Showing posts sorted by relevance for query மழலை மொழி. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query மழலை மொழி. Sort by date Show all posts

Wednesday, November 17, 2010

மழலை மொழி



சிறு வயதில் நாம் கற்பவை அப்படியே இன்றுவரை மனதில் பதிந்திருக்கும்.’இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதை மெய்ப்பிப்பது போல் அமைந்த நிகழ்வொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கு இடம் பெற்றது. அது வித்துவான் வேந்தனார் அவர்களுடைய மழலை மொழி என்ற புத்தக வெளியீட்டு விழா.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதற்கு சீரிய சிந்தனையும் நிதானமான ஞானமும் நல்ல உள்ளமும் வேண்டும்.குழந்தைகளின் உலகுக்கு இறங்கும் திறமை இருக்க வேண்டும்.அவை எல்லாம் விளங்கப் பெற்றவராகக் காலஞ் சென்ற வேந்தனார் விளங்கியிருந்தார் என்பதற்கு இன்று வரை நம் மனதில் பதிந்திருக்கும் அவருடைய பாடல்களும் அதன் உள்ளடக்கமும் அது கொண்டிருக்கும் எளிமையுமே சான்று.

மனதில் சிறுவயதுப் பாடல்களாக பதிந்திருந்த பாடல்களுக்கான காரண கர்த்தா வித்துவான் வேந்தனார் தான் என்பதையே அன்று தான் அறிந்தேன்.அத்தனை தூரம் தன்னை முதன்மைப் படுத்தாமல் பாடல்களை முதன்மைப் படுத்திய தகைமையாளர் அவர்.அதனை அவரது மகள் வெளியீட்டு விழாவிலும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பாட நூல் வெளியீட்டுத் திணைக்களம் அவரது பெயரை நூலில் குறிப்பிட மறந்தது ஏனென்று தெரியவில்லை என்று மிகுந்த விசனமுற்றிருந்தார் அவரது மகளார்.தவிரவும் அவருடய பாடல்களில் சில மாற்றங்களையும் அது செய்திருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பாடல்களை மிகச் சிறு வயதுகளில் அபிநயப் பாடல்களாகப் பாடி ஆடி களிக்கத் தந்த வித்துவானின் பாடல்கள் இப்போது மீண்டும் அச்சு வடிவில் பார்க்கக் கிடைத்தது பாக்கியமே.சிறுவயதுக்கு நம்மைக் கொண்டு சென்ற அப்பாடல்களை இன்று உங்களோடு பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

1.அம்மாவின் அன்பு

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீருமாட்டிப்
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக் கூடம்
அனுப்பி வைக்கும் அம்மா.
(’அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா’-என்பது மூலப் பிரதியில் உள்ள பகுதி)

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்டநேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளில் வைக்கும் அம்மா

பாப்பா மலர் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா



2.எங்கள் வீட்டுப் பூனை

சின்ன சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி பரனில் இருக்கும்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தால் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை



3.பறவைக் குஞ்சு

பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறக்கும் இறகு முளைத்திடாத
பறவைக் குஞ்சைப் பாரண்ணா

கூடு காற்றில் ஆடி இந்தக்
குஞ்சு விழுந்து விட்டதோ
தேடித் தாயும் தூக்க முன்னம்
செத்துப் போகும் துடிக்குதே

கட்டெறும்பும் ஊருதே
காகம் கொத்தப் பாக்குதே
வட்டம் போட்டுப் பருந்தும் இந்த
மரத்தை நோக்கி வருகுதே

மரத்தில் ஏறிக் கூட்டிலே
வைத்து விடுங்கள் குஞ்சையும்
இரக்கமாக இருக்குதையோ
இளைத்துக் கிடந்து துடிக்குதே.

Saturday, January 12, 2013

மனித விலங்கு



புது வருடம் தொடங்கி முதல் பதிவு!

எழுத மனமற்ற மனநிலை! இந்தச் சுய புலம்பலுக்கு என்னைச் சற்றே மன்னிக்க. மனப்பாரம் இறக்கி வைக்க இது ஒரு வழியாகப் புலப்படுகிறது எனக்கு.உங்களிடம் இருந்து ஏதேனும் மார்க்கமும் புலப்படலாம்.

ஈழத்து வடபகுதியில் அமைந்திருக்கின்ற மண்டைதீவில் நான்கு வயதுப் பாலகியை திடீரெணக் காணவில்லை. தேடியலைந்த போது அக் குழந்தையை வன்புணர்ந்து, கொன்று, கிணற்றுக்குள் போட்டிருக்கிறது ஒரு மனித விலங்கு!

நாலுவயசுக் குழந்தை!!

டெல்லியில் ஒரு இளம் பெண்ணை ஓடும் பஸ்சிற்குள் குழுவாகச் சேர்ந்து அப்பெண்ணின் நண்பனிற்கு முன்னாலேயே கற்பழித்து சின்னாபின்னமாக்கிக் கொன்றிருக்கிறது சில மனித விலங்குகள்!!

எந்தப் பாவமும் அறியாத இளம் பெண்!!

அவுதி அரேபியாவில் 12 வயதில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணை, அவள் பராமரித்த குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றாள் என்ற கொலைக் குற்றச் சாட்டின் பேரில் கழுத்தை வெட்டிக் கொன்றிருக்கின்றது அங்கத்தைய அரசு! அப் புத்திளம் பருவத்து பெண்ணை இறுதியாக அவள் தாயோடு கூட பேச அனுமதிக்கவில்லை அவ் அரசு!

அந்தக் குழந்தையைக் கொன்று இந்தப் பிள்ளைக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது பால் புரக்கேறி குழந்தை இறந்திருக்கலாம் என நம்பப் படுகிறது.அது ஒரு துர்அதிஷ்டவசமாக நடந்து விட்ட விபத்துமரணம் என்ற போதும், இப்பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்தி போதிய சட்ட வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமலே தீர்ப்பினை எழுதி கொன்று போட்டுவிட்டது அரபிய அரசு. கழுத்தை வெட்டுவதற்கு முன்பான அவ் இளம் பெண்ணின் நாட்கள் என்னவிதமானதாக இருந்திருக்கும்?

BBC யில் இஸ்லாமியர் ஒருவர் அதற்குக் குரல் கொடுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தில் கொலைக்கு கொலையே தண்டனையாம். அன்பும் கருணையும் இரக்கமும் இல்லாத இஸ்லாமியம் உண்மையில் மக்களுக்கு என்னத்தைப் போதிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை.

இன்றுவாசித்த இலங்கைப் புதினப்பத்திரிகையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நடந்த வாய் தகராறில் தன் ஒன்றரை வயசுக் குழந்தையை அடித்துக் கொன்றிருக்கிறது அக்குழந்தையின் தந்தையான மனிதன் ஒன்று. கூடவே அதே பத்திரிகையில் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏற்பட்ட மண்சரிவைப் பார்க்கப் போன மலையக இளந்தமிழன் ஒருவன் பெரும்பான்மை இனத்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான். இதனை 6 பேர் சேர்ந்த ஒரு குழு செய்ய, சுமார் 30 பேர் கொண்ட குழு பார்த்தவாறிருந்திருக்கிறது.

அந்தச் சிறு குழந்தை - தத்தித் தத்தி நடந்து,மழலை மொழி பேசி இருக்கும் அந்த மழலை இந்தத்தந்தைக்கு அடித்துக் கொல்லும் படியாக என்ன பிழை செய்தது? இந்த அப்பாவி இளைஞன் என்ன தவறிழைத்தான்?

நத்தார் விடுமுறைக்குப் பின்னான ஒரு நாளில் மிக ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த Life Of Pi படம் பார்க்கப் போயிருந்தோம் குடும்பமாக! Hollywood style இல் 3D யில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படம். இந்திய, சீன, அமெரிக்கக் கலப்பு!

தமிழில் ஆரம்பம் சிலிர்க்கவே செய்தது. அதில் கூட்டுக்குள் இருக்கும் புலிக்கு குருத்துப் பருவத்தில் இருந்த  ஒரு ஆட்டுக் குட்டியைத் தின்னக் கொடுத்தார்கள். அதனை நாம் பார்க்க விதிக்கப் பட்டிருந்தோம். புலி ஒரு அழகான வரிக்குதிரையைக் கொன்று தின்பதை, மனிதக் குரங்கொன்றை அடித்துக் கொல்வதை படத்துக்காகக் இம் மிருகங்களை, கோழியை கொடுத்துப் படமாக்கி இருந்தார்கள்! இறுதிக் காட்சிகளின் போது கொழுகொழு என்றிருந்த புலி எலும்பும் தோலுமாய் ஆக்கப் பட்டு படமாக்கப் பட்டிருந்தது. அது மாத்திரமன்றி நடுக்கடலுக்குள் அப்புலியை விட்டு அது தப்பத் தவிப்பதை துல்லியமாகப் படம் பிடித்திருந்தார்கள். உயிரோடு துடிக்கின்ற வாளிப்பான கடல்மீனை சிறு கோடரியால் கழுத்துப் புறத்தில் வெட்டுவதை, வால் பகுதி தனியாகத் துடிப்பதை close up ல் காட்டுகிறார்கள்.

இந்த மனித வக்கிரம் எல்லாம் ஏனைய மனித விலங்குகளான நாம் பார்த்து ரசிப்பற்காகவாம்!! என் அக்காள் பூமியின் இயற்கை நியதி அது தானே, மெலியதை வலியது பிடித்துச் சாப்பிடுவது தானே இயற்கை நியதி என வாதாடினாள்.

ஆம். ஆனால் அது பசிக்காக மாத்திரம். எந்த ஒரு காட்டு விலங்குகளும் பசிக்காக அன்றி வேறெதற்காகவும் எந்த உயிரினத்தையும் கொன்றதில்லை. இது நாம் மகிழ்ச்சியாக ரசிப்பதற்காக! என்ன ஒரு வக்கிரம்! என்ன ஒரு நம்பிக்கை இதைப்பார்க்க வரும் ரசிகர்கள் மீது!! இது ஒரு entertainment ஆம்.

ஒரு தடவை எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள் தன் நாட்குறிப்புகளில், சிறுகதைகளில் ஈழத்தவர் உடும்பினை எப்படி உயிரோடு தோலுரித்தார்கள் என்பது பற்றி, வளர்த்த நாய்க்குட்டியை விசர் பிடித்து விட்டது என்பதற்காக உலக்கையால் அடித்துக் கொன்றது பற்றி எல்லாம் தான் கண்ட அனுபவத்தில் இருந்து எழுதி இருந்தார்.

இந்த மனித விலங்குகள் இந்த பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு ஏன் ஏனைய விலங்குகளோடு இந்த உலகத்தைப் பகிர்ந்து கொள்வதில்லை என்று கூட யாரோ எங்கோ எழுதியதை வாசித்த ஞாபகம்.

உண்மையில் இதற்கெல்லாம் நாம் எதுவுமே செய்ய முடியாதா?

வாலாட்டிக் கொண்டு வரும் மனித நண்பனான, நன்றிக்கு உதாரணமான, நாயைக் கொன்று தின்பதை, நிறைமாத தாய் பசுவைக் கொன்று அதன் கன்றை வயிற்றில் இருந்து எடுத்து சமைத்துக் கொடுக்கும் ஆசிய கொடுமைகளில் இருந்தெல்லாம் நாம் மீளவே முடியாதா? இப்படி எல்லாம் செய்யலாம் என்று அவர்களுக்குச் சிந்திக்கத் தோன்றி இருக்கிறதே!

இவற்றுக்கெல்லாம் ஒரு சிறு விழிப்புணர்வைத்தானும் நாம் செய்ய முடியாதா?

உலகப் பந்து இப்போது வெப்பப் பந்தாகி மனித விலங்குகள் உட்பட எந்த விதமான உயிரினங்களும் வசிக்க முடியாத கிரகமாக இப் பூமியை ஆக்கி வைத்ததற்கு இம் மனித விலங்குகளுக்கு முழுப் பங்கும் இருக்கிறது!

எப்படியான உலகில் நாம் வாழ்கிறோம்? எப்படியான ஒரு உலகத்தை நாம் நம் எதிர்கால சந்ததிக்காக விட்டுச் செல்ல இருக்கிறோம்?

மனிதனிடம் மனித இயல்பு எங்கே?

இந்த உலகத்திடம் இருந்தும்; இவ்வாறான செய்திகளின் கொடூரங்களிலும் இருந்தும் தப்பி, எங்கேனும் இமயமலைக் காடுகளில் உலகைத் துறந்து உலவித் திரியும் சித்தர்களிடம் போய் சரன் புகுந்து கொண்டு, இந்த உலகம் பற்றி, இந்த உலகத்தின் பின்பான வாழ்வு பற்றி, பிரபஞ்ச ரகசியங்கள் பற்றி, அவர்களுடய சித்தாந்தங்கள் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு, மீண்டும் இந்த உலகத்தில் பிறக்காத ஒரு வரத்துக்காகத் தவமிருக்கத் தோன்றுகிறது.

சத்தியமாக!!