Sunday, October 22, 2023

தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது….

 தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது,

வன்னியைக் கொண்டாடுதல்; அதன் வாழ்வியலைக் கொண்டாடுதல்; மண்ணை, மண்ணின் மகிமையைக் கொண்டாடுதல், அதன் மேல் கட்டமைக்கப் பட்டிருக்கும் வீடுகளை, குடிசைகளை,  அக் குடியிருப்புகளில் வாழும் சமான்ய  மக்களை, மேலும் அங்குள்ள மரங்களை, செடிகொடிகளை,வயல்களை, வெளிகளை, காடுகளை, கழனிகளைக் , குருவிகளை,  கால்நடைகளை, காடுகளில் உலவும் விலங்கினங்களை, வீட்டுப் பிராணிகளை என Flora,Fauna அனைத்தையும் கொண்டாடுதல் என்று அர்த்தம் பெறும்.

வன்னி பிரதேசம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. அவை முல்லையும் மருதமும் கலந்த நிலம். அங்கு சேவலுக்குப் போட்டியாக  மயில்களும் அகவும். காட்டோரம் மான்கள் சுயாதீனமாய் திரியும். பகல் பொழுதில் மாடு மேய்த்து மாலை நேர மம்மல் பொழுதுகளில் யானை விரட்டும் சிறுவர்களுக்கும்; குரங்குகளுக்கு நெளிப்புக் காட்டி குண்டுமணிகளோடு சுள்ளிகள் பொறுக்கும் சிறுமிகளுக்கும் பாலைப் பழங்களையும் வீரைப் பழங்களையும் காட்டு மரங்களே  நல்கும். காட்டுத்தேனும் தேக்கு மரமும் நிறைந்த முல்லை நிலத்தில் எருதுகளோடு கூடவே மேயச் செல்லும் கறவை மாடுகளுக்குக் குளங்களில் தண்ணீர் எப்போதும் குறையாதிருக்கும். அங்கு துள்ளி விழும் விரால் மீன்களோடு சிறுவர்கள் குதித்து நீச்சலடிக்க, வயலுக்குப் பாயும் வாய்க்கால் தண்ணீரில் புலுனிக் கூட்டம் குளித்து சிறகுலர்த்தும்,

சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் குடியிருக்கும் ஏழைக் குடியானவனின் பொட்டல் விழுந்த கிடுகுக் குடிசைகளில் ஈதல் அறம் நிறைந்து கிடக்க, ஒற்றை ஒழுங்கையால் அச்சமற்று நடந்து போவாள் பள்ளி செல்லும் பிள்ளை.

இத்தகையதான இந்த மண் குறித்த அடையாளங்கள் வடக்கு வாழ் தமிழ் மக்களின் மண்ணமைப்பில் இருந்து வேறுபட்டவை. அந்த சுண்ணாம்புக் கற்களும், செம்மண்ணுமான நிலத்தில் கல்வீடுகளும் கிடுகுவேலிகளும் பனைமரக் காடுகளும்,கம்பீரமாய் உயர்ந்து நிற்கும். புகையிலைத் தோட்டங்களும், வெற்றிலைக் கொழுந்துகளும் கிணற்றுப் பாசனமும் மண்ணின் மகிமை பேசும். கல்விக்கும், கட்டுப்பாட்டுக்கும், கடின உழைப்புக்கும், சிக்கன வாழ்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் பெயர்போன வடக்கின் சாயையிலிருந்தும் கூட வன்னி பெருமளவில் வேறு படும்.

அதே நேரம் பெளர்ணமிக் காலங்களில் மீன்கள் பாடும் தேன்நாடாகப் புகழப்படுவது கிழக்கு. அங்கு வாழும் தமிழ் மக்களின் நாட்டார் பாடல்களோடும் வடமோடி தென்மோடிக் கூத்துகளோடும்; தயிரோடு பழம் பிசைந்து; இசைபோலும் மொழிபேசி; விருந்தோம்பி மகிழ்ந்திருக்கும் கிழக்குவாழ் மக்களின் அன்றாட இயல்பிலிருந்தும் கூட வன்னி வேறுபடும். இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த மதங்களை அனுசரிக்கும் மக்கள் அங்கு ஒன்று கூடி அருகருகாகவும் சுமூகமாகவும் வாழும் மாண்பினைக் கொண்டிருக்கிறார்கள். அந்த நெய்தல் நில சமூக சாயையிலிருந்தும் கூட வன்னி முற்றிலுமாக வேறுபட்டது.

அந்த வரிசையில் மலையகத் தமிழ் மக்களை நினைத்துப் பார்க்கிறேன்! இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிப் பிரதேசங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வியலோ இன்னும் ஒரு படி வேறானது. துயர் நிறைந்தது. தேயிலை இரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக குளிருக்கும் கடிக்கும் அட்டைகளுக்கும் ஈடுகொடுத்து அன்றாடம் கடினமாக உழைத்து இன்றும் லயன்களில் வாழும் அவர்கள் வாழ்வின் துயரங்கள் எழுத்தில் வடிக்க வொண்ணாதது!

நாம் – தமிழர்களாக – அவர்களை மொழியாலும் வாழ்வாலும் ’கவனியாது’ விட்டு விட்ட குறையை – காலமகள் தமிழர்களுக்கு ஒருநாள் உரத்த மொழியில் எடுத்துச் சொல்லக் கூடும். அதன் எதிரொலி ஈழத் தமிழர் புலம் பெயர்ந்த தேசங்கள் வரை கேட்கவும் கூடும்.....

இவர்களோடு, இஸ்லாமியத் தமிழ், கொழும்புத்தமிழ், மற்றும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் தமிழியங்களுமாக - இருக்கும் அத்தனை சிறு சிறு நீரோடைகளும் தமிழ் என்ற பொதுவான பெரு நதியில் அதனதன் பண்பு நலன்களோடும்; தனித்துவ தன்மைகளோடும்; சமத்துவமாக, தயக்கமேதுமற்ற தமக்கேயான பெருமிதத்தோடும்; இணக்கப்பாட்டோடும் ( hormony) ஒன்றுகலக்கும் போது தான் ஈழத்தமிழுக்கான முழுமையான இலக்கியமும் அதற்கான இலக்கிய முழுமையும் கிட்டும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால் அது ஒரு பெரும் வண்ணமயமான வெளிச்சத்தை நம் தமிழுக்கு பாய்ச்சும் என்பது நிச்சயம்.

அஃது நிற்க,

இந்த வகையில் புவியியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தனக்கென தனி அடையாளங்கள் கொண்ட வன்னி மண்ணை அதன் அத்தனை சாயல்களோடும் மண் வாசம் மாறாமல் பதிவு செய்தவை தாமரைச் செல்வியின் கதைகள். காலம் இயல்பாக  நமக்கு அவரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இன்றய தொழில்நுட்ப யுகத்தில் நின்று கொண்டு 70களின் வாழ்வியலை கற்பனை பண்ணுவது கூட இன்றுள்ள இளம் சந்ததியினருக்குக் கடினமாக இருக்கக் கூடும். 70களில் தொலைக்காட்சிகளோ, தொலைபேசிகளோ இருக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. வன்னிப் பிரதேசங்களுக்கு மின்சார வசதி கூட அதிக பேரிடம் இருந்திருக்கவில்லை. இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சாதனம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து தமிழ் சேவையும், ( ஸ்ரீமாவோ ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட தென்னிந்திய சஞ்சிகைகளின் முடக்கத்தால் ) எழுச்சி பெற்ற வீரகேசரிப் பிரசுரங்களும் பத்திரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளும் தான்.

இன்று நாம் பெண்விடுதலை பற்றி  நிறையப் பேசுகிறோம்; நிறைய மாறி இருக்கிறோம்; இப்போதும் மாறி வருகிறோம்; இனியும் மாற்றங்கள் வரும் என்று நம்பலாம். ஆனால் தாமரைச் செல்வி வாழ்ந்த ஆரம்ப காலச் சூழலில் ஒரு விவசாய வாழ்க்கைச் சுமைகள் கொண்ட ஒரு பின்புலத்தில் இள வயதில் திருமணமாகிய பின்பும்; இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாகிய பின்பும்; ஏறும் சுமைகளுக்கு மத்தியிலும் அவரது கதைப் புலங்கள் மண்ணின் பதிவுகளாக அதன் அச்சொட்டான இயல்பை பதிவாக்கி இருக்கின்றன என்பது எத்தனை பெரிய சாதனை!

ஆண்களால் இலக்கிய உலகில் கால் பதிக்க இருக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் ஒரு பெண்ணாகக் குடும்ப சுமைகளைச் சுகமாகச் சுமந்து கொண்டு, விவசாய வயல்வெளி வேலைகளுக்கும் உதவிக் கொண்டு, பிள்ளைகளை - அவர்களின் தேவைகளை - படிப்புகளையும் கண்காணித்துக் கொண்டு மூத்த சகோதரியாக தன் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டு, இலக்கிய உலகில் தொடர்ச்சியாக வலம் வருவது என்பது அத்தனை சாமான்ய விடயம் அல்ல. இவற்றை எல்லாம் சுமந்த படி சுமார் 50 ஆண்டுகளாக வன்னியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாரிய பணியை பெண்மை நலம் மாறாமல் அவர் அநாயாசமாக செய்து வந்திருக்கிறார்.

அந்த இலக்கிய வடிவங்களில் தெரிவது எல்லாம் வன்னியின் பண்பு நலம்.

அவை வன்னிப் பகுதியின் வயல் வெளிகளைப் போல தமிழ் இலக்கியப் பரப்பில் வன்னி மண்ணுக்கான இலக்கிய அறுவடையாக பரந்து பொலிந்திருக்கின்றன. தனது கட்டுக்கோபான சிந்தனைகளின் ஊடே கண்ணியமும் அக்கறையும் பொறுப்புணர்வும் மீதுர, வன்னியின் வாழ்வை இலக்கியமாக்கி இருப்பவை அவரது எழுத்துக்கள். அவர் வன்னி இலக்கிய வடிவத்திற்கு ஆண்மாவாகவும் உடலாகவும் ஓருருவம் கொடுத்திருக்கிறார். எளிய வாழ்வுக்குரித்தான அம் மக்களை இலக்கியப் பல்லக்கில் ஏற்றி வைத்தவை அவரது எழுத்துக்கள்.  தனித்துவமான வன்னியின் சாயலை தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டு வந்தவை அவர் கை பிடித்த பேனா. அவை தனித்துவமான ஈழத்து இலக்கியக் கருப் பொருளுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

நிலத்தினடியில் ஆழ வேரூன்றி, உயர எழுந்து, விழுது பரப்பி, ஊரே இருந்து போக நிழல் தந்து, சாப்பிட்ட உணவினை அசைபோட்டபடி இளைப்பாறும் ஊர் மாடுகளுக்கு அதன் அடிமடியிலே இடம் கொடுத்து, பல பறவைகள் சந்ததி சந்ததியாகக் கூடுகட்டி வாழ கிளை தந்து, அவ் ஊர் மக்களின் சுகதுக்கங்களையும், இரகசியங்களையும், புறணிகளையும், காதல் சல்லாபங்களையும், சண்டை சச்சரவுகளையும், அழுகைகளையும் உவகைகளையும் பார்த்த படி ஊர் நடுவே உயர்ந்து நிற்கும் ஒரு பேராலமரம் போலும் அவர் அந்த மண்ணின் விழுமிய சாட்சியாக இருக்கிறார். அவரது படைப்புகள் அவற்றை வழிமொழிந்து நிற்கின்றன.

வன்னி மண்ணின் அமைதிக் காலங்களில் அதன் எழிலையும் அதன் தனித்துவத்தையும் செவ்வனே அவர் பதிவு செய்திருக்கிறார்.  அதே மாதிரி வன்னி மண் போர்களைச் சந்தித்த போர் காலங்களின் போதும்; பின்னர்  இடம்பெயர்ந்து, சரண் புகுந்த, வடதமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த போதும்; போராளிகளின் பாசறையாக; இலங்கை, இந்திய இராணுவம் புகுந்துவிட முடியாத பேரரனாக, அது விளங்கிய போதும்;  அதன் முகத்தையும் சமூகத்திற்கு அவர் தன் எழுத்துக்களால் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

பின்னர் அவலங்கள் நிகழ்ந்த போதும், இழம்புகள் சம்பவித்த போதும் தோல்விகளைக் கண்டபோதும் மண் கொண்ட மாற்றங்கள் அவர் கதைகளில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. இடம்பெயர்ந்த போது இடப்பெயர்வின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறார். புலம்பெயர்ந்த பிறகு புலத்தின் தன்மைகளையும் அவர்  பதிவு செய்திருக்கிறார்.  சுமைகளில் இருந்து உயிர்வாசம் வரையான அவரது படைப்புகள் அதற்குச் சாட்சி.

இந்த சந்தர்ப்பத்தில் காட்டாறு எழுதிய செங்கையாழியானையும் நிலக்கிளி எழுதிய பால மனோகரனையும் ஒரு தடவை நினைத்துக் கொள்கிறேன். தாமரைச் செல்வியின் முதலாவது நாவலான சுமைகளோடு வைத்தெண்ணத்தக்க அவை வன்னியின் வாழ்வை பிரதிநிதித்துவப் படுத்துவன. வன்னியைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தத்ரூபமாக தூக்கி நிறுத்தியவை அவை!

தாமரைச் செல்வி என்பவர் தனி ஒருவரல்ல; அவர்  வன்னிக்கான இலக்கியப் பிரதிநிதி. வ.ஐ.ச. ஜெயபாலன் 1968ல் எழுதிய கவிதை ஒன்றில் வன்னியை இப்படிப் பதிவு செய்வார். ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் வெளிவந்த அக் கவிதை, இவ்வாறு நகர்கிறது. 

’துணைபிரிந்த குயில் ஒன்றின் 

சோகம் போல; 

மெல்லக் கசிகிறது 

ஆற்று வெள்ளம். 

காற்றாடும் நாணலிடை 

மூச்சுத் திணறி 

முக்குளிக்கும் வரால் மீன்கள். 

ஒரு கோடைகாலத்து மாலைப் பொழுது அது! 


என்னருகே 

வெம்மணலில் 

ஆலம்பழக் கோதும் 

ஐந்தாறு சிறு வித்தும் 

காய்ந்து கிடக்கக் காண்கிறேன். 

என்றாலும் 

எங்கோ வெகு தொலைவில் 

இனிய குரல் எடுத்து 

மாரிதனைப் பாடுகிறான் 

வன்னிச் சிறான் ஒருவன்.’ 

என்று அந்தக் கவிதை வன்னியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பாடும். அந்த நம்பிக்கையாக – மாரிதனைப் பாடிய வன்னிச் சிறானாக - 70 களில் வன்னி இலக்கியத்திற்குக் கிடைத்தவர் தாமரைச் செல்வி.

தாமரைச்செல்வி தந்தவைகள் கதைகள் தான் என்ற போதும், அதன் கருவில் எப்போதும் ஒட்டிநிற்பவை உண்மைகள்; மண்வாசம் மாறா மெய்மைகள். பொய்யான ஒன்றை அவர் ஒருபோதும் புனையவில்லை. புகழுக்காகவும், பிரபலத்திற்காகவும், பாராட்டுக்களுக்காகவும் அவர் கதைகள் ஒருபோதும் மண்டியிட்டதில்லை. சலுகைகள் அவர் பேனாவைச் சரியச் செய்ததில்லை. புகழ் அவரைப் போதை கொள்ளச் செய்ததில்லை. எப்போதும் சமூகப் பொறுப்போடும் மண்மீதான நேசிப்போடும், ஆத்மார்த்தமான உண்மையோடும் ஒருவித அமைதியோடும் நிதானத்தோடும் பயணிப்பவை அவரது கதைகள்: அவரும் தான்.

வன்னி என்ற பெரும் பரப்பின் ஆத்துமமும் தாமரைச் செல்வியின் ஆத்துமமும் ஒன்று கலக்கும் இடமும் அது தான். அவர் ஒரு காலகட்டத்து வன்னியின் ‘காலம்’.

ஒரு தடவை, அவரோடு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் ‘ உங்கள் கதைகளில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிகளில் பல தசாப்தங்களாகக் குடியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்து போகிறார்கள். ஏன் நீங்கள் அவர்களை உங்கள் கதைகளுக்குப் பிரதான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை? அது ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கிறதே! என்று கேட்டபோது, அதற்கு அவர், ’அது உண்மை தான்; இந்த விடயம் பரந்த அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று. அவர்களுடய வாழ்வும் வலிகளும் பத்திரமாகவும் பவித்திரத்தோடும் கையாளப்பட வேண்டியவை. எனக்கு அவர்களின் மலையக வாழ்வு பற்றியும் இங்கு இடம் பெயர்ந்ததன் பின்னணி பற்றியும் அதிகம் தெரியாது. தெரியாததை என்னால் சொல்லமுடியாது; சொல்லக் கூடாது. ஆனால் அவர்கள் என் கதைகளில் எப்போதும் ’அவர்களாகவே’ வந்துபோவார்கள்’;என்றார்.

அது தான் தாமரைச் செல்வி.

அகத்தியரின் பிள்ளையார் தட்டி விட்ட கமண்டலத்தில் இருந்து பெருகிய காவேரியாக அவரது பேனா மை வன்னியை செழுமைப்படுத்தி, மகிமைப் படுத்தியிருக்கிறது. வயல் நீளத்திற்கும் நீண்டு செல்லும் காலத்தின் நீட்சியில்; அந்த எழுத்தின் பாதையில்; அவர் வன்னியின் ’காலத்தைச்’ சுமந்தபடி ‘வன்னியாச்சியாக’  நடந்து சென்றிருக்கிறார். 

அந்த நடமாட்டம் தென்பகுதிக்கு வந்து சரிந்த பூமியை நிமிர்த்திய அகத்தியரின் நடமாட்டம் போல்வது.

அவரைக் கொண்டாடுதல் என்பது வன்னியைக் கொண்டாடுதல். 


- யசோதா.பத்மநாதன். சிட்னி. 22.10.2023.

No comments:

Post a Comment