Monday, December 3, 2012

என் நாட்குறிப்பின் சில பக்கங்கள்.........





சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய, சொர்னாச்சி, அஸ்வகோஷ்.


பாடலிபுத்ரத்து பிக்கு அவன். காந்தாரநாட்டில் பெளத்தத்தைப் பரப்புவதற்காக கனிஷ்கன் சங்கத்தாரைக் கேட்ட போது அவர்கள் அஸ்வகோஷை அனுப்பிவைத்தார்கள். அவன் கனிஷ்கனின் தலைநகரான பெஷாவாரை அடைந்த போது சகர - கிரேக்க - துருக்கிய - பாரசீக - பாரத நாட்டு நாகரிகங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த சங்கம் ஒன்று வந்திருப்பதாக கனிஷ்கன் உணர்ந்து கொண்டதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. அந்த அளவுக்கு அவன் எல்லா தத்துவங்களையும் கற்று அவற்றில் இருந்த சிறந்த அம்சங்களை எல்லாம் இணைத்து அவற்றைப் பாரத மயப்படுத்தி பாரத தத்துவபாரம்பரியத்துக்குப் புது வழியைக் காண்பித்தான் என்பர்.

அவற்றோடு அவன் காவியங்கள், நாடகங்களை எல்லாம் எழுதினான். அவனது புத்த சரிதம்,செளந்தரியானந்தம் ஆகிய இரண்டும் இணையற்ற காவியங்கள். அவனது சாரி-புத்ர-பிரகரன் என்ற நாடகம் 1700 வருடகால பழைமை மிக்கது. அவனது இதயராணி பிரபா பற்றிச் சிறந்த கவிதைகளை எழுதினான்.

அவனது எல்லா சிருஷ்டிகளிலும் அவன் தன் பெயரை “ சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய சுவர்னாட்சியின் புதல்வன் அஸ்வகோஷ் எழுதியது” என்று முத்திரை இட்டிருந்தான்.

இதன் மூலம் தான் பிறந்த இடத்துக்கும் தன் தாய்க்கும் அழியாப் பெருமையை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறான்.

பேனாபிடிப்பவர்கள்; வெகுசனதொடர்புசாதனங்களைக் கையாளுபவர்கள் கொஞ்சம் இது பற்றிச் சிந்திக்கலாம்.

உங்களுடய தனி முத்திரை எது?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

22.11.2012


சுமார் 12 வருடங்களுக்கு முன் நான் வேலையில் சேர்ந்த நாள் இது. இந்த 22ம் திகதியோடு எனக்கேதோ ஒரு அழிக்கமுடியாத கணக்கு ஒன்று இருக்கிறது. முக்கியமான முடிவுகள் பல இந்தாநாளில் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன. புலம்பெயர்ந்தது ஒரு 22ம் திகதி. வாகன அனுமதிப் பத்திரம் கிட்டியது ஒரு 22ம் திகதி. என் முதல் கார் வாங்கிய போது அதனை வருடாந்தம் புதிப்பிக்க வேண்டிய அனுமதிப்பத்திரம் எடுக்கவேண்டிய கடசி நாள் 22.11.

அதனால் கடந்து போன 22ம் திகதியைக் கொஞ்சம் பயத்தோடு சந்திக்க ஆயத்தமானேன். எல்லாவற்றிலும் வலு கவனமாக இருந்தேன். அவதானமாக வாகனம் ஓடினேன். கேட்டவர்களுக்கெல்லாம் வாகனம் ஓடும் பாதையை இலகுவாக விட்டுக் கொடுத்தேன். நண்பர் ஒருவர் வேலைக்கு கொண்டுசென்று விடக்கேட்ட போது கொண்டு சென்று விட்டேன். அப்போது கூட இந்த 22ம் திகதி பற்றி உரையாடியபடியே போனோம்.

வேலைக்குப் போகும் வரை எல்லாம் சுபம்! வேலை முடிக்க கடசி 2 மணித்தியாலங்கள் இருக்கும் போது மேலிடத்தில் இருந்து எனக்கு வருமாறு அழைப்புக் கிட்டியது. என்னவென்று தெரியாமல் மேலிட உத்தரவுக்குப் போவதென்பது இறந்த பின்பு judgment Day க்குப் போவது போல! எல்லோரும் என்னை இராணுவம் அழைத்துச் செல்லும் ஒரு அப்பாவியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் வீச்சு எனக்குத் தெரியும். திகிலூட்டும் பார்வைகள் அவை!

என் வேலை வளாகத்துக்குள்ளேயே அவ்விடம் போய் சேர 3 நிமிடம் பிடிக்கும். போகும் போது நான் என்ன செய்தேன் என சுயபரிசோதனை செய்து பார்த்தேன். குறைந்த பட்சம் தாக்குதலுக்கு என்னைத் தயார் படுத்தும் மூளை மனதுக்குக் கொடுக்கும் சமிக்ஞை அது. அது எனக்குள்ளான என் மனமும் மூளையும் பேசிக்கொள்ளும் பாஷை .தெரிந்தவரை தவறேதும் செய்யவில்லை என்பது சொற்ப ஆறுதல். நிறைய சுகயீனம் காரணம் காட்டிய விடுமுறைகளை எடுத்திருக்கிறேன். உண்மையில் சுகவீனம் அற்றிருந்த பொழுதிலும். அது ஒரு காரணமாக இருக்கலாம் என மனம் அனுமானித்தது.

இவ்வாறு எண்ணமிட்டபடியே போன போது அங்கே என்னுடயமேலதிகாரி, என் மேலதிகாரிக்கு மேலதிகாரி, அவருடய மேலதிகாரி என மூன்றுபேர் வரிசையாக உட்கார்ந்தபடி என் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.மனம் திக்கென்றது. விடயம் சற்றே பெரிதெனத் தோன்றியது.

உட்கார்ந்த பின் கேள்விகள் கேட்கப்பட்டன.

1,உள்ளக இடமாற்றத்துக்கு விண்னப்பித்திருந்தாயா?

ஆம். பலவருடங்களுக்கு முன் விண்ணப்பம் போட்டிருந்தேன். என் பெயர் விருப்புத் தேர்வுப் பட்டியலில் இருந்தது.

2.வேலைக்கான வாய்ப்புள்ளதாகக் கடிதம் வந்ததா?
ஆம் வந்தது. நான் வருவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்.

3.சில வினாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.அவ் வினாக்களுக்கு நீ விடை அளிக்க வேண்டும். தயாரா?

ஆம்,தயார்! ( பலகேள்விகள் கேட்கப்பட்டன. என்னுடய விடைகளும் இதுவரை என் வேலைத்தலத்தில் நான் சார்ந்த வேலை ஒழுங்குமுறைகளும் பரஸ்பரம் திருப்தியாக இருப்பதாகவும் விடுமுறைகள் எடுப்பதினால் அது விடயத்தில் சற்றே கவனம் எடுக்கவேண்டும் என்றும் ஒரு புள்ளியில் இருசாராரும் திருப்திப் பட்டு கையொப்பம் வைத்துக் கொண்டோம்.

முடிந்ததென்று எழுந்து கொண்ட போது. இரு இரு இன்னுமொரு விடயம் இருக்கிறது என்றார் மேலதிகாரி.கேள்விக்குத் தயாராகி கண்கள் அவரை நோக்க இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டேன்.

15.11.12 அன்று நம் இலாகாவைச் சார்ந்த யாரோடாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தாயா?

இந்தக் கேள்வி எனக்கு முதலில் விளங்கவில்லை. இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னபோது ஆமாம் என்றேன்.காரணம் அந்தப் புது இட வேலைக்கான வெற்றிடம் வந்திருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிட்டிய போது முடிவினை எடுப்பதற்கு முன் அந்த இடத்தையும் வேலையையும் பார்க்க எண்னியதால் அந் நிலயத்தாரோடு தொடர்பு கொண்டு வந்து பார்க்க அனுமதி கேட்டிருந்தேன்.

அந்தத் தொலைபேசி உரையாடலில் என்ன நடந்தது? முழுவதுமாகச் சொல்லவும்?

அந்தத் தொலைபேசி இலக்கத்தை நம் நிர்வாக அலகில் இருந்து பெற்றுக் கொண்டேன். அந்தத் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டபோது ஆண்குரல் ஒன்று பேசியது.(பெயர் நினைவில் இல்லை) தான் விடுமுறையில் சென்றிருக்கும் ஒருவருக்காக பதவியில் இருப்பதாக அக்குரல் தெரிவித்தது. நான் காரணம் கூறி ...........இவரோடு கதைக்க வேண்டும். அவரது தொலைபேசி இலக்கம் வேண்டும் என்று கேட்டேன். அவர் தந்தார்.

அவர் தந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டேன். அது தவறான இலக்கமாகும். அந் நபர் நான் தவறாக எடுத்து விட்டேன் என்பது பற்றிச் சற்றே கடுமையாக நடந்து கொண்டார். தவறுக்கு மன்னிப்புக் கோரி தொடர்பைத் துண்டித்து விட்டு மேற்சொன்ன நபருக்கு மீண்டும் சரியான தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்பு கொண்டேன். நம்மிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. தன்னுடய நிலயத்தின் முதன்மையான மேலதிகாரியின் பிரதான தொலைபேசி இலக்கம்  இது சம்பந்தப்பட்ட நிர்வாக சேவையில் இருப்பவருக்குத் தெரியாதிருப்பது பற்றி நான் நான் என் ஆட்சேபனையைப் பிரஸ்தாபித்தேன். அது அவரைக் கோபப்படுத்தியது. அவர் தொலைபேசியைத் துண்டித்தார்.

நான் மீண்டும் நம்முடய நிலயத்தின்  நிர்வாகப் பகுதிக்கு தொலைபேசி எடுத்து பொருத்தமான இலக்கத்தைப் பெற்று மேலதிகாரியோடு கதைத்து நேரத்தை ஒழுங்குபடுத்தி இடத்தையும் வேலையையும் பார்த்து வந்தேன்.

அவ்வளவுதான்.

நீ மிகவும் rude ஆக அந் நபரோடு நடந்து கொண்டதாக மேலதிகாரிக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதால் அது சம்பந்தமான விசாரணைகள் நடாத்தும் படி உதரவு வந்திருக்கிறது.

உன்னுடயவேலை சம்பந்தப்பட்ட அறிக்கையோடு இப்போது நீ சொன்ன பதிலும் அவரகளுக்கு தொலை நகல் மூலம் சென்றடையும்.

இப்பொழுது நீ செல்லலாம்!

வேலை காலி என்பது சொல்லாமலே விளங்கிற்று!
புல்லுக் கூட பல்லை உடைக்கும் என்பதும் கூடவே!

very expensive lesson!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சொல்லுகின்ற ஒரு சொல்


கதவைத்திறந்து வெளியே வந்த போது வெட்கமும் அவமானமும் மனதைக் கவ்வி இருந்தது. இப்படியான ஒரு மனநிலையில் நடந்து என் வேலையிடம் நோக்கிப் போனேன்.

பல நூற்றுக்கணக்கான வேலையாளர்கள் மத்தியில் இந்திய இளைஞர்கள் சிலர் அங்கு துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களைக் காணுகின்ற போது புன்னகைப்பது வழக்கம். அன்றய அப்போதய மனநிலையில் எதிர்கொண்ட ஒரு இந்திய இளைஞனைக் காணவும் புன்னகைக்கவும் தவறினேன்.

நடந்து சென்றவன் நின்று புன்னகைத்து நீ நலமாக இருக்கிறாயா? என்று கேட்டான்.

அந்த நேரத்துக்கு அந்தக் கேள்வி எனக்கு மிக வேண்டி இருந்தது.

இல்லை நான் நலமாய் இல்லை.என்ற போது ஒரு நாள் போல ஒரு நாள் இருப்பதில்லை சகோதரி. அது தானே வாழ்க்கையின் சுவாரிசம்.ஆனால் ஒரு போதும் என்னைப் பார்த்தால் சிரிக்க மறக்காதே! அது எங்களுக்கு எவ்வளவு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்பதை நீ உணர்வாயா? என்றான்.

அப்போதய மனநிலையில் எனக்கு அவனது பேச்சு ஆதரவான அமுதமாய் நோய் தீர்க்கும் மருந்து போல இருந்தது.

புல்லுக் கூட பல்லை உடைக்கும் என்றால் சமயா சமயங்களில் சாதாரணமாய் கொடுத்துவிட்டுப் போகிற ஒரு சின்னப் புன்னைகை கூட மனதுக்கு மருந்தாய் அமையும்.

அமைந்தது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் ஒரு நாள் தமிழ் வகுப்பு


இன்று சனிக்கிழமை தமிழ் பாடசாலை நாள். என்னிடம் 9ம்10ம் வகுப்பு மாணவ மானவிகள் சுமார் 12 பேர் படிக்கிரார்கள். ஒரு குறும்படம் ஒன்றுகாட்டி பரீட்சை ஒன்றுக்கான வினாக்கள் கொடுக்கத் திட்டமிட்டிருந்தேன். படம் மனுஷி. வினாத்தாளின் கடசிக் கேள்வி இப்படம் சொல்லும் சேதி (Massage) என்ன என்பது.அவர்கள் தந்த விடைகள் பின்வருமாறு:

1.கலியாணத்தை வடிவாப் பாத்து பொருத்தமா என்று பார்த்து, நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து அவசரம் இல்லாமல் கட்டோணும். இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும்.

2.பொம்பிளைப்பிள்ளையள் தான் வீட்டில எல்லா வேலையளும் செய்வார்கள். ஆம்பிள்ளையள் சும்மா இருந்து தொலைக்காட்சி பாக்கிறதும் சாப்பிட்டுத் தூங்கிறதும் தான் வேலை. பொம்பிளையள் என்னவானாலும் ஆர்வத்தோட வேலை செய்வார்கள்.

3.ஆண்கள் கலியாணத்துக்குப் பிறகு வீட்டில ஒண்டும் செய்ய மாட்டினம்.பெண்கள் நிறைய வேலை செய்து ஆண்கள Credit/satisfaction  எடுத்துக் குடுப்பினம்.communication இல்லாட்டி கூடாது. bed room ல தான் அவருக்கு அவரோட wife விருப்பம். lack of communication damage a relationship.

4.இந்தப் படம் ஒரு தமிழ் கல்யாணத்தை எங்களுக்குக் காட்டுது.

பெண்கள் தான் வீட்டுவேலைகள் செய்கிறார்கள்.வீட்டில் ஆண் ஒண்டும் செய்யமாட்டார். ஆண்கள் தங்களுக்கு ஒன்று வேண்டும் எண்டாத்தான் கதைக்க வருவார்.ஆண்கள் உதவி செய்ய மாட்டார்கள் ஆனா நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்.

5. இக்கதை சொல்லுகின்ற செய்தி, ஆண் அவர் பொண்டாட்டியுடன் கதைக்க மாட்டார். பெண் இடுப்புவலியோட எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறாள்.அவள் வலியோடு எல்லாம் செய்தாள்.

எனவே, இக்கைதை சொல்லுகின்ற செய்தி ரெண்டு பேரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

6. (மாணவன்) ஆண், பெண் இருவரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

7.பெண்கள் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆண்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நீ மாட்டலே மாயனோரா.............


இன்றய அதே நாள் பாடசாலை முடிய குடும்பத்தாரோடு சிட்னி முருகன் ஆலய கலாசாரமண்டபத்தில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஸ்ரீமதி.பத்மலக்‌ஷ்மி,சுரேஷின் அதி அற்புத நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது அது ஒரு பெரும் பேறு. அற்புத முக பாவங்கள்,எழில் மிகு தோற்றம், அடக்கமான ஆனால் அழகான ஆடை அணிகள்!

சிறந்த ஒரு கல்யாணவிருந்துண்ட மனநிறைவு! அதுவும் இலவசமாய் என்றால் பாருங்களேன்!!

ஆனால் எனக்கிருக்கின்ற அங்கலாய்ப்பு என்னவென்றால் இங்கு நடனம் பயிலுகின்ற பலநூற்றுக் கணக்கான பிள்ளைகளில் 3 - 5 அளவிலான மானவிகளும் அதே அளவான ஆசிரிய மணிகளும் வந்திருந்தது தான்.

பகட்டுக்கும் பேருக்கும் பெருமைக்கும் அந்தஸ்துக்கும் கலை பயிலும் நம் கூட்டம். பாரதமோ எனில் கலையைத் தன் ஆத்மாவில் இருத்தி வைத்திருக்கிறது. அதனால் தான் அது அப்படி ஜொலிக்கிறது.இங்கு நடனம் பயிற்றிவிக்கும் நடன் ஆசிரியர்களிடம் கூட அந்த வகையான அர்ப்பணிப்பு, ஆர்வம், நடனத்தைத் தன்னுடயதாக்கி தன்னுடய சுவையாக அதை நமக்கு தரும் இதம் - இதெல்லாம் இல்லை என்று தான் தோன்றுகிறது. பாரத பெண்கள் அதைத் தம் வாழ்வாதாரமாக - வாழ்வின் இருப்பாக - அதை ஒரு பேறாக - வரமாக எண்னுகிறார்கள். நம்மவரோ இறுமாப்புக் கொண்டு விடுவதால் அந்த ஆத்மலயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றது.

ஆட்கள் போதாதிருந்தது இன்னொருகுறை.60 டொலர் டிக்கட் என்றால் இன்னும் பல சனம் கூடி இருக்கும்! இலவச நிகழ்ச்சி அல்லவா? வந்தால் பெருமை இல்லை. அது கூட ஒரு விதத்தில் நல்லது தான். வந்திருந்த பார்வையளர் கூட்டம் தான் உண்மையான ரசிகர்கள்! மிக வேண்டி இருந்த சபையும் கூட!

1.நவரசங்களைச் செய்து காட்டி சபையிடம் இருந்து என்ன ரசம் என்று கேட்டு பரிசு வழங்கி ரசிகர்களை ஈடுபாடுறச் செய்தார்.

2.பார்வையாளர் தெரிவுக்கு சில பாடல்களைக் கொடுத்து நடனத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்.

3.சிட்னி முருகன் பற்றிய பாடல் ஒன்றை (யாழ் பாணன் பாடிய முருகா.....என்று தொடங்கி சிட்னியில் கோயில் கொண்டாயோ .....என்று இடம்பெறும் யாழ்ப்பானத்தவர் இயற்றிய கீர்த்தனைக்கு தானே நடனம் அமைத்து சிட்னிமுருகன் சந்நிதானத்தில் அதனை அரங்கேற்றி தெய்வீகம் பொலியச் செய்தார்.

4,இறுதியாக வந்தே மாதரம் பாடி இந்தியக்கொடி பிடித்து தான் பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்த்து தன் குரு தாய் தந்தை கணவனுக்கு நன்றி கூறி என்றென்றைக்குமாக அவர் முகத்தில் புன்னகை துலங்கியபடி இருக்க நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நீ மாட்டலே மயனோரா ............என்றொரு பாடலுக்கு நடனமாடினார். அது ஒரு வீட்டுவாசலடியில் கனவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கின்ற பிணக்கு. மூக்குத்தி, தோடு, வளையல்கள் என வாங்கித் தருவதாகச் சத்தியம் செய்த காதல் கனவன் அதைச் செய்ய மறுத்து விட்டதால் பெண்ணுக்கு வருகின்ற disappointment. சொன்ன வாக்கைத் தவறவிட்டுவிட்டாய் என்பதால் விளையும் ஒரு பெண்னின் ஆற்றாமை கோபம், கதவை அடித்துச் சாத்தும் லாவகம்! ஆஹா! பிரமாதம்!

ஆத்மீக அர்ப்பனம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. மூன்றுமணி நேரத்துக்குள் ஒரு வாழ்க்கை முறையை கலையின் ராஜகளையூடாகக் காட்டி விட்டுப் போனாள் அப்பெண்! எனக்கென்னவோ சிட்னி நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

இது சிட்னி நடனமாதர் கவனத்துக்கு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆலய தரிசனம்


நான் ஒன்றும் சடங்குகளில் ஆலயத்துக்குச் சென்று கடவுளை வணங்குவதில் எல்லாம் ஆர்வமும் நம்பிக்கையும் அற்றவள். அதற்காக கடவுள் நம்பிக்கை அற்றவள் என்றில்லை. ஆத்மீகத்தில் நம்பிக்கை கொண்டவள். தத்துவங்களில் பற்றுக் கொண்டிருப்பவள், மதங்களைக் கடந்து தத்துவம் என்ன சொலின்றது என்பதை விமர்சனநீதியாகப் பார்த்து பிடித்த விடயங்களை எல்லாவற்றிலிருந்தும் சேகரித்து எனக்கென ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பவள்.

பெளத்த தத்துவம் கொஞ்சம், ஹரேராமா ஹரேகிருஷ்னா இயக்கத்தினரின் தத்துவச் சாறு ,தத்துவஞானிகளின் கருத்துக்களில் இருந்து கொஞ்சம், ராஜயோகா இயக்கத்தினரின் தியான வாழ்விலிருந்து கொஞ்சம்,பாரம்பரிய இந்துமத நம்பிக்கைகள் கொஞ்சம் ..என எல்லாம் சேர்த்து குழைத்த கலவை என் ஆத்மீக வாழ்வு! வாழ்க்கை பற்றிய என் வழித்தடங்கள் இவற்றை அடியொற்றியவையே!

இன்று பலவருடங்களுக்குப் பின் கோயிலுக்குப் போனேன். நடன நிகழ்ச்சியைக் காண. பூசை நேரம் இடைவேளை விட்டதால் பூசை பார்த்தேன்.

சரணாகதி தரும் அமைதியை எப்போதேனும் நீங்கள் உணர்ந்ததுண்ட? அது தரும் ஒரு அசாத்தியமான அமைதியை எந்த ஒரு தத்துவமும் தந்து விடாது என்று இப்போது தோன்றுகிறது

அதானால்  கோயிலுக்குப் போங்கள். பூரணமாய் எல்லா கவலைகள், பிரச்சினைகளையும் முற்று முழுதாக நம்பி அவர் கையில் கொடுத்து விட்டு வெறுங்கையோடும் முழு அமைதியோடும் வீடு வாருங்கள்!

மிச்சம் அது நல்லதோ கூடாதோ அவன் செயல்.எல்லாம் நன்மைக்கே என்ற ஞானோதயத்தை அது தரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

stress ஆக எனக்கென்று இருக்கிறது சில வழிகள் :-)


உங்களுக்கு எப்போதேனும் மற்றவர்களுக்குச் சிறியதாகத் தெரியும் விடயங்கள் உங்களுக்கு அதி முக்கியமானதாக; சகித்துக் கொள்ள முடியாததாக இருந்திருக்கிறதா?

எனக்கு இருக்கிறது.

1.குளாயில் தண்ணீரை வீணே ஓட விட்டு விட்டு  பக்கத்தில் நிற்பவரோடு கதைத்துக் கொண்டு நிற்பவரைக் கண்டால் (பெரும்பாலும் வேலைத்தலத்தில்)

2. வேலையிடத்தில் கைதுடைக்க வைக்கும் தாள்களை ஒரு தொகையாக அள்ளிக் கொண்டு போபவர்களைப் பார்த்தால் (ஒன்று நன்றாகப் போதும்)

- இவைகள் எல்லாம் என்னுடயதில்லை என்கின்ற போதிலும்!

3.எல்லோரும் இருக்கின்ற இடத்தில் சத்தம் போட்டு கதிரையை இழுத்துக் கொண்டு செல்பவர்களைக் கண்டால், சத்தத்தைத்தைக் கேட்டால்.

4.சத்தம் போட்டு சாப்பிடுபவர்கலை, உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பவர்களைக் கண்டால், கேட்டால்

5.சுவாரிசமாக ஒரு மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது சத்தம் போட்டு தம்மிடையே உரையாடிக்கொண்டிருப்பவர்களைக் கண்டால்

6.உரத்துப் பேசியபடி இருக்கும் தொலைபேசி உரையாடல்கள்

7.லிப்ட்டின் பட்டினை பல தரம் அமத்துபவர்களைக் கண்டால்

8.கணனிப் பொத்தான்களைப் பலமாக அழுத்துபவர்களைக் கண்டால்; அது போல பியானோ பட்டின்களை மென்மையாகக் கையாளத் தெரியாமல் பலமாக அதனை அடிப்பவர்களைக் கண்டால் ( சில விரல்கள் அத்னோடு விளையாடுவது போல இசையைத் தருவிக்கும்.அதனைப் பார்ப்பதே ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போலிருக்கும்.)

9.அவசரமாக எங்கேனும் போய் கொண்டிருக்கும் போது 80 zone இல் 50 அல்லது 60இல் முழு lane இனையும் parallel ஆகப் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற track காரர்களைக் காணுகின்ற போது.

10. SMS செய்யுங்கோ நான் முக்கியமான கூட்டத்தில் இருப்பேன் என்று சொன்னால் போன் பண்ணுபவர்கள்! phone அந் நேரம்  silent mode இல் இருக்கும் நீங்கள் தகவலை அதில் பதிவு செய்து விடுங்கள் நான் பிறகு பேசுகிறேன் என்று சொன்னால் அதனைச் செய்யாமல் உங்களுக்கு போன் பண்னினனான். அது massage க்குப் போகுது. அது தான் இப்ப call பண்ணினனான் என்று சொல்பவர்களைக் கண்டால், மேலும் 10 மணிக்குப் பிறகு call பண்ணுங்கோ என்றால் தவறாமல் 9 மணிக்கு call பண்ணுபவர்களைக் கண்டால்.....ஏன் இப்படி இருக்கிறார்கள்?

அல்லது நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

இப்படிக் கொஞ்சம் இருக்கிறது stress ஆக எனக்கென்று சில வழிகள்!

சுஜாதா 1983 இல் எழுதிய “முதல்மனைவி” என்ற சிறுகதை மனதில் நிழலாடிச் செல்கிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இவை மிகச் சூடாக இருக்கின்றன. இவற்றைக் கொஞ்சம் ஆறப்போட வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. எப்போதேனும் அப்படிச் செய்து பார்த்திருக்கிறீர்களா?

நம்மை நாம் சரிபார்த்துக் கொள்கின்ற இடம் அது.

அடுத்தவாரம் மீண்டும் ஒரு தடவை இதனைச் சரிபார்த்து மனம் சரி என்றால் மட்டும் பிரசுரிக்கும் உத்தேசம்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வொல்காவில் இருந்து கங்கைவரை 


பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்த ”வொல்காவில் இருந்து கங்கை வரை” என்ற புத்தகம் இணையத்தில் வாசிக்கக் கிட்டுகிறது. இப்பக்கத்தின் அருகில் இருக்கின்ற விருப்பத்தேர்வுப் பட்டியலில் TVU என்ற இனையப்பக்கத்தில் இருந்து அப்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் அதனை முகவுரையில் இருந்து ஆறுதலாக வாசிக்க ஆரம்பியுங்கள். அது உங்களை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

25.11.12
ஒரு சந்தோஷப் பொதி


சிங்கைநகரில் இருந்து கண்னன், ஷைலு, 3மணிநேரவேறுபாடு இருக்கின்ற ஒரு மாநிலத்தில் இருந்து ( Western Australia ) கிருபா அவர் மனைவி, Melbourne மாநிலத்தில் இருந்து மம்மி,டடா, குமரன், மற்றும் சூட்டி, அவவின் கணவர், இரண்டு குழந்தைகள் என ஒரு நாள் காலை சந்தோஷப் பொதி ஒன்று என் வீட்டு வாசல் வழி உள் நுழைந்தது.

அவ்வளவு தூரம் இருந்து என்னைக் காண வந்திருந்தார்கள். பிரமிப்பாய் பரவசமாய் ஒரு வித உணர்வு!

குழந்தைகளோடும் வயதானவர்களோடும் சுமார் 12, 13 மணிநேர கார் பயணம் செய்து! சுமார் 17 வருடங்களின் பின்னால் கண்டோம்! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?

நம் ஒவ்வொருவருடய வாழ்க்கையும் ஒரு பயணம் என்றால் அதில் சந்திகள், திருப்புமுனைகள், விபத்துக்கள், சுவாரிஷங்கள் என்றெல்லாம் இருக்கும் தானே.

என் வாழ்விலும் அப்படி சில கணங்கள் இருக்கின்றன.ஞாபக ஏடுகளில் மறக்கமுடியாத பக்கங்கள் அவை.

1.A/L பரீட்சைபெறுபேறு வந்த நாள்

2.பல்கலைக்கழக முதல் நாள்

3.முதல்வருட பெறுபேறு வந்த நாள்

4.அதே பல்கலைக்கழகத்தில் வேலைநியமனக் கடிதம் வந்த நாள்

5.புலம்பெயர்ந்த நாள்

6.நிரந்தரகுடியுரிமை அனுப்பப்பட்டிருக்கிறது, நீ அண்மையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் கடவுச் சீட்டோடு சென்று உன் நியமனத்தைப் பெற்றுக் கொள் என ஒரு எதிர்பாரா நாளொன்றில் மஞ்சுளா.கருணரட்ன என்ற சிங்களப் பெண்மணி தொலைபேசியில் சொன்ன அந்த நாள்

7.சிட்னியில் நான் செய்த முதல்வேலை

8.கார் லைசன்ஸ் கைக்கு கிட்டிய போது.

9.என் முதல் கார்

10. கனணியின் அறிமுகமும் தமிழ் எழுத்துரு அறிமுகமும் கிடைத்த தருணம்
............................
..........................

அதனோடு கூடவே இந்த 25ம் திகதியும் !

சந்தோஷத்தை என்னவென்று சொல்ல!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

01.12.12
நேர நெருக்கடியுடனான ஒரு சனிக்கிழமை:


இன்றய நாள் என் அக்கா மகள் திவ்யாவின் பிறந்த தினம்.மூன்று வயதினைப் பூர்த்தியாக்கும் வர்ஷாவுக்கும் இதே நாள் பிறந்த தினம்.வர்ஷா பிறந்ததில் இருந்து என் கண்பார்க்க வளர்ந்தவள். இரண்டுமே அவசியம் போக வேண்டிய இடங்கள்.காலையில் இருவருக்கும் பிறந்த நாள் பரிசுகள் வாங்க வேண்டும், கார் கழுவக் கொடுக்க வேண்டும். என் தந்தையாருக்கு வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு பொருள் வார இறுதி நாளில் மாத்திரம் என்று மலிவு விலைக்கு போட்டிருந்தார்கள். அது வேறொரு இடம். அதுவும் வாங்க வேண்டும். இதற்கிடையில் என் தனிப்பட்டமுடி திருத்த வேலை ஒன்றுக்காக ஏற்கனவே நேரத்தைப் பதிந்து வைத்திருந்தேன். மற்றும் மாலை 2.00 - 4.30 மணி வரை தமிழ் பாடசாலை. அன்று முக்கியமான HSC மாணவர்களுக்கான ஆசிரியர் பெற்றோர்க்கான கூட்டம் ஒன்று பாடசாலை முடிந்த பின் இருப்பதாக வேறு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதற்கு வேறு நின்றாக வேண்டும்.

மாலை ஆறுமணிக்கு என் ஆத்மார்த்தமான உறவுக் கூட்டம் - இளைஞர்களின் கூட்டுழைப்பில் என் மதிப்புக்குரிய பல்துறை வித்தகர் கோகிலா மகேந்திரன் அவர்களின் நெறியாழ்கையில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது. அதற்கும் அவசியம் போயாக வேண்டும். வருவீங்களோ வருவீங்களோ என்று கேட்ட அந்த இளைஞர் குரல்களை அத்தனை இலகுவில் புறக்கணித்து விட முடியாது. மேலும் மறு நாள் காலை 7.00 மணிக்கு வேலை.குறைந்த பட்சம் அதிகாலை  5.30 க்கேனும் எழுந்தாக வேண்டும்.

ஞாயிறுமாலை வேலை முடித்து வந்ததும் 5.00 மணிக்கு இலக்கிய சந்திப்பு. போன மாத சந்திப்பின் அறிக்கை இன்னும் தயாரில்லை. அதற்கான ஆயத்தங்கள் எதுவுமில்லை.

வீட்டுவேலைகள், வீடு துப்பரவாக்குதல்,சமையல், உடுப்புகளை தோய்த்துலர்த்தல் இவை பற்றி இது வரை நான் பேசவே இல்லை என்பது ஒரு புறமாக இருக்கட்டும்.

திட்டமிடல், எதற்கு முன்னுரிமை கொடுப்பது, எவற்றைத் தவிர்ப்பது?

தட்டு நிறைய உணவுகள். வயிறோ ரொம்பச் சிறிது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு சின்னச் சந்தோஷம்


அவசர அவசரமாகக் கார் கழுவுமிடத்தில் என் காரைக் கொண்டு நிறுத்தினேன். புன்னகையோடு வந்தவன் அதே அவன் தான். அவனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மஞ்சள் நிற இடுங்கிய கண்களைக் கொண்ட கொறிய இளைஞன். காரைக் காதலிப்பவன். வேலையில் நிபுணத்துவத்தைக் காட்டுபவன். முன்னர் ஒரு தடவை அவனைப்பற்றி  ஒரு பதிவு கூடப் போட்டிருக்கிறேன்.

காரை ஒரு நோட்டம் விட்ட படி முன்னர் ஒரு தடவை இந்தக் காரை நான் கழுவி இருக்கிறேன்  என்றான்.

உண்மைதான்.

எத்தனை நூற்றுக் கணக்கான கார்களைக் கழுவி இருப்பான் அவன். அதற்குள் என் காரை நினைவு வைத்திருக்கிறானே! என்பது என் இன்றய நாளுக்கான மகிழ்ச்சி!

நேர நெருக்கடிக்குள்ளும் அவன் சொன்னது தென்றலாய் மனதில் நிழலாடிய வண்ணம்.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நெருக்கடிக்களும் அதனிடையே சின்னச்சின்னச் சந்தோஷங்களுமாக என் நாட்குறிப்பின் பக்கங்கள் நிரம்புகின்றன!

உங்கள் நாட்குறிப்பின் பக்கங்கள் என்ன மாதிரி?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


Wednesday, November 21, 2012

பன்னீர் செம்பு











வரலாற்றுப் பின்புலம் காண; 
http://www.michaelbackmanltd.com/1290.html

வட இந்திய இஸ்லாமியர்களுடய திருமனச் சடங்குகளில் இடம்பெற்ற இது ஐரோப்பிய மரபு முறையைப் போலன்றி திறந்து பூட்டுகின்ற பகுதி கி.பி. 18ம் நூற்றாண்டின் இந்திய மரபுக்கேற்ப கடிகாரம் ஓடுவதற்கு எதிர் புறமாகப் பூட்டும் தன்மையைக் கொண்டிருந்ததென்று கூறப்படுகிறது.

தற்போது:

பித்தளையில் அல்லது வெள்ளியினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த மற்றுமொரு செம்பு வகையைச் சார்ந்தது  இப் பன்னீர் செம்பு. கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும்.

பொதுவாகத் தமிழ் பண்பாட்டு மரபில் நிறைகுடம் வைத்தல் என்பது ஒரு சுப தின சம்பிருதாய நிகழ்வாகும். அது ஒரு சுபீட்சத்தை வரவேற்கும் மங்கல நிகழ்வைக் குறிப்பாகக் சுட்டி நிற்கின்றது.அதில் வைக்கப் படுகின்ற நிறைகுடம், குங்குமம், சந்தனம், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு, குத்துவிளக்கு,ஊதுபத்தி  முதலானவற்றோடு இப் பன்னீர் செம்புக்கும் ஒரு தனி இடம் இருக்கின்றது.

இதற்குள் வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப் படும்.அந் நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். அதனால் இப்பாத்திரத்துக்கு பன்னீர் செம்பு என்பது பெயராயிற்று. சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம்,குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் சம்பிருதாயமாகும்.

பன்னீர் தெளித்தல் என்பது ஒரு மரியாதையை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கருதப் படுகிறது.

பருவமடைந்த பெண்ணுக்கான இந்துமதச் சடங்கின் போதும் அக் கன்னிப் பெண்ணின் கையில் நிறைகுடம் அல்லது பன்னீர் செம்பு கொடுப்பது ஈழத்துத் தமிழர் வழக்கம். அது ஒரு மங்கலத்தினதும் முழுமையினதும் நல் வரவு ஒன்றுக்கான வரவேற்பினதும் அடையாளமாகக் அக் கன்னிப் பெண்ணின் கையில் அது கொடுக்கப் படுகின்றது.

இந்தியாவில் இடம்பெறும் இந்துத் திருமண நிகழ்வுகளின் போதும் குறிப்பாக நலுங்கு நிகழ்ச்சியின் போது மணமகள் மணமகனுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இடுவதும் அதுபோல மனமகள் மணமகனுக்குச் செய்வதும் சம்பிருதாய நிகழ்வாகும்.

ஈழத்தின் இந்துத் தமிழ் திருமண நிகழ்வுகளில் மணமகளைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு முன்னால் மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பெற்றோர் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இட்டு விடுவதும் பின்னர் மணமகனின் பெற்றோர் மணமகளின் பெற்றோருக்கு அதனைத் திருப்பிச் செய்வதும் வழக்கம்.

இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற செம்பு இனத்தைச் சார்ந்த இச் சாதனம் ஒருவருக்கு மரியாதை செய்வதற்காக - ஒருவரை அல்லது ஒன்றினை வரவேற்கும் ஒரு சாதனமாக - இன்றும் அது நிறைகுடக் குடும்பத்தோடும் தமிழியல் வாழ்வினோடும் சேர்ந்திருக்கின்றது.


படப்பிடிப்பு : யசோதா. 17.11.2012


Monday, November 19, 2012

தீர்த்தச் செம்பு

தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் நீர்.பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு வீபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தப் பிரசாதங்களோடு தீர்த்தம் என அழைக்கப்படும் புனித நீர்,பால் போன்றன கொடுப்பது வழமை.

பக்தர்கள் அதனைப் பக்தி சிரத்தையோடு தம் இரு கைகளாலும் ஏந்தி அருந்துவதோடு தம் தலைகளிலும் தெளித்துக் கொள்வர். அவை தம்மை - தம் உடல் உள் உறுப்புகளைப் புனிதப் படுத்துகிறது என்பது அவர்களது மரபார்ந்த நம்பிக்கையாகும்.

இத்தகைய தீர்த்தத்தினை வழங்கும் செம்பு தீர்த்தச் செம்பென அழைக்கப்பட்டது. இதுவும் செம்பு வகையைச் சார்ந்திருந்தாலும் அதன் வடிவமும் தோற்றமும் தனித்துவமானது. இது மூடி, மூக்கு, பிடி ஆகியவற்றோடு மேற்புறம் ஒடுங்கி கீழே வர வர அகன்று அழுத்தமான அடிப்புறத்தைக் கொண்டிருக்கும்.
















ஆலயங்களில் தீர்த்தத்தினை வழங்குகின்ற ஆலயக் குருக்கள் அதனைப் பக்குவமாக ஒரு கையால் பாத்திரத்தின் பிடியினையும் மறு கரத்தால் நுனிப்புற மூடியையும் பிடித்த படி பக்குவமாக அத் தீர்த்தத்தினைப் பக்தர்களுக்கு வழங்குவார்.

பாரமும் தனித்துவமான தோற்றப்பாட்டினையும் கொண்டிருந்த இவ்வகைத் தீர்த்தச் செம்புகள் தற்காலங்களில் பாவனையில் இருந்து மறைந்து பாவனைக்கு இலகுவாகச் சிறு கிண்ணமும் கரண்டியும் கொண்ட பொருளாக மாற்றமடைந்து வருவதைக் காணலாம்.

இந்து மக்களின் பாரம்பரியத்தில் ஆலயங்களில் மாத்திரமன்றி சில இல்லங்களிலும் இவை பவனையில் இருந்ததை அறிய முடிகிறது. வீடுகளில் நடைபெறும் சமய சம்பந்தமான கிரியைகளின் போதும்; குறிப்பாக சமய ஆசாரியார்கள் வீடுகளுக்கு வந்து நிகழ்த்தும் திவசம், ஆட்டத்திவசம், துடக்குக் கழிவுகள், மற்றும் மங்கல அமங்கல நிகழ்வுகளின் போதும் ஆசாரியாரின் தீர்த்தம் முதலானவற்றின் பாவனைக்காக இவை பாவிக்கப்பட்டன.

பித்தளையினாலான பலமான அடிப்புறமும் காத்திரமான பலமும் கொண்ட இப்பாத்திரமும் இப்போது பாவனையில் இருந்து மறைந்து வருகிறது.

தீர்த்தச் செம்பின் பின்புலம்:

கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களின் வருகையோடு சித்திரவேலைப்பாடுகளும் இதனையொத்ததும் சற்றே வேறுபாடான அமைப்பினைக் கொண்டதுமான இப்பாத்திர வகைகள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. இந்திய ஓவியங்களில் இவ்வகையான பாத்திரங்கள் 17. ம் நூற்றாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. அவை பின்னர் அலங்காரம், தோற்றப்பாடு, வடிவங்களில் இந்தியப் பாரம்பரியத்தோடும் இணைந்து பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.

அக்காலங்களில் இவ்வகையான பாத்திரங்களை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பின்பற்றிய பாரத மக்கள் தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களை உபசரித்து, அவர்களின் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு இவ்வகையான பாத்திரங்களில் தண்ணீருக்கு வாசனையூட்டிப் பயன் படுத்தியதாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது.

http://www.michaelbackmanltd.com/1302.html

அங்கிருந்து பின்னர் ஏனைய நாடுகளுக்கு அவ் அவ் நாடுகளின் பயன்பாட்டு இயல்புகளுக்கு ஏற்றபடி உருமாறி இப் பாத்திர வடிவமைப்புகள் மற்றும் பாத்திரப் பயன்பாடுகள் பரவி இருக்கலாம்


( நன்றி: சந்தோஷமாக இதனைப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு : யசோதா. 02.11.2012 )

Tuesday, November 13, 2012

கூசா

கூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.

முற்றிய சுரைக்காயின்  ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.



இக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள,தமிழ், ஸ்லாமிய  மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும்.

மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும்.

இம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர்.அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள்  என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.
















சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.

மின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் இதன் பாவனை மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

காலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

தற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.

இந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.

அவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது  உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.

காண்க: பூட்டுச் செம்பு.

”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில்  தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.

படங்கள்: யசோதா: 30.10.2012.
எடுத்த இடம்: சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை seven hills, N.S.W. Australia.


பின்னிணைப்பு:

நரியும் கொக்கும் விருந்துண்ட நாட்டுப் புறக் கதை:

ஒரு ஊரில் நரியும் கொக்கும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு நாள் நரியினுடய கழுத்தினுள் ஒரு முள்ளொன்று சிக்கி விட்டதால் அது பெருத்த சிரமத்துக்குள்ளானது. அதனால் அது தன் நண்பனான கொக்கினிடம் சென்று தன் தொண்டையில் சிக்கியிருக்கின்ற முள்ளை எடுத்து விடுமாறு கோரியது.கொக்கும் தன் நீண்ட அலகினால் நரியினுடய தொண்டைக்குள் இருக்கின்ற முள்ளை அகற்றி விட்டது.

அதனால் பெரிதும் மகிழ்ந்த நரி தன் நன்றிக் கடனையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதற்காகக் கொக்கினைப் பார்த்து ஒரு நாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பு விடுத்தது.

இதனால் பெரிதும் மகிழ்ந்த கொக்கும் அக் குறிப்பிட்ட நாளில் விருந்துக்குச் சென்றது. அங்கு விருந்துக்காகச் சூப் தயாரிக்கப் பட்டிருந்தது. சூப்பின் வாசனை நன்றாக இருந்ததால் சூப்பின் சூடு ஆறுவதற்கு முன்னர் இருவரும் விருந்துண்னத் தயாரானார்கள்.

நரி தன் உண்னும் இயல்புக்கேற்ற விதமாக சூப்பினை ஒரு தட்டையான அகன்ற கிண்ணத்தில் பரிமாறியது. அவ்வாறு பரிமாறப்பட்டிருந்ததைக் கண்ட கொக்கு பெரும் ஏமாற்றமடைந்தது. அதன் கூரிய நீண்ட அலகினால் அதற்கு தட்டையான பாத்திரத்தில் இருந்த சூப்பினைக் குடிக்க முடியவில்லை. ஆனால் நரியோ மிக இலகுவாக நாக்கினால் அதனை நக்கி நக்கிக் குடித்தது.

இதனால் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்த கொக்கு அதனை வெளிக்காட்டாமல் தன்னுடய வீட்டுக்கும் நரியார் வந்து தான் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து விட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குச் சென்றது.

விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாள் வர, நரியும் மிக்க மகிழ்ச்சியோடு கொக்கின் வீட்டுக்குச் சென்றது. கொக்கும் நல்ல சுவையான விருந்தைத் தயார் செய்து இரண்டு கூசாவுக்குள் சூப்பை வைத்துப் பரிமாறியது. கூரியதும் நீண்டதுமான அலகினைக் கொண்ட கொக்கு அதனைச் சுலபமாகக் குடிக்க நக்கிக் குடிக்கும் இயல்பினைக் கொண்டிருந்த நரியால் அதனைக் குடிக்க முடியாது போனது. அதனால் நரி மிக்க ஏமாற்றமடைந்தது.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் “அவரவர் தன்மைகளை அறிந்து அவரவர் தன்மைக்கேற்ப அவர்களை உபசரிக்க வேண்டும்.”

தாகத்துக்குத் தவித்த காகம் ஒன்று கூஜாவுக்குள் கற்களைப் போட்டு தண்ணீர் உயரத்துக்கு வர, தண்ணீரை அருந்திப் பறந்த புத்திசாலிக் காகம் பற்றிய நாட்டுப் புறக் கதையில் வரும் பாத்திரமும் கூஜா எனவே அழைக்கப்பட்டமை மேலும் நினைவுகூரத்தக்கது.

இவ்விரு கதைகளும் நாட்டுப்புற மக்களிடையேயும் கூஜா என்ற சொல்வழக்கும் பொருள் பயன்பாடும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.






Saturday, November 10, 2012

பூட்டுச் செம்பு

இறுக்கமாகப் பூட்டிப் பாவிக்கக் கூடியதாக இருந்ததால் பூட்டுச் செம்பெனவும் தூக்கும் கைப்பிடியைக் கொண்டு செம்பு வகையினைச் சார்ந்திருந்ததால் தூக்குச் செம்பெனவும் அழைக்கப் பட்டது.

இதனை பாரதத் தென்னகப் பண்பாட்டுக்குரியோர் கூஜா என அழைப்பர் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பித்தளையினால் ஆன செம்பு இனத்தைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும்
7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.










தற்போது வழக்கொழிந்து போய் விட்ட இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போதயைப் போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.

பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.


(குறிப்பும் நன்றியும்: புகைப்படத்துக்காக இப் பொருளை மகிழ்ச்சியோடு  தந்துதவிய விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு: யசோதா : 02.11.2012)

Monday, November 5, 2012

வெத்திலைத் தட்டம்

பித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.



இந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்
ப + தோ + க + எனத் தமிழில்  எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்!

முகவரி:

http://www.michaelbackmanltd.com/960.html


தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும்  தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும்  தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.













திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.

மங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.

அவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் ( விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப்  பாவிக்கப் பட்டன.

காலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு,  உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த  பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.

சந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு :  யசோதா : 02.11.2012.)