Thursday, July 3, 2014

யவனரும் தமிழரும் - இலக்கிய சந்திப்பு - 20ஐ முன்வைத்து




क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।

तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥

க்வ ஸூர்யப்ரப⁴வோ வம்ʼஸ²: க்வ சால்பவிஷயா மதி:|
திதீர்ஷுர்து³ஸ்தரம்ʼ மோஹாது³டு³பேனாஸ்மி ஸாக³ரம்||

ஒளிமிகு சூரிய வம்சம் எங்கே? அற்பமான என் சிறுமதி எங்கே? கடந்திட முடியாக் கடலை சிறுபடகின் மூலம் கடக்க ஆசை கொண்டேன்.

என்று ரகுவம்சம் தொடங்கும்.

இதனை எழுதத் தொடங்குகின்ற போதும் எனக்கு அவ்வாறான மன உணர்வே இருக்கிறது.
கடந்த 29ம் திகதி ஆங்கில இலக்கிய அறிமுகம்; ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் அதிதி உரையாற்ற வந்த தனபாலசிங்கம் ஐயா அவர்கள் பேசிக்கொண்டிருந்த விரிவுரை பல ஈரச் சுணைகளையும் ஊற்றுக் கண்களையும் புலப்படுத்திக் கொண்டு தமிழ் வெள்ளமென பரந்தன.

ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழகத்துக்கும் மேலைத்தேயத்துக்கும் (கிரேக்க ரோம) இடையே பண்டைக்காலம் தொட்டு நிலவி வந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் யவனர் பற்றிய குறிப்புகளும் கவனத்தில் எடுக்கப்பட்டன.
அரிக்கமேடு போன்ற இடங்களில் மட்பாண்ட ஓடுகள், ரோம கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன எனவும்; பல பிராமிக் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றன என்றும் அவற்றை ஆராயவும் அகழ்வாய்வு செய்து மேலும் பல ஆதாரங்களை வெளிக்கொணரவும் அரசு ஆதரவு காட்டுவதில்லை என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதனைக் கேட்ட போது 27.4.14 அன்று சிட்னி Art gallery யில் காட்சிக்கு வைக்கப்பட வந்திருந்த ஆப்கானிஸ்தான் பொக்கிஷங்கள் தான் உடனே எனக்கு நினைவுக்கு வந்தன.
ஆப்கானிஸ்தான் – பண்டைய காந்தார தேசம் – மகாபாரதத்துக் காந்தாரியின் பிரதேசம் - இன்றய யுத்த பூமி – யுத்தத்துக்குள்ளேயும் அவர்கள் கட்டிக் காத்த வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சிட்னியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரே காலம் – சங்ககாலத்தை ஒட்டிய காலப்பகுதி.- அதில் காட்சிப்படுத்தி இருந்தவைகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் கிரேக்க ரோம சாம்ராஜ்யத்துக்கும் தென் தமிழகத்துக்கும் இடையே போக்குவரத்தின் மத்தியில் இப்பிரதேசம் அமைந்திருந்ததால் இந்திய மேலைத்தேயச் செல்வாக்கினை தம் கலைப்பொக்கிஷங்களில் காணமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி நான் குறுக்கே நிற்பது அழகல்ல; விலகிக் கொள்ளுகிறேன். நீங்கள் சென்று பாருங்கள். இந்திய சாயலில் தந்தங்களில் செதுக்கப்பட்டிருக்கிற வனப்புறு பெண்களைப் பார்க்கின்ற போதும் ரோமானிய வைன் கடவுளைப் பார்க்கின்ற போதும் இத்தகைய கலைப் பொக்கிஷங்கள் ஏன் தென் தமிழகத்தில் கிட்டவில்லை என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.

































(குறிப்பு: முதல் ஓவியமும் கடைசி ஓவியமும்  Art gallery க்குச் சொந்தமானவை. ஆப்கானிஸ்தானுக்கு உரியதல்ல)

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, 20
புறம் -56
”தண்கமழ்தேறலை” ஒண்தொடிமாதர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பொற்கலத்தில் ஊற்றிக் கொடுக்க உண்டு களித்த சங்க அரசனும் *********** அழகிய யவன ஆண்களைப் பார்த்து ஆசை கொண்ட உள்ளூர் பெண்களும் சங்க காலத்தில் நிறைந்திருக்க சிலம்பு ஒலித்த சங்கமருவிய காலத்தில் பெரு வணிக வளாகங்களாக இருந்த மருவூர்பாக்கமும் பட்டிணப்பாக்கமும் இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் 33 வரிகளில் சித்திரிக்கப்படுகிறது.வனப்புறு நகரங்களும் மாட மாளிகைகளும் நிறைந்த நகரை இளங்கோ அடிகளார் அங்கு காட்டுகிறார். அங்கு யவனர் இருக்கை தனியாக இருந்தது பற்றியும் அறிய இயல்வதால் பல நூற்றாண்டுகளாக வர்த்தக பண்பாட்டு தொடர்புகள் இருந்து வந்ததை அறிய முடியும். இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.

ஐராவதம் மகாதேவன் கரூருக்கருகில் அமராவதி நதிப்படுக்கையில் கிடைத்த மோதிரம் ஒன்று பற்றிக் குறிப்பிடுகையில்
“அண்மையில் கரூருக்கு அருகில் அமராவதி ஆற்றுப் படுகையில் இது கிடைத்தது. இப்பொழுது தனியார் வசம் உள்ள இப்பொன்னாலான இலச்சினை மோதிரத்தின் எடை ஒன்றரை தோலா 15.6 கிராம். இதன் முகப்பில் 25 மி.மீ நீளமும் 15.மி.மீ அகலமும் கொண்ட ஒரு குழிவான நீள்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு தலைவனும், தலைவியும் அணைத்து நிற்கும் கோலம். இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலை வல்லுநர் இக்காட்சியை மிதுனம் என்று கூறுவர்.

சிற்ப அமைதியைக் கொண்டும் கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து அவ்வப்பொழுது கிடைத்துவரும் காசுகளிலிருந்தும், கைவினைப் பொருள்களிலிருந்தும் இந்தப் பொன் இலச்சினை மோதிரம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்றும், சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்றும் கூறலாம். சங்க காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகக் கிடைத்துள்ள முதல் புறச்சான்று என்ற தனிச் சிறப்பினை இம்மோதிரம் பெறுகிறது.

தலைவி
தலைவி எழிற்கொடியாய் நிற்கிறாள். தலையில் உயர்த்தி ஒருபுறமாக சொருகியுள்ள கொண்டை. நாணிச் சற்றே திரும்பியுள்ள முகம், வேய் எனத் திரண்ட தோள், நீண்டு புறத்தே தொங்கும் இடக்கரம், தலைவனை சுற்றி அணைக்கும் வலக்கரம், உள்ளக் கிளர்ச்சியை எடுத்தியம்பி விம்மும் மார்பகம், மின் இடை, வலக்கால் நிலை பெற அதனை கொடியெனச் சுற்றிய இடக்கால், கைகளில் வளையல், கால்களில் கொஞ்சும் சிலம்பு, மேனியழகை மறைக்காத மெல்லிய துகிலுடை.

தலைவன்
அருகில் அணைந்து நிற்கிறான் தலைமகன். அவனும் தன் முடியைக் கொண்டையாகச் சொருகி, தலைவியைக் காதல் கூர் நோக்கோடு கண்டு களிக்கிறான். வலக்கரத்தில் அவளுக்கு அளிக்க ஒரு மலர், குறிஞ்சி மலரோ? (குறிஞ்சி என்றால் இணைதல் என்றும் பொருள்), உயர்ந்த திண்தோள்கள், இடக்கால் நெடித்து வலக்கால் மடித்து துடியிடையாள் படரும் கொம்பென நிற்கிறான்.

கொல்லிப் பாவை
இந்த இலச்சினை மோதிரத்தில் உள்ள மடந்தையின் உருவையும் எழிலையும் காணும்போது சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிக்கப்பெறும் கொல்லிப்பாவையும் நினைவுக்கு வருகிறது. அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் கபிலர், பரணர், ஒளவை முதலிய பெரும் புலவர்கள் கொல்லிமலையில் வடித்திருந்த பாவையின் எழிலைப் பாடுகிறார்கள். எடுத்துக்காட்டாக

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர்கொல்லி
கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்மெல் இயல்

என்று தலைவியின் எழிலைக் கொல்லிப்பாவைக்கு ஈடாகப் பரணர் கூறுகிறார்.

கொல்லிப்பாவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த மோதிரத்திலுள்ள பெண் சிற்பத்தைப் பார்த்தால் இவளைப் போன்ற மடந்தைகளைத் தான் கொல்லிப்பாவைக்கு ஒப்பக் கூறியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள் என்று சொல்லலாம்..” – என்கிறார்ஐரவதம்.மகாதேவன். (நன்றி: இணைய உலாவி)

இப்படி எத்தனை எத்தனை தென் தமிழகத்தில் புதையுண்டும் தனியார் வசமும் இருக்கக் கூடும்?


சோழர்காலத்து ஆலயச் சிற்ப வேலைப்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிற மேலைத்தேய தொப்பி மனிதன். ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?  தஞ்சைப் பெருவுடையார் கோயில். கி.(பி.985 முதல் 1070) ராஜராஜசோழன்.













Friday, June 27, 2014

Robi McLean

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

16.6.14 திங்கள்.

எல்லோருக்கும் போல சாதாரணமாகத் தான் விடிந்தது.

உண்டு, உறங்கி, விழித்து, குளித்து ,உடுத்து வேலைக்குப் போன சாதாரண நாள் அது.

கடந்து போயிருந்த வெள்ளி மாலையில் வந்து போயிருந்த நம் shift ன் இளம் அதிகாரி Robi Mclean அன்றய தினம் நம்மைக்காண வராமலே நம் வேலைகளுக்கு முதலான உடற்பயிற்சி நிறைவடைந்திருந்தது. இருந்த போதும் நம்மிடையே ஒரு எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அதற்குக் காரணம் Robiசொல்லி இருந்த பெரிய ஒரு செய்திப்பகிர்வு இன்றய தினம் இருக்கும் என்பதும்; அது நம் வேலைத்தலத்தில் இடம்பெறப்போவதாக அரசாங்கம் ஊடகங்களில் அறிவித்திருந்த 900 பேரின் Job cut  பற்றியதாக இருக்கும் என்பதும் காரணம். அது சம்பந்தமான தயார் படுத்தலில் Robi ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதால் அவரது பிரசன்னம் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமலே நம் வேலைகள் வழக்கம் போல ஆரம்பித்து விட்டன.

வேலைக்குக் கலைந்து போன கூட்டத்தின் அன்றய பேசு பொருளாக இருந்தது இரண்டு விடயங்கள்.

1. யார் யாரெல்லாம் நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
2. உலகக் கால்பந்து போட்டியில் அவுஸ்திரேலியாவின் இடம் எத்தகையதாக இருக்கும்.

 - இவை இரண்டும் தான்.

கூடவே Robi கடந்த வெள்ளியில் சொல்லிப் போன பியர் குடித்து கும்மாளம் போட்டு தூக்கத்தைத் தொலைத்து வேலைக்கு வந்து சினந்து வருத்தங்களையும் ஆபத்துக்களையும் வருந்தி அழைத்துக் கொள்ளாமல் சரியான தூக்கத்துக்கு சரியான நேரத்துக்கு நீங்கள் போனால் தான் சிறப்பாக அடுத்த நாள் கடமைகளை உற்சாகத்தோடு ஆற்ற முடியும். நீங்கள் எப்படி சுக ஆரோக்கியத்தோடு வேலைக்கு வந்தீர்களோ அதே ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் வீட்டுக்கு நீங்கள் பத்திரமாகச் செல்வது மிக முக்கியம். உங்களைச் சார்ந்து ஒரு குடும்பம் இருக்கிறது. அது வேலையை விட முக்கியமானது. Have a safe day! என்று வெள்ளி மாலை நேரத்து வேலையை ஆரம்பித்து போனதுமான நிகழ்வும் நினைவுக்கு வராமல் இல்லை.

வேலை ஆரம்பித்து சுமார் 1 மணி நேரம் இருக்கும். இயந்திரசாதனங்கள் யாவும் எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நிறுத்தப் பட்டன. ஆபத்தை அறிவிக்கும் சிவப்பு விளக்குகள் எல்லா இடங்களிலும் ஒளிர்ந்தன. ஒரு பயம் கலந்த மெளனம் மளமளவென வியாபித்தது. அப்போதும் கூட இயந்திரசாதனம் பழுதடைந்து விட்டது. வேலைச்சுமை பலமடங்காகக் கூடக்கூடும் என்பதற்கப்பால் நினைக்க எதுவும் தோன்றவில்லை. வேலைத்தலத்து ஊழியர்கள் யாவரும் முகப்பு மண்டபத்துக்கு வந்தமருமாறு உள்ளார்ந்த தானியக்கி ஒலிபெருக்கி அறிவிக்க எல்லோரும் சென்றமர்ந்தோம்.

தொலைபேசிகளை அணைக்குமாறு அல்லது மெளன அதிர்வலையில் விட்டு வைக்குமாறு வேண்டப்பட்டோம்.

அறிவிக்கப்பட்ட செய்தி வேலைக்கு வந்த Robi McLean மாரடைப்பால் ஸ்தலத்தில் மரணமானார் என்பது தான்.

44 வயது.

கிறிஸ்டல் நீலக் கண்களும் பிங் ரோஜா இதழைப்போல தோலும் பொன்னிற கட்டையாக வெட்டப்பட்டிருக்கும் கேசமும் கொண்டிருந்த இளம் அதிகாரி.

சந்தோஷமும் உற்சாகமும் எல்லோரையும் சமாமாக நடத்தும் பாங்கும் புன்னகை பூத்த முகமும் பிரச்சினைகளை சுலபமாக நோ இன்றி தீர்த்து வைக்கும் வியத்தகு ஆழுமையும் கொண்ட புன்னகை பூத்த உருவம் மற்றும் பருவம்.

அவருடய புன்னகை பற்றி பலரும் சிலாகிப்பதுண்டு. அந்த மனிதனுடய புன்னகை உதட்டில் இருந்து உதிப்பதல்ல. அது இதயத்தில் இருந்து மலரும். அது யாருக்கு அளிக்கப்படுவதாக இருந்தாலும் அதில் ஒரு அந்தரங்க சுத்தியான அன்பு, அக்கறை, மகிழ்ச்சி என்று பல வாசங்கள் சேர்ந்திருக்கும். அதில் இவனோடு எதுவும் கதைக்கலாம் என்ற - பாதுகாத்து சரியான பாதையைக் காட்டுவான் என்ற நம்பிக்கையான செய்தி அந்த புன்னகையோடு பரிமாறப்பட்டிருக்கும்.

மணிக்கட்டு வரை பட்டின் பூட்டி காற்சட்டையின் உட்புறம் விடப்பட்டிருக்கும் சேர்ட்.  இடையிலே இடுப்புப்பட்டி. மற்றும் கழுத்திலே கழுத்துப் பட்டி. தனிக் கறுப்பு அல்லது தனி வெள்ளை சேர்ட். அது தான் எப்போதும் அவரின் தெரிவு.

பார்த்தவுடம் அதிகாரி என அறிய வைக்கும் நடை உடை பாவனை. ஆனால் வேலை, மனிதர்கள் என்று வந்து விட்டால் மாத்திரம் அவருக்கு எல்லா வேலையும் எல்லா மனிதர்களும் சமன் தான்.

நாம் வேலையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதை எங்கேனும் தூரத்தில் நின்று கண்டு விட்டால் உடனே மணிக்கட்டில் இருக்கும் சேர்ட் பட்டினை களற்றி முழங்கை வரை இழுத்து விட்டு விட்டு  எந்த ஒரு தயக்கமும் இன்றி ஏதேனும் ஒரு ஜோக் ஒன்றை சொல்லி நம்மைச் சிரிக்கப்பண்ணி அதே நேரம் நம்மை விட துரிதமாக அந்த வேலையை செய்து நம்மை அசுவாசப்படுத்தி விட்டு மிக இயல்பாக மீண்டும் சேர்ட் பட்டினைப் பூட்டிக்கொண்டு போகும் அந்த ஆழுமை மறக்க முடியாதது.

அதில் 18 வயதில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்த அனுபவம் மிளிரும்.

மிளிர்ந்தது.

ஆறுமாதங்களுக்கு  ஒரு தடவை மாறும் அதிகாரிகளுக்குள் கடந்த சில வருடங்களுக்கு முன்  நமக்கு வாய்த்திருந்த ஜூலிஎவனுக்குப் பிறகு நம் எல்லோருக்கும் ஏகோபித்த வகையில் பிடித்த ஒரு மனிதனாக அவர் இருந்தார்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

சூரியன் உதித்தது மறைந்தது.
நாள் ஒன்று வழமை போல நகர்ந்தது.
பசித்தது உண்டோம் கழித்தோம்.
உறங்கினோம் விழித்தெழுந்தோம்.
எல்லாம் வழமைக்கு மாறின.
இயந்திரங்கள் இயங்கின. வேலைகள் முடிந்தன.

Robi இல்லாமலே  இவை எல்லாம் நடந்தன; நடக்கின்றன. இனியும் நடக்கும்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

Robi என்றொரு மனிதன் நம்மோடு இருந்தான்; நல்லவனாய் எல்லோரது பிரியத்துக்குள்ளானவனாய் புன்னகை பூத்த முகத்தினாய் மனங்களில் நிலைத்திருப்பான் என்பதைத்தவிர வேறெந்தத் தடயங்களும் இனி இருக்கப் போவதில்லை.

இப்போது நினைவுக்கு வருகிறது  வைரமுத்து சொன்ன,

 “ நீ என்பது வேறொன்றுமில்லை; செயல்.”

சுமார் மூன்று மாதங்களுக்குள் வேலைத்தலத்தில் மாத்திரம் 4 மரணங்கள். அதில் இரண்டு வேலைத்தலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. மற்றய நண்பன் விடுமுறை என்று போய் வராமலே விபத்தில் மரணமானான். அவனது முகத்தைக் கூட காண நமக்கு கொடுத்து வைக்கவில்லை. மற்றயவர் புற்று நோய் பற்றி மூன்று மாத இடைவெளியில் போய் சேர்ந்தார்.


காலப்போக்கில் இவர்கள் எல்லாம் நம் மனங்களில் இருந்தும் மறைந்து போகக் கூடும்.

காலமும் வாழ்க்கையும் நம்மை அப்படி விரட்டிக்கொண்டிருக்கிறது.

என்றேனும் ஒரு பொழுதில் - சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு நாளில் -  நம்மை யாரும் சீண்ட விரும்பாத தனிமை ஒன்று நம்மை வியாபிக்கும் அகால பொழுதொன்றில் - அப்படி ஒன்றுக்கு ஆள்பட வேண்டி இருந்தால்   - நம் கடந்த கால நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் மூளை வளம் அப்போதொன்றில் இன்னமும் மிச்சம் இருந்தால் - அப்படி ஒரு பொழுதில் இந்த முகங்கள் நினைவுக்கு வந்து போகக் கூடும்.

வேறொரு பொழுதில் அமைதியும் சோகமுமாக என் வேலையில் ஆழ்ந்திருந்த பொழுதொன்றில் என் வியற்நாமிய தோழி ஆன்.வூ ( Anne. Vu) அவ் இடம் வந்தாள். அவளைக் கண்டதும் துளிர்த்த கண்ணீரை அவள் கண்டிருக்கக் கூடும்.

வாழ்க்கை ஒரு வட்டம்.

மூச்சு எடுக்கிறோம். மூட்சை விடுகிறோம் மீண்டும் எடுக்கிறோம். தண்ணீர் அருந்துகிறோம். வெளியேற்றுகிறோம். மீண்டும் அருந்துகிறோம். உயிரினங்களும் அவ்வாறு தான். ‘வீட்டில் ‘ இருந்து வருகிறோம். ‘ படிக்கிறோம்’ மீண்டும் நம் வீட்டுக்கு போவோம். வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுழல்கிறது. எதை நாம் இங்கு படிக்க வந்திருக்கிறோம் என்ற விடயத்தில் தெளிவிருந்தால் வருந்த எதுவுமில்லை என்ற தான் நம்பும் பெளத்த சித்தாந்தத்தை முதுகில் தட்டி சாதாரணமாய் சொன்ன படி நகர்கிறாள்.

வாழ்க்கை நகர்கிறது.

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

இலக்கிய சந்திப்பு - 20 -




Monday, May 19, 2014

இழப்புகள்

குழந்தைகளற்ற வீட்டின்
நிசப்தங்களிடையே
காதுக்கெட்டாத விசும்பல்களாய்
முனகிக் கொண்டிருக்கிறது
அவன் முகப்புத்தகம்.

அவன் கடசியாய் பகிர்ந்த
நிலைத்தகவலை விடவும்
முந்திவிட்டது
அவன் நிலையைப் பற்றிய தகவல்.

இறப்பு அறியாமல்
இன்னமும் அனுப்பிக் கொண்டிருக்கிரார்கள்
நட்பின் அழைப்பிதழும்
பிறந்தநாள் வாழ்த்தும்.

இறந்து போன செய்தியினை
அவன் சுவற்றில் பதிய முடியாமல்
தடுத்துக் கொண்டேயிருக்கிறது
அவன் குழந்தையுடன்
சிரித்துக் கொண்டிருக்கும் கடைசிப் புகைப்படம்.

இறந்து போனவன் எனக்கு
இறந்து போனதாகவே நினைவில் இல்லை.
நீண்ட நாட்களாக
முகநூல் அற்ரிருக்கிறான்.

அவன் புதைக்கப்பட்ட
கபர்ஸ்தான் அருகே
அந்தக் கருவேல மரத்தினின்று
களன்று விழுந்த இலைகள் தான்
அவன் பகிரவே முடியாத நிகழ்வுக்கு
அவன் பார்க்கவே முடியாத
கடைசி லைக்.

ரசிகவ் ஞானியார் ஆனந்த விகடன் 2.4.14. பக்: 28.

இந்தக் கவிதையைப் பார்த்த போது ’கருவேலநிழல்’ என்ற வலைப்பூ என என் நினைவில் இடறிச் சென்றது.பாரா என்ற பெயர் கொண்ட பா.ராஜாராம் என்பவரின் வலைப்பூ அது. அவரது குட்டிக் குட்டிக் கவிதைகளும் சுவாரிசமான பதிவுகளும் அம்மனிதனை என் மனதுக்கு மிக நெருக்கத்தில் அமர்த்தி இருந்தன.

கால ஓட்டத்தில் அப்பதிவுகளின் பக்கம் போவது குறைந்து போய் விட்டது. இக் கவிதையை ஆனந்த விகடனில் பார்த்த பின் அப்பக்கம் போனேன்.2013 மார்ச் 8க்குப் பின் பதிவுகள் ஏதுமில்லை.

என்னாச்சுப்பா?

பாராவின் கருவேலநிழலில் இருந்த எனக்குப் பிடித்த கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தெரிந்தவர்கள் என்னவாயிறென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

துக்கமாயிருக்கிறது.

மனதுக்கு நெருக்கமான ஒன்றை இழப்பது துயர் மிக்கது.




அம்மா விரலைப் பிடித்தபடி
நடந்து போய்க்கொண்டிருந்த
சிறுவனைப் பார்த்து
சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருக்கிறான்.

திருப்பித் திருப்பி
சிரிக்க வேண்டியிருக்கிறது!

.......................

என்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

அவளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

எல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'

.........................................

கோயம்பத்தூர்
08-10-2010
9.35 pm

அவசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்.

ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித் திண்ணையில்
காலணி இடும் இடத்தில்

நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்.

மறந்த மயிலிறகின் பீலியைப் போல்
கிடைக்கிறாதாவென பாருங்கள்.

கிடைக்காது போகிறபோது
மட்டுமே இறைஞ்சுகிறேன்.

என் பிரியமானவர்களே
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை.

- நன்றி.. பா.ராஜாராம்.

.......................................

தட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென
முதலில் அறிந்தேன்.

தட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.

போறான் பாரு,
வாலில் நூல் கட்டிய பொறம் போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை.

பொறம் போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப் படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி.

.............................................

சாண வரட்டி
தட்டிக் கொண்டிருந்தாள்
சகுந்தலா சித்தி.

வீட்ல அடையாக்கும் என
விசாரித்தபடி போய்க் கொண்டிருந்தார்
பெருமாள் சித்தப்பா.

ஆமா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே
என சிரித்த சகுந்தலா சித்தி
அவ்வளவு அழகு.

அதைவிட அழகு,
அத்தருணத்தில் மணிக்கட்டினால்
சித்தி முடி ஒதுக்கியது.

......................................

சிகரெட் பிடிக்கிற காசிற்கு
வாழைப் பழம் வாங்கி தின்னேண்டா
என்பாள் அம்மா.

சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.

கொல்லையில்,
வாழை மரங்கள் வைத்த
வீடொன்றை நினைக்க
நல்லாத்தான் இருக்கிறது...

புகைக்கிற போதெல்லாம்.
................................
உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

பதில் இல்லை.

.........................................

பக் பக் பக் என அழைத்தால்
தானியம் தரவென அறிகிறது
பெயரில்லா கோழி.

உதடு குவித்து ப்ரூச் என்றால்
புரியும் ரோசிப் பூனைக்கு.

கெத் கெத் கெத் என
மேல் அன்னத்தில் தட்டினால்
வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.

...............................................

அம்மா சத்தியமாய்
என்று தொடங்கியது பிறகு
ஐயப்பன் சத்தியமாய் என்று
மாறியிருக்கிறது.

குலசாமி பொதுவா என்று
சொல்ல நேர்ந்ததும் உண்டு.

பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.

அப்பவும், இப்பவும்
எங்கு தவறு நேர்கிறது என
அறிய இயலவில்லையே ஆஞ்சனேயா?

"ஆஞ்சனேயா?"

"ஆஞ்சி?"

எஸ்கேப் போல.

..................................

மழெ இல்லே தண்ணி இல்லே
ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே
அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

-- ராஜசுந்தரராஜன்
.................................................

சனியனே,
விருந்து சொல்ல
உனக்கு வேறு வீடா கிடைக்கலை?"
என இரைந்து கொண்டிருந்தாள்
வெஞ்சனத்துக்கு
முருங்கை ஒடித்துக் கொண்டிருந்தவள்.

"பார்த்துடி,
முட்டை இருக்கு"
என கரைந்து கொண்டிருந்தது
ஓட்டுத்தாவர காகம்.

........................................

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.
..............................................

சேவுக மூர்த்தி என்ற
'குண்டக்க மண்டக்க' மூர்த்தியை
தேடிப் போயிருந்தேன்.

பூட்டியிருந்தது வீடு.

ஒட்டிய சந்திலிருந்து
ஓடி வந்த சிறுவனொருவன்
மூர்த்தியை ஒத்திருந்தான்.

மூர்த்தி மகனாடா என்றேன்.

இல்ல...
வந்து...
அது வந்து...
என்றெல்லாம் இழுத்தவன்
மூர்த்தி எங்கப்பா என்று
ஓடிப் போனான்.

மேற்கொண்டு
மூர்த்தியையும் வேறு பார்கனுமாவென
திரும்பினேன்.

.....................................................

அட்டையின் கவிதை...

நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.

உள்ளே..

நீ நடந்த தடங்களின் அடியில் தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு!

ஜன்னல் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தாள்
காலைக் கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணிச் சத்தத்தை!

கொஞ்சூண்டு தான் இருந்தாள்
யாருக்கும் தர முடியாத
காதலாக இருந்தாள்!

காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.
......................................

அவளை கண்டு பிடிக்க
எந்த முயற்சியும்
செய்தேன் இல்லை.

அவளும் வழி அறிவிக்கிற
ரொட்டித் துண்டுகளை
பிய்த்து எறிந்தவள் இல்லை.

ஆயினும்,
இந்த தெருக்கள்
எங்களை
காட்டித் தராமல் இல்லை.
..........................................

தவளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?

நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?

சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?

கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?

பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?

ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...

ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?

.................................................

எல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.

.......................................

என்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.
.............................................

பர்ஸ் எடுத்து
வைத்து கொண்டாள்.

மொத்த சேலைகளையும்
கூடைப்பையில் திணித்து கொண்டாள்.

பாவாடை பிரிலை
அவசரமாக உள் நுழைத்தாள்.

குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.

விளக்கு பொருத்தி
சாமி பார்த்தாள்.

கண்ணீர் பெருக்கெடுத்தது.

கதவு பூட்டி
சாவி எடுத்தாள்.

அவன் வந்து கொண்டிருந்தான்.

வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.

திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.

...................................................

நீங்கள் அணிந்திருக்கிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

மயிர்க்கால் அளவு
கூடிப்போகும்.
சிலநேரம் குறையலாம்.

அளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்

கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென.

பெரிய மனசு கொண்டவரே..

இல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.

பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.
...........................................................

புருஷன் பொண்டாட்டி
சண்டை போல.
பெரிய கூக்குரல்.

குழந்தை குட்டிகளின்
அலறல் வேறு.

"இதே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு"
என இவளும் சலிக்கிறாள்.

படிப்பதை நிறுத்திவிட்டு
முகம் பார்க்கிற என்
குழந்தைகளின் முகத்திலும்
சொல்லொண்ணா கலவரம்.

இனி,
அப்பாவாக வேணும் நான்.

எழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன்.

மூச்சுப்பறியக்காணோம்
குருவிக்கூண்டில்.

.......................................................

பொட்டு சரியாவென 
கேட்க்கிறாள் 
புறப்படும் அவசரத்திலும்.. 
காசு தந்து 
கலைத்தவனிடம். 
...........................................

நடுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

....................................

"என்ன நினைச்சுக்கிட்டு
இருக்க?"
என கோபமாகக்கூட
கேட்டுப் பார்க்கிறேன்.
சிரிச்சுக்கிட்டேதான்
நிற்கிறான்.

இந்த சிரிப்பு
எதுல போய்
முடியுமோ
என
பயமாகவும் இருக்கு.

"பயமாகவும் இருக்கு"
என
வாயசைத்து
சிரிக்கிறான்.

முதுகில்
ரசம் பூசிய
பேசத்தெரியாத
சிரிச்ச பயல்.

..............................................

ஒன்று:
அழைத்து போக
வந்தார்கள்.
ஆடிக்கு.

அழுதாள்
இவள்.

அழுது கொண்டே
இருப்பவளின்
ஆகச்சிறந்த அழுகை
அது.

இரண்டு:
ஓட்டிடை
எட்டிப்பார்த்து
கீச் கீச் என்கிறது
அணில் குட்டி.

" நீ வேறையா?.."
என்றாள் இவள்.
என் மேல் உள்ள
எரிச்சலில்.

தருணம்
தளர்த்தித்தந்தாள்
அணில் குட்டி.

மூன்று:
"திறந்து
கிடக்கு முண்டம்"
என மூடிக்கொண்டாள்
இவள்.

கதவு மூட
எழுகிறேன்
கனவு கலைகிறது.

.......................................


ஆற்றங்கரையில்
எடுத்த கல்.

மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில் 
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.

அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ஆளோட பேரோட
இருந்திருக்கும்.

..........................................

உடைத்தாய்.
செப்பனிட்டாய்.
செப்பனிட தெரிந்ததால்
உடைத்து விடுவாய்.
செப்பனிட விரும்பியும்
உடைக்க தொடங்குவாய்.
செப்பனிட்டு செப்பனிட்டு
உடைந்து விடுவாய்.
...........................................

எனக்கு இணையாக உனக்கு
யார் பிடித்திருந்தாலும்
அவர்களுக்கு தரும் புன்னகையில்
சின்னதாய் ஒரு வலி
இருக்குமானால்
அந்த வலியில்
உயிர்க்கும்
என் காதல்

.......................................

எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்யதைபட்ட
செவி ஒன்று
இருக்குதானே!
..................................

காதலுக்கு
அர்த்தம் கேட்டார்
கடவுள்.
என்னை காட்டினேன்.
காரணம் கேட்டார்
உன்னை காட்டினேன்.

நீ அழகாய்
இருக்கிற ரகசியம்
கண்கள்ள்ள்ள்ள்...
சம்பந்தபட்டதன்று
வெறும்
கண்கள்
சம்பந்தப்பட்டது.

ஆழ்ந்து சுவாசி
உணர முடியும்
முற்பிறவியில்
நீ வாழை மரம்.
நான் பக்ககன்று.

நீ விரும்பி
விளையாடும் பொம்மை
என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என்னை.

மனைவி குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வேன்.
கணவன் குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வாய்
சொல்...
பாவமில்லையா
இது மட்டும்?...

நீ நடந்த
தடங்களின்
அடியில்தான்
கிடக்கிறது
நம் மணல்.
மணல் என்றால் மணல்.
மனசென்றால் மனசு.

என் தூக்கத்தை
திறக்கும் சாவியும்
திறக்காத சாமர்த்தியமும்
உன்னிடமிருந்தது.

காலாகாலத்திற்கும்
சொல்லி சிரிக்கும்தானே
ஆமையின் தூக்கமின்மையை
முயல்கள்.

கும்மிருட்டின் மின்மினி
ஓவியம் நீ.
தூக்கணாங்கூட்டின்
குஞ்சு பறவை நான்.
இணைக்காது போனதேடி
இயற்கை.

உன்னை தேடி அடைய
எனக்கு பிடிக்கிறது.
என்னை தொலைத்து விளையாட
உனக்கு பிடிக்கிறது.

ஆட்களற்ற திருவிழாவில்
தொலைத்தாய் என்னை
அழுது புலம்புவது
தொலைந்தற்க்கன்று
நீ தேட மறந்தது கண்டு.

உனை போன்றே
செய் நேர்த்தியாக
இருந்தது.
என் நெஞ்சு குழியில்
நீ பாய்ச்சிய
நெளி கத்தியின்
கூர்மை.

உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.

உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.

கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.

...................................................




.


Monday, March 31, 2014

ஈழத்தின் கிழக்குத் தமிழ் பற்றும் வடக்குத் தமிழ் பற்றும்

ஈழத்துத் தமிழ் கவிஞர்கள் இருவரின் தமிழ் பற்றிய பாடல்கள்


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

-காசிஆனந்தன்-

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா.
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை.
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்
காயும கிழங்குகளை தின்று மகிழ்வேன்.

மாடமிதிலை நகர் வீதிவருவேன் – இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்.
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து – அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்.
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா – என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா – கவிக்
கள்ளைக் குடித்தவெறி யேறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை.
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

ஈழத்து, யாழ்பாணத்து, மாவிட்டபுரம் பாவலர் க.சச்சிதானந்தன்




Sunday, March 23, 2014

வாழ்க்கை பற்றி இவர்கள் சொல்கிறார்கள்


Death asked Life :Why does everyone love you and hate me.
Life replied :
Because I am a beautiful Lie and you are a painful Truth



Temple is a 6 letter word
Church is a 6 letter word
Mosque is also a 6 letter word
Geeta is a 5 letter word
Bible is a 5 letter word
Quran is also a 5 letter word


A Lovely Logic for a beautiful Life:
Never try to maintain relations in your life
Just try to maintain life in your relations



Always welcome the problemsBecause problems give you dual adviceFirst, you know how to solve itSecond, you know how to avoid it in future




3 stages of Life:
Teen Age – Has time; energy – But no Money
Working Age – Has Money; Energy – But No Time
Old Age – Has Money; Time – But No Energy






We are very good Lawyers for our mistakes
Very good Judges for other’s mistakes


World always say – Find good people and leave bad ones.
But I say, Find the good in people and ignore the bad in them
Because No one is born perfect


A fantastic sentence written on every Japanese bus stop.Only buses will stop here – Not your time So Keep walking towards your goal



Negative Thinkers focus on Problems
Positive thinkers focus on Solutions

Never hold your head high with pride or ego.
Even the winner of a gold medal gets his medal only when he bows his head down



Define TODAY
                     This is an Opportunity to Do A work better than Yesterday

                                   

        African Saying:
 If you want to walk quick, walk alone
                   If you want to walk far, walk together together