Wednesday, December 27, 2023

Tree of Life

 ஒரு மரம் சொல்லும் செய்திகள் ஏராளம் உண்டு. அதனிடம் இருக்கும் அமைதி, கொடைத்திறம், அழகு, வாழ்வு, என்று மனிதர் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளம் உண்டு.

குழந்தையாய் இயற்கையிடம் இருந்து இரவல் வாங்கிய தண்ணீரையும் காற்றையும் ஒளியையும் உண்டு சுவாசித்து; வளர்ந்து பூத்து காய்த்து கனிந்து இலையாய், கிளையாய், பெரு விருட்சமாய் வியாபித்து, உயிரினங்களுக்கு பயன் கொடுத்து தன் வித்துக்கள் வழியாக அல்லது தன் வேரடி வழியாக தன் சந்ததிகளை பரப்பி இல்லாது போகிறது ஒரு மரம்.

அப்போ வாழ்க்கை என அது நமக்குக் கற்றுத் தருவது யாது?

மற்ற உயிரினங்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதும் அதன் வழியாக தன் சந்ததியை இந்த மண்ணில் விட்டுச் செல்வதும் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் கூட நம் வாழ்வை அப்படியே அர்த்தப் படுத்தியும் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அதில் இன்னும் எத்தனையோ வாழ்வின் அர்த்தங்கள் தொனிக்கும். என் வீட்டுக்கு அருகிலொரு மரம் உண்டு.  அது எனக்கு மிகவும் பிடித்தமான மரம்.

காலநிலைகளுக்கேற்ப அது தன் வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்களைக் கண்டு வருகிறது என்பதை கடந்த ஒரு வருடமாகக் கவனித்து வருகிறேன். அதன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை கீழே படமாகத் தருகிறேன். பாருங்கள்.

அது போலத்தான் நம் வாழ்வும் தோழர்களே! 

இரவும் பகலும் வருவது போல; மழையும் வெய்யிலும் வருவதைப் போல; நன்மையும் தீமையும் இருப்பதைப் போல; ஏற்றமும் இறக்கமும் வருவதைப் போல இந்த மரத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள்.

அது தன்னை மேலும் மேலும் புதுப்பித்தபடி பெருத்து மேலோங்கி உயர்ந்து செல்கிறது.

அது போல நம் எல்லோர் வாழ்வும் இயற்கையின் - இந்தப் பிரபஞ்சத்தின் வல்லமைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற சுலோகத்தை சுமந்தவாறு புதிய வருடத்தில் உற்சாகமாகப் பயணிப்போம்.

எல்லோருக்கும் எனது 2024 புது வருட நல் வாழ்த்துக்கள்.






மேலே இருப்பது சிட்னியின் இலையுதிர் காலத்துப் பருவம். அது மார்ச் ஏப்ரல் மே மாதத்துக்குரிய காலங்கள். அதில் இந்த நடு நிற்கும் இந்த நெடுமரம் எத்தனை அழகோடு காட்சியளிக்கிறது பாருங்கள். இலைகளை உதிர்ப்பதற்கு முன்னால் அது தன் நிறங்களை எத்தனை அழகாக காட்சிப்படுத்துகிறது. இல்லையா?


                                               


                                    


                                               

குளிர் காலத்தில் அதன் கோலம் இது. மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் சிட்னியின் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதத்திற்குரிய காலங்கள். பாருங்கள் அது தன் இலைகள் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு ஒரு பட்ட மரம் போல காட்சியளிப்பதை....





மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் செப்ரெம்பர், ஒக்ரோபர், நவம்பர் மாதத்திற்குரிய வசந்த காலத்தில் அந்த நெடுமரம் நின்ற காட்சி இது. நம்ப முடிகிறதா? பட்டுப்போன மரத்தைப் போல இலைகள் யாவையும் உதிர்த்து விட்டு நின்ற மரமா இது என்று ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?

வாழ்க்கையும் அப்படித்தான் தோழர்களே!

இப்போது இங்கு வெய்யில் காலம். இந்த மரத்திற்கு மிகவும் உவப்பான காலம் போலும்! அண்மையில் பார்த்த போது நீள நீளமான பூக்களோடு காட்சியளித்தது. அதனை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் இரு மாதங்கள் நமக்கு கோடை நீடிக்கும் என்ற போதும் இம்மரம் தன் பூக்கும் பராயத்தை கோடையின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது.





TREE OF LIFE! 

இன்னும் இரண்டு மாதங்களில் இலைகள் சிவந்து உதிர ஆரம்பிக்க இருக்கும் போது இந்த மரம் தன் ஒரு வருட சுளற்சியை நிறைவு செய்யும்.

 பாருங்கள்! இலை உதிர்காலம் வரப் போகிறது என்று அது கலங்குவதில்லை! குளிர்காலம் வந்துவிட்டதே என்று  அது கோவித்துக் கொள்வதில்லை. அது போல வசந்தகாலத்தில் அது இது தான் நிரந்தரம் என்று கர்வம் கொள்வதில்லை; பூக்கும் அதன் கோடைகாலத்திலோ அது குதூகலமும் கொள்வதில்லை.

அது அனைத்தையும் ஏற்றுக் கொண்டபடி ஒவ்வொரு வருடத்திலும் ஒரு படி உயர்ந்து செல்கிறது. மொளனமாக!!

உதிர்வதும் பின் துளிர்ப்பதும் பூப்பதும் பின் காய்ப்பதும் இயற்கையின் நியதி என்பதை இயற்கை இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது; ஒவ்வொரு அம்சங்கள் வழியாகவும்.

இப்படித்தான் நம் வாழ்வும்! வாழ்ந்து பார்த்து விடுவோம். 

இந்தப் போதி மரம் போல...

சங்க காலத்துப் புலவன் கணியன் பூங்குன்றன் சொன்னது போல ஆற்றில் விழுந்த ஓரிலையைப் போல நம் வாழ்வு! 

புதுவருட நல்வாழ்த்துக்கள்!!

Welcome to 2024!

No comments:

Post a Comment