Friday, May 31, 2013

புது வருஷமும் பொற்கோயில் அனுபவமும் - 5 -

13.04.2013.

புது வருடம்!

காலை எழுந்து எல்லோரும் முழுகி  சம்பிருதாய பூர்வமாக புது ஆடை அணிந்து புறப்பட்டோம்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி கோயிலுக்கு! பெளத்த ஆலயத்துக்கு! பெயர் பொற்கோயில்.(Golden Buddha : Sukhothai Traimit) 

நான் முதல் நாள் வாங்கிய ஆடை ஒன்றை தாராளமான சுடுநீரில் முழுகிய பின் மகிழ்ச்சியோடு அணிந்திருந்தேன். இதற்கிடையில் ஒரு விடயத்தை நான் சொல்ல வேண்டும். இங்கு( தாய்லாந்துக்கு)  புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஒரு சிறு உடல் உபாதை ஒன்று கொஞ்சம் பயங்காட்டிக் கொண்டே இருந்தது.அது பெருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று தோன்றிய போதும் அதனை நான் வெளியே சொல்லி இந்தப் பயணத்தையும் நிறுத்த மனது வரவில்லை. விமானப்பயணத்தின் போதும் வந்திறங்கிய பின்னரும் அவ்வலி கொஞ்சம் பயங்காட்டிய வண்ணமே இருந்தது. அதனால் தயாராக வலிநிவாரன மாத்திரைகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தேன். தாங்க முடியாத பட்சத்தில் அவற்றைத் தஞ்சம் அடைவதாக எனக்குள்ளான ஏற்பாடு.

சரி, இன்றய திட்டம் பொற்கோயிலுக்குச் சென்று விட்டு அப்படியே சைனா மார்க்கட்டைப் பார்த்து விட்டு (அருகில் தானாம்) அப்படியே அங்கேயே எங்கேனும் சாப்பிட்டு விட்டு தாய் மசாஜ்ஜிற்குப் போய் விட்டு அறைக்குத் திருப்புவது தான் எங்கள் திட்டம்.

தேசம் பொது விடுமுறையில் திளைத்துக் கிடந்த போதும் நம் ஹொட்டேல் வேலையாட்கள் அதே இன்முகத்தோடு அவ் அதி காலையிலும் நம்மை வரவேற்றார்கள். 

புது வருட வாழ்த்துக்கள் கூறி, நாம் இன்று பொற்கோயிலுக்குப் போக வேண்டும் டக்‌ஷி வேண்டும் என்று சொன்ன போது புன்னகையோடு பிளாஸ்டிக் பைகளில் உங்கள் கமறா போன்ற பொருட்களை சுற்றிக் கொண்டு செல்லுங்கள் இன்று Water Festival  என்றும் தண்ணீரில் தெப்பலாய் நனைந்து தான் வருவீர்கள்; கடைகள் பலவும் பூட்டப்பட்டிருக்கும் என்ற தகவலையும் சொல்லி டக்‌ஷியை ஏற்பாடு செய்து தந்தார்கள்.


பொற்கோயில் பிரமாண்டமாகக் காட்சியளித்தது.நான்கு மாடிகளை அது கொண்டமைந்திருக்கிறது. அருகாகவும் முன் புறமாகவும் மண்டபங்கள் உள்ளன.வழிபாட்டுத் தலத்தை இப்போது உல்லாசப்பயணத்தின் ஒரு இடமாக ஆக்கியதாலோ என்னவோ உள்ளே நுழைவதற்கும் கட்டனம் அறவிடுகிறார்கள்.

உள்ளே செல்வதற்கு முன் கோயிலைப்பற்றிய வரலாற்று விபரங்கள் சில. இப் புத்த சிற்பம் தனித் தங்கத்தால் ஆனது.அடியில் இருந்து முடி வரை15 அடி 9 அங்குல உயரம் கொண்டது.கிட்டத்தட்ட 5.5 தொன்கள் நிறை.அதன் இன்றய பெறுமதி 28.5 மில்லியன் பவுன்ஸ் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.700 வருடப்பழமை கொண்டது.

கோயில் ஏற்கனவே உயரமான ஓரிடத்தில் தான் (படிக்கட்டுகளில் ஏறிப் போக வேண்டும்) அமைந்திருக்கிறது. முதல் தளத்தில் எதுவுமில்லை. ரிக்கற்றுக்களைப் பார்த்து விட்டு கையெழுத்தை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். 

அடுத்த தளத்துக்குப் படியேறிச் சென்றால் அதில் நூதனக் காட்சி சாலை கோயிலின் வரலாறை ஆதர சாட்சிகளோடு சொல்லி நிற்கிறது. கட்டப்பட்ட முறை சிலையை எடுத்துச் சென்ற யுக்தி அவற்றுக்குப் பயன் பட்ட பொருட்கள் போன்ற விபரங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.





எல்லா இடங்களிலும் மல்லிகையாலும் ஓக்கிட் பூக்களாலும் ஆன மாலையை விற்பனைக்கும் கடவுளுக்கும் வைத்திருக்கிறார்கள்.



அவர்களுடய வழிபாட்டு முறை சற்றே வேறுபட்டது. ஒரு வாயகன்ற வெள்ளிப்பாத்திரத்தில் பன்னீர் போன்று வாசனையூட்டப்பட்ட புனிதமான நீரை சில வாசனைப் பூக்களும் போட்டு வைத்திருக்கிறார்கள். காணிக்கையைக் கொடுத்து அதில் உள்ள தீர்த்த நீரை இன்னுமொரு (அத்தண்ணீருக்குள் வைக்கப்பட்டிருக்கின்ற சிறிய வெள்ளிக் கிண்ணங்களால் எடுத்து புத்த பகவானுக்கு ஊற்றி சேவிக்கிறார்கள்.

பன்னீர் போன்ற வாசனைத்திரவியம் அடைக்கப்பட்ட போத்தல்களையே கீழே காண்கிறீர்கள்.



(கீழே இருக்கும் படம்) இவர் வெளிப்புறமாக அமர்ந்திருக்கின்ற புத்த பகவான்.



கீழே இருக்கின்ற இந்த ஆலயம் பிரதான ஆலயத்துக்கு அருகாக அமைந்திருக்கின்ற ஆலயம்.பிரதான ஆலயத்தின் கீழ் புறப்படிக்கட்டில் நின்று இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதை ஊன்றிக் கவனித்தால் உனர்ந்து கொள்வீர்கள்.

முன்புறம் ஒரு தற்காலிக கொட்டகை ஒன்று போட்டிருந்தார்கள். யாத்திரிகைர்கள் வந்து இருந்து இளைப்பாறிச் செல்ல வசதியாக வாங்குகளும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. இளநீர், ஐஸ்கிறீம் வியாபாரிகளும் மிக மலிவான விலையில்  இளநீர் விற்கிறார்கள்.(20 பட்). அத்தோடு இங்கு விற்பனை செய்கின்ற ஐஸ்கிறீமும் நல்ல சுவையுடையதாக இருந்தது. அதிலும் ஒரு நூதனமான முறையை அவர்கள் பின் பற்றுகிறார்கள்.ஐஸ்கிறீமை இவர்கள் இளநீரினை எடுத்து கிளாஸ்களில் ஊற்றி ஸ்ரோ வோடு கொடுத்து விட்டு ஐஸ்கிறீம் கேட்பவர்களுக்கு இளநீர் குரும்பையில் இருக்கின்ற வழுக்கையினை வழித்து நடுவில் விட்டு விட்டு அதற்குள் ஐஸ்கிறீமைப் போட்டு  கலந்து கரண்டியோடு கொடுக்கிறார்கள். சுவையோ சுவை என்று குடித்தவர்கள் சொன்னார்கள்.





முற்றும் துறந்த பிக்குவின் கையிலும் மொபைல் போன் (கீழ் உள்ள படம்)



தானம் பெறும் பிக்கு இங்கே! பக்தர்கள் காவியுடை, பணம், பூ, உணவுப் பொருட்கள் போன்றவற்றைத் தானமாக வழங்குகிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ளும் பிக்கு அவர்களுக்கு நல்லாசியினை வழங்கி மந்திரங்கள் சொல்லி வாழ்த்தி வழி அனுப்புகிறார்.





கீழே இருக்கின்ற இந்த மனிதரைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். கடந்த வருடம் இங்கு சிட்னியில் வசிக்கும் என் வட இந்தியத் தோழி ஒருத்தி இந்தியாவில் இருந்து திரும்பி வரும் வழியில் பாங்கொக்குக்குப் போனதாகச் சொல்லி இரண்டு துணியில் செய்யப்பட்ட துணி ஓவியங்கள் இரண்டை எனக்குப் பரிசாகத்  தந்திருந்தார்.அவை சட்டம் போட்டு அழகுக்காக மாட்டத் தக்கவை. அதைப் பார்த்த நாளில் இருந்து அது போன்ற கலைப்பொருட்களைப் பார்க்கவேண்டும் முடிந்தால் சிலவற்றை வாங்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தேன்.



இந்த மனிதர் அவற்றை வேர்க்க வேர்க்க விற்றுக் கொண்டிருக்கக் கண்டேன். உடனே நான் வந்த காரியத்தை மறந்து அவரை அழைத்துக் கொண்டு சென்று வாங்கொன்றில் அவரோடு உட்கார்ந்து விட்டேன். வந்தவர்கள் கோயிலைப் பார்க்க அவசரப்பட்டதால் அவர்களை அனுப்பி விட்டு நான் இந்த மனிதரோடு தனியாக உட்கார்ந்து விட்டேன். கண்ணியமும் பொறுமையும் அன்பும் மிளிரும் இந்த மனிதர் அன்போடு எனக்கருகில் உட்கார்ந்து ஒவ்வொரு படங்களாகக் காட்டி அதன் சித்திரங்களையும் அது கூறும் கதைகளையும் பின்னணியையும் மிகவும் பொறுமையாக ஆர்வத்தோடு எனக்கு விளக்கிச் சொல்லி அவற்றை எனக்குக் மிக ஆறுதலாக காட்டினார்.

கவனியுங்கள்! இன்று இந்த மனிதரின் புது வருடம். வீட்டில் குடும்பம் காத்திருக்க இந்த வெய்யிலில் இந்த மனிதர் ஒவ்வொருவராகக் காட்டி காட்டி பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்.

நான் சில படங்களைத் தெரிவு செய்து எடுத்துக் கொண்டேன். இப்போது எடுத்ததற்கான பணத்தைக் கொடுக்கவேண்டிய நேரம். பணப்பை கோயில் பார்க்கப் போய் விட்டவர்களுடய கையில். தண்ணீரின் மீதான பாதுகாப்புக்காக எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு ஒருவருடய கையில் அகப்பட்டு விட்டது தான் அதன் காரணம்.

ஆவல் நிமித்தம் இவற்றை வாங்க நினைத்து விட்டாலும் இந்த நான்கு மாடியில் அவர்களை நான் எங்கென்று தேடிக் கண்டு பிடிப்பது?. கண்ணாம்மூஞ்சி ஆட்டமாடும் நிலைமையில் அன்று நான் இல்லை. 

அந்த மனிதருடய வியாபாரத்தை வேறு என் ஆர்வமிகுதியால் தடைப்படுத்தி விட்டேன் என்ற குற்ற உணர்வோடு அவரை விற்பனைக்குச் செல்லுமாறும் நான் அவர்கள் வந்தவுடன் பணத்தைப் பெற்று பின்னர் இந்த மனிதரைக் கண்டு பிடித்து பணத்தைக் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினேன். 

இப்படியாக என்  நிலைமையை நான் எடுத்துக் கூறியதற்கு, அந்த மனிதர் நான் தெரிவு செய்திருந்த படங்களை ஒரு இரப்பர் வளையத்தால் சுற்றி என் கையில் ஒப்படைத்து விட்டு வியாபாரத்தைப் பார்க்கப் புறப்பட்டு விட்டார். இல்லை இல்லை நீங்கள் பொருளைப் பிடியுங்கள் நான் பின்னர் பணத்தைக் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்கிறேன் என்ற போதும் கேட்காமல் பொருளை என் கையில் திணித்து விட்டு பதிலை எதிர் பாராமல் தன் வியாபாரத்தைப் பார்க்க புறப்பட்டார் இந்த மனிதர்.

மனம் நெகிழ்ந்தது. ஏழையாய் இருந்த போதும் மனிதர்களில் தான் எத்தனை நம்பிக்கை இந்த மனிதனுக்கு! 

நான் அவர்களுக்காக சுமார் 1.30 மணி நேரங்கள் காத்திருந்தேன். வந்ததும் பணத்தைப் பெற்றுசொன்ன தொகைக்கும் அதிகமாக புது வருட வாழ்த்துக்கள் கூறி பணம் கொடுத்த்தது மனதுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. 

அனுபவங்களால் நைந்து போகமால் விகாரப்பட்டுப் போகாமல் வறுமையிலும் ஒளிவீசும் குணாதிசயம்!

கீழே இருக்கின்ற இந்த சுவரில் காணப்படும் செதுக்கல் வேலைப்பாடு சீமேந்தினால் ஆனது. கோயிலின் சுவரில் பதியப்பட்டிருக்கிறது.



கீழே இருக்கின்ற இந்தப் படம் நூதன சாலையில் எடுக்கப்பட்டது 



கீழே இருக்கின்ற இந்தப் பொருள் கயிறு, கொழுவி முதலியன புத்த பகவானின் சிலையை மேலே எடுத்துச் செல்ல பயன் பட்ட கருவிகளாம். அவற்றைப்  பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.





கீழே இருக்கின்ற இந்த செதுக்கல் வேலைப்பாடும் சீமேந்தினால் ஆக்கப்பட்ட ஒரு கலை வடிவம் தான். தாமரை இலைகளும் மொட்டுக்களும் எத்தனை தத்தூரூபமாக அமைந்திருக்கின்றன இல்லையா?





இவர் தான் தங்கப்புத்தர்.(கீழே உள்ள படங்கள்)







கீழே இருக்கும் இந்த படம் ஒரு கதவு. அதில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.



 கீழே இருப்பது மூன்றாம் தளத்தின் மேற்புற விதானம்.


கீழே காட்டப்பட்டிருப்பது குருமார்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்ற தானங்கள்.


கீழே இருக்கும் படங்கள் பிரதான மண்டபத்துக்கு அருகாக அமைந்திருக்கும் சுற்றுப்பிரகாரம்.இவற்றுக்குள் லிப்ட்கள் இருக்கின்றன. இயலாதவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மாத்திரம் என்று பெயர் பலகை ஒன்று அறிவுறுத்துகின்றது.











கீழே இருக்கும் இந்த பாம்பு குடைபிடிக்க அமர்ந்திருக்கும் தங்க நிற புத்தர் பிரதான கோயிலுக்கு அருகில் இருக்கின்ற மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். 





கீழே இருக்கும் படங்கள் வெளிப்பிரகாரங்களில் அமைந்திருக்கும் விக்கிரகங்களை பெளத்த மக்கள் மண்டியிட்டு தம் பின் புறக்கால்களில் அமர்ந்திருந்த வாறு வழிபாடியற்றுகின்ற காட்சி. தாமரை மொட்டுக்களை வழங்கி ஊதுபத்திகளைச் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.





கீழே இருக்கும் இந்தக் குழந்தைப் புத்தரைப் பார்க்கும் போது எனக்கேனோ அந்தோனியார் ஞாபகம் வந்தது.



கீழே இருக்கும் படங்கள் மண்டபத்துக்குள்ளே மக்களின் தானங்களை பெற்று அவர்களுக்கு ஆசி வழங்கி மந்திரித்து நூல் கட்டி விடும் பெளத்த பிக்கு.







நானும் இவ்வாறு தானம் வழங்கி நூலினைக் கட்டிக் கொண்டேன்.அப்போது உடல் முழுவதுக்குமான ஒரு விதமான வைபிறேஷனை உணர்ந்து கொண்டேன். ஏனென்று தெரியா இரு கண்ணீர் துளிகளை அது வரவளைத்தது. 

வியாபார நெறிமுறைகளுக்கப்பால் இக்கோயிலில் ஒரு விதமான தெய்வீகத்தன்மை இருப்பதை - ஒரு சக்தி அங்கு வியாபித்திருப்பதை அப்போது உணர முடிந்தது. இது வெறும் பார்வைக்கான வந்து போகும் இடமல்ல என்று உணர வைத்தது அது. அது வரை மேலோட்டமாகப் புதினம் பார்த்துக் கொண்டிருந்த நான் உடனடியாக பய பக்தி சூழ  மற்றவர்களைப் போல் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தித்து வெளியே வந்தேன்.



புத்தம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி!



கோயிலினை விட்டு வெளியே வந்த போது முன் மண்டபத்தில் ஏனையோர் எனக்காகக் காத்திருந்தனர். கையில் நூல்கட்டிக் கொண்டதை புதினமாக அவர்கள் பார்த்தார்கள். அந்த வியப்புக்கு இரண்டு காரணங்கள்.

1. அவர்கள் இந்த இடத்தைத் தவற விட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியைத் தாம் காணவில்லை என்றார்கள்.

2. நான் இவ்வாறு செய்து கொண்டதில்லை.இப்போது எனக்கு என்ன நடந்தது என்பது அவர்களின் அடுத்த ஆச்சரியம்.

நாம் கோயிலுக்கு வெளியே வந்தோம். இப்போது நேரம் மதியம் 1.30 அல்லது 2.00 மணி இருக்கும்.

சொன்னால் நம்புவீர்களா? என் உடல் உபாதை போன இடம் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் இது தான்.







































Saturday, May 18, 2013

இலக்கிய சந்திப்பு - 12 -




கடந்த மாத இலக்கிய சந்திப்பு சிட்னியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் மூடிய மண்டபம் ஒன்றுக்கு இடம் மாற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இடம் பெற முடியாது போய் விட்டது. அதனால் ஒரு மாத காலம் பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு இம்மாதம் “yaarl Function Centre ஸ்தாபனத்தாரின்  ஆதரவோடு அவர்களின் நிகழ்வரங்கில் இடம் பெற இருக்கின்றது.

அவர்களுக்கு நன்றியினைக் கூறிக்கொள்ளும் அதே வேளை, இம் மாத நிகழ்வில் நம் உயர்திணை அமைப்புக்கான இலட்சினையினை நம் ஊரில் வசிக்கும் ஓவியக் கலைஞர் திரு.ஞானம் ஐயா அவர்கள்   உருவாக்கித் தந்திருக்கிறார் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறோம்.

அவை பற்றிய முக்கிய முடிவுகளும் இம்மாதம் எடுக்கப்பட இருப்பதால் உறுப்பினர்களையும் ஆர்வலர்களையும்  தவறாது சமூகமளிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

உங்கள் பிரசன்னம் அறிதலுக்கும் பகிர்தலுக்கும் வளர்தலுக்கும் அத்தியாவசியமானதாகும்.

இலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்!

தமிழில் ஒரு தகவல் அரங்கம்


Friday, May 10, 2013

ஒரு ஞாபகார்த்தத்திற்காக (2 ) ..........


பிரசுரமாகாத முதல் பகுதி இது:

ஒரு குவளை ரசனை - 1 - 








ரசனைக்கு ஏதேனும் தரநிர்ணயம் இருக்கின்றனவா?

அது அவரவர் மனநிலை ,ஆர்வம், விருப்பம், நேரம், தேவை போன்ற இன்னபிறவற்றில் தங்கியிருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது.

இவை காலத்துக்குக் காலம் மாறியும் பெருகியும் விகாரப்பட்டும் சில வேளைகளில் மேன்நிலைப்பட்டும் கீழிறங்கியும் கூடப் போவதுண்டு. வயதோடு வாழ்க்கை அனுபவங்களோடு இவற்றுக்கு நிறைய தொடர்புண்டு. ரசனாவுணர்ச்சி முற்றாக வற்றிப் போய் விடும் ஆபத்துக்களும் இந்த விபரீத வாழ்க்கைச் சூழலில் நிகழலாம்.

என்னுடய ரசனா உணர்ச்சிகளும் அவ்வாறு தான். புலம் பெயர்ந்து வந்ததன் பிற்பாடு பார்வைகள் கொஞ்சம் மாறிப் போயிற்று. புத்தகத்துக்குள் மட்டும் முகம் புதைத்திருந்த நான் வின்ரர் காலத்து போர்வையை விலக்கிப் பார்த்த ஒரு பொழுதில் பிற நாட்டினருடய ரசனாவுணர்ச்சிகள் மிக மாறிப் போயிருக்க; வித்தியாசப்பட்டிருக்கக் கண்டேன். உள்ளாடைகள் மட்டுக்குமான கடைகளுக்குப் போனீர்களானால் அவர்கள் ரசனைகளின் உச்சத்தை அங்கே காணலாம்.

அப்பிள், பியர்ஸ் பழங்களுக்குக் கூட சீனிப்பாணி ஊற்றி சமையலாகச் செய்து சாப்பிடும் ரசனையைப் பார்த்ததும் நான் கலங்கிப் போனேன்..எனக்கேனோ பழங்களைச் சமைக்க மனம் வருவதில்லை. வாழைப்பழத்தைப் பொரிப்பதையும் பச்சைஇறைச்சியை மிக்‌ஷியில் அரைப்பதையும் எனக்கு சகிக்க முடியாது.

நல்ல வேளையாக எனக்கு இவற்றில் எல்லாம் ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் விசித்திரமான பழக்கம் ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டு விட்டது. தேநீர் பிரியையாய் இருந்த நான் எப்போதென்று துல்லியமாய் சொல்ல முடியாத தருணம் ஒன்றில் கோப்பிப் பிரியையாய் ஆகிப் போனேன்.

கோப்பி போடுவது ஒரு ரசனையின் பாற்பட்டது. கடைகளில் எத்தனை எத்தனையோ வகையான கோப்பிகள் உள்ளன. சீனருக்கு பச்சை தேநீரும் லெபனான் நாட்டினருக்கு short Black தேநீரும் ஆங்கிலேயருக்கு கப்பச்சீனோ பிளக் வைட் என்றும் மொக்கா, சாயா என்றும் ஏகப்பட்ட வகைகள். அதை விட தனித்தனியான கோப்பிக் கடைகள் தத்தமக்கான தனித்துவ சுவைகளில் கோப்பிகளைத் தயாரித்து பெயர் சூட்டி விநியோகிப்பதும் உண்டு. மக்கொஃபி, குளோறியா ஜீன்ஸ் போன்றவை அவற்றில் சில. இதை விட வாசனையூட்டப்பட்ட கோப்பிகள் ஏராளம் ஏராளம்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதில் எதுவும் என் ரசனைக்கு உட்பட்டதாக அமையவில்லை. நானாக தயாரிக்கின்ற எனக்கு மட்டுமேயான ஒரு கோப்பி வகையை நான் எனக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தாருடய பாரம்பரிய சுவையில் இருந்தும் அது முழுக்க முழுக்க வேறுபட்டது. அதே நேரம் வெளிநாட்டு தாற்பரியங்களில் சிலவற்றை நுட்பமாகக் கலந்ததது.. காலை வேளை ஜன்னலோர கதவு திறக்க தெரியும் தோட்டத்துப் பூக்கள் ஆட, குருவிகள் பாட, காலை வெய்யில் பட, குளிர்காற்று வருடிச் செல்ல, சீனி சாப்பிட வரும் ஒரு கூட்டம் பஞ்சவர்ணக் கிளிகளைப் பார்த்தபடி எனக்கான இந்த பிரத்தியேக கோப்பியின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்து அருந்துகின்ற தருணம் அமுதம்.

ஒரு நாளுக்கான ஆரம்பம் அது தான். அதிலிருந்து எனக்கு கற்பனைகள் ஜனிக்கும்; உற்சாகம் பீறிடும்; வாழ்க்கை இனிக்கும், எழுத்துக்கள் உருவாகும். வீட்டு வேலைகள் வெளி வேலைகள் எல்லாம் அதற்குப் பின் சீராக நடக்க ஆரம்பிக்கும்.

எனக்கான கோப்பியைக் கண்டுபிடித்த பின் அதனை ஊற்றிக் குடிக்கும் குவளையில் பார்வை மெல்ல மெல்ல படிய ஆரம்பித்தது. கடைகளுக்குப் போகின்ற பொழுதுகளில் வண்ணம் வண்ணமான குவளைகளில் மனம் லயிக்கலாயிற்று. கவனம் மெல்ல அதில் குவிய ஆரம்பித்தது. அந்தக் கோப்பியை இந்தக் குவளையில் குடித்தால் தான் ருசிக்கும் என்று ஒரு தோற்றப் பிரமை வர வர வலுக்க ஆரம்பித்தது. (பிரச்சினைகளும் இவ்வாறுதான் மெல்ல மெல்ல முகம் காட்டத் தொடங்கும்.)இலங்கையில் கிளாஸ்களிலும் ரம்லர்களிலும் அலுமீனிய எனாமல் பாத்திரங்களிலும் பின் நாளில் கப் அண்ட் சோசர்களிலும் பானங்கள் குடித்ததெல்லாம் வரலாறாகி இங்கே mug என அழைக்கப் படுகின்ற ஒரு வகையான குவளைகளில் குடிப்பதாக அது பரிநாமம் பெற்று விட்டது.

அதில் தான் எத்தனை எத்தனை வடிவங்கள்!. எனினும் சலிப்பேற்படாதிருக்க நானும் காலத்துக்குக் காலம் வகை வகையான குவளைகளுக்கு மாறுகிறேன். கடைகளுக்குப் போனால் குவளைப்பக்கங்களில் கவனம் குவிவதை இப்போதெல்லாம் தவிர்க்க முடிவதில்லை.

வயதேற; அனுபவங்கள் கூட; இப்போதெல்லாம் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து இப்படியான கோப்பியைப் பருகியவாறு ரசனை பற்றிப் பேச ஆசை எழுகிறது. இதற்குத் தூபம் போடுவது போல அண்மையில் ஓர் அழகிய குவளை கிடைத்தது. பெண்மையும் அழகும் நளினமும் வாகான கைப்பிடியும் கொண்டமைந்த அது சிறிய வெள்ளை நிற பின்னணியில் பறவை ஒன்று மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் வடிவத்தைக் கொண்டிருந்தது. அதே வண்ணம் தீட்டிய ஒரு பெட்டிக்குள் அது அடக்கமாய் சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது. அதனை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வந்தவுடன் அதை அப்படியே வைத்துவிடுவதும் வழக்கமல்ல. ஆற அமர உட்கார்ந்து அதன் தோற்றப் பொலிவில்; செய்நேர்த்தியில் மனதைச் சற்றே திளைக்க விட்டு, அதன் அனைத்துப் பாகங்களையும் பரிசீலனை செய்தால் தான் என் ஆத்துமம் திருப்தி பெறும்.

எனக்கு வேறு வேலை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கோப்பி என் உற்சாக ஊக்கியல்லவா? இயக்கத்துக்கான அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது. வாழ்க்கையை அனுபவிப்பது என்பது இது தான். அது ஒரு அத்திவாரம்; அடிப்படை.

அது வாழ்க்கையை வாழும் செயற்பாடு.

ஒரு நேரம் ஒரு வேலையை மாத்திரம் கருத்தூன்றிச் முழுமையாக அனுபவித்துச் செய்தல் என்பதே நம் வாழ்க்கையில் இல்லாது போய் விட்டது என்பது எவ்வளவு பெரிய இழப்பு? அவசர அவசரமாய் எழுந்து, அவசர அவசரமாய் குளித்து, அவசர அவசரமாய் சாப்பிட்டு, அவசர அவசரமாய் ரயில் பிடித்து எங்கு ஓடுகிறோம்? ”வாழ்வதை” மாத்திரம் தவற விட்டு விட்டு!
சரி எங்கு விட்டேன்? ஓம். ஒரு பெட்டிக்குள் அமைந்திருக்கின்ற ஒரு தேநீர் குவளை வாங்கி வந்தேன். பெட்டியை திறக்காமல் அதில் என்ன எழுதியிருக்கின்றது என்று ஆராய்ந்தேன். அது Miss.Peacock என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு பக்க செய்தி சொன்னது. அழகிய நீல நிற மயிலின் படமும் சில மரக்கிளைகளும் அலங்கரிக்க அப்பெண்ணின் பெயர் அழகெழுத்துக்களில் பொறிக்கப் பட்டிருந்தது. மற்ற மூன்று பக்கங்களும் குவளையில் பதிக்கப்பட்டிருக்கின்ற குருவி அதே வண்ணத்தில்

மற்றப்பக்கம் இந்தக் குவளையை உருவாக்கியவரின் குணநிலைகள்; இதனை செய்ய அவருக்கு தூண்டுகோலாக இருந்த சூழல் எவ்வாறு இதனை அவர் தயாரித்திருந்தார் போன்ற விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. முடிவில் அவரது இணையத்தள முகவரியும் தொலைபேசி இலக்கமும் குறிக்கப் பட்டிருக்கிறது. Miss.Peacock க்கு ஷொப்பிங் செய்ய விருப்பமாம். படித்தல், ஓவியம் வரைதல், பூந்தோட்டம் செய்தல், பலவண்ண பலரக துணிகளை ஸ்பரிசித்தல்; காணுதல் அவருக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. மேலும், தன் நெருங்கிய மனமொத்த நண்பர்களோடு அளவளாவுதல், இந்திய நடனங்களை கண்டு களித்தல், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவராம். அவருடய தொழிலாற்றலோடு கூடிய கலைப்பார்வைகள் புதிய தனித்துவமான வடிவங்களைச் செய்யத் தூண்டியதாம். இவ்வாறான கலைத்தேடல்களோடு இருந்த போது வந்து இணைந்த ஒத்த ரசனையுள்ளவர்களால் இப்போது சீனாவில் இருந்து தனக்கே தனக்கான புது வடிவத்தில் தேநீர்கிண்ணங்களை உற்பத்தி செய்வித்து விற்பனை செய்து வருவதாக விபரம் சொல்லியது. மேலதிகமாக உங்களுக்கு சொல்லவோ கேட்கவோ ஏதேனும் இருந்தால் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி இலக்கமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

இப்போது அந்தக் குவளையில் தேநீர் குடிக்கும் போது அதன் பரிமானம் இன்னொரு எல்லையைத் தொட்டு நிற்கிறது. 

கோப்பியின் முழுமையான ரசனையுடனான ருசி இப்போது தான் சித்தித்திருக்கிறது. அந் நினைவுகளுடன் கோப்பி மிகவும் தித்திக்கிறது.

                    
ஈழத்தின் வட புலத்தில் இருந்து ஓசானியாவுக்குப் புலம் பெயர்ந்து வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா. பத்மநாதன் எழுதியது.
23.4.2013 மாலை.

..............................................


பிரசுரித்தமைக்கு நன்றி: காற்றுவெளி இணைய சஞ்சிகை, வைகாசி 2013, பக்: 115 - 121 ;

 காண:  http://kaatruveli-ithazh.blogspot.com.au




ஒரு குவளை ரசனை – 2    - 




 
 ஒரு பயனுள்ள புத்தகம் படிக்கும் சுகம் என்பது தேநீர் குடிக்கும் அந்த ரசனா அனுபவத்துக்குச் சற்றேனும் குறைந்ததல்ல.அது பாதை காட்டும். புதியவாசல்களைத் திறந்து வைக்கும். ஒரு நல்ல நண்பனைப்போல் எப்போதும் அது உங்களோடு கூட வரும்.

18.4.2013 அன்று மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரை “The Creative Seed" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர்  Lilian Wissink தன் புத்தகம் பற்றிப் பேசப்போகிறார் என்ற செய்தி Author Talk என்ற தலைப்போடு சில வாரத்துக்கு முன்னரே என் தொழில் முகவரிக்கு வந்திருந்தது. Parramatta நூலகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பும் நோக்கமும் அழகாய் இருந்ததால் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன். கூடவே வருவார்கள் என்ற நம்பிக்கையில் இரு கலைஞர்களுடய பெயர்களையும் அவர்களைக் கேட்காமலே கொடுத்தும் விட்டிருந்தேன்.

அது தவறோ?

அன்றய காலை மற்ற இருவரும் தம் விருப்பமின்மையைத் தெரிவித்த போது மனது மெல்ல சோர்ந்து போனது. கலை என்பது அழகுணர்ச்சியுடனான ஆக்க பூர்வ வெளிப்பாடுகளைக் கொண்டமைவது. அவர்கள் கண்கள் எப்போதும்துருதுறுத்தபடி இருக்கவேண்டும். மனம் சதா புதிய விடயங்களைக் காண ஆவலாய் உற்சாகமாய் சுறுசுறுப்பாய் லபக்கென்று பற்றிவிடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.தேடல் ஒன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பிருந்தும் புதிதானவற்றைக் காண ,அறிய, பரீட்சிக்க, கலந்துரையாட அத் துறைகளில் ஈடுபடுபவர்களே ஏன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

புலம்பெயர்ந்த நாட்டில் கலை இலக்கியத் துறையின் கதவுகளை எந்தக் கடப்பாரை கொண்டு திறந்து வெளியுலகை - தாம் வாழும் உலகைக் காட்ட முடியும் என்று தெரியவில்லை. அதற்கு மிகுந்த பிரயத்தனம் வேண்டியிருக்கிறது. இளம்சந்ததி நாட்டின் பொது ‘ஜனநாயக’ தேசிய  நீரோட்டத்தில் இரண்டக்கலந்து விட்டது. பழைய சந்ததி பட்டுப்புழு மனோபாவத்தில் தன்னைச்சுற்றி கூடமைத்து அதில் தன்னிறைவு கண்டு விட்டது. வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களையும் சிறகடிப்பில் தெரியும் வசந்தங்களையும் புலத்துத்தமிழ் எப்போது கொண்டுவரப்போகிறது?
         
எனினும் நான் போனேன். கச்சிதமான மேல் மாடி அறை ஒன்றில் தேநீர், கோப்பி, கேக், பிஸ்கட் வகையறாக்களோடு 9.10 பேர் வந்திருந்தார்கள். சின்னதான ஒரு microphone ஓடு புத்தக ஆசிரியரும் புன்னகையோடு பிரசன்னமாயிருந்தார். அவரவர் தமக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களோடு கதிரைகளில் அமர, நூலகர் புத்தக ஆசிரியரை அறிமுகப் படுத்தி ஆசிரியரைப் பேச அழைத்தார்.

புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் உண்மையும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் அடக்கமும் மிளிர வெளிப்படையாகவும் மென்மையாகவும் உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.
                                                    
அதன் பின் கலந்துரையாடலுக்கான நேரம். பலருக்கும் பல விதமான கேள்விகள். சொற்பமான பேரே வந்திருந்த போதும் அவ்வளவு பேரும் ஈடுபாடும் தேவையும் விருப்பமும் உள்ளவர்களாகவும் நட்புணர்வும் அன்பும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்ததும் ஒரு ரம்யமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொருவருடய கேள்விகளும் மற்றவருக்கும் பயன் படும் விதமாகவும் உதவும் விதமாகவும் அமைந்திருந்தமை ஒரு கண்ணியமான கூட்டம் அது என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருந்தது.

அது முடிய நூலகர் வந்து அடுத்த மூன்று மாதத்திலும் என்னென்ன புத்தகங்கள் பேசப்பட இருக்கின்றன என்ற தகவலோடு நன்றி கூறி நிகழ்ச்சியை மிகச் சரியாக 2.00 மணிக்கு நிறைவு செய்தார்
புத்தக ஆசிரியர் தம் முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி ஒரு சிறு பயிற்சித்தாளை நமக்குத் தந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த பயிற்சித்தாள் புத்தகம் சொல்வதை விளங்கிக் கொள்ளும் வகையிலும்  நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் முறையிலும் இருந்தது. அதனால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.



1.
என் மகிழ்ச்சிக்காக எப்போதும் நான் செய்ய விரும்புகின்ற ஒன்று......

2.
எனக்கு வேலைப்பழு இல்லாவிட்டால் நான் எப்பவும் செய்ய விரும்புகின்ற ஒன்று........

3.
நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் எப்போதும் செய்து மகிழ்ந்த ஒன்று.......

4.
என் புத்திளமைப் பருவத்தில் நான் மிக அனுபவித்துச் செய்த ஒன்று.......

5.
என்னால் இப்போதும் செய்தால் மகிழ்வேன் என்று நான் கருதுகின்ற ஒன்று( படம், ஓவியம் வரைதல்,செதுக்கு வேலை, எழுத்து, கலைப்பொருட்கள் செய்தல், வாத்தியக் கருவி வாசித்தல், பாடுதல், ஆடுதல்.....)

6.
எனக்கு விருப்பம்.........

7.
காலங் கடந்து விட்டது, எனக்கு திறமை இல்லை என்ற நினைப்பை நான் கடந்து விட்டால் நான் செய்வேன் என்று நினைக்கின்ற ஒன்று.......

8.
எனக்கு நான் அனுமதி தர நினைத்தால் தர விரும்பும் ஒன்று.......

9.
எனக்கே எனக்கான நேரத்தை எனக்கென நான் ஒதுக்கும் போது நான் செய்ய நினைப்பது..............

10.
என் இளமைக்கால என்னோடு நான் பேச நினைத்தால் நான் சொல்ல நினைப்பது.............................

11.
இன்றில் இருந்து இன்னும் ஐந்து வருடத்துக்குள்.........

12.
என்னுடய அடுத்த கட்ட நடவெடிக்கை.....................

புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை  எப்படி அடையாளம் காண்பது  அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி எப்படியானது என்பது பற்றியது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்துஉள்நோக்கி”  பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.

’தன்னைக்’ கண்டு பிடிக்கும் மார்க்கம் அங்கே புலப்படுகிறது.

’ஒரு குழந்தைக்கு முன்னால கிலுகிலுப்பையை காட்டுங்க அது சிரிக்கும். அதையே ஒரு தாத்தாக்கு முன்னால காட்டுங்க அவருக்கு என்னமா கோபம் வருகிறது. எப்பிடி இருந்த தாத்தா எப்பிடியாயிற்றார் பார்த்தீங்களா?’ என்று கோமல்சுவாமிநாதன் கேட்டது நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை நம்மை அப்படி ஆக்கி விடுகிறது. இப் புத்தகம் தாத்தாவுக்குள் இருந்த குழந்தையை மீட்டுவர பிரயத்தனப் படுகிறது.

புத்தக ஆசிரியருக்கு தன்னுடய புத்தக வெளியீட்டினால் ஒரு வாசகனுக்கு எவ்வகையில் அது பயன்படும் என்ற நோக்கமே வலுவாகவும் அக்கறைக்குரிய பொருளாகவும் இருக்கிறது. இவ்வாறு மட்டும் நம் ’பிரம்மாக்கள்’ நினைக்கப் புகுந்தால் வெளிநாடுகளில் பணத்தால் பெருமையை விலைக்கு வாங்க சமூகத்தை பலிக்கடாவாக்கும் நிலைமை மாறும். புற்றீசல்கள் போல் புறப்படும் பிரசுரங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.

ஒரு சமூகத்தின் கலைஞர் கூட்டம் என்பது எப்போதும் சிறிதே. அது எச் சமூகத்துக்குமான உண்மை. அதனை எதிர் கொள்ள நாம் ஏன் அஞ்ச வேண்டும்? வற்புறுத்தல்களோ முகமன்களோ நிர்ப்பந்தங்களோ மறைமுக நிபந்தனைகளோ இல்லாத சுந்திரமான வெளிப்படையான அழைப்பிதழ்களே ஒரு வெளியீட்டையும் பிரசுரத்தையும்  அர்த்தப்படுத்துகின்றது. எல்லோருக்குமான ஒரு விடுதலை உணர்வது. மேற்கூறிய நிகழ்வுக்கு வந்திருந்த யாரும் சனத்தொகையைக் கணக்கெடுக்கவில்லை. அதனால் தொகை தாண்டிய தரம் அங்கு தெரிந்தது.


இதனைச் சொல்லுகின்ற போது எனக்கு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது முதுகு வலியினால் அவஸ்தைப்பட்டு 3 வாரம் படுக்கையில் கிடந்தேன். என்னைப் பார்க்க வரப்போவதாக எனக்குத் தெரிந்த ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணி லொறேற்றா என்பது அவள் பெயர்; தொலைபேசியில் அறிவித்திருந்தாள். எனக்கோ பெரும் கூச்சம். வீடு ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கவில்லை. வீட்டைப் பார்த்து அவள் என்னை எவ்வாறு எடை போடப்போகிறாள் என்று எனக்குள் பெருத்த மனப்போராட்டம். ’என் வீடு ஒழுங்கற்றுக் கிடக்கிறது, மன்னித்துக் கொள்’ என்ற போது அவளுக்கோ பெருத்த ஆச்சரியம்! நான் உன்னைத் தானே பார்க்க வருகிறேன். உன் வீட்டையல்லவே என்று மிகுந்த வியப்போடு கேட்டாள். நீ ஏன் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுகிறாய் என்பது அதன் தொனிப்பொருளாக இருந்தது.

அதிலிருக்கிற உண்மை என்னை இன்றுவரை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கள் பார்வைகளில் மாற்றங்களை அவ்வுண்மை வேண்டி நிற்கிறது.

அது போலத்தான் நம்முடய வெளியீட்டு விழாக்களும் நிரல்படுத்தப்படுகின்றன. புத்தகத்தை ஆகா ஓகோ என்று புகழ மூன்று பேர் வருகிறார்கள். அதற்கு நன்றி சொல்லி நெகிழ்ந்து ஆசிரியர் பேசி முடிய, முதற்பிரதி வாங்குவோர் தொகை நீண்டு கொண்டே செல்கிறது. உண்மையான வாசக உள்ளம் இப் போலிகளை கண்டதும் ஓடி ஒழிந்து கொள்கிறது.

அங்கே வியாபார யுக்திகளும் தனிமனித புகழ்மாலைகளும் மலிந்து கிடக்கின்றன. முகமனுக்காக வருகின்ற மனிதர்கள் மணிக்கூடுகளைப் பார்த்த படி இருக்கிறார்கள். நடுத்தர வயதினரோவெனில் கைத்தொலைபேசி வழியாக Face book இல் நான்  எங்கிருக்கிறேன் என்பதை படத்தோடு பிரசுரிப்பதில் மும்மரமாக இருக்கிறார்கள். முதல் பிரதி வாங்குவோர் தொகை நீண்டுகொண்டே போக, முதியவர்கள் சிரமபரிகாரம் செய்து கொள்ள எழுகிறார்கள். இளம் பிள்ளைகளைக் காணவே காணோம். சிறுபிள்ளைகள் அங்கும் இங்குமாய் விளையாடித்திரிய,பின் வரிசையில் குடும்ப பாரம் பகிரப்படுகிறது.

புறக்குடத்தில் நீர் வார்க்கப்படுவதைப் பார்க்க நாம் சபிக்கப்பட்டிருக்கிறோம்.

இப்போது இந்த “The Creative Seed" என்ற புத்தகம் நம்மோடு உறவு கொண்டாடுகிறது. அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களோடு; அந்த பிரியமான கையெழுத்தோடு பின்னிப் பிணைந்தவாறு இருக்கிறது.

பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் நிகழ்ச்சிகள் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள வாசகர்கள் மட்டும் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் படைப்பாளியோடு வாசகன் உரையாடி முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டுத்தன்மை துலக்கம் பெற ஆசிரியரின் திகதியிட்ட கையெழுத்தோடும் பிரியங்களோடும் புத்தகத்துக்கான முழுப் பெறுமதியைக் கொடுத்து புத்தகத்தை பெற்றுக் கொள்ள  வேண்டும்.

கோப்பியும் கோப்பி குடிக்கும் பாத்திரமும் போல அது முழுமையானது.

உங்களுக்கேயான தேநீரை அதற்குரிய பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாய் சுவைக்கும் அனுபவத்தேறல் அதில் கிட்டும்.

நிச்சயமாக!

சொல்லவல்லாயோ? – கிளியே!

சொல்ல நீ வல்லாயோ?

வல்லவேல் முருகன் – தனை இங்கு
              
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று
              
சொல்லவல்லாயோ? கிளியே!
              
சொல்ல நீ வல்லாயோ?
                                                            
பாரதி.




ஈழத்தின் வடபுலத்திலிருந்து ஓசானியாக் கண்டத்துக்குப் புலம் பெயர்ந்து வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா. பத்மநாதன் எழுதியது.
25.4.2013 காலை.