Tuesday, October 8, 2024

காலத்துக்குக் காலம், என்னுள்ளே என்னுள்ளே....

பல நாட்களாகி விட்டன இங்கு வந்து!

காலத்துக்குக் காலம் பருவங்கள் மாறுகின்றன; வருடங்கள் உருண்டோடுகின்றன; வயது ஒருபடி மேலேறுகிறது; பழையன கழிகின்றன; புதியன உட்புகுகின்றன.அனுபவங்கள் பாடங்களைச் சொல்லித்தந்தபடி நகர்கிறது.எல்லாம் அதனதன் போக்கில் நடந்தபடியே இருக்கின்றன.

மணிமேகலா
எனக்கும் அப்படித்தான்; பருவங்கள் மாறுவது போல என் ஆர்வங்களும் அபிலாஷைகளும் ஆங்காங்கே அவ்வப்போது மாறியபடியிருக்கும். சில நாட்களில் விட்டேந்தியாக சுற்றப் பிடிக்கும்; வேறும் சில நாட்களில் விதவிதமாகச் சமைக்கப் பிடிக்கும்; சில பருவ காலங்களிலோ எனில் சின்னச் சின்ன கடைகள், பழம்பொருள் அங்காடிகள்; சந்தைகளில் உள்ள மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காத சின்னச் சின்ன கடைகளைச் சுற்றிப் பார்த்து அவர்களோடு கதைத்து அங்கிருக்கும் வினோதமான அபூர்வ பொருட்களை வாங்கி வந்து வீட்டை அழகுபடுத்தப் பிடிக்கும்; வேறும் சில நாட்களிலோ எனில் தோட்டம், தாவரங்கள், பூமரங்கள் இவற்றின் மீது நாட்டம் அதிகரிக்கும்; ஒருவித குண மாறுபாடுகள் ஏற்படும் போது நகரத்துக்குப் போய் வீதிவேடிக்கைகள், கலைக் காட்சிகள் மற்றும் மியூசியம் என்று சுற்றிப் பார்த்து விட்டு வருவேன். இடையில் ஒருதடவை Scrapbooking  என்று ஒன்றைத் தொடங்கி அதற்கான பொருட்களை எல்லாம் கடை எல்லாம் சுற்றித் திரிந்து வாங்கி வந்ததோடு அந்த ஆர்வம் அணைந்து போயிற்று. சில நாட்களில் யோகா, தியானம், ஆத்மீக அனுபவம் என்று அதில் மூழ்கிப் போய் அந்த ஏகாந்தப் பேருணர்வில் திளைத்தபடியிருப்பேன். 

மேலும் சில அபூர்வ நாட்களில் நூலகத்தில் இருந்து மற்றவர்களோடு சேர்ந்திருந்து புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும்; இலியட், ஒடிசி என்ற கிரேக்க காவியங்களின் தமிழாக்கம் எல்லாம் நம் அறிவகங்களில் இருக்கிறதென்றால் பாருங்களேன்! அவைகள் எல்லாம் நமக்கு வித்தியாசமான சிந்தனை மரபுகளை, அவர்தம் வீரதீர செயல்களை; சாகச சிந்தனைப் புலங்களை நமக்கு அறிமுகப் படுத்துகின்றன. 

அது போல இலவச 24 மணிநேர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று சர்வதேச திரைப்படங்களை தொடர்ச்சியாகக் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மிக அபூர்வமான சிறப்பான திரைப்படங்களை அதில் எப்போதும் பார்க்கலாம். தமிழ்நாட்டுத் திரைப்படமான ‘காக்காமுட்டை’யையும் ஒருதடவை காட்டினார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு ஒவ்வொரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அந்த வாரம் முழுவதும் உலக திரைப்படங்களில் அந்தக் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த திரைப்படங்களை திரையிடுவதும் உண்டு. நம்புங்கள் நண்பர்களே! இவ்வாறான திரைப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலான தமிழ் நாட்டுப் படங்களின் மீதான மோகமும் காதலும் முற்றாகத் தீர்ந்து போவதோடு வெறுப்பே மேலோங்கிப் போகும். தமிழ்நாட்டு திரைப்படங்களின் சிந்தனைப் போக்கின் மீதான விமர்சனமே மனம் முழுக்க மிஞ்சி நிற்கும். தமிழ் தீவிர திரைப்பட ரசிகர்கள் இது குறித்து என்னை மன்னிப்பீர்களாக!

அது நிற்க!

எழுத்து வேலைகளும் அவ்வப்போது எனக்குப் பிடித்துப் போகும். சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை இரவு பகல் என்று பாராது மேய்ந்து கொண்டிருப்பேன். தத்துவ முத்துகளைச் சேகரிப்பேன். அவற்றில் பிடித்தவற்றை எல்லாம் ஓர் அழகிய கொப்பியில் சிரமம் பாராது குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன். சோர்ந்துபோகும் சில நாட்களில்; எதுவும் செய்யப் பிடிக்காத பொழுதுகளில்; இந்தக் கொப்பியை எடுத்து மீண்டும் படித்துப் பார்ப்பேன். அது ஒரு தேநீரை போல; ஓரு நீரூற்றைப் போல, எனக்குள் உற்சாகத்தை உற்பவிக்கும். வாழ்த்து அட்டைகள் செய்வது இப்போது தொற்றிக் கொண்டிருக்கிற புதியதொரு ஆர்வக் கோளாறு. நான் நடத்தி வரும் முதியோர் குழுவுக்கு இந்த கிறாஃப்ட் வேலையை அறிமுகப் படுத்தியதில் இருந்து எனக்கும் தொற்றி விட்ட வியாதி இது.

இப்போது படங்களுக்கு வண்ணம் தீட்டும் பொழுது போக்கில் இருந்து விலகி அதனைத் தைத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றி, அதையும் தைத்துப் பார்த்து விட்டு  அந்தப் போதையில் இருந்து விலகி, அவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிப் போக வந்திருக்கிறேன்.








நீங்கள் எல்லாம் என்னமாதிரி? உங்களுக்கு என்ன எல்லாம் பிடிக்கும்? என்ன எல்லாம் செய்வீர்கள்? 

1 comment:

  1. விதம் விதமாய் நேரம் செலவழிப்பது நல்லதே… உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete