Tuesday, May 5, 2020

உள்ளார உள்ளார; உல்லாலா உல்லாலா........


ஒரு மயிர் கொட்டியைக் கண்டால்
அதை வாழ விடுங்கள்
அதற்கும் இருக்கிறது
புத்தம் புதிதாய் ஒரு
வண்ணாத்திப் பூச்சி வாழ்க்கை

மொட்டுக்களையும் ஏன் பறிக்கிறீர்கள்?
 நிற மூர்த்தங்களையும்
வாசத்தின் கூறுகளையும் கொண்டு
குவலயத்துக்கான அழகை அது
கருத்தரித்துக் கொண்டிருக்கிறது
 தெரியாதா?

மண்புழுவைக் கண்டால்
அருவருப்பானேன்?
உங்கள் மண்ணை அது
ஊதியமில்லாமல் உழுகிறதே
புரிவதே இல்லையா?

கரப்பானைக் கண்டால்
காத தூரம் ஓடுவானேன்?
உங்களை ஒரு போதுமது
கடித்து விடுவதில்லையே!

முதியோரக் கண்டால்
புன்னகைக்காமல் போவதேன்?
உங்கள் எதிர்காலம் அங்கே
கைகுலுக்குவதை
நீங்கள் காண்பதேயில்லையா?

கடைசியாக ஒன்று,
யாரோ பயிர் செய்த
மாணிக்க வாசகங்களை
இலவசமாய் அறுவடை செய்து போகிறீர்களே
ஒரு கொமண்ட் போட்டுவிட்டுப் போகலாகாதா?

யசோதா.பத்மநாதன்
5.5.2020. மதியம். 1.00 மணி.  :)

( சற்றுமுன் கடைத்தெருவுக்குப் போன போது தன்னந்தனியாக ஒரு மசுக்குட்டி நான் போன பாதையை ; இப்பதான் ஒரு அரை மணி நேரம் முன்பு கடந்தது. அது தான் இந்தக் கவிதையை ( ? ) எனக்குள் விதைத்து விட்டுப் போனது. பாவம் ; சன நெருக்கடியான தெருவில் தப்பிச்சுதோ தெரியாது....)

( மேலும், ஒரு நல்ல கவிதை வாசிப்பவரையும் எழுதத் தூண்டும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். கடந்த சில நாட்களாக சில கவிதைகளோடு எனக்கும் சகவாசம். அது எங்கு போனாலும் என்னோடு கூடவே வருகிறது. எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை அது தட்டி எழுப்பி விட்டது. அதன் விளைவு தான் இது எல்லாம்....அவரை உங்களுக்கு தகுந்தபடி அறிமுகப்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அது வரை இந்தக் கத்துக்குட்டித் தனங்களை எல்லாம் நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். :))

2 comments:

  1. இயற்கையையின் படைப்புக்களை ரசித்து பல கவிதை எழுதுகின்றீர்கள் மிகவும் நன்றாக உள்ளது...
    நீங்கள் எழுதிய அழகிய கவிதைகளில் இருந்து சொற்களை எடுத்து (கொப்பி) நானும் கிறுக்கியுள்ளேன் ..


    மலர்களை சில
    மயிர் கொட்டிகள்
    மலரவிடுவதில்லையே
    மண்புழுக்கள் அழகில்லையே
    மன மகிழ்ந்து ரசிக்க‌
    கரப்பான் பூச்சிகள்
    கபினட்டில் வைத்திருந்த‌
    கரைப்பானை நாசப்படுத்துகின்றனவே

    ReplyDelete
  2. புத்தன்,
    நீங்கள் என்னோடு மிகுந்த கருணையோடு நடந்து கொள்ளுகிறீர்கள். மிக்க நன்றி.

    என்றாலும் சில கவிதைகள் எங்களையும் எழுதத்தூண்டும் என்று நான் சொன்னதற்காக இப்படி ‘கடிக்கக்’ கூடாது ஐயனே! :)

    என்றாலும் உங்கள் கவிதை சுவை சொட்டுது... :)

    இனி நீங்கள் கதைகளோடு கவிதைகளும் நிச்சயம் எழுதலாம் புத்தன். முயற்சி செய்யுங்கள்.
    அது சரி, அது என்ன கரைப்பான்? Drinks ஆ?

    ReplyDelete