார்த்து அதிசயித்துக் கொண்டேன்.

இப்போது உலகம் விரல் நுனிக்குள் அல்லவா? இந்த மனிதர் குறித்து விபரம் எதுவும் கிடைக்கக் கூடுமா என்று தட்டிப் பார்த்தால் noolahan.net இல் அவரது புத்தகம் கிடைத்தது.

வாழ்க நூலகம்!

தட்டிப் போகையிலே அந்தக் கவிதைகள் பெரும் பெரும் அலைகளாக மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவை மெல்லொலிகள். வருடிச் செல்ல வல்லவை.

அவர் தன் ’நினைவழியா நாட்கள்’கவிதைத் தொகுதியின் முகவுரையில் எது என்னை கவிதையின் பால் திருப்பிற்று என்ற கேள்விக்கு ’சொற்களில் உயிரும் மொழியில் தெளிவும் லாவகமும் இவற்றுக்கூடான லயமும் கவிதைக்கு முக்கியம்’ என்கிற அதே நேரம் அறிவு சார்ந்த கருத்துக்கள் கவிதையாகி விடாது என்பதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார். அதன் ஒருவித வசீகரத்தை அவரின் கவிதைகலில் கண்டுனர முடிகிறது.

ஒரு பிரபஞ்சக் கரத்தின் மென் வருடலை; ஒரு சிறு ஸ்பரிசத்தை அனுபவிக்கும் கவிஞர் அதை சித்திரமாய் இப்படித் தீட்டல் காண்க

கரைவும் விரிவும்

கோடை சற்று விலகி நின்று
கையை அசைத்த அந்த மாலை
வேலை செய்த களைப்பு நீங்க
வீட்டில்
குளித்துவிட்டு குந்தி இருந்தேன்

வானிலோ
வாரிப்படர்ந்த வெண்மேகத்திடையினில்
வைரப் பொடி சூழ
வட்ட நிலவு.

பூமியின் புழுதி மேனியெங்கும்
பொட்டுப் பொட்டாய்
நிலவீந்த
நிழல் மரங்கள்

யோக நிலையில் செறிந்த ஒளியிடை
வாசலில் நின்ற வாழைமரங்கள்
சோகமாய் தலையை தூக்கி அசைக்க
அதற்குமப்பால்
வாதராணியோ
வெடித்த சிரிப்போடு சிலிர்த்து நின்றது.

இந்த எழிலின் இயற்கை நடுவே
இடைக்கிடை
இலைகள் சரசரக்க எழுந்த காற்று
குளித்து விட்டுக் குந்தியிருந்த
என்னைத் தொட்டு
இதமாய் செல்ல
என்னுள் நானே
மெல்ல மெல்ல கரைதல் கண்டேன்

மெல்ல மெல்ல கரைந்து நிற்க
சொல்லில் விரியாச் சுகம்
சூழலெங்கும்
சூழ்ந்திருந்த கவிதைச் சுகமெலாம்
எந்தன் சிரசுள் இதமாய் இறங்க
நானே
கவிதையாய்ச் செறிந்து பரந்தேன்.

கொடியும் கொம்பும் என விரியும் இன்னொரு கவிதையில் ஒரு பெண்ணின் உள்மன பேச்சைச் சித்திரமாய் வடிக்கிறார் இப்படியாக...

நீண்ட இடைவெளிகளின் பின்னர்
சந்தித்த போது
முகமறியாதவள் போல்
கடந்து சென்றாய்

கையில் குழந்தை
இடைவெளிகளில் கணவன்
கொடியும்
கொடிபடரும் கொம்பும்

கல்லானாலும் புல்லானாலும்
சமூகம் திணித்த
ஒழுக்கக் காற்றில்
நீயோர்
அலையும் பஞ்சு

இவற்றினிடையே
நூல்நிலைய வேப்பமரமும்
நீண்ட தூர
பஸ்பயனங்களும்
உயிர்ப்புற

உன்மன ஆலையில்
என்கலம் ஆடும்.(பக்51)

’அம்மாவின் முகங்கள்’ என்ற கீழ்வரும் கவிதை தான் எனக்கு இவரை வழிகாட்டிய வழிகாட்டிக் கவிதை. சிறியதான இந்தக் கவிதை இயலாமையுள்ள தாயின் மொத்த தாய்பாசத்தையும் கடைசிப்பந்தியில் செம்பு நிறைய நுரைபொங்க கறந்தெடுத்து வந்த பாலைப்போல பொங்கி வழிய வழிய சொல்லி விடுகிறது.

வெந்திரையாய் வீழ்ந்த காலை
அப்பத்துக்கு
மூட்டிய அடுப்பின்
வெக்கையிலும் புகையிலும்
கண்கள் சிவந்த முகம்

மாலைக்கருக்கலில்
மாதா சொரூப முன்னால்
மெழுகுதிரிகள் ஒளிமின்ன
நெஞ்சுருகி
கீழுதடு துடிக்கும் முகம்

ஊரார் உறங்கிய போதும்
அப்பக் கடைக்காய்
மாப்பிசைத்து பதப்படுத்த
தூக்கம் வருத்தும் முகம்

ஊர் துறந்து
உறவின் வேரிழந்து
நீரோடு அள்ளுண்ட
சாதனையாய் பெயர்கையில்
வாஞ்சை யெல்லாம்
கைகளில் தேக்கி
முகம் வருடி
முத்தங்கள் ஈந்த முகம்  (2000) ( பக்:93)

என் சினேகிதி கீதமஞ்சரி உலகப்பழமொழிகளை தமிழுக்குக் கொண்டு வருகையில் சுவிஸ் நாட்டுப் பழமொழியாக (65)
 ” பகல் துவைத்துப் போட்டதை இரவு அலசிப்போடும்”என்று ஒரு பழமொழியைத் தமிழுக்குக்  கொண்டு வந்திருந்தாள்.

  உலகப்பழமொழிகள்; கீதமஞ்சரி

இங்கு கவிஞரின் மனதில் நினைவுகள் அலசிப்போடும் மெந்துகிலைப் பாருங்கள். அது அமைதியான இரவின் மென் காற்றில் மென்பருத்தித் துகிலென உலருகிறது....

யாரது கால்கள்

தூர இருந்து
ஒலிக்கும் குரலினால்
ஆழ்மனக் கசிவில்
வண்ணச் சிறகு கொண்டு
வருடுபவர் யாரோ

மலரோடு சதிராட
வண்டினம் மூசும்
ஒரு கிராமத்தின் காலையில்
மார்போடு புத்தகமும்
மறுகை கோர்த்த
தாமரை மலர்களுடன்
மசுந்தி மசுந்தி போவது யாரோ....

நள்ளிரவில்
எங்கோ நாய் குரைக்க
சேற்று உழவின் மணமும்
சிள்வண்டில் ஒலியும்
காற்றில் கலந்திருக்க
தூங்க மறுத்து
விதியை நினைத்து ஒளிர்வது
யாரது விழிகள்?

அலையலையாய்
நெல்மணிக்கதிராட
நிரைநிரையாய்
வளையல்கள் களை பிடுங்கி
வாய்க்கால் குளித்து
வரம்போரம் நடைபயில
நீர் தெளித்துப் போகும்
ஈரக் கால்கள்
யாரது கால்கள்? 2001 (பக் 102)

சுயம் அழிந்து போகும் சோகம் குறித்த இக்கவிஞனின் மென்மனம் பாடும் இந்த மென்மையான தாலாட்டு ஒரு குழந்தையின் சிறு ஸ்பரிஸத்தை / மென்முத்தத்தை நினைவுறுத்தவில்லையா?

தேம்ஸ் நதியே

நதியே
தேம்ஸ் நதியே
நின்னெழில்
சூழவுள்ள மின்னொளியில்
கொள்ளை போனதேன்?

இருகரையும் உரசிச்
செல்லுமுன்
சிறுஅலையின் கானம்
வாகன ஒலிகளில்
மறைதல் முறையோ...

ஒலிகள் அற்ற இரவில்
மென் காற்றுடன்
நிலவின் ஒளி வண்ணத் தியானம்
ஏந்தும் அழகுடன்
நின் கானம் இசைக்க
நடை பயிலாயோ? 2001 (பக் 104)

நாம் எல்லாம் புலம்பெயர்ந்தோம்; புலம்பெயர்ந்தோர் பற்றிய பிம்பங்கள் பலதிறத்தின; தரத்தின. இம் மனிதருக்கு அது தனிமை அள்ளியெறிந்த சருகென படுகிறது....

புலம் பெயர்ந்தோர்

புலம் பெயர்ந்தோர்
ஆற்றோரம்
அருகிருக்கும் மரம் என்பர்
அறியார் அவர் மனமோ
தனிமை
காற்றோடு அள்ளுண்ட சருகென்று 2002 (பக் 113)

என்று பாடிய கவிஞன்

எவர் விதி எங்கென எவரறிவார்?
என் ஜென்மபூமி நினைவுகளுடன்
ஏதிலியாய் இறக்க நேரின்
சீவியத்தில் நேசித்தவர்கள்
மரணத்தில் மறவாதிருக்க
ஒரு மெழுகுதிரியை ஏற்றுவார்களா?

விலகிப் போன வெள்ளாட்டை
அது நினைவூட்டும்

என்று நிறைவு செய்கிறார். பெயர்வு என்ற அவர் கவிதை இவ்வாறு நிறைவு பெறும் போது சட்டென ஒரு கவலை வந்து சூழ்கிறது. அப்பாவி வெள்ளாடு கனகச்சிதமாய் இந்த இடத்தில் வந்து பொருந்தி விடுகிறமை கவிஞனின் வெற்றி. (பக் 65, மீண்டும் வரும் நாட்கள்)

கவிஞன் சென்று மறைந்து விட வழியே இல்லை; ரசிகர்களால் அவன் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே  இருப்பான்.

அப்புத்தகத்தை கீழ்வரும் இணைப்பில் சென்று முழுமையாய் காண்க.
நன்றி; noolaham.net

நினைவழியா நாட்கள்

No comments:

Post a Comment