Tuesday, July 9, 2013

யாழ்ப்பாணத்து வட்டாரக் கதை

கடந்த இலக்கிய சந்திப்பு தந்து சென்ற ‘வட்டார வழக்குகள்’ சம்பந்தமான எண்ணங்கள் அது பற்றிய தேடலைத் தூண்டி இருந்தது. யுகமாயினி இதழில் ஆக்ஸ்ட் 2008 இதழில் ’கம்பங் கொழுக்கட்டை’ என்றொரு வட்டார வழக்குக் கதை (சற்றே பெரியது) குறவர் இன மக்களின் கற்பனையையும் வாழ்க்கை முறையையும் அழகுறச் சொல்லுகிறது. அதனை மீண்டும் எழுதுவதன் சிரமம் கருதி இணையத்தில் தேடினால் சித்தனின் குறிப்போடு கீழ் கண்ட கதையைத் தான் காண முடிந்தது.

இக்கதை யாழ்ப்பாணத்து நாச்சியார் கோயிலடி -  மிருசுவில் பகுதியைச் சார்ந்த மொழிநடையில் படைக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது. என் இந்திய நண்பர்களுக்கு இதன் மொழி நடையும் சொல்லும் பொருளும் சற்றே கடினமாக இருக்கக் கூடும். எனினும் அதில் இருக்கின்ற தனித்துவம் கருதி அதனை இங்கு பிரசுரிக்கிறேன்.

நன்றி: இணையம்.



ஒரு வழி
சிறுகதை
ந.விநோதரன்/ லண்டன்


ஆசைப்பிள்ளை ஏத்தத்திலை ஏறியாச்சு.
இறக்கத்திலை நிக்கிற மருதமரங்களுக்கு ஒரு பழுதுமில்லை.
கண்டிவீதி நல்லாக் கிடக்குது.
ஓரமெல்லாம் பொடியள் நட்ட மரங்கள் ‘ஆள்’ பட்டிட்டுதுகள்.
ம்.....இவடந்தான் குஞ்சுக்கிளி கடையடி.....
ஓ.....அங்காலை கட்டையடி மரமும் தெரியுது.
இதிலைத்தான் கொக்கட்டிமூலை றோட் பிரிய வேணும்.
கந்தையா வாத்தியாற்றை மேல்வீட்டுக் கட்டிடம்.....
நடராசா வாத்தியாற்றை காணிப் புளியடியாலை ஒரு மணல் வீதி.......
கொக்கட்டிமூலை றோட்டைக் கண்டாச்சு.
இதுதான் கோயில் காணி.
ஏனெண்டா நடுவிலை நிக்குது ஒட்டில்லாத கறுத்தக் கொழும்பான் மாமரம்.
முன்னடிக்கு தென்னையள் இல்லை.
பின்னடி இளங்கண்டுகள் சோடையாகிட்டுது.
மூலைக்கு வந்தாச்சு.
அதுதான் செல்லக்கா வீடு.
அங்காலை பாதையைக் காணேல்லை.
இதிலை இருக்கிற ஆமி சேரிட்டை சொல்லிப்போட்டு சைக்கிளை விடுவம்.
இஞ்சினைதான் சிவலோகம் குஞ்சன் வீடு.
சேலன்மா ஒண்டு நிக்க வேணுமே.....
உசனிலை படிக்கேக்கை......
இந்த மாங்காயும் உப்பும் நல்ல வழித்துணை.
அங்காலை கரம்பக வீரபத்திர கோயில் தெரியுது. சடைச்ச நெல்லிமரத்தைக்
காணேல்லை.
முகப்பாலை ‘பண்ட்’ போகுது.
பனங்குத்தியள் தாறும் மாறும் அடுக்கிக் கிடக்குது.
பாலம்பள்ளப் பாதை மூடப்பட்டுக் கிடக்குது.
சற்குணண்ணையின்ரை காணியும் நடுக்கொள்ள ’பண்ட்’ இழுத்திருக்கு.
முத்துமனிசியின்ரை பால் பலாமரம் தெரியுது.
இனி அங்காலை காலவைக்கப் பயமாக் கிடக்குது.
எல்லா இடமும் பனங்குத்தியும்....
செல்பெட்டியும்.....
முள்ளுக்கம்பியளும்தான்.....
மாடுகள் அவடமெல்லாந் திரிஞ்சு கிடக்குது.
மாட்டுப்பாதை பிறகை போவம்.

இஞ்சை...இஞ்சை....இதுதான் தோட்டக் கிணறு.
கிணத்துக்கு ரண்டு பக்கமுமுள்ள தென்னம்பிள்ளையள்?
சூரியகாந்தி* இல்லை.....மற்றது நிக்குது.
அதைவிட அங்காலை தெரியறதும் இதொட்ட பிள்ளைதான்.
ஆக இரண்டு மிச்சம்.
இரண்டிலும் சிங்களத்திலை ‘போர்ட்’ போட்டிருக்கு.
‘வல்ல சீவனுகள்’ எண்ட பட்டமாக இருக்கலாம்.
இரண்டு மூலைக்கும் கனக்க பனையள் நிண்டதே
ஒண்டையும் காணயில்லை.
இதுக்கை மட்டுமில்லை.....
விசரன்காடு, பாலம்பள்ளமெல்லாம் ஒரு பனையுமில்லை.
புதுப்புது வடலியள் முளைச்சு பாளைவாற பருவம்!
சிலது பாளையும் வந்திட்டுது.
கணேசன் ‘பனைக்கள்ளு’ வைக்கிற புட்டியிலை
இரண்டு வடலி ஆணும் பெண்ணும்.....
கருப்பணிப்பனையடியிலை மூண்டு.....
இப்பதான் பாளை வருகுது....
பட்டையோலைப்பனை நிண்ட இடத்திலை ஒண்டே ஒண்டு மட்டுந்தான்.
அச்சொட்டாக முந்தி நிண்ட பனையைப் போலவே.....
தொட்டியடியைத் தெரியேல்லை.
சுரிபறிச்ச இடத்துக்கு அங்காலை தெரியுற....
வேப்பமரத்துக்கு கீழைதான் தொட்டி.
ஓம்....ஓம்....வேப்பம் வேராலை தொட்டி பாளம் பாளமா வெடிச்சுக் கிடக்குது.
புதுபுது மரங்களெல்லாம் முளைச்சு அடையாளமே தெரியல்லை....
வடமேற்கு மூலையில கொஞ்ச இடத்திலை ‘பண்ட்’ புகுந்திருக்கு.
வடக்கிலை ஒரு முட்கிளுவை நிக்குது. மேற்கிலை பத்தை மொண்டிக்குள்ளையும்
கதியாலுகள் தெரியுது.
இரண்டையும் முக்கோணமா நிமித்த எல்லை வந்திடும்......
மற்ற பக்கங்கள் அந்தளவு அழியேல்லை.
தெற்கிலை பூவரசும்
கிழக்கிலை பால் கிளுவையும்
‘ஊடுஞ் சுழியுமா’ தெரியுது
முன்னுக்கு நீண்ட பிலா மரம் நிறைய காய்ச்சு
நெட்டுகள் காய்ஞ்சிருக்கு-
பிலாவுக்குப் பக்கத்திலை
ரண்டு பெரிய பனங்குத்தியளை நட்டு ...
தண்டவாளமொண்டை குறுக்க வச்சிருக்கு.....
கீழை கொட்டுக்கடப்பு போல படிகள்
அதுவும் பனங் குத்தியிலைதான்
ஏதோ ‘ரெயினிங்’ பழகியிருக்க வேணும்
ஏனெண்டா
கனகுமாமான்ரை தோட்டத்துக்கையும்
பெரிய ‘கேடருகள்’ நட்டிருக்கு.

நீண்ட நாளைய ஆசை
பிள்ளையார் கோயிலைப்பார்க்க வேணுமெண்டு....
கனகுமாமான்ரை தோட்டத்து முடிவிலை
ஒரு வண்டிப் பாதை இருந்தது.
அவடத்துக்குப் போவம்.
விறும கோயிலடி ஆலமரம் தெரியுது.
ஐயோ! ஏதோ செத்துக் கிடக்குது.
எலும்புக்கூடு.....
மாட்டுத்தலைதான்!
விசரன்காட்டுக்குள்ள இறங்கியாச்சு
கார்த்திகை மார்கழி மாதந்தானை
கார்த்திகைப்பூ நிறையப் பூத்திருக்கு.
மாட்டுப்பாதை சிராவில் வயல்வெளிமட்டும் போனால் நல்லது.
எவடத்திலை போய் மிதக்குமோ தெரியாது.
தங்கம்மாப் பேத்தி வீட்டடிதான் இது.
சிராவில் பிள்ளையார் தெரியுது.
ஓடி நடக்கேலாது
நடைவரம்பு எல்லாத்தையும் மேவி
தண்ணி நிக்குது.....
புட்டிக்கிணத்தடி  வடலிக்கூடல் தெரியுது.
இது எங்கடை கரைவயல்.
அருவி வெட்டப் பழகினது.

”கோடி புண்ணியம் கோபுர தரிசனம்”
மூலஸ்தானம் திறந்துகிடக்குது.
குறுட்டு வௌவால் தாறுமாறா பறக்குது.
தீர்த்தக் கிணத்திலை அள்ளிக்குளிச்சிருக்கு
கற்பூரக் கல்லடியிலை வெள்ளெருக்குப் பூத்திருக்கு.
மடத்தின்ரை இரண்டு தூண்மட்டும் தெரியுது.
நாகத்தம்பிரானை பித்தளைத் தாம்பாளத்தாலை மூடியாச்சு
வெள்ளைத் தேமா சரிஞ்சிட்டுது.....
புதுசா பட்டி நிறைய பூத்துட்டுது.
கழுதைக் குட்டியொண்டு படுத்திருந்து அருண்டு ஓடுது
அப்பனே.....பிள்ளையாரே.....
நீளப்பெருமூச்சு விரசன்காட்டுக்குள் பறக்கிறது.
இனி திரும்புவம்.
இதாலை நடப்பம்.
விசரன்காட்டு நடுப்பகுதி.
இதுக்காலையும் ‘பண்ட்’ போகுது.
பள்ளிக்கூடம் தெரியேல்லை
தூரத்து பெரிய வேம்பைக் குறிவைச்சு நகருவம்.
வர...வர....ஒண்டும் விளங்கையில்லை
மாட்டு அடியும் நெருக்கமா இல்லை
ஏதோ அகோரமா கதறிக் கேட்குது.
மயிலோ ஆந்தையோ தெரியாது
வழி நெடுக பொன்னாவரசு மதத்து பூத்திருக்கு
ஆ....காணியொண்டுக்கை வந்திட்டன்.
பொன்னம்பலண்ணேன்ரை வீட்டடிதான்.
வந்த பாதைக்கு வந்தாச்சு.
பதினைஞ்சு வரிச பிரிவு பாத்தாச்சு
இனி பதினெட்டு வரிசப்பக்கம் போவம்.
கண்டி வீதியின் வடக்குப்பக்கம்
அங்கதான் எங்க வீடு.

கொஞ்சத்தூரம் கண்டி வீதியாலை ஓடி.....
நாச்சியார்கோயிலடி வர இறங்குவம்.
நாச்சியார் கோயில் இடிஞ்சிட்டுது
முன்னாலை பருத்தி மரம் நிக்குது.
நாச்சியார்கோயில் வீதியும் தூர்ந்திட்டுது
இந்த ‘சேர்’ விடமாட்டன் என்குறார்.
அங்காலைப் போய் கேக்கட்டாம்.
நடராசா வாத்தியார் வீட்டடி ‘ சென்றியில’
சேராக்கள் நிக்கினம்.
கேட்டுப்பாப்பம்.
ஒரு ’சேரை’ என்னோட அனுப்பியிருக்கு
அவர்தான் வீட்டைபோக வழிகாட்டப்போறார்.
லதா ரீச்சரிண்டை வீட்டு பின்காணிக்கை
’ரொய்லெட்’ புழங்கப்படுகிறது.
அங்காலை எல்லாம் வடலிக்காடுதான்.
கல்லுறோட்டு வரவேணுமே.....
‘ மைன்ஸ் ‘ இல்லையோ?
சேர் சிரிச்சு மழுப்புகிறார்.
பாவம்! அநியாயம் சொல்லக்கூடாது
அவர்தான் முன்னுக்கு நடக்கிறார்.
அடுத்தது கெண்டைக்கால் தாழுற மண் ஒழுங்கைதான்
மூண்டு மா தெரியுது.
அது சின்னம்மா மாமியின்ரை வீட்டுப்புட்டி
இந்த அத்திவாரமும் கிணறும்
நேசம் அன்ரியின்ரைதான்
ஏனெண்ட கிணத்தடியில அலரி நிண்டது.
இப்பவும் நிக்குது.
சரி....சரி....இதுதான் நாகலிங்க அப்பான்ரை நாவல்மரம்
கிணத்தைக் காணயில்லையே....
சேர் சொல்லுறார் இவடத்திலை கிணறில்லையாம்.
அங்கால ‘பண்ட் பொயின்ற்’ பக்கமா இருக்காம்.
இஞ்சை தெரியுது கிணறு....
இதுக்கு அடுத்தது எங்கடை வீட்டுக்காணிதான்!

அந்தரப்பட...அந்தரப்பட.....சேரும் கவலைப்படுறார்.
ஒற்றையாக நிக்கிற கிளுவையைக் காட்டி
‘அதைத் தொட்டு’ மிச்சத்தைப் பார்க்கச் சொல்லுறார்.
எங்கை விளங்குது?
அரைவாசிக் காணியை ‘பண்ட்’ திண்டிட்டுது
புதுவீட்டுத் தென்னை மட்டும் ’பண்ட்’ கரையிலை
நிறை காயோடை ஆடுது.
விலாட்மா விழுற கட்டம்.
அத்திவாரம் கூட கிளறிக்கிடக்குது.
அங்காலை, இஞ்சாலை நடந்து பார்க்க ஆசை
கொஞ்ச நேரமெண்டாலும்
‘கொட்டுகளை’  தடவி அழவேணும் போல இருக்கு.....
சேர் அவசரப்படுத்துகிறார்.
அவருக்கும் ‘ராஜ காரிய’.
நாவல்கேணிக்குளத்தடி பார்க்கயில்லை.
மாட்டுக்கால் குளம்புகள் அங்காலை இல்லை.
சேர் திரும்பி....திரும்பி..... சொல்லுகிறார்.
மாட்டுப்பாதையில் நடக்கச் சொல்லி....
சேர் சொன்னதுதான் சரி.
மிருகங்களின்ரை தடங்களிலை
நாங்களும், சேராக்களும் நடந்து பழகுறது
நல்லதெண்டு நினைப்பம்.

9 comments:

  1. அருமையான கதை.... அழகான மொழி நடை...

    //‘ மைன்ஸ் ‘ இல்லையோ?
    சேர் சிரிச்சு மழுப்புகிறார்.
    பாவம்! அநியாயம் சொல்லக்கூடாது
    அவர்தான் முன்னுக்கு நடக்கிறார்.//

    //மிருகங்களின்ரை தடங்களிலை
    நாங்களும், சேராக்களும் நடந்து பழகுறது
    நல்லதெண்டு நினைப்பம்.//

    அருமை. இலங்கைத தமிழர்களின் முகாம் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கிறது. அவர்கள் வந்த புதிதில் பேசிய பேச்சுப் போன்ற நடையில் .... கதையோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக ஆழ்ந்து ஊடுருவி ரசித்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி குமார். அதனை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கும் சேர்த்து.

    நம்மோடு மிக நெருங்கி இருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.அது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  3. பனையும் மாவும் வேம்பும் பலாவும் நாவல் மரமும் கிளுவையும் 'வல்ல சீவ'னுகளான
    தென்னைகளும் இன்னபிற மரங்களும் வீடுகளும் அதில் வாழ்ந்திருந்த மனிதர்களும் உடனிருந்த வாயில்லா சீவன்களும் இருந்த இடம் தேடி, எச்சங்கள் முன் வாழ்வை நினைவூட்ட, வறண்ட கிணறுகளின் அடியீரமாய் மனசில் கசிய, கதைசொல்லியின் சைக்கிள் பின்னிருக்கையில் நாங்களும் கனத்த மனதுடன்.

    ReplyDelete
  4. \\இக்கதை யாழ்ப்பாணத்து நாச்சியார் கோயிலடி - மிருசுவில் பகுதியைச் சார்ந்த மொழிநடையில் படைக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது. என் இந்திய நண்பர்களுக்கு இதன் மொழி நடையும் சொல்லும் பொருளும் சற்றே கடினமாக இருக்கக் கூடும்.\\

    உண்மைதான் மணிமேகலா. நேற்றே கதையை வாசித்தேன். பாதிதான் வாசிக்க முடிந்தது. மீண்டும் பொறுமையாக வந்து வாசிப்போம் என்று கைவிட்டுப் போய்விட்டேன். இன்று கதையை வாசிக்க ஏற்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டு மறுமுறை வாசித்தேன். வாசிக்க வாசிக்க மொழிநடை பற்றிய சிந்தனை மறை(ற)ந்தேபோனது. ஏனோ சிரமமில்லாமலேயே கதைக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டுவிட்டேன். கதை முடிந்தபின்னும் என்னால் அந்தக் களத்தை விட்டு வெளியில் வர இயலவில்லை. அங்கேயே அமர்ந்து ஓவென்று வாய்விட்டுக் கதறவேண்டும்போல் உள்ளது.

    இழப்பின் வேதனையை எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அங்கலாய்ப்புமின்றி அமைதியாக அதே சமயம் அழுத்தமாகச் சொல்லி மனத்துக்குள் ஊடுருவமுடியும் என்பதை எடுத்துக்காட்டிய எழுத்து. வாசிக்கத் தந்தமைக்கு நன்றி மணிமேகலா.

    வட்டார வழக்கு நடைகள் அந்தந்த மண்ணின் வாசனையை நாமும் சுவாசிக்க அழைத்துப்போகின்றன. கைப்பிடித்து அழைத்துப்போகும் அவை களத்தில் நம்மை விட்டுவிட்டு விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றன, வெளியேறுவது அவரவர் சாமர்த்தியம் என்பது போல்.

    நான் இன்னமும் நாச்சியார் கோயிலடி - மிருசுவில்லிலேயே நிற்கிறேன், வழிதெரியாமல் அல்ல, வெளியேற மனமில்லாமல்.

    ReplyDelete
  5. நிலாவுக்கும் கீதாவுக்கும்,

    வாவ்!!..............

    இவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் இக்கதையை ஊடுருவிப் பார்த்த என் தோழிகளே! நீங்கள் அருகில் இருந்திருந்தால் உங்கள் தமிழ் உள்ளத்தைக் கட்டியணைத்துத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பேன்.

    உங்களையிட்டு மிக்க பெருமையாக உணருகிறேன் தோழிகளே!

    வாவ்! என்னுடய ஆச்சரியம் இன்னும் தீரவில்லை.

    ReplyDelete
  6. யாழ்ப்பாணத்தானின் ஏக்கத்தை நன்றாக வடித்துள்ளார்.....இணைப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. ஓம். ஒரு போர் பயணம்!ஒரு சமான்யனின் மன ஏக்கம்!!

    ’பண்ட்’- என்ற சொல் எனக்குப் புதிதாக இருக்கிறது.அச் சொல் பற்றி அறிய ஆவல்.

    ReplyDelete
  8. தெரியவில்லை ,இராணுவ முகாம்களின் எல்லையை குறிக்கும் சொல் என நினைக்கிறேன்....பங்கர்,சென்ரி,போன்ற ஒரு சொல்லாக இருக்ககூடும்

    ReplyDelete
  9. இருக்கலாம் இருக்கலாம்.

    முதலில் அதனை பங்கராக இருக்கலாம் என நினைத்தேன்.பரன் மாதிரி உயரமான இடத்தில் உட்கார்ந்து இருப்பார்களே அதுவோ என நினைத்தேன். அவ்வாறு இருக்க நியாயம் இல்லை.

    பாருங்களேன், உள்ளூர் பாஷையே புரியமாட்டேன் என்கிறது!

    நன்றி புத்தன். வரவுக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்.

    ReplyDelete